Lekha Books

A+ A A-

விழி மூடி யோசித்தால்... - Page 4

Vizhi Moodi Yosithaal

     “ஆமா சேகர். இந்தக் காலத்துல இப்படி ஒரு நல்ல பொண்ணைப் பார்க்கிறது அபூர்வம்தான்.”

     பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கும் பணியில் ஈடுபட வேண்டிய அளவு பயணியர் கூட்டம் அதிகமாகி விட்டபடியால். அதோடு அவர்களது பேச்சு நின்றது. பஸ் ஓடியது.

 

7

          ஸ் நிறுத்தத்தில்  இறங்கிய மிதுனா, ‘அண்ணாச்சி கடை’க்கு நடை போட்டாள். மிதுனாவைப் பார்த்ததும், “வாங்கம்மா, டீச்சரம்மா...” என்று வரவேற்றார் கடையின் உரிமையாளர் அண்ணாச்சி.

     “அண்ணாச்சி... ஒரு லிட்டர் இதயம்  நல்லெண்ணெய் கொடுங்க...”

     “இதோ தரேன்மா...டே தம்பி, அக்காவுக்கு இதயம் ஒரு லிட்டர் எடுத்துக் கொடுடா.?

     அங்கே வேலை செய்யும் பையன், அண்ணாச்சி சொன்னபடி ஒரு லிட்டர் இதயம் பாக்கெட்டை எடுத்து வந்து கொடுத்தான்.

     “என்ன டீச்சரம்மா... இந்த மாசம் இதயம் விலை குறைஞ்சுருக்குன்னு வாங்குறீங்க போலிருக்கு? வழக்கமா மந்த்ரா கடலை எண்ணெய்தானே வாங்குவீங்க?”

     “ஆமா அண்ணாச்சி... இப்போ இதயம் விலை குறைஞ்சிருக்குன்னு வாங்குறேன். அம்மாவுக்கு இதயம் நல்லெண்ணெய் ரொம்பப் பிடிக்கும். சரி அண்ணாச்சி... இந்த லிஸ்ட்ல இருக்கிற சாமானையெல்லாம் கொஞ்சம் சீக்கிரமா எடுத்துக் கொடுக்கச் சொல்லுங்க. லேட் ஆகுது... இன்னும் காய்கறி, தைலமெல்லாம் வாங்கிட்டுப் போகணும்.”

     “இதோ, இப்போ உடனே போட்டுக் கொடுக்கச் சொல்றேன் டீச்சரம்மா...”

     மளிகைப் பொருட்களை வாங்கிக் கொண்டு கிளம்பினாள் மிதுனா.

     காய்கறிக் கடைக்குச் சென்றாள்.

     “தம்பி, கேரட் கால் கிலோ, தக்காளி கால் கிலோ கொடுப்பா...”

     “இதோ போடறேன்க்கா...”

     அப்போது மிதுனாவின் தோளை யாரோ தொட்டார்கள். திரும்பிப் பார்த்தாள் மிதுனா.

     “அட.... நிலா, நீயா?”

     “நானேதான்... எப்படி இருக்கே மிதுனா?”

     “நல்லா இருக்கேன் நிலா. ம்...! என்னைப் பார்த்தாலே தெரியலியா? சந்தோஷமா இருக்கேன்... நம்ப ஸ்கூல் எப்படி இருக்கு?”

     “ஸ்கூல் நல்லா டெவலப் ஆகி இருக்கு... அது சரி... என்ன நிலா... இவ்வளவு குண்டாகிட்டியே...?”

     “கல்யாணம் நிச்சயம் ஆனப்புறம் வேலையை விட்டதுல வீட்ல இருந்து கொஞ்சம் குண்டானேன். அப்பப்பா... நான் க்ளாஸ் எடுத்த ஸ்டூடன்ட்ஸ், சரியான வாலுப்பசங்க. அதுங்ககிட்டே இருந்து விடுபட்டதுல ரிலாக்ஸ் ஆகி, உடம்பு போட்டுடுச்சு. கல்யாணத்துக்கப்புறம்... என் ஹஸ்பன்ட்டோட அன்பு, கஷ்டமே இல்லாத வாழ்க்கை... என்னைப் புரிஞ்சுக்கிட்ட மாமியார், இப்படி சின்னப் பிரச்சனை கூட இல்லாத லைஃப். புதுசா ஒரு அப்பார்ட்மென்ட் வாங்கறார் என் ஹஸ்பன்ட்... எல்லா சந்தோஷமும் சேர்ந்து என் உடம்புல சதை சேர்ந்துடுச்சு எக்கச்சக்கமா...”

     வெரி குட். நல்ல விஷயங்கள் நிறைய நடந்திருக்கு,கேட்கிறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அது சரி.. நீ என்ன இந்தப் பக்கம்?’’

     “என்னோட சின்ன மாமியார் வீட்ல விசேஷம்... உங்க வீட்டுக்குப் பின்பக்கத் தெருவுலதான் அவங்க வீடு, அவங்களுக்கு ஃப்ரூட்ஸ் வாங்கத்தான் இங்கே வந்தோன். என் ஹஸ்பன்ட்டால வர முடியலை. வெளியூர் போயிருக்கார். அதான் நான் மட்டும் வந்தேன். நான் கிளம்பறேன் மிதுனா. வீட்டுக்கு ஒரு நாள் வா மிதுனா. புது அப்பார்ட்மென்ட் கிரகப்பிரவேசத்துக்கும் நீ கட்டாயம் வரணும். அம்மா, அருணாவைக் கேட்டதாகச் சொல்லு.”

     “நிச்சயமா சொல்றேன். டேக் கேர்!”

     “தேங்க்யூ, வரேன்!” என்ற நிலா, அங்கிருந்து கிளம்பினாள்.

     ஒரு குட்டி யானை நடப்பது போல நிலா நடந்து போவதைப் பார்த்தாள் மிதுனா, எதிர்ப்பக்கம் நின்றிருந்த காரில் ஏறினாள் நிலா.

     ‘பிறந்த வீட்ல கஷ்டம்னு வேலைக்கு வந்தாள் இந்த நிலா. புகுந்த வீட்ல நல்ல வசதியான வாழ்க்கை கிடைச்சிருக்கு... நல்லா இருக்கட்டும்!’  நினைத்துக் கொண்ட மிதுனா, மருந்துக்  கடைக்குப் போய். தைலம் வாங்கிக் கொண்டு  வீட்டிற்கு நடந்தாள்.

     ‘அடடா... போன வாரமே அம்மா வாழைப்பூ கேட்டாங்களே...! நிலாவைப் பார்த்ததுல மறந்து போயிட்டேன்... சரி, இன்னொரு நாளைக்கு வாங்கிக்கலாம்!’’ என்று நினைத்த மிதுனா, நடையை விரை வாக்கினாள்.

 

8

     ன்னம்மா மிதுனா? இன்னிக்கு இவ்வளவு லேட்டாயிடுச்சு?” சாரதா  கேட்டாள்.

     “பஸ் லேட்டும்மா... கடைகளுக்கெல்லாம் வேற போயிட்டு  வரேன்மா.”

     “சரிம்மா. காபி கலக்கட்டுமா?”

     “இப்ப வேணாம்மா. அப்பாவுக்குத் தைலம் தேய்ச்சுட்டு அப்புறமா குடிக்கிறேன்மா...’’

     “சரிம்மா....”

     மிதுனா, அவளது அப்பாவிற்குத் தைலம் தேய்த்து விட்டு, நைட்டிக்குள் தன்னை நுழைத்துக் கொண்டு சமையறைக்கு வந்தாள்.

     “அம்மா... உங்ககிட்டே கொஞ்சம் பேசணும்.”

     “தினமும் பேசுற பேச்சுத்தானே மிதுனா? முதல்ல காபி குடிம்மா!”  என்ற சாரதா, சூடாக் காபி கலந்து கொடுத்தாள்.

     அம்மாவின் முகம் பார்த்தபடியே, கையில் காபியை வாங்கிக் கொண்டாள் மிதுனா.

     ‘ஆஹா... தினமும் அதே ருசி... அதே வாசனை... அம்மா கைமணமே தனிதான்!’ நினைத்தபடியே, காபியை ருசித்துக் குடித்தாள் மிதுனா.

     காலையில் காபி போடுவது மிதுனாவின் வேலை மாலையில் அது சாரதாவின் வேலை.

     அம்மாவின் முகத்தில் தென்பட்ட  களைப்பின் அடையாளம், மிதுனாவிற்குக் கவலை அளித்தது.

     வயிதிற்கு மீறிய முதுமைத் தோற்றம், கண்களில் தெரிந்த சோகம் அனைத்தும் சேர்ந்து, வயோதிகத்தின் சாயலை அதிகமாக வெளிப்படுத்தியது.

     அம்மாவின் கைகளை வாஞ்சையுடன் பிடித்து கொண்டாள் மிதுனா.

     “என்னம்மா, மிதுனா... ஏன் ரொம்ப டல்லா இருக்கே? என்னமோ பேசணும்னு சொன்னியே?”

     “ஆமாம்மா...” என்று ஆரம்பித்த மிதுனா, வகுப்பில் நடந்தது, நிலாவைச் சந்தித்தது பற்றிக் கூறி, முடிவில் பஸ் நிறுத்தத்தில் நிகழ்ந்த சம்பவம் பற்றியும் கூறினாள்.

     “பெண்களுக்கு மரியாதை கிடைச்சிருச்சு... அப்படின்னு பெரிசா பேசறாங்க. ஆனால், பஸ் ஸ்டாப்ல ஒரு பொண்ணு நிக்க முடியலை. இதுதான் மரியாதையா? பண்பா? கலாசாரமா?”

     “மிதுனா, உனக்கு முந்தின ஜெனரேஷனைச் சேர்ந்தவ நான். நானே இப்போ உள்ள பையன்களைப் பத்தித் தெரிஞ்சு வெச்சிருக்கேன். இப்பல்லாம் பையன்ங்க, ஒரு பொண்ணைப் பார்த்ததும் மனசுல தோணறதை உடனே வாயால சொல்லிடறாங்க. பெண் என்கிறவள் மரியாதைக்குரியவள். அவகிட்டே எங்கே, எப்போ, எப்படிப் பேசுறதுன்னே அவனுகளுக்குத் தெரிய மாட்டேங்குது. தெரிஞ்சாலும் பொருட்படுத்த மாட்டாங்க, இதுதான் இந்த யுகத்துப் பையனுங்க  லட்சணம்.

     இவ்வளவு படிச்சிருக்கே... இது உனக்குப் புரியலையா? ம்கூம்... உனக்குப் புரியும்... ஆனால், உன்னோட இயல்பு இந்த மாதிரி நடவடிக்கைளை சகஜமா ஏத்துக்க மறுக்குது. நம்ம புடவையிலே தூசு பட்டா என்ன பண்றோம்? தட்டிவிட்டுட்டு அடுத்த வேலையைப் பார்க்கிறோம். அது போல... இந்த மாதிரி விஷயத்தையெல்லாம் அப்படியே விட்டுடணும்.

     “எதுவுமே பிடிக்கலைன்னா, விட்டு விலகிடணும். அதையே நனைச்சுக்கிட்டு டென்ஷன் ஆகிக்கிட்டு... நம்ம மனசும் ஆரோக்கியமும் கெட்டுப் போகணுமா? ’காலம் கெட்டுக் கெடக்கு  காலம் கெட்டுக் கெடக்கு’ன்னு சொலறதிலேயே காலம் கடந்துகிட்டிருக்கு. இதையெல்லாம் சீர்திருத்தவே முடியாது. அது நம்ம வேலையும் இல்லை. அந்த விஷயத்தையே நினைச்சுக்கிட்டிருக்காம உன் வேலையைப் பாரு. வேலை எதுவும் இல்லைன்னா, போய் ரெஸ்ட் எடு...”

     “சரிம்மா, நான் போய் அருணாவுக்குக் கொஞ்சம் பாடம் கத்துக் கொடுக்கணும். கணக்கும் சொல்லிக் கொடுக்கணும்.”

     “சரி மிதுனா... நான் உங்கப்பாவுக்குக் கோதுமைக் கஞ்சி காய்ச்சணும்.”

     “நான் ஹெல்ப் பண்ணவாம்மா?”

     “அதெல்லாம் வேணாம் மிதுனா. நான் பார்த்துக்கிறேன்!” என்ற சாரதா, கோதுமைக் குருணைடப்பாவை எடுத்துக் கொண்டு  ஸ்டவ் அருகே சென்றார்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

பயணம்

பயணம்

September 24, 2012

அம்மா

அம்மா

May 24, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel