Lekha Books

A+ A A-

பேர் சொல்லும் பிள்ளை - Page 11

per sollum pillai

ஆனா பெத்தவங்களோட உழைப்பினால கஷ்டப்பட்டு படிச்ச எங்களை மாதிரி ஏழை பட்டதாரிகள் தகுதிகள் இருந்தும் வானம் பார்க்கற பூமியா காத்துக் கிடக்கணும். இது நியாயம்னு உங்களுக்குத் தோணுதா? இப்பவாவது சொல்லுங்க, அவன் யாரு? இந்த இன்ட்டர்வியூ நியாயமான இன்ட்டர்வியூதானா?"

"அது வந்து... அவர் பேர் விஜயகுமார். சேலத்துல பெரிய லாயர் நீலகண்டனோட மகன். என் பாஸோட அப்பாவுக்கு லாயர் நீலகண்டன் நெருங்கிய நண்பர். நீலகண்டன் ஸார், எங்க பெரிய பாஸ் மிஸ்டர் ராஜசேகரன்கிட்ட சிபாரிசுக்காக போயிருக்கார். ராஜசேகரன் ஸார், என்னோட பாஸ் மிஸ்டர் பிரசாத்தைக் கூப்பிட்டு சொல்லிட்டார். இந்த வேலையை விஜய்குமாருக்குத்தான் குடுக்கணும்னு. ஆனா சிபாரிசுக்காக வந்தவர்னு வெளியே தெரியக்கூடாதுன்னு மிஸ்டர் பிரசாத் சொல்லி இருந்தார். அதனாலதான் அந்த விஜயகுமார் வந்து என் கிட்ட சகஜமாக பேசினதும் கண்ணைக் காமிச்சேன். விஜயகுமார் இங்கேதான் படிச்சார். படிப்பெல்லாம் சுமார்தான். இங்கே படிச்சப்ப எங்க ஆபீசுக்கு பிரசாத் ஸாரை பார்க்க அடிக்கடி வருவார். அதனால என்னைப் பார்த்தும் ஹாய் வந்தனான்னு கூப்பிட்டார். மத்தபடி அவருக்கும் எனக்கும் வேற எந்த சம்பந்தமும் கிடையாது."

"அஞ்சு வருஷமா வேலை தேடி கிடைக்காம, பெத்தவங்களுக்கு பாரமா சும்மா உட்கார்ந்திருக்கறது எவ்வளவு கொடுமையா இருக்கு தெரியுமா? ஒவ்வொரு இன்ட்டர்வியூவுக்கு வரும்போதும் இந்த வேலை 'நமக்கு கிடைச்சுடும் ங்கற நம்பிக்கையை நெஞ்சுல சுமந்துக்கிட்டு வர்றோம். ஆனா சிபாரிசுக்கு முக்கியத்துவம் குடுத்து வேண்டப்பட்டவங்களுக்கு வேலையை குடுத்துடறாங்க. ஏதாவது சுயமா தொழில் செஞ்சு முன்னேறலாம்னா... முதல் போடற பணத்துக்கு ஏது வழி? தற்கொலை செஞ்சுக்கலாமான்னு கூட இருக்கு..." கோபமாக பேச ஆரம்பித்த சரவணன், சோகமாக பேச ஆரம்பித்தான்.

"ஸாரி மிஸ்டர் சரவணன். உங்க கஷ்டம் எனக்குப் புரியுது. ஆனா... இந்த ஆபீஸ்ல நானும் உத்யோகம் பார்க்கற ஒரு எம்ப்ளாயிதான். முதலாளி இல்லை. சம்பளம் குடுக்கற அவங்க சொல்றதை, சம்பளம் வாங்கற நான் செஞ்சுதானே ஆகணும்? இல்லைன்னா நானும் வேலை இல்லாத வெறும் ஆளா கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கணும்."

"இங்கே வந்து இப்பிடி ஏமாந்து போய் அவமானப்படறதை விட பெத்த அம்மா திட்டிக்கிட்டே போடற சோற்றை சாப்பிடறதுல எந்தக் கேவலமும் இல்லை. ஆனா... ஒண்ணு மட்டும் சொல்றேன் வந்தனா. உங்க பாஸோட நண்பர் மகன் விஜயகுமாருக்கு இந்த உத்யோகத்தை குடுத்தாங்கன்னா உங்க பாஸ் மிஸ்டர் பிரசாத்தைப் பழி வாங்காம விடமாட்டேன். வயசான அம்மா அப்பாவை உட்கார வச்சு சோறு போட வேண்டிய நான் உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டிருக்கேன். ஒவ்வொரு ஆண் பிள்ளைக்கும் இது மானப்பிரச்னை. மனித நேயப் பிரச்னை. இந்த வேலை கிடைக்காட்டாலும் என்னை மாதிரி கஷ்டப் படற ஒரு பட்டதாரிக்கு, நியாயமான முறையில கிடைக்கணும். இல்லைன்னா... உங்க முதலாளியை எப்பிடி வஞ்சம் தீர்க்கறேன்னு பொறுத்திருந்து பாருங்க" மறுபடியும் கோபம் தலைக்கு ஏறியது சரவணனுக்கு.

"மிஸ்டர் சரவணன், கோபப்படாதீங்க. ப்ளீஸ்."

இதற்குள், வாசு அவனைத் தேடி அங்கே வர, அவனைப் பார்த்ததும் மேலும் கத்த ஆரம்பித்தான் சரவணன்.

"என்னடா, ரொம்ப இன்டலிஜெண்ட்டா கேள்வி கேட்டாரா அந்த பிரசாத்? அதெல்லாம் சும்மா வெத்து வேஷம்டா. உன் காதுல பூ சுத்தி விட்டிருக்காரா அந்தப் பணக்கார தொழில் அதிபர்? அவருக்கெல்லாம் கஷ்டம்னா என்னடா தெரியும்? ஏ.ஸி. ரூம்ல பிறந்து வளர்ந்து வாழற அவருக்கு பசின்னா என்னன்னு தெரியுமாடா? ருசிக்காக மட்டுமே சாப்பிடற அந்த பணக்காரருக்கு நம்பளோட பசி, பட்டினி தெரிஞ்சா இப்பிடி சிபாரிசுக்காக வர்ற இன்னொரு பணக்காரனுக்கு வேலை போட்டுக் குடுப்பாரா..."

சரவணன் கோபம் மாறாமல் தொடர்ந்து பேசிக் கொண்டே போனான்.

வாசு அவனது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே சென்றான். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வந்தனாவிற்கு பயத்தில் வயிறு கலங்கியது.

9

"அந்த பிரசாத்தைப் பழி வாங்காம விட மாட்டேன். அந்தப் பணக்காரப் படுபாவியை நிச்சயமா நான் பழி வாங்கியே தீருவேன்" ராயபுரம் ரௌடி ரங்கன், தன் முகத்தில், மூக்கின் அருகே உள்ள பெரிய கறுப்பு மருவைத் திருகியபடியே கோபத்தில் உறுமினான். ஆஜானுபாகுவான உடல். முகத்தில் முரட்டுத்தனம் காணப்பட்டது. பார்ப்பவர்கள் பயப்படும்படியாக அடர்ந்த மீசையை முறுக்கி விட்டிருந்தான். கட்டம் போட்ட லுங்கியும், பழுப்பு நிறத்தில் கை வைத்த பனியனும் அணிந்திருந்தான். கழுத்தில், தாயத்து கோர்த்த சிகப்புக் கயிற்றை கட்டி இருந்தான்.

"என்னடா வேம்புலி, நான் பேசிக்கிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு வாயை இறுக்கி மூடிக்கிட்டிருக்க? காலையில தின்ன பாப்பம்மா கடை இட்லி இன்னுமா உன் வாய்க்குள்ள அடைச்சிக்கிட்டிருக்கு?"

"ஐய்ய, கோவிச்சுக்காத அப்பாரு. யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன். பழி தீர்க்கணும்னா அந்த பிரசாத்தை தீர்த்துட வேண்டியதுதானே?"

"ஆளைத் தீர்த்துட்டா ஆயுசு முடிஞ்சுடும். ஆயுசு முடியறது அவனுக்கு தண்டனை கிடையாது. அவன் உயிரோட இருந்து அணு அணுவா வதைபடணும். உடம்பால வலி குடுக்கறதெல்லாம் அவனுக்கு தண்டனை கிடையாது. மனசால அவன் துன்பப்பட்டு ஒரு புழு மாதிரி துடிக்கணும். அதுக்கு ஏதாவது வழி சொல்லுடான்னா.. அந்த ஆளுக்கு குழி தோண்டச் சொல்றியே? நல்லா திங்கறதுக்குத்தாண்டா நீ லாயக்கு..."

"ஐடியா சொல்றதுக்குள்ள அவசரப்படாத அப்பாரு. புழுவாத் துடிக்கணும்னா, அவன் புள்ளக் குட்டிகளை எதுவாச்சும் பண்ணலாமா?" தீப்பெட்டி குச்சியினால் பல்லைக் குத்திக் கொண்டே கேட்டான் வேம்புலி.

சுமார் முப்பது வயதான வேம்புலி வாட்ட சாட்டமாய் இருந்தான். அவனது பேச்சில் சென்னைத் தமிழ் விளையாடியது. பான்பராக்கைப் போட்டு மெல்லுவதும், பல் இடுக்குகளில் மாட்டிக் கொண்ட துண்டுகளை குச்சியினால் குத்தி எடுப்பதும் வழக்கமாகி இருந்தது. தெருவில் விற்பனை செய்யப்படும் மலிவான முழுக்கால் சட்டையும், பல வண்ணங்களில் படம் வரையப்பட்ட டி.ஷர்ட்டும் அணிந்திருந்த வேம்புலி, அவனது பேட்டையில் சூப்பர் ஸ்டார். உடல் உழைத்து வேலை செய்வான். களைத்துப் போனால் வஞ்சனை இல்லாமல் சாப்பிடுவான். தினமும் காலையில் அரசு மைதானத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்து உடம்பை வலுவாக உரம் ஏற்றி வைத்திருந்தான்.

நியாயம் என்று அவனது மனதிற்கு பட்டால் அதற்காக அடிதடியில் இறங்குவான். அடிதடியில் எப்போதும் வெற்றி இவன் பக்கம் என்பதால் பேட்டை ஸ்டார் ஆகி இருந்தான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel