Lekha Books

A+ A A-

பேர் சொல்லும் பிள்ளை - Page 14

per sollum pillai

"இந்த குழந்தை கடத்தல் மாதிரியே, நாமளும் ஒரு குழந்தையை கடத்தல் செய்யணும்." அதிர்ச்சியானான் வாசு.

"என்னடா இது? உன் பேச்சு, பேச்சா இல்லாம பேத்தலா இருக்கு?!"

"நான் சீரியஸாத்தான் பேசறேன். ராஜசேகரன் இன்டஸ்ட்ரீஸ் அதிபர் பிரசாத்தோட குழந்தையை கடத்திக்கிட்டுப் போய் அந்த ஆளை மிரட்டணும்னு சொல்றேன்."

"என்னமோ கோவில் கும்பாபிஷேகம் நடத்தப் போறேன்னு சொல்ற மாதிரியில்ல ரொம்ப பெருமையா சொல்ற?"

"ஹும்... கோவிலாவது சாமியாவது... எல்லாமே வெறுத்துப் போச்சு. மரத்துப் போச்சு. எத்தனை பிள்ளையார் கோவிலுக்குப் போய் வேண்டி இருக்கேன் வேலை கிடைக்கணும்னு? கல்லான அந்த சாமி கண் திறப்பார்னு நம்பினேன்டா. ஆனா அது வெறும் கல்தான்னு ஆயிடுச்சு. இனிமேலும் நல்லவனா இருக்க நான் தயாரா இல்லை. அம்மா, அப்பா கஷ்டத்தைப் பார்த்துக்கிட்டு, ஒரு வேளை சாப்பாட்டைக் கூட, நாமளும் சம்பாதிக்கறோம்ங்கற உரிமையோட சாப்பிட முடியாம, வேதனைப் பட்டு எத்தனை நாள்டா இப்படியே காலத்தை ஓட்டறது?"

"அந்த பிரசாத்தோட குழந்தையைக் கடத்திட்டுப் போற காரியத்தை பண்ணிட்டா மட்டும் உன் கஷ்டமெல்லாம் தீர்ந்துடுமா?"

"கஷ்டம் தீருமோ இல்லியோ? என்னோட கோபமும் வெறியும் அடங்கும். பழிக்குப்பழி வாங்கினாத்தான் என் மனசு ஆறும்..."

"பழிக்குப் பழி வாங்கறேன்னு ஏதாவது விபரீதமா செஞ்சு, நீ பலியாகிடாதே சரவணா..."

"என்னடா நீ புரியாதவனா பேசறே, அன்னிக்கு நாம எவ்வளவு நம்பிக்கையோட அந்த இன்ட்டர்வியூவுக்கு போனோம்?... நம்ப கவலையெல்லாம் தீர்ந்துடும்னு நம்பினோமே? நம்ப வச்சு கழுத்தறுத்த கதையாயிடுச்சேடா?"

"அதே நம்பிகையோட இன்னும் பல கம்பெனிக்கு போவோம். விடாமுயற்சியா வேலை தேடுவோம். விட்டுப் போனதை நினைச்சு கோபப்பட்டு என்ன ஆகப் போகுது?"

"விட்டுப் போனது வேலை மட்டும் இல்லைடா. தன்மானமும் சேர்ந்துதான். நம்பளை மாதிரி கஷ்டப்படற பட்டதாரிகளுக்கு அந்த வேலையைக் குடுத்திருந்தாலும் பரவாயில்லை. சிபாரிசுக்காக வந்தவனுக்கு, ஏற்கெனவே வசதியா வாழற ஒரு பணக்காரப் பயலுக்கு அந்த வேலையை குடுத்திருக்காங்க. அதாண்டா, அந்த வந்தனாவைப் பார்த்து பல்லைக் காட்டினானே விஜயகுமார்னு ஒருத்தன், அவனுக்குக் குடுத்திருக்காங்க. இன்னொரு வேலையை வேற எவனாவது பணக்காரப் பயலுக்கு குடுத்திருப்பாங்க. இது நியாயம்னு உனக்குத் தோணுதா?"

"நிச்சயமா அவங்க செஞ்சது அநியாயம்தான். ஆனா இந்த அநியாயம் எந்த கம்பெனியிலதான் நடக்கல? எந்த நிர்வாகத்துலதான் நடக்கல? இதையெல்லாம் மாத்தவே முடியாதுடா. உன் எதிர்காலத்தைப் பத்தி சிந்திக்காம பழி வாங்கணும்ங்கற எண்ணத்துல தவறான வழிக்குப் போக நினைக்காதே. முயற்சி செஞ்சா நமக்கும் ஒரு நல்ல வழி பிறக்கும்..."

"நிறுத்துடா... அஞ்சு வருஷமா முயற்சி செஞ்சு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு. கை வலிச்சு அலுத்துப் போற வரைக்கும்தான் எதிர் நீச்சல் போட முடியும். மனசும் சேர்ந்து வலிக்கற மாதிரி நயவஞ்சகத்தையும், ஓர வஞ்சனையையும் சந்திக்கும்போது நான் எடுத்திருக்கற முடிவுதான் சரி."

"மலை ஏறும்போது ஒரு அடி ஏறினா மறுபடி அரை அடி சறுக்கும். மனசைத் தளர விடாம திரும்பத் திரும்ப முயற்சி செஞ்சாத்தான் உச்சியை அடைய முடியும். பாதியில முயற்சியை நிறுத்திட்டா... பழையபடி அடிவாரத்துக்குத்தான் போகணும்... அதிலயும் நீ இப்ப பழி வாங்கணும்னு நினைச்சுப் பேசற விஷயம் உன்னை அதல பாதாளத்துக்குத் தள்ளி விட்டுடும்."

"நான் ஆகாய கோட்டையைப் பிடிக்கணும்னு முயற்சி பண்ணலை. ஒரு ஆம்பளைக்குத் தேவையானது மரியாதையான உத்தியோகம். நான் ஒண்ணும் வேலை கிடைக்கலை வேலை கிடைக்கலைன்னு சொல்றதே வேலையா திரியலையே. சும்மா உட்கார்ந்து சாப்பிட்டு வீட்டுக்கு சுமையா இருக்கறது வேதனையா இருக்கு. அம்மா திட்டும்போது அவங்க போடற சாப்பாடு கூட உள்ளே இறங்க மறுக்குது..."

"ஏண்டா, திட்டறது யாரு? உன்னோட அம்மாதானே? பணக்கஷ்டத்துல மனசு தாங்காம, உன்னைத் திட்டறாங்க. பொறுக்க மாட்டாமத்தான் திட்டறாங்கன்னு ஏன் புரிஞ்சுக்க மாட்டறே? உன்னைத் திட்டறதுல அவங்களோட கோபம் தணியும். ஒரு வடிகாலா இருக்கும்னு நினைச்சு சகிச்சுக்கோயேன்."

"அதையெல்லாம் சகிச்சுக்கலாம். ஆனா அந்த ராஜசேகரன் இன்டஸ்ட்ரீஸ் ஆபீஸ்ல தகுதி இல்லாத அந்த விஜயகுமாருக்கு வேலைப் போட்டுக் குடுத்ததை சகிச்சுக்கவே முடியலை."

"அந்த விஜயகுமாருக்கு தகுதியே இல்லைன்னு நீ எப்பிடிடா முடிவு பண்ணலாம்?"

"அப்படியெல்லாம் சாதாரணமா எதையும் முடிவு பண்ணிட மாட்டேன். அவனைப் பத்தின தகவல்கள் எல்லாம் விசாரிச்சுட்டேன். அந்த விஜயகுமாரோட அப்பா சேலத்துல பெரிய வக்கீலாம். பேர் நீலகண்டனாம். வக்கீல் தொழில் செஞ்சு ஏகப்பட்ட பணம் சம்பாதிச்சுட்டாராம். அந்த நீலகண்டனோட ஒரே மகன்தான் இந்த விஜயகுமார். அப்பாவுக்கு நேர் எதிரிடையான குணம் உடையவனாம். தன்னோட பையன் சும்மா இருக்கான்னு சொல்லிக்கறதை எந்தத் தகப்பன்தான் விரும்புவான்? அதனால சிபாரிசு பிடிச்சு இந்த வேலைக்கு ஏற்பாடு பண்ணிட்டாரு அந்த வக்கீல் நீலகண்டன். வீட்டில் எந்தக் கஷ்டமும் கிடையாது. வெளியில கௌரவமா சொல்லிக்கறதுக்காக பெரிய இன்டஸ்ட்ரீஸோட ஆபீஸ்ல உத்யோகம் வாங்கிக் குடுத்திருக்காரு. இதெல்லாம் தெரிஞ்சும் என்னை சும்மா இருக்க சொல்றியா?"

"ஏதாவது செஞ்சு போலீஸ், கேஸ்னு மாட்டிக்கிட்டு அவதிப்பட்டு அவமானப்படறதை விட சும்மா இருக்கறது உனக்கு நல்லது."

"நல்லது கெட்டதைப் பத்தி நினைச்சுப் பார்க்கற நிலைமையை கடந்துட்டேன் வாசு. அந்த பிரசாத்தோட குழந்தையை கடத்திட்டுப் போய், ஒரு பெரிய தொகையை வசூல் பண்ணனும். அதுக்கப்புறம் நேர்மையான முறையில ஏதாவது ஒரு பிஸினஸ் பண்ணி வாழ்க்கையில செட்டில் ஆகிடணும். அந்த பிரசாத்தை பழி வாங்கின மாதிரியும் இருக்கும். என்னோட எதிர்காலத்துக்கும் ஒரு வழி பிறக்கும்."

"எவ்வளவு நல்லவனா இருந்த நீ இப்பிடி மாறிட்டியேடா. வேணாம்டா. உன்னோட இந்த திட்டத்தை விட்டுடு ப்ளீஸ்... என்னோட அறிவுரைக்கு மதிப்பு குடுக்கலைன்னாலும் பரவாயில்லை. நம்பளோட பல வருஷ கால நட்புக்காவது மதிப்பு குடுத்து நான் சொல்றதைக் கேளுடா..."

"போதும் வாசு, இனிமேல நான் உன் பேச்சைக் கேக்கற மாதிரி இல்லை. என்னோட முடிவுல எந்த மாற்றமும் கிடையாது."

"இதுக்கு மேலயும் உனக்கு புத்திமதி சொல்றது வீணான வேலைன்னு புரியுது. ஆனா 'உயிர் காப்பான் தோழன்’ங்கற அடிப்படை உண்மைக்கு இலக்கணமா நம்ப நட்பு தொடரணும். அந்த நட்புல எந்த விரிசலும் ஏற்படக்கூடாது..."

உணர்ச்சிவசப்பட்டு வாசு பேசியதைக் கேட்ட சரவணனுக்கு மனதை என்னவோ செய்தது. சில விநாடிகள் மௌனமாக இருந்தான். சரவணனின் தோள் மீது வாசு தன் கைகளைப் போட்டான்.

"ஸாரிடா வாசு. என்னால... உன்னோட அறிவுரையை ஏத்துக்க முடியலை.. அதே சமயம் என்னோட திட்டத்தையும் மாத்திக்க முடியலை."

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel