Lekha Books

A+ A A-

பேர் சொல்லும் பிள்ளை - Page 23

per sollum pillai

கோபால் எழுதிக் கொடுத்தார்.

"இப்ப உங்க மகன் சரவணன் வீட்ல இல்லையா?"

"இல்லை ஸார்."

"உங்க பையனோட வழக்கமான நடவடிக்கைகள்ல ஏதாவது மாறுதல் தெரிஞ்சுதா?"

"இல்லை ஸார். வேலை கிடைக்காத கவலையில சோகமா இருப்பான். மத்தபடி வேற எதுவும் வித்தியாசமான நடவடிக்கை கிடையாது இன்ஸ்பெக்டர்" கூறிய கோபால், பின் தயக்கமாக கேட்டார்.

"ஸார், இந்த விசாரணை எதுக்குன்னு சொல்லலையே..."

"சொல்றேன். நீங்க கொஞ்சம் தனியா வாங்க." ப்ரேம்குமார் கிசுகிசுப்பாய் கோபாலிடம் சொன்னார்.

கமலா கவலையுடன் தரையில் உட்கார்ந்து கொண்டாள்.

மற்ற மூவரும் வாசலுக்கு சென்றனர். ப்ரேம்குமார் குரலை தாழ்த்திப் பேசினார்.

"மிஸ்டர் கோபால், பேப்பர்ல நியூஸ் படிச்சிருப்பீங்க. டி.வி.யில கூட நியூஸ் பார்த்திருப்பீங்க. பிரபல ராஜசேகரன் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் பிரசாத்தோட குழந்தை கடத்தப்பட்டு கொலையாகி, அதோட பிணம் குப்பைத் தொட்டியில கிடந்த விஷயம் பத்தி... அந்தக் கேஸ் விஷயமா பிரசாத்தோட பங்களாவுக்குப் போனேன். அங்கே இந்த டெலிபோன் புக் கிடைச்சது. இது உங்க மகன் சரவணனோடதுதான்னு நீங்களும் சொல்லிட்டீங்க. இப்ப சொல்லுங்க. அந்த பிரசாத் உங்க உறவினரா? குடும்ப நண்பரா? எதுக்காக சரவணன் அங்கே போனார்?"

"அந்த பிரசாத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பொருளாதாரத்தைப் பொறுத்த வரை நாங்க ரொம்ப கீழ் மட்டத்துல இருக்கோம். ராஜசேகரன் இன்டஸ்ட்ரீஸ் பெரிய லெவல்ல இருக்காங்க. மலைக்கும் மடுவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கே?..."

"கரெக்ட். ஒரு வேளை உங்க மகனுடைய இந்த புக்கை வேற யாராவது எடுத்திருக்கலாம். எடுத்தவங்க பிரசாத்தோட பங்களாவுக்குப் போயிருக்கலாம். இதை அங்கே தவற விட்டிருக்கலாம். ஒரு கேஸ்னு வந்துட்டா எல்லா தரப்புலயும் விசாரணை செய்ய வேண்டியது எங்க கடமை. அதைத்தான் நாங்க செய்யறோம். உங்க மனைவி ரொம்ப பயந்து போயிருக்காங்க. அதனாலதான் உங்களைத் தனியா கூப்பிட்டு விசாரிக்கிறேன்."

"எங்க பையன் நல்ல பையன் இன்ஸ்பெக்டர். எங்க வீட்டுக் கஷ்டத்துல பங்கு எடுத்துக்க முடியாத துக்கத்துல இருக்கான். நாங்க ஏழையா இருந்தாலும் கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவங்க இன்ஸ்பெக்டர்."

"ஓ.கே. மிஸ்டர் கோபால். விசாரணைக்கு ஒத்துழைச்ச உங்களுக்கு நன்றி. நாங்க வர்றோம்." ப்ரேம்குமாரும், கார்த்திக்கும் ஜீப்பில் ஏறிப் போகும்வரை படபடக்கும் இதயத்துடன் நின்றிருந்த கோபால், தளர்வான நடையுடன் உள்ளே சென்றார்.

28

வாசுவின் தொலைபேசி எண்களைச் சுற்றி பதிலுக்காக காத்திருந்தார் இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார்.

மறுமுனையில் குரல் கேட்டது.

"ஹலோ?"

"ஹலோ, மிஸ்டர் வாசு இருக்காரா?"

"நான் வாசுதான் பேசறேன். நீங்க?"

"நான் போலீஸ் டிபார்ட்மென்ட்ல இருந்து இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார் பேசறேன். ஒரு விசாரணைக்காக கூப்பிட்டேன். நீங்க பி.ஒன். போலீஸ் ஸ்டேஷனுக்கு உடனே வாங்க.."

"என்ன விசாரணைன்னு நான் தெரிஞ்சுக்கலாமா இன்ஸ்பெக்டர்?"

"நீங்க இப்ப வர்றீங்கள்ல. அப்ப தெரிஞ்சுக்கலாம்."

"சரி சார். இதோ வந்துடறேன்."

ரிசீவரை வைத்த ப்ரேம்குமார் வாசுவுக்காக காத்திருந்தார்.

அப்போது முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு முரடனை கான்ஸ்டபிள்கள் கூட்டி வந்தனர்.

"இவன்தான் ஸார் தொழிலதிபர் பிரசாத்தோட வீட்டுல தோட்டக்காரனா வேலை பார்த்த வேம்புலி. செக்யூரிட்டி காளி சொன்ன அடையாளத்தை வச்சு இவனைப் பிடிச்சுட்டோம்."

"இவனை லாக்கப்புக்கு கூட்டிட்டுப் போய் அங்கே இருக்கற காளி கிட்ட காமிச்சு இவன்தான் வேம்புலியான்னு விசாரிங்க."

வேம்புலியை லாக்கப்புக்கு கூட்டிச் சென்றனர். அங்கே காளி இருந்தான். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காளியை லாக்கப்பில் அடைத்து வைத்திருந்தனர்.

"ஏ காளி, இவனைப் பாரு. இவன்தான் வேம்புலியா?"

"ஆமா ஸார். இந்த படுபாவிதான் வேம்புலி. எங்க முதலாளியோட குழந்தையைக் கடத்திக்கிட்டுப் போய் கொலையும் பண்ண கல்நெஞ்சக்கார பாவி. பிரியாணியில மயக்க மருந்தைக் கலந்துக் குடுத்துட்டுக் குழந்தையை கடத்திட்டு போன துரோகி சார். இவனை விட்டுட்டு என்னை உள்ளே தள்ளிட்டீங்களே ஸார்...?"

"ஏய், கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. இவன்தான் பிரசாத் பங்களாவுல வேலை பார்த்த வேம்புலியா?"

"ஆமா."

"போதும் வாயை மூடிக்க." சொல்லிவிட்டு கான்ஸ்டபிள்கள் வேம்புலியை ப்ரேம்குமாரிடம் கூட்டிச் சென்றனர்.

"அவனை விடுங்க." ப்ரேம்குமார் ஆணை இட்டதும் வேம்புலியை விடுவித்தனர் கான்ஸ்டபிள்கள்.

"உன் பேர் என்ன?"

"வேம்புலி."

"நீ எங்க வேலை பார்த்த?"

"மு... முதல்ல...."

"என்னடா உளர்ற? கடைசியா எங்க வேலை பார்த்த?"

"ராஜசேகரன் ஐயாவோட புள்ள பிரசாத் ஐயா பங்களாவுல ஸார்."

"அவங்க வீட்டுக் குழந்தையை நீதானே கடத்திட்டுப் போய் கொலை செஞ்ச? எதுக்காக இப்பிடி பண்ணின?"

"அ... அது... வந்து... நான் எந்த தப்பும் பண்ணல சாரு, எனக்கும் அந்த குழந்தை மேட்டருக்கும் எந்த கனெக்ஷனும் இல்ல சாரு."

"உண்மையை நீயாவே சொன்னா உனக்கும் நல்லது. எனக்கும் நல்லது. இல்லைன்னு உன்னை சொல்ல வைக்கற வழி எனக்குத் தெரியும்."

"சத்தியமா ஸார். காலரா வந்து வாரிக்கினு போன என் ஆயி, அப்பன் மேல சத்தியமா சொல்றேன் ஸாரு. நான் எந்தத் தப்பும் பண்ணலீங்க ஸாரு."

"தப்பு செஞ்ச எவன்டா உடனே உண்மையை சொல்லி இருக்கான்?! கான்ஸ்டபிள், இவனை தனி லாக்கப்புல போடுங்க. இவனுக்குக் குடுக்க வேண்டியதைக் குடுத்தா நமக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும்."

தனி லாக்கப்பில் வேம்புலிக்கு ப்ரேம்குமார் குடுத்த பூஜா பலன், வேம்புலியின் வாய் உண்மை பேசுவதற்காகத் திறந்தது. டேப் ரிக்கார்டர், பேப்பர் பேனா சகிதம் கான்ஸ்டபிள்கள் தயாராக, வேம்புலி வாக்கு மூலம் கொடுத்தான்.

29

முதன் முதலாக போலீஸ் ஸ்டேஷனுக்குள் அடி எடுத்து வைத்தான் வாசு. பிரேம்குமாருக்காகக் காத்திருந்தான்.

வேம்புலியிடம் வாக்குமூலம் வாங்கும் முயற்சியில் களைத்துப் போயிருந்த ப்ரேம்குமார் மின்விசிறியை வேகமாக சுழலவிட்டு, நாற்காலியில் உட்கார்ந்தார்.

"ஸார், இவர் பேரு வாசுவாம். நீங்க வரச் சொன்னதா சொன்னார். அதனால காத்திருக்கச் சொன்னேன்." கான்ஸ்டபிள் வாசுவைக் காண்பித்தார்.

"அவரை இங்கே கூட்டிட்டு வா."

வாசு வந்தான்.

"வணக்கம் ஸார்."

"வணக்கம். நீங்கதான் வாசுவா?"

"ஆமா ஸார்."

"அதாவது ஜி. சரவணனோட ஃப்ரெண்டு வாசு?!"

"ஆமா ஸார்..."

"சரவணனை தினமும் பார்ப்பீங்களா?"

"கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் தினமும் நான் சரவணனை பார்த்துக்கிட்டிருந்தேன். காலையில ரெண்டு பேரும் ஒண்ணா ஜாகிங் போவோம். வருவோம். ஆனா இப்ப கொஞ்சநாளா அவன் ஜாகிங் பண்றதுக்கு வர்றது இல்ல ஸார்."

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel