Lekha Books

A+ A A-

பேர் சொல்லும் பிள்ளை - Page 24

per sollum pillai

"ஏன்? என்ன காரணம்? உங்களுக்குள்ள ஏதாவது தகராறா?"

"ம்... அ... அது... வந்து ஸார்..."

"வாசு, இது போலீஸ் ஸ்டேஷன். முக்கியமான விசாரணைக்காக உங்களை இங்கே வரவழைச்சிருக்கோம். உண்மையை மறைக்காம சொன்னா உதவியா இருக்கும். அது மட்டுமில்ல. நீங்களும் சிக்கல்ல மாட்டிக்காம இருக்கலாம். சொல்லுங்க. ஏன் தயங்கறீங்க? நீங்க படிச்ச பட்டதாரி. பாமர மக்களைப் போலவோ பரம ரௌடிகளை ட்ரீட் பண்றது போலவோ உங்களை ட்ரீட் பண்ண வேண்டிய அவசியம் இல்லைன்னு நான் நினைக்கிறேன். சொல்லுங்க."

"சொல்றேன் ஸார்... நானும் சரவணனும் நெருங்கிய நண்பர்கள் ஸார். நாலு வயசுல இருந்து டிகிரி முடிக்கற வரைக்கும் சேர்ந்து படிச்சோம். படிச்சு முடிச்சப்புறம் ஒரே கம்பெனியில ரெண்டு பேருக்கும் வேலை கிடைக்கணும்னு ஆசைப்பட்டோம். படிச்சு முடிச்சதும் வேலை கிடைச்சுடும்னு எதிர்பார்த்த எங்களுக்கு ஏமாற்றம்தான் கிடைச்சது. சிபாரிசு பண்றதுக்கு பெரிய ஆளுக யாரையும் தெரியாது. லஞ்சம் குடுத்து வேலை தேடிக்கற அளவுக்கு நாங்க வசதியானவங்களும் இல்லை. எங்க ரெண்டு பேர் குடும்பமும் ஏழைக் குடும்பம்தான். படிக்க வச்சதே பெரிய விஷயம்."

"வேலை கிடைக்கலைன்னா என்ன? சுயமா ஏதாவது தொழில் செய்யக் கூடாதா?"

"சுய தொழில் செய்ற அளவுக்கு எங்க அம்மா, அப்பாவால பண முதலீடு செய்ய முடியாது ஸார். ஒவ்வொரு ஞாயிறும் பேப்பர்ல வர்ற வேலை விளம்பரங்களைப் பார்த்து இன்ட்டர்வியூ அட்டெண்ட் பண்ணி... இந்த வேலை கிடைச்சுடும்னு நம்பிக்கையோட இருந்தோம். நம்பிக்கைதானே வாழ்க்கைன்னு ஒவ்வொரு கம்பெனி இன்ட்டர்வியூவுக்கும் போய்க்கிட்டிருந்தோம். ஆனா 'ராஜசேகரன் இன்டஸ்ட்ரீஸ்’ ஆபிசுக்கு இன்ட்டர்வியூ போனதோட விளைவு, சரவணனோட மனநிலையையே மாத்திடுச்சு. சிபாரிசுல வர்றவங்களை வேலைக்குத் தேர்ந்தெடுத்த அந்தக் கம்பெனி அதிபர் பிரசாத் மேல ரொம்ப கோபமாயிட்டான் சரவணன்."

சரவணனுக்கும், தனக்கும் உள்ள நெருக்கமான நட்பு முதல் அந்த நட்பு முறிவடையக் கூடிய சூழ்நிலை வரை நடந்த சம்பவங்கள் அனைத்தையும் பிரேம்குமாரிடம் வெட்ட வெளிச்சம் ஆக்கினான். சரவணன் பிடிவாதமாக பிரசாத்தைப் பழி வாங்கத் துடித்துக் கொண்டிருந்தது உட்பட சகல விஷயங்களையும் தெளிவாகக் கூறினான். கவனமாகக் கேட்டுக் கொண்ட ப்ரேம்குமார் தன் மனதில் தோன்றிய சந்தேகக்கணைகளை வீசினார்.

"சரவணனோட பழி வாங்கற படலத்துல உங்களுக்குப் பங்கு இல்லைன்னு சொல்றீங்களா?"

"நிச்சயமா இல்லை ஸார். எங்க வீட்டிலயும் கஷ்டம்தான். என்னோட அண்ணன் குடும்பத்துக்கு நானும் பாரமாதான் உட்கார்ந்திருக்கேன். ஆனா இந்த மாதிரி தப்பெல்லாம் செஞ்சு, பணக்கஷ்டத்தை விட அதிகமான மனக்கஷ்டத்தைக் குடுத்துடக் கூடாதுன்னு உறுதியான மனசு உள்ளவன் ஸார் நான். தவறான பாதைக்குப் போக திட்டமிட்ட சரவணனை எவ்வளவோ தடுத்துப் பார்த்தேன் ஸார். ஆனா... அவன் சுபாவத்துல ரொம்ப நல்லவன் ஸார். இந்த அளவுக்கெல்லாம் போக மாட்டான் ஸார்."

"அதை முடிவு செய்ய வேண்டியது நாங்களும் கோர்ட்டும். நீங்க இல்லை. எனிவே, நடந்ததை ஒப்புக்கிட்ட உங்க நேர்மையை பாராட்டறேன். இப்ப நீங்க போகலாம். ஆனா தினமும் ஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்துப் போடணும். எப்ப வேணும்னாலும் விசாரணைக்குக் கூப்பிடுவோம்."

"சரி ஸார். ஆனா ஒரு சின்ன வேண்டுகோள் ஸார். நானே தினமும் ஸ்டேஷனுக்கு வந்துடறேன் ஸார். வீட்டுக்கு போன் பண்ணாதீங்க ஸார். அண்ணாவும், அண்ணியும் ரொம்ப கவலைப்படுவாங்க ஸார். ப்ளீஸ் ஸார்."

"பார்க்கலாம். இப்போதைக்கு தள்ளிப் போடத்தான் முடியுமே தவிர, பேப்பர்ல நியூஸ் வர்றதையெல்லாம் எங்களால தடுக்க முடியாது வாசு. யூ கேன் கோ நௌ." வாசுவை அனுப்பிய ப்ரேம்குமார் அயர்ச்சியுடன் நாற்காலியில் சாய்ந்தார்.

30

"மிஸ்டர் பிரசாத், ஸாரி... குழந்தையை பறி குடுத்துட்ட துக்கத்துல இருக்கறப்ப விசாரணைக்காக வர்றது கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா... எங்க ட்யூட்டி, சாதாரண மனித உணர்ச்சிகளை மீறினது. பிரேத பரிசோதனை ரிப்போர்ட் வந்துருச்சு. குழந்தையை மூச்சுத் திணற வச்சு கொன்னுருக்காங்க...."

"ஐயோ...." இதைக் கேட்ட ஸ்வர்ணா, கதறி அழுதாள்.

"அழாதேம்மா..." பிரசாத், அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.

"மிஸ்டர் பிரசாத், குழந்தையோட உடல் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்டிருக்கு. அதனால உடலின் உள்பாகங்கள் மட்டுமே அழுகிப் போக ஆரம்பிச்சிருக்கு. வெளிப்பகுதி மட்டும் ஃப்ரெஷ்ஷா இருந்ததுக்கு காரணமும் அதுதான். அதனால இது உறுதியா திட்டமிட்ட கொலைதான்."

"இதனால கொலைகாரனுக்கு எந்தவித ஆதாயமும் இல்லையே ஸார்!"

"அமா. எங்களுக்கும் அதுதான் புரியாத புதிரா இருக்கு. நீங்களோ, உங்களுக்கு யாருமே எதிரிகள் கிடையாது. யார் கூடயும் முன் விரோதமும் இல்லைங்கறீங்க. ஸோ, பழி வாங்கணும்ங்கற உணர்ச்சியும் இதுக்கு மோட்டிவ் இல்லை. இந்தக் கேஸ் எங்களுக்கு சவால் விடற கேஸாத்தான் இருக்கு..."

"எங்க தரப்புல வேம்புலியையும், வாசுன்னு ஒரு பையனையும் விசாரணைப் பண்ணிட்டோம். புதுசா வேலைக்கு சேர்ந்த ஒரு தோட்டக்காரனை நம்பி குழந்தையை அவன்கிட்ட குடுத்துட்டுப் போனதெல்லாம் புத்திசாலித்தனமான விஷயம் கிடையாது. அவனை வெளியே விடாம வச்சிருக்கோம். வாசு, நிறைய தகவல்கள் சொல்லி இருக்கான். நீங்க உங்க குடும்ப நண்பர் லாயர் நீலகண்டனோட மகன் விஜயகுமாருக்கு சிபாரிசின் பேர்ல வேலை குடுத்தீங்களா?"

"ஆமா ஸார். அப்ப எங்க அப்பா உயிரோட இருந்தார். அவர் சொன்னதுனால விஜயகுமாருக்கு வேலை குடுத்தேன். அதுக்கும் என் குழந்தையோட கொலைக்கும் என்ன சம்பந்தம் இன்ஸ்பெக்டர்?"

"அதை இப்ப சொல்ல முடியாது. பல நிறுவனங்களை பெரிய அளவுல நடத்தற நீங்க, பாரபட்சமா வேலை போட்டுக் குடுக்கறது மனிதநேயப்படி தர்மம் கிடையாது. மத்தபடி இதைப் பத்தி அதிகமாக நான் பேச விரும்பலை. மிஸஸ். ஸ்வர்ணா, குழந்தை கடத்தப்பட்ட அன்னிக்கு வேற யாராவது இங்கே வந்தாங்களா? அதாவது உங்களுக்கு வேண்டியவங்க, சொந்தக்காரங்க... இப்பிடி?"

"யாருமே வரலை ஸார்." ஸ்வர்ணா கூறினாள்.

சரவணனின் டெலிபோன் புக்கை மேஜை மீது போட்டார் ப்ரேம்குமார்.

"இந்த டெலிபோன் புக்கை இதுக்கு முன்னால பார்த்திருக்கீங்களா?"

"இல்லை ஸார்" ஸ்வர்ணா மறுத்தாள்.

"நீங்க பிரசாத்?"

பிரசாத்தும் மறுத்தான்.

"அப்படின்னா ஒரு அந்நிய நபர் இங்கே நுழைஞ்சிருக்கான். அது யார்னு கூட கண்டுபிடிச்சுட்டோம். அவனை விசாரிச்சா உங்க குழந்தை விஷயமா ஒரு முடிவுக்கு வர முடியும்னு நான் நம்பறேன்."

"சீக்கிரமா கொலைகாரனைக் கண்டுபிடிச்சு தண்டனை வாங்கிக் குடுங்க இன்ஸ்பெக்டர்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel