Lekha Books

A+ A A-

விழி மூடி யோசித்தால்...

Vizhi Moodi Yosithaal

விழி மூடி யோசித்தால்...

செல்வந்தர் வீட்டுத் திருமணம் நடைபெறுகிறது என்பதை யாரும் செல்லாமலே அங்கிருந்த சூழ்நிலை அறிவித்தது. மணமண்டப அலங்காரத்தில் இருந்து, மணமகளின் தங்க வைர நகைகள் வரை பணம் வாரி இறைக்கப் பட்டிருந்தது.

     அங்கு கூடி இருந்த கூட்டத்தினரிடையே தனித்துக் காணப்பட்டாள் மிதுனா. செல்வச் செழுமையின் அடையாளம் ஏதும் இன்றி, தன் தங்க நிறத்தாலும் அபார அழகாலும் அங்கிருந்தோரைக் கவனிக்க வைத்தது அவளது தோற்றம்.

     சுறுசுறுப்பாக வேலைகள் செய்து கொண்டிருந்தாள் மிதுனா. மண மண்டபத்தின் முக்கியமான அறையின் சாவி, அவளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. எனவே யாருக்கு, எது தேவைப்பட்டாலும் ஓடிச் சென்று, கதவைத் திறந்து அவள் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவளது அழகான தோற்றத்தையும், சுறுசுறுப்பான நடவடிக்கைகளையும் கவனித்துக் கொண்டிருந்த அனுசுயாவின் மனதில் ‘பளிச்’ என ஓர் எண்ணம் தோன்றியது.

     ‘இந்தப் பெண் பற்றிக் கல்பனாவிடம் கேட்க வேண்டும். கல்பனா, மணமகளின் அம்மாவாயிற்றே. அவளிடம் இப்போது பேச முடியாது. அவள் கொஞ்சம் நகர்ந்து வரட்டும்... இந்தப் பெண்ணைக் காட்டிவிட்டு, அதன் பின்னர் நிதானமாகப் பேசலாம்’ என்று நினைத்துக் கொண்டாள் அனுசுயா.

     மணமக்களை அட்சதை தூவி வாழ்த்துவதற்காக மஞ்சள் கலந்த அரிசியை அனைவருக்கும் வழங்குவதற்காக அரிசி நிறைந்த தட்டை ஏந்தி வந்த மிதுனா, அங்கிருந்த அனுசுயாவிடமும் தட்டை நீட்டினாள்.

     அவளிடம். “உன் பேர் என்னம்மா?” என்று கேட்டாள் அனுசுயா.

     “மிதுனா” என்று கூறியபடியே நகர்ந்தாள் மிதுனா. அவளது புன்னகை பூத்த முகம், அனுசுயாவின் மனதைக்  கொள்ளை கொண்டது.

     தாலி கட்டும் வைபவம் முடிந்ததும் கல்பனாவிடம் போய்ப் பேசினாள் அனுசுயா. மிதுனாவைச் சுட்டிக்காட்டி இந்தப் பொண்ணைப் பார்த்து வெச்சுக்க கல்ப்பு... விவரமெல்லாம் அப்புறம் நிதானமாப் பேசறேன்...”

     “சரி அனுசுயா, பொண்ணு மாப்பிள்ளை ரெண்டு நாள்ல ஹனிமூன் கிளம்பிடுவாங்க... அதுக்கப்புறம் போன் பண்ணிட்டு என் வீட்டுக்கு வா, பேசலாம்!” என்றாள் அனுசுயாவின் தோழி கல்பனா.

     “சரி கல்பனா...”

     கல்பனாவிடம் விடை பெற்றுக் கிளம்பினாள் அனுசுயா.

 

2

     மிகச் சிறிய வீடு. ஒண்டிக்குடித்தனம் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட சிறிய வீட்டில் குடி இருந்தனர் மிதுனாவின் குடும்பத்தினர். பக்கவாதத்தால் தாக்கப்பட்ட அப்பாவிற்குத் தேவையானதைச் செய்து. அம்மா சாரதாவிற்கு வீட்டு வேலைகளில் உதவி செய்து, உடன் பிறந்த தங்கையின் பாடங்களில், அவளுக்கு ஏற்படும் சந்தேகங்ளைத் தெளிவுபடுத்தி... அதன் பின்னர் அவள் ஆசிரியையாகப் பணிபுரியும் பள்ளிக் கூடத்திற்குச் செல்ல வேண்டும்.

     சேவையே வாழ்க்கையாக, வாழ்க்கையே சேவையாக வாழ்ந்து கொண்டிருந்தாள் மிதுனா. அவளது வருமானத்திற்குள் குடும்ப வண்டியை ஓட்ட வேண்டிய நிர்ப்பந்தம்... வருமான ரீதியாகக் குறைகள் இருப்பினும், அவளது உருவத்திலும், முகத்திலும் நிறைந்த அழகை வெகுமானமாக அள்ளி அளித்திருந்தான் ஆண்டவன்.

     பேரழகி எனும் கர்வம் துளியும் இன்றித் தன்னடக்கத்துடன் பண்பான பெண்ணாக இருந்தாள் மிதுனா.

     தங்கை அருணா மீது உயிரையே வைத்துப் பாசம் கொண்டவள், அம்மா, அப்பா, மூவரிடமும் அளவற்ற அன்பு கொண்டவள். பள்ளிக்கூட நேரம் முடிந்ததும், வீட்டிற்குத் தேவையான காய்கறி வகைகளை வாங்கிக் கொண்டு வருவது அவளது வழக்கம்.

     வீட்டிற்கு வந்ததும் சாரதாவிடம் அன்றைய தினம் பள்ளிக்கூடத்தில் நிகழ்ந்த அனைத்தையும் விலாவாரியாகச் சொல்லி விடும் வழக்கம் மிதுனாவிற்கு.

     தன்னிடம் யார் யார் என்ன பேசினார்கள், சக ஆசிரியைகளுடன் கலந்துரையாடிய விஷயங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி விடுவாள். அம்மா – மகளுக்குள் எந்தவித ஒளிவு மறைவும் இருக்காது.

     சில சமயம், மிதுனாவின் முகம் வாட்டமாகக் காணப்பட்டால் ‘ஏதோ பிரச்சனை’ என்று அவள் சொல்லாமலே சாரதாவிற்குப் புரிந்துவிடும். மிதுனாவின் பிரச்சனைக்கு ஒரு தீர்வையும் சொல்வார்.

     அம்மாவின் தீர்வு, ஏற்புடையதாக இருக்கும் என்ற அதிக நம்பிக்கை வைத்திருந்தாள். அம்மாவிடம் தன் மனதில் இருப்பதைச் சொன்ன பின் மிதுனாவின் பாரமானமனது, இறகு போல மென்மையாக, லேசாக  ஆகிவிடும். அப்பா கிருணஷ்ணனுக்கு டாக்டர் கூறியபடி எளிமையான உடல் பயிற்சிளைச் செய்து விடுவாள்.

     இப்படிப்பட்ட எளிமையான. ஏழ்மையான அந்தக் குடும்பத்தில் ஒரு பல்கலைக் கழகம் போல, எந்தவித பேராசையோ, பொறாமையோ இன்றி வாழ்ந்து வந்தனர்.

 

3

     மிதுனா பணிபுரியும் பள்ளிக்கூடம், கம்பீரமான கட்டத்தைத் தன்னுள் தாங்கிக் கொண்டிருந்தது. மிகவும் பழமையான... ஆனால் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வரும் மேன்மையான ஒரு பள்ளிக்கூடமாக இருந்தது.

     அழகிய சீருடையில் மூன்று வயது முதல் பதினேழு வயது வரையிலான மாணவிகள், தோட்டத்தில் மலர்ந்த புத்தம் புதிய பூக்களாக ஆங்காங்கே தென்பட்டனர்.

     முன்தினம், அம்மாவோ அப்பாவோ திட்டியது, புதிய உடை வாங்கி வந்து கொடுத்தது முதல் அன்றைய காலை உணவிற்காக என்ன சாப்பிட்டார்கள் என்பது  வரை, வயது வாரியாக வாய் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர் மாணவிகள்.

     நேர்த்தியான காட்டன் புடவை அணிந்து, ஆசிரியைகளுக்குரிய மரியாதையான தோற்றத்தில் சில ஆசிரியைகளும், வீட்டிலும் ஏகமாய்க் குடும்ப கடமைகள் செய்து, பணிக்குத் தாமதமாகி விட்டதாய், ஏனோ தானோ வென்று ஒரு ‘தொள தொளா’ சுடிதார் செட்டை மாட்டிக் கொண்டு அவசர அவசரமாய், வியர்த்து விறுவிறுக்க வேகமாய் நடை போட்ட சில ஆசிரியைகளும் வந்து கொண்டிருந்தனர்.

     மிக எளிமையான பூனம் சேலைகளிலும், கௌரவமாகத் தைக்கப்பட்ட ப்ளவுசும் அணிந்து, மெல்லிய கவரிங் செயினில் முருகன் டாலர் கோக்கப்பட்டு, அது அசைந்தாட, காதுகளில் தொங்கிய கவரிங் ஜிமிக்கிகள் சகிதம் அங்கே நடந்து வந்து கொண்டிருந்தாள் மிதுனா.

     அவளைப் பார்த்த சில மாணவிகள், ‘குட்மார்னிங் மிஸ்’ ‘குட்மார்னிங் மிஸ்’ என்று அவளருகே வந்து அன்புடனும், சந்தோஷத்துடன் கூறினார்.

     அவர்களின் அந்த மென்மையான அன்பிற்கு, உள்ளூரத் தலை வணங்கி, வெளியே தலை அசைத்து அந்த அன்பை ஏற்றுக் கொண்டாள் மிதுனா.

     ‘மிதுனா மிஸ்... மிதுனா மிஸ்!’ என்று மிகவும் பிரியமாக இருந்தனர் மாணவிகள். அன்பாக இருக்க வேண்டிய நேரம் அன்பாகவும், கண்டிப்பாக இருக்க வேண்டிய நேரம் கண்டிப்பாகவும் இருந்து கொள்வது மிதுனாவின் வழக்கம்.

     அந்தப் பள்ளிக்கூடத்தின் அலுவலக நிறுவனத்தாருக்கும் மிதுனாவின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் இருந்தது.

     வகுப்பு துவங்கியது.

     தனது நாற்காலியில் உட்கார்ந்த மிதுனா, அவளது மேஜை மீதிருந்த மதிப்பெண் அட்டைகளை ஒவ்வொன்றாய் எடுத்தாள்.

     எல்லா அட்டைகளிலும் பெற்றோரின் கையெழுத்துப் போடப்பட்டுள்ளதா என்று பார்த்தாள்.

     வரிசையாக ஒவ்வொரு அட்டையும் பார்த்துக் கொண்டே வந்த மிதுனா, மிக மோசமான மார்க்குகள் வாங்கி இருந்த ஒரு பெண்ணின் மதிப்பெண் அட்டையைப் பர்த்ததும் முகம் மாறினாள். கவலை ரேகைகள் அவளது முகத்தில் தோன்றின. “காவ்யா!” என்று அழைத்தாள்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel