Lekha Books

A+ A A-

பேர் சொல்லும் பிள்ளை - Page 7

per sollum pillai

உங்களோட அன்பு இருந்தா போதும். மாளிகை மாதிரியான இந்த வீடு, வசதியான வாழ்க்கையெல்லாம் இல்லாமல் போனாலும் குடிசையில கூட நாம சேர்ந்து சந்தோஷமா வாழ முடியும்ங்க. நம்ப முதல் குழந்தை சௌம்யாவை முகமூடிப் பாவி கொன்னுட்டானே? என் பெத்த வயிறு பத்தி எரியுதுங்க..."

"இந்த நிலைமையில ஏம்மா திரும்பத் திரும்ப அதையே நினைச்சு அழறே? நமக்குத்தான் இன்னொரு குழந்தை பிறக்கப் போகுதில்ல? அழாதே, கண்ணைத் துடைச்சுக்க."

"நீங்க என்னதான் ஆறுதல் சொன்னாலும் என் மனசு ஆறாதுங்க. பத்து மாசம் வயித்துல சுமந்து, ஆறு மாசம் கையில தூக்கி வளர்த்த என்னோட முதல் வித்து. அவளை இழந்துட்ட துயரம் என் உயிர் உள்ளவரை மறையாதுங்க..."

"ஸ்வர்ணா, பழசையெல்லாம் மறந்துட்டு நிம்மதியா இரு. உடம்பை கவனமா பார்த்துக்க. நேரத்துக்கு சாப்பிடு. நல்லா தூங்கு. நான், பிஸினஸ், ஆபீஸ்னு ஓடிக்கிட்டிருக்கறவன். நீதான் பார்த்துக்கணும்."

"சரிங்க. நீங்களும் உங்க அப்பா சொன்னதை பத்தியெல்லாம் நினைச்சுக் கவலைப்பட்டுக்கிட்டிருக்காதீங்க. நமக்கு கல்யாணம் ஆனதில இருந்து அவர், இதைத்தானே சொல்லிக்கிட்டிருக்கார்? புதுசாவா சொல்றாரு?"

பிரசாத்தின் நெஞ்சில் தன்னையும் ஒரு குழந்தை போல புதைத்துக் கொண்டாள் ஸ்வர்ணா.

5

யற்கையும், மனிதர்களின் செயற்கையும் இணைந்து உண்டாக்கிய ஒலிகள், ஒரு நாள் முடிந்து, மறுநாள் துவங்கி இருப்பதை அறிவித்தது.

கலைந்த தலைமுடியை அழுந்தப் படிய வைத்தபடி வாசலுக்கு வந்தாள் கமலா. கதவின் அருகில் கிடந்த பால் பாக்கெட்டை எடுத்தாள்.

'போன மாசமும் பாலுக்குப் பணம் குடுக்கலை. இந்த மாசம் குடுக்கலைன்னா பால் பாக்கெட் போட மாட்டான். வாசல்ல வந்து நின்னு பணத்துக்கு கத்துவான்’ நினைப்பே நெஞ்சில் கவலையை உண்டாக்கியது.

காலடி ஓசை கேட்டுத் திரும்பினாள். அவளது கணவர் கோபால், தூக்கம் கலையாத கண்களோடு வந்து நின்றார்.

"ஸாரி கமலா. இன்னிக்கும் நியூஸ் பேப்பர் எடுக்கறதுக்காக வந்திருக்கேன் பாரு. இருபது வருஷப் பழக்கம். பல் கூட விளக்காம பேப்பர் படிக்கறது மறக்க மாட்டேங்குது.."

"பதினொரு மணி ஆகட்டும். பக்கத்து வீட்டில பார்வதி கிட்ட கேட்டு பேப்பர் வாங்கித் தரேன். படிச்சுட்டுத் திரும்பக் குடுத்துடலாம்."

"என்னாலதானே இந்த நிலைமை?.... உனக்குத்தான் ரொம்ப கஷ்டம். நீ பாவம்..."

"உங்களால உங்களாலன்னு சொல்றீங்களே? நீங்க என்ன ஊதாரித்தனமா செலவு பண்ணீங்களா? சீட்டு விளையாண்டிங்களா? ஃப்ரெண்ட்ஸ் கூட சுத்தறதுக்கும் தண்ணி அடிக்கறதுக்கும் பணத்தை தண்ணியா செலவு பண்ணீங்களா? உங்க வயித்துல கட்டி வந்து அதை ஆபரேஷன் பண்ணி எடுக்கலைன்னா உயிருக்கே ஆபத்துன்னு டாக்டர் சொன்னதை மறந்துட்டீங்களா? அந்த ஆபரேஷனுக்குத்தானே செலவும், கடனும் ஏகமா ஆகிப் போச்சு. நீங்க உயிர் பிழைச்சதும் உங்க ஆரோக்கியமும்தான் எனக்கு முக்கியம்."

"என்ன இருந்தாலும்... நம்ப சக்திக்கு மீறின செலவு. வைத்திய செலவுக்காக வாங்கின கடன்... வட்டி மட்டுமே ஆளை முழுங்குது. நான் வேலைக்குப் போறதுக்கு இன்னும் ஆறு மாசம் இருக்கு. கை இருப்பு காலி. என்ன கமலா செய்யப் போறோம்? இதை நினைச்சா ராத்திரி முழுசும் தூக்கமே இல்லை."

"கவலைப்பட்டா மட்டும் கஷ்டம் தீர்ந்துடுமா? எந்தெந்த செலவைக் குறைக்க முடியுமோ குறைச்சாச்சு. நிறுத்தக் கூடியதை நிறுத்தியாச்சு. உங்க நியூஸ் பேப்பர், நான் வாங்கற மாசப்பத்திரிகை, கறி, மீன் வாங்கற செலவு, இதையெல்லாம் நிறுத்தியாச்சு. ரெண்டு பொரியல் ஒரு பொரியலாச்சு. வறுவலே கிடையாது. இதையெல்லாம் குறைச்சுதான் உங்க மருந்து வாங்க முடியுது. இருக்கற நகைங்க ஒவ்வொண்ணா வித்து, வட்டிக்குப் போகுது."

"எல்லாத்துக்கும் காரணம் எனக்கு வந்த நோய்தான்."

"இல்லைங்க, இவ்வளவு கஷ்டத்துக்கும் காரணம் நாம பெத்து, வளர்த்து, படிக்க வச்சு பட்டதாரி ஆக்கியிருக்கோமே அருமந்த மகன் சரவணன், அவன்தான். படிப்பு முடிஞ்சு அஞ்சு வருஷம் ஆச்சு. உருப்படியா ஒரு உத்தியோகத்துக்கு போயிருந்தான்னா, நாம கடனாளியா இப்பிடி கையை பிசைஞ்சுக்கிட்டிருக்க வேண்டியதில்லையே. கருவேப்பிலை கொத்து மாதிரி பெத்தது ஒண்ணே ஒண்ணு. எதுக்கும் உருப்படாம சும்மா இருக்கான்."

"சச்ச... பாவம் கமலா. சரவணனை அப்பிடியெல்லாம் பேசாதே. அவனுக்கு உத்யோகம் கிடைக்கலைன்னா அவன் என்ன பண்ணுவான்? அவனும் இன்ட்டர்வியூவுக்கு போய்கிட்டுதான் இருக்கான். எதுக்கும் வேளை வரணுமில்ல?"

"அஞ்சு வருஷமா வேலைக்குதான் வேளை வரலை. ஏதாவது பிஸினஸ் பண்ணுடான்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்?"

"பிஸினஸா? அதுக்கெல்லாம் நிறைய பணம் வேணுமில்ல கமலா? புரியாம பேசாதே...."

"அம்மா.... அம்மா.... " ஜாகிங் போவதற்காக கிளம்பிய சரவணன் கமலாவைக் கூப்பிட்டான்.

"வாங்க ஸார்... வாங்க. எது தவறினாலும் உங்க தினசரி நடவடிக்கை மட்டும் தவறவே தவறாதே. போங்க இதையாவது உருப்படியா செய்யறீங்களே..." அம்மா நக்கலாக 'ஸார் போட்டு பேசியதைக் கேட்ட சரவணனுக்கு முகம் மாறியது.

"அம்மா, நான் சோம்பேறியா ஊர் சுத்திக்கிட்டிருந்தா நீங்க என்னைத் திட்டறதுல நியாயம் இருக்கு. தினமும் இரவல் பேப்பர் வாங்கி, வேலைக்கான விளம்பரம் பார்த்து, அப்ளிகேஷன் எழுதி, நம்பிக்கையோட இன்ட்டர்வியூவுக்கு போய், ஏமாற்றத்தோட திரும்பி வந்து, நானும் வேதனைப்பட்டுக்கிட்டுதான்மா இருக்கேன்."

"த்சு... உன்னைப் படிக்க வைக்க, உங்க அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கார்? இப்போ அவர் கஷ்டப்படறப்போ உன்னால எந்த பிரயோஜனமும் இல்லை."

"கமலா, நீ அவனை இப்பிடி திட்டிக்கிட்டே இருந்தா அவன் மனசு எவ்வளவு பாடுபடும்?" கமலாவைக் கேட்டவர், சரவணனைப் பார்த்து, "நீ போப்பா... " என்றார். முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டே வெளியேறினான் சரவணன்.

6

நீண்ட தூரம் ஓடியதும் மூச்சிறைத்தது வாசுவிற்கு. "என்னடா வாசு உனக்கு இப்படி மூச்சு வாங்குது? தினமும் ஓடறதை விட ஒரே ஒரு கிலோ மீட்டர்தான் அதிகமா ஓடி இருக்கோம்.." சரவணன், வாசுவை கேலி செய்தான்.

"படிக்கும்போது, வீட்டில அம்மா தினமும் முட்டை, பால் இப்பிடி சத்தானதா குடுப்பாங்க. படிச்சு முடிச்சு வீட்டுக்கு பாரமா உட்காந்திருக்கேன்ல? 'தண்ட சோத்து தடிராமன்’னு திட்டாத குறை. ஏதோ பெத்த கடனுக்காக மூணு வேளை தவறாம சோறு போடறாங்க. அதுவே பெரிய விஷயம். வெந்த சோத்தை விதியேன்னு தின்னுட்டு கிடக்கும்போது ஒரு கிலோ மீட்டர் எக்ஸ்ட்ரா ஓடறதுக்கு எப்பிடிடா தெம்பு இருக்கும்?"

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel