Lekha Books

A+ A A-

பேர் சொல்லும் பிள்ளை - Page 10

per sollum pillai

பிரசாத், ஷுக்களின் ஒலி 'டாக் டாக் என ஒலிக்க உள்ளே வந்தான். அனைவரது வணக்கத்தையும் ஏற்றுக் கொண்டு புன்னகையோடு, தன் அறைக்குள் நுழைந்தான். எக்ஸிக்யூடிவ் சுழற்நாற்காலியில் இருந்த மிருதுவான குஷன், அவனை லாவகமாக ஏற்றுக் கொண்டது. இன்ட்டர்காமில் இரண்டு நம்பர்களை அழுத்தினான்.

"குட் மார்னிங் பாஸ்" சாக்லேட் குரலில் வந்தனா, காலை வணக்கத்தை தெரிவித்தாள். வந்தனா பிரசாத்தின் காரியதரிசி. அதிக அலங்காரம் இன்றி இயற்கையான அழகு. அடர்த்தியான கூந்தல். காதோரம் சுருண்டிருந்த முடிக்கற்றைகள், எடுப்பான மூக்கும், பெரிய கண்களும், சிறிய உதடுகளும் கொண்ட முகம். அளவான உயரம், கச்சிதமான உடல்கட்டு. இவற்றின் மொத்த உருவம் வந்தனா.

"வந்தனா, இன்ட்டர்வியூவுக்கு வந்திருக்கறவங்களோட பயோடேட்டா மற்றதெல்லாம் என்னோட டேபிள்ல இருக்கா?"

"யெஸ் ஸார். என் கிட்டயும் ஒரு காப்பி இருக்கு. ஒவ்வொருத்தரா அனுப்பட்டுமா ஸார்?"

"அனுப்பலாம். அதுக்கு முன்னால, லாயர் நீலகண்டனோட மகன் விஜயகுமாரோட ஃபைலை மறக்காம வச்சுட்டீங்களா?"

"அதையும் வச்சுட்டேன் சார். ஆனா அவர் இன்னும் வரலை."

"ஆமா, நானும் கவனிச்சேன். ஏன் இப்பிடி பொறுப்பில்லாம இருக்கான்னு எனக்குத் தெரியலை. சிபாரிசுக்காக வர்றவங்க இவ்வளவு அலட்சியமாவா இருக்கறது? சரி, நீங்க மத்தவங்களை அனுப்புங்க."

"சரி ஸார்." சரிந்து விழும் துப்பட்டாவை சரி செய்தபடி வரவேற்பு அறைக்கு வந்தாள்.

"மிஸ்டர் வினோத், கூப்பிட்டதும் ஒரு வாலிபன் எழுந்தான். "நீங்க உள்ளே போங்க." அவன் போனான்.

புதிதாக இன்னொரு இளைஞன் வந்தான்.

"ஹாய் வந்தனா..." அவன் கூப்பிட்டதும், கண்ணைச் சிமிட்டி அவனுக்கு சிக்னல் காண்பித்தாள். அதன்பின், வந்தவன் அமைதியாக ஸோஃபாவில் உட்கார்ந்தான். அவன், வந்தனாவை அதிகம் பழகியவன் போல கூப்பிட்டதையும், அவள் அவனுக்கு கண்ணைச் சிமிட்டி சிக்னல் கொடுத்ததும், அதைக் கவனித்த அவன் சமாளித்தபடி உட்கார்ந்ததையும் சரவணன் பார்த்து விட்டான். வாசுவை சுரண்டினான். வாசு திரும்பி, கண்களாலேயே 'என்ன’வென்று கேட்டான்.

வாசுவின் காதிற்குள் பேசினான் சரவணன்.

"டேய், இப்ப ஒருத்தன் உள்ளே வந்தான்ல?"

"ஆமா, அவனுக்கென்ன?"

"அந்த செக்கரட்டரி பொண்ணு வந்தாள்ல, அவளுக்கு அவன் ரொம்ப வேண்டியவன் போலிருக்கு?"

"ஏன்? எதை வச்சு அப்பிடி சொல்ற?"

"அவன் உள்ளே வந்து, அவளைப் பார்த்ததும் ஹாய் வந்தனான்னு ரொம்ப சிநேகிதமா பேசினான். அவ கண்ணைக் காட்டினதும் இவன் அவளைத் தெரியாத மாதிரி இருந்துட்டான்."

"கண்ணைக் காட்டினதுனால அவளுக்கு வேண்டியவனா இருக்கணும்னு சொல்ற. சரி. அதுக்கு நீ ஏன் இவ்வளவு கோபப் படறே?"

வாசு அடிக்குரலில் கேட்டான்.

"சரியான மாங்கா மடையனா இருக்கியேடா. அவ, இவனுக்காக இந்த வேலையை சிபாரிசு பண்ணி இருப்பா. அது வெளியில தெரிஞ்சுடக் கூடாதுன்னு ஜாக்கிரதையா இருந்திருக்கா."

"ஓகோ..."

"என்னடா ஓகோ... இந்த இன்ட்டர்வியூ நேர்மையான இன்ட்டர்வியூ இல்லை. ஒண்ணு, இப்ப வந்தவன் இந்த வந்தனாவோட ஆளா இருக்கணும். அல்லது இந்த ராஜசேகரன் இன்டஸ்ட்ரீஸ் ஓனருக்கு வேண்டிய ஆளா இருக்கணும். என்னமோ பெரிய கம்பெனி, நேர்மையான நிறுவனம் அது இதுன்னு நீதான் அளந்து விட்ட. வாடா போலாம். இப்ப வந்தான் பாரு அவனுக்குத்தான் வேலை குடுப்பாங்க. இன்னொரு போஸ்ட்டுக்கு இந்த கும்பல்லயே வேற எவனாவது சிபாரிசோட வந்திருப்பான். நாம இந்த இன்ட்டர்வியூவை அட்டென்ட் பண்ணினா இளிச்ச வாயன்களாத்தான் திரும்பி போகணும்..."

"அவசரப்படாதேடா. அந்த வந்தனாவுக்கும், இவனுக்கும் வேற ஏதாவது தொடர்பு இருக்கலாம். அதாண்டா காதல் கீதல்னு..."

"காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையா இதையும் அதையும் முடிச்சுப் போடாத."

"இந்த இன்ட்டர்வியூல மட்டும் நேர்மை தவறி, சிபாரிசுக்காக எவனுக்காவது வேலை குடுத்துரட்டும் பார்த்துக்கறேன்" சரவணன் கோபத்தில் பல்லைக் கடித்தான்.

"உன்னால என்னடா பண்ண முடியும்?"

"சட்டப்படி ஒண்ணும் பண்ண முடியாது. ஆனா திட்டம் போட்டு இந்த கம்பெனி முதலாளியை பழி வாங்குவேன்."

"எனக்கென்னமோ, நீ தேவை இல்லாம கற்பனை பண்ணி வீணா டென்ஷன் ஆகறியோன்னு தோணுது."

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போதே மற்றவர்களின் இன்ட்டர்வியூ முடிந்து விட்டது.

"மிஸ்டர் சரவணன் வந்தனா கூப்பிட்டதும் வேறு வழியில்லாமல் சரவணன் உள்ளே போக நேரிட்டது. அவனுக்கு முடிந்ததும் கடைசியாக வாசுவின் முறை வந்து அவன் உள்ளே போனான். வெளியே வந்த சரவணன், வந்தனா அமர்ந்திருந்த அறைக்குச் சென்று கதவைத் தட்டினான்.

"யெஸ். கம். இன்."

சரவணன் உள்ளே போனான். வந்தனாவின் மேஜை மீது மிஸஸ். வந்தனா ஸ்ரீதர் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சிறிய ப்ளாஸ்டிக் போர்டு காணப்பட்டது.

"என்ன ஸார்? என்ன விஷயம்? உங்க இன்ட்டர்வியூ முடிஞ்சுதா?"

"என்னோட இன்ட்டர்வியூ முடிஞ்சது. உங்களை இப்ப நான் இன்ட்டர்வியூ பண்ணப் போறேன்."

"என்ன ஸார்? விளையாடறீங்களா?"

"நான் ஒண்ணும் விளையாடலை. நீங்கதான் இந்த ஆபிஸ்ல கண்ணாமூச்சி விளையாட்டு கண்ணைச் சிமிட்டி ஆடறீங்க..."

"மிஸ்டர்..."

"கோபமா கத்தினா நான் பயந்துடுவேனா? கேக்கற கேள்விக்கு ஒழுங்கா பதில் சொன்னா எல்லாமே தெளிவாயிரும். இன்ட்டர்வியூவுக்கு கடைசியா ஒருத்தன் வந்தானே அவனுக்கு கண்ணாலேயே சைகை காமிச்சீங்களே, எதுக்காக? அவன் உங்களுக்கு வேண்டியவனா?"

"சிச்சீ... இல்லை..."

"அப்போ... யார் அவன்?"

"அ... அ... அது வந்து... அவர்..."

"ம்.... சொல்லுங்க."

"அது... அதை ஏன் நான் உங்ககிட்ட சொல்லணும்?"

"சொல்லிட்டா நல்லது. ஒருத்தரோட மனைவியான நீங்க இன்னொரு அந்நிய வாலிபன் கிட்ட கண்ணால பேசினா அதுக்கு கண்ணு, மூக்கு வச்சு ஆயிரம் கதை திரிக்க முடியும். சொல்லுங்க. அவனுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? ஏதோ ஓரளவுக்கு கண்ணியமா கேட்டுக்கிட்டிருக்கேன். சொல்லலைன்னா உங்களோட கௌரவம் கந்தலாகி மானம் கப்பலேறிடும். சொல்லுங்க.."

"அ... அவர்..."

"இங்க பாருங்க மேடம், எங்களை மாதிரி வேலை இல்லாத பட்டதாரிகள் நிலைமை ரொம்ப கேவலமா இருக்கு. ஒவ்வொரு தடவையும் நம்பிக்கையோட இன்ட்டர்வியூ அட்டெண்ட் பண்றோம். நல்ல மார்க்கு, சிறந்த தகுதிகள் இருந்தும், எங்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலை, சிபாரிசுக்காக தகுதியே இல்லாதவங்களுக்கு கிடைச்சுடுது. இது நியாயமே கிடையாது. ஏற்கெனவே வசதியா வாழறவங்க, சும்மா கௌரவத்துக்கு வேலைன்னு ஒண்ணு வேணும்னு நினைக்கறாங்க. அவங்களுக்கு பெரிய இடத்து சிபாரிசு இருந்தா போதும். உடனே வேலை கிடைச்சிடும்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel