Lekha Books

A+ A A-

பேர் சொல்லும் பிள்ளை - Page 13

per sollum pillai

"கடத்திட்டுப் போய்..."

"காதைக் கொண்டா சொல்றேன்" வேம்புலியின் காதில் தன் திட்டத்தை ரசசியமாய் கூறினான் ரங்கன்.

"சூப்பர் அப்பாரு. அப்படி செஞ்சாத்தான், நீ எதிர்பார்க்கற மாதிரி அந்த பிரசாத் துன்பத்துல புழுவாய்த் துடிப்பார்."

"என்னோட இந்த திட்டத்துக்கு உன்னைத்தான் முழுசா நம்பி இருக்கேன்."

"உனக்காகவும், அழகிரிக்காகவும் நான் என்ன வேண்ணாலும் செய்வேன் அப்பாரு."

"நம்ப திட்டத்தோட முதல் படியா, நீ இன்னிக்கு முதலாளி பங்களாவுக்கு போ. போயி நோட்டம் விடு. எப்படி, எப்ப உள்ள நுழையறதுன்னு பார்த்து வச்சு, ஐடியா பண்ணிக்க."

"கவலையை விடு அப்பாரு. அந்த பிரசாத்தோட குழந்தையை நீ சொன்ன மாதிரியே செஞ்சுடறேன்."

11

குழந்தை கவிதாவைத் தூங்க வைத்துக் கொண்டிருந்தாள் ஸ்வர்ணா.  இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்துவிட்டதே என்ற ஏமாற்றத்தில் குழந்தையைப் பார்ப்பதற்குக் கூட வராமல் இருந்து விட்ட மாமனார் ராஜசேகரனின் கல் மனது பற்றி நினைத்துப் பார்த்தாள்.

'நல்ல வேளை. என் கணவர் அப்படி இல்லை. அவரும் அவங்கப்பா மாதிரியே பெண் குழந்தையை வெறுக்கறவரா இருந்தா.. என் நிலைமை? பிரசாத்தின் நல்ல மனதிற்காவது இந்தக் குழந்தை கவிதா ஆணாகப் பிறந்திருக்கக் கூடாதா’ என்று நினைத்தவள், மறுகணம் தன் மனதைத் தேற்றிக் கொண்டாள். ‘என் முதல் குழந்தை சௌம்யாவை கடத்திட்டுப் போய் கொன்னுட்டாங்க. இந்தக் குழந்தையாவது பத்திரமா எனக்கு இருக்கணும். அது போதும்’ குழந்தை பிறந்த அன்று பிரசாத் தனக்குக் கூறிய ஆறுதல் வார்த்தைகள் மனசுக்கு எத்தனை இதமாக இருந்தன!’

"நம்ம குழந்தைதான் நமக்குப் பெரிய சொத்து. இவளை பாதுகாப்பா வளர்க்கணும். அதுதான் முக்கியம். எங்க அப்பாவை நினைச்சு நீ உன் மனசை வருத்திக்காதே. நீ பாட்டுக்குக் கவலைப்பட்டுக்கிட்டிருந்தீன்னா உன் உடம்புக்கு ஏதாவது வந்துடும். ஜாக்கிரதையா இரு. தைர்யமா இரு." பொறுமையாகவும், பாசத்துடனும் பிரசாத் பேசியபோது மயிலிறகால் மனதை வருடிக் கொடுப்பது போல் இருந்தது.

குழந்தை அயர்ந்து தூங்கியதும், தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள். அவள் விழிப்பதற்குள் குளித்து முடித்து விடலாம் என்று எண்ணிய ஸ்வர்ணா, அழைப்பு மணியின் ஒலியைக் கேட்டு கதவருகே சென்றாள். கதவைத் திறந்தாள். செக்யூரிட்டி காளி நின்று கொண்டிருந்தான்.

"அம்மா, இன்ட்டர்காம் வேலை செய்யலைம்மா. அதான் மணி அடிச்சேன்."

"சரி, என்ன விஷயம்?"

"தோட்ட வேலைக்கு ஆள் கேட்டிருந்தீங்களாம். ஒரு ஆள் வந்திருக்கான்."

"சரி, அவனை வரச் சொல்லு."

செக்யூரிட்டி, பங்களாவின் பெரிய கேட் அருகே சென்று, ஒரு ஆளை அழைத்து வந்தான். ஸ்வர்ணாவைப் பார்த்ததும் அவன் கும்பிடு போட்டான்.

"வணக்கம்மா."

"வணக்கம். உன் பேர் என்ன?"

"என் பேர் வேம்புலி."

"என்ன படிச்சிருக்க?"

"எழுதப் படிக்கத் தெரியும்மா. அவ்வளவுதான்."

"இதுக்கு முன்னால என்ன வேலை பார்த்த?"

"தோட்ட வேலைதான்மா பார்த்துக்கிட்டிருந்தேன்."

"எங்க? யார் வீட்டில?"

"வேலூர்ல, ஒரு பெரிய பணக்காரர் வீட்டிலதான் வேலை பார்த்தேன். அவர் இறந்துட்டாரு. அவரோட புள்ளைங்கள்லாம் வெளிநாட்டுல இருக்கறதுனால அந்த பங்களாவை வித்துட்டாங்க. அதனால இப்ப நான் சும்மாதான் இருக்கேன். வேலை இல்லாம வயித்துப் பாடு ரொம்ப கஷ்டமா இருக்கும்மா. வேலை குடுங்கம்மா. உங்க தோட்டத்துல வளர்ற பூச்செடி, மரங்களயெல்லாம் புள்ள குட்டிகளைப் பார்த்துக்கற மாதிரி நல்லா பார்த்துக்குவேன்மா. வேலை இல்லாம வயிறும் காலியா இருக்கும்மா" வேம்புலி அடுக்கடுக்காய் பொய்களை அள்ளி வீசினான். சினிமாவில் சண்டைக் காட்சியில் நடிக்கும் அனுபவம் நன்றாக கை கொடுத்தது.

'பார்த்தா நல்லவனா இருக்கான். பாவம். பட்டினியா வேற இருக்கான்?’ யோசித்தாள் ஸ்வர்ணா.

"தோட்டத்துக்கும் ஆள் தேவையாதான் இருக்கு. பழைய ஆள் கிராமத்துக்கு போயிட்டாரு. செடியெல்லாம் வாட ஆரம்பிச்சுடுச்சு. கவனமா பார்த்துக்கணும். சம்பளம் எவ்வளவு கேட்ப?"

"நீங்க எவ்வளவு குடுத்தாலும் சரிம்மா. மூணு வேளை வயிறு ரொம்பணும்."

"சரி, பழைய ஆளுக்கு எவ்வளவு குடுத்தேனோ, அதே சம்பளத்தை உனக்கும் தரேன். நாளையில இருந்து வேலைக்கு வந்துடு."

"ரொம்ப நல்லதும்மா. காலையில சீக்கிரமா வந்துடறேன்."

"சரி."

வேம்புலி, பசியில் தளர்வாய் நடப்பது போல நன்றாக நடந்தான்.

ஸ்வர்ணா அவசர அவசரமாய் குளிக்கப் போனாள்.

12

தோட்ட வேலைக்கு சேர்ந்த வேம்புலி, புல்வெளியில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான்.

"வேம்புலி..."

செக்யூரிட்டி காளி கூப்பிட்டதும் திரும்பினான்.

"இன்னாபா கூப்டியா?" சென்னைத் தமிழில் வேம்புலி உரையாடுவது குறித்து ஆச்சர்யப்பட்டான் செக்யூரிட்டி காளி.

"ஆமா, தண்ணி பாய்ச்சற நீ ஒழுங்கா புல்தரையைப் பார்த்து பாய்ச்சாம பங்களாவையே அண்ணாந்து பார்த்துக்கிட்டிருக்கியே, என்ன விஷயம்?"

"இது இன்னாடா இது.. மழை வருமோ, மேகம் கூடுதேன்னு வானத்தை அண்ணாந்துப் பார்த்துக்கிட்டிருந்தா, பங்களாவைப் பார்க்கறேன்னு கேக்கறியே?"

"நீ பார்த்தாலும் பார்க்கலைன்னாலும் மழை பெய்யணும்னு இருந்தா பெய்யும். உன் வேலையை கவனமா செய்."

"சரிதாம்பா" வேலையில் மூழ்கினான் வேம்புலி.

"ஆமா, என்னமோ வேலூர்ல வேலை பார்த்ததா சொன்னியே? பக்கா மெட்ராஸ் தமிழ் பேசறவனா இருக்கியே?!"

"ஏன்? வேலூர் இன்னா வெளிநாடா? எந்த ஊருக்குப் போனாலும், எந்த நாட்டுக்குப் போனாலும் என் பேச்சு மட்டும் மாறாது. மாத்திக்க முடியாது. ஆமா... தெரியாமத்தான் கேக்கறேன், நான் இன்னா பேச்சு பேசுனா உனுக்கு இன்னா வந்துது?"

"அட, சும்மா ஒரு பேச்சுக்கு கேக்கறதுக்குள்ள இப்பிடி கோவிச்சுக்கறியே?"

"உன் வேலையை நீ ஒழுங்கா பாரு. என் வேலையை எப்படி பார்க்கணும்னு நீ சொல்லத் தேவலை. கம்முனு இரு."

முகத்தில் அடித்தது போல் வேம்புலி பேசியதும் செக்யூரிட்டி காளி எதுவும் பேசாமல் தன் இடத்திற்கு சென்றான்.

'இவன் மூஞ்சும் சரி இல்ல, பேச்சும் சரி இல்ல, அம்மா பாட்டுக்கு தீர விசாரிக்காம இவனை தோட்ட வேலைக்குப் போட்டுட்டாங்க. எப்ப பார்த்தாலும் பங்களாவையே ஒரு மாதிரியா நோட்டம் விட்டுக்கிட்டிருக்கான். பார்த்து ஜாக்கிரதையா இருக்கணும். சமயம் கிடைக்கும்போது, அம்மா கிட்டயும் கொஞ்சம் முன் எச்சரிக்கையா சொல்லி வைக்கணும்’ வேம்புலியின் மீது ஏற்பட்ட சந்தேகம் தோற்றுவித்த எண்ணங்கள் காளியின் மனசைக் குடைந்தது.

13

"தொழிலதிபர் சௌந்தரபாண்டியின் மகன் கடத்தல். ஐந்து லட்ச ரூபாய் பணம் கேட்டு பயமுறுத்தல் கடிதம்" செய்திகளை உரக்க வாசித்துக் கொண்டிருந்தான் சரவணன்.

"டேய் வாசு, இந்த நியூஸைப் பார்த்தியா? அதைப் பார்த்தும் எனக்கு ஒரு சூப்பர் ஐடியா தோணுது."

"என்ன? சொல்லு..."

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel