
எனவே பிரசாத் குற்றவாளி என்றாலும் அவர் ஒரு மன நோயாளி என்பதால் அவரை அரசு மனநல மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவு இடுகிறேன். கிராமங்களில் படிக்காத பாமர மக்களும், பரம ஏழைகளும்தான் பெண் குழந்தை என்றால் அதிக செலவு என்று கருதி வெறுக்கிறார்கள். பெண் சிசு கொலைக்குத் துணிந்து விடுகிறார்கள். இது நியாயமில்லாத செயல். படித்த பிரசாத்தும், பணக்காரர் ராஜசேகரனும் பெண் குழந்தையை வெறுத்தது மிகவும் அநியாயமான விஷயம். மண்ணில் பிறந்த உயிர்களை மதிக்க வேண்டும். ஆணோ பெண்ணோ ரத்தமும், உயிரும் இணைந்த மனிதப் பிறவி. பிரசாத், தன் குழந்தைகளை நேசித்தவர். ஆனால் அவரது தந்தையின் தவறான நடவடிக்கையால் மன நோயாளியாகி இன்று குற்றவாளியாக நிற்கிறார்."
ஸ்வர்ணாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
'பல ராத்திரிகள்ல பிரசாத், தூங்காம சோஃபாவுல போய் உட்கார்ந்திருந்ததையும், தான் போய் கேட்ட பொழுது, ‘தனக்குத் தூக்கம் வரவில்லை’ என்று சொல்லி அவன் சமாளித்ததையும் நினைத்துப் பார்த்தாள். பாவம் இவர், குழந்தை சௌம்யா மேலயும், கவிதா மேலயும் எவ்வளவு பாசம் வச்சிருந்தார்... தன்னையறியாமலே இப்படி செய்யணும்னா எந்த அளவுக்கு இவரோட மனநிலை பாதிச்சிருக்கணும்? எல்லாம் அவரோட அப்பாவோட பிடிவாதத்தினாலதான்’ நினைத்து நினைத்துத் துடித்தாள் ஸ்வர்ணா.
ஆண் குழந்தைதான் வாரிசு. ஆண் குழந்தை மட்டுமே பரம்பரை பரம்பரையாக பேர் சொல்லும் என்ற மூடக்கருத்துக்களால் தவறான முடிவுகளை எடுத்தார் ராஜசேகரன். இதனால் அவரது பெயரை 'ராஜசேகரனின் மகன் கொலைகாரன்’ என்று சொல்ல வைத்து விட்டார். ஒரு அப்பாவிப் பெண்ணின் வாழ்வும் வீணாகியது. தன் உதிரத்தில் உதித்த பிள்ளைக் கனிகளை, அவர்களின் தகப்பனே இவ்வுலகில் இருந்து உதிர்த்து விட்ட கொடுமை அறிந்து ஸ்வர்ணாவின் தாய்மை உள்ளம் தவியாய் தவித்தது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook