Lekha Books

A+ A A-

பாப்பி அம்மாவும் பிள்ளைகளும் - Page 13

paappi-ammaavum-pillaigalum

அவள் சொன்னது சரிதான். பிரசவத்திற்கு ஏதாவது பிரச்சினைகள் இருக்கும் பட்சம், அந்த ஒரு வழி மட்டுமே இருக்கிறது. அதைத் தவிர, வேறு வழியில்லை. மற்றப் பெண்கள் கூறுவதும் சரிதான். மருத்துவமனைக்கு கொண்டு போவது என்பது மிகவும் சிரமமும் செலவும் இருக்கக்கூடிய ஒன்று என்பதென்னவோ உண்மை. ஒரு ஆண் அந்த நேரத்தில் உதவியாக இருந்தால் போதும். ஆனால், அதற்குத்தான் ஆள் இல்லை.

இயற்கையாகவே அவர்களுடைய பேச்சு கேசவன் நாயரில் போய் நின்றது. பாரு அம்மா கேட்டாள்.

“அந்த மகாபாவி இப்போ எங்கே?”

குட்டி அம்மா சொன்னாள்.

“ஆள் எங்கேன்னு யாருக்குத் தெரியும்?”

நாணியம்மா சொன்னாள்.

“சமீப நாட்களா ஆள் எங்கேயும் கண்ணுல படலியே.”

கேசவன் நாயரை அவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து வாய்க்கு வந்தபடி கேவலமாகப் பேசியதும் சாபம் போட்டதும் அந்த வேதனைக்கு மத்தியில் பாப்பி அம்மாவின் காதுகளில் விழுந்தன.

பாரு அம்மா கேட்டாள்.

“அந்த ஆள் எங்கேடி பாப்பி?”

முனகல்களுக்கும் அழுகைக்கும் மத்தியில் பாப்பி அம்மா சொன்னாள்.

“அவர் போயி ஒரு மாசமாச்சு. போறப்போ, காசு கொண்டுட்டு வர்றேன்னு சொல்லிட்டுப் போனாரு.”

பாப்பி அம்மா எப்படியோ கூற நினைத்ததைக் கூறினாள். அதைக்கேட்டு குட்டி அம்மாவிற்கு அதிகமான கோபம் வந்தது.

“ஆமாமா... அவன் பணம் கொண்டு வர்றதுக்காகப் போயிருக்கான்.. திருட்டுப்பய.. இந்த அப்பிராணியை அவன் இப்படி ஏதாவது சொல்லி நல்லா ஏமாத்துறான்.”

எனினும் பாப்பி அம்மா சொன்னாள்.

“எங்கேயிருந்து காசு சம்பாதிக்கிறது? தொழில் சரியா நடக்கலைன்னா காசு எப்படி உண்டாக்குறது?”

குட்டி அம்மா கோபத்துடன் சொன்னாள்.

“பாரு... பாரு.. இவளோட திருட்டுத்தனம் வெளியே வருது பாரு. இவளுக்கு அவன் மேல விருப்பம்...”

நாணியம்மா இடையில் புகுந்து சொன்னாள்.

“போதும், குட்டி போதும். அதைப் பேசுறதுக்கு இதுவா நேரம்? இவ அவனை நம்புறா... அதுக்கு என்ன?”

காளியம்மாவும் அவள் சொன்னதை ஒப்புக் கொண்டாள்.

“என்ன இருந்தாலும் இவ வயித்துல இருக்குற குழந்தையோட அப்பன் ஆச்சே!”

உண்மை என்னவோ அதுதான். கேசவன் நாயரை அப்படி அவர்கள் வாய்க்கு வந்தபடி திட்டுவதும் சாபம் போடுவதும் பாப்பி அம்மாவிற்கு சிறிதும் பிடிக்கவில்லை. ஏதோ தூர இடத்திற்கு அந்த மனிதர் பிரசவத்திற்காகப் பணம் சம்பாதிக்கப் போயிருக்கிறார் என்பதை முழுமையாக நம்பினாள் பாப்பி அம்மா. கையில் இருப்பதைத்தான் கொடுக்க முடியும் என்று அவர் கூறியதையும் அவள் ஒப்புக் கொண்டாள். அவர் வருவார், பணமும் கொண்டு வருவார். பாப்பி அம்மா உண்மையாகவே அதை நம்பினாள். குட்டி அம்மாவின் கோபம் அதற்குப் பிறகும் குறையவில்லை.

எனினும் செய்ய வேண்டிய வேலை இன்னும் செய்யப்படாமல் இருக்கிறது. என்ன செய்வது? குட்டி அம்மா கேட்டாள்.

“நேரம் போய்கிட்டே இருக்கு, என்ன செய்றது?”

யாரும் எதுவும் சொல்லவில்லை.

குட்டி அம்மா கூறினாள்.

“ஒருத்தியோட உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் இது. என் கையில் உண்மையாகவே சொல்றேன்.. ரெண்டு ரூபா இருக்கு. நான் அதை செலவழிக்கத் தயாரா இருக்கேன். இந்த விஷயம் வாசுவோட அப்பாவுக்குத் தெரிஞ்சா என்னைக் கொலையே செய்திடுவாரு. நான் அம்பலப்புழைக்குப் போறதுக்குத் தயாரா இருக்கேன்.”

மற்ற பக்கத்து வீட்டுக்காரர்கள் அதற்கு எதுவும் பதில் பேசாமல் அமைதியாக இருந்தார்கள். மரியப் பெண்பிள்ளை சொன்னாள்.

“பயப்படாம இருங்கம்மா. கடவுள் எந்தவிதப் பிரச்சினையும் இல்லாம குழந்தையை வெளியே கொண்டு வருவாரு.”

சிறிது நேரத்தில் பாப்பி அம்மா பிரசவித்தாள். எந்த அளவிற்கு உரத்த அழுகையுடன் அந்தக் குழந்தை வெளியே வந்தது. அதன் அழுகைச் சத்தம் இருட்டைக் கிழித்துக் கொண்டு ஒலித்தது.

“அம்மாமார்களே, மாதாவோட கிருபையால் நான் பார்க்குற பிரசவத்துக்கு எந்தக் கேடும் வராது.”

மரியப் பெண்பிள்ளை ஜபம் செய்தாள்.

ஆர்வத்துடன் பாரு அம்மா கேட்டாள்.

“என்ன பிள்ளை பொறந்திருக்கு, மரியப் பெண்பிள்ளை?”

“ஆண் குழந்தை...”

தொடர்ந்து மரியப் பெண் பிள்ளை அந்தக் குழந்தையைப் பார்த்து சொன்னாள்.

“இப்படி அழாதேடா. ஊர்ல இருக்குறவங்க படுத்து உறங்கட்டும்.”

மரியப் பெண் பிள்ளை ஒரு தண்டனையும் அவனுக்குத் தரப்போவதாக சொன்னாள்.

“இப்படி அழுதால், உனக்கு நான் அம்மாவைத் தர மாட்டேன்.”

அவனுடைய அழுகை நின்றது. அப்போது குட்டி அம்மா சொன்னாள்:

“பார்த்தீங்களா.. பார்த்தீங்களா.. அம்மாவைப் பற்றி சொன்னதும் அவனோட அழுகை நின்னுடுச்சு.”

குழந்தை அந்த அளவிற்கு சதைப்பிடிப்பாக ஒன்றும் இல்லை. ஆனால், சுறுசுறுப்பும் புத்திசாலித்தனமும் கொண்ட குழந்தையாக இருந்தது. தலை நிறைய முடி இருந்தது. நாணியம்மா அவனுக்கு நேராக விரலை நீட்டிக்கொண்டு சொன்னாள்.

“திருட்டுப்பயலே.. நீ எங்களை எப்படியெல்லாம் கவலைப்பட வச்சிட்டே. அம்மாவை இந்த அளவுக்குக் கஷ்டப்படுத்தணுமா?”

காளியம்மா அப்போது ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்தினாள்.

“அய்யோ, பெண்களே.. குலவை இட வேண்டாமா?”

குழந்தை பிறந்த சந்தோஷத்தில் எல்லாரும் அந்த விஷயத்தை மறந்து விட்டார்கள்.

குலவை சத்தத்தைக் கேட்டு சங்கரப் பணிக்கர் வெளியே வந்து நட்சத்திரத்தைப் பார்த்தார். அவருக்குக் கொஞ்சம் ஜோதிடம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் தெரியும்.

குழந்தையை படுக்க வைத்துக் குளிப்பாட்ட ஒரு வாளிகூட இல்லை. இஞ்சியோ, எண்ணையோ, பொன்னோ, தேனோ எதுவும் இல்லை. மீண்டும் பக்கத்து வீட்டுப் பெண்களுக்குக் கோபம் வர ஆரம்பித்தது. காளியம்மா சொன்னாள்.

“பத்து மாசமா இதெல்லாம் இருக்கணும்னு உனக்குத் தெரியாதாடி?”

தொடர்ந்து குட்டி அம்மா சொன்னாள்.

“எவ்வளவு பட்டினி இருந்தாலும், ஒரு வாளி கூடவா வாங்கி வைக்க முடியல?”

அந்த இரவு நேரத்தில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த அந்தப் பெண்கள் எல்லாவற்றையும் தயார் பண்ணினார்கள்.

குழந்தையைக் குளிப்பாட்டினார்கள்.

இனி மரியப் பெண் பிள்ளையின் கையிலிருந்து குழந்தையை வாங்க வேண்டும். ஒரு காசு கூட அப்போது அங்கு இல்லை. அப்போது அந்தப் பக்கத்து வீட்டுப் பெண்களுக்குக் கோபம் கோபமாக வந்தது. குட்டி அம்மா தன் வீட்டிற்குச் சென்று அரை ரூபாய் எடுத்துக் கொண்டு வந்தாள்.

எல்லாம் முறைப்படி நடந்தது. பொழுது புலர்ந்த பிறகுதான் மரியப்பெண்பிள்ளை அங்கிருந்து போக முடியும். அவளை அங்கேயே இருக்கச் செய்துவிட்டு, பக்கத்து வீட்டுப் பெண்கள் குளிப்பதற்காக சென்றார்கள். குளத்தை நோக்கிப் போகும் வழியில் அவர்கள் ஒவ்வொருவர் மனதிற்குள்ளும் ஓடிக்கொண்டிருந்த ஒரு விஷயத்தை நாணியம்மா மெதுவாக வெளியே விட்டாள்.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

மாடல்

மாடல்

March 2, 2012

நான்

நான்

February 17, 2015

பிசாசு

பிசாசு

November 12, 2013

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel