Lekha Books

A+ A A-

பாப்பி அம்மாவும் பிள்ளைகளும்

paappi-ammaavum-pillaigalum

த்மநாபன் கோயம்புத்தூரில் இருக்கிறான். ஒரு வீட்டில் அவன் வேலை பார்க்கிறான். அவன் இல்லாமல் இரண்டு ஓணம் பண்டிகைகள் கடந்துவிட்டன. பாப்பி அம்மாவிற்கும் கார்த்தியாயினிக்கும் அந்த இரண்டு ஓணங்களும் ஓணங்களாகவே இல்லை. அவன் வழக்கம்போல பணம் அனுப்பியிருந்தான். அதை வைத்துத்தான் ஓணமே நடந்தது. எனினும், திருவோண நாளன்று ஒரு ஆணுக்கு இலை போட்டு உணவுப் பொருட்களைப் பரப்பி வைத்து ஓணச் சாப்பாடு சாப்பிட முடியவில்லை. சமையலறையிலேயே தாயும் மகளும் அமர்ந்து சாப்பிட்டார்கள்.

இந்த வருடம் ஓணத்திற்குப் பத்மநாபன் வருகிறான். முன்கூட்டியே அவன் வருவதாகக் கடிதம் எழுதி விட்டான். அதைப் பார்த்து கார்த்தியாயினி மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தாள். ஆனால், பாப்பி அம்மாவின் மனதிற்குள் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. மகன் வரவேண்டாம் என்று அவள் பிரார்த்தனை செய்யவில்லை. அவன் வரவேண்டும் அவனை அவள் பார்க்க வேண்டும். ஆனால் ஒரு தயக்கம்! அதற்குக் காரணம் இருக்கிறது. சரியான காரணம்தான். பாப்பி அம்மா கர்ப்பமாக இருக்கிறாள். வீங்கிய வயிறுடன் தன் மகனுக்கு முன்னால் போய் அவள் நிற்க வேண்டும். அந்த வயிறு எப்படி வீங்கியது என்று அவன் முகத்தை நோக்கிக் கேட்காமல் இருக்கலாம். கேட்கவும் செய்யலாம். கேட்டால் பாப்பி அம்மா பதில் கூறியாக வேண்டும். கேட்காவிட்டாலும் விஷயத்தைச் சொல்லியே ஆகவேண்டும். அவனுக்கு வயது பதினான்கு ஆகிவிட்டது.

பத்மநாபன் பூராடத்திற்கு வருவதாக எழுதிய கடிதம் வந்தவுடன் உண்மையாகவே பாப்பி அம்மாவிற்குள் நெருப்பு எரிய ஆரம்பித்துவிட்டது. ஒரு ஆளிடம் பாப்பி அம்மா கட்டாயம் அந்த விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும். பாப்பி அம்மாவின் அப்போதைய சூழ்நிலைக்குக் காரணம் ஒரு ஆண். அந்த மனிதரின் பெயர் கேசவன் நாயர். அன்று இரவு இருட்டும் நேரத்தில் கேசவன் நாயர் வந்தார்.

பாப்பி அம்மா சொன்னாள்:

“இப்போ பெரிய பிரச்சினை ஆகப்போகுது.”

அந்த வார்த்தைகள் உண்மையாகவே அவளுடைய இதயத்திலிருந்து கிளம்பி வந்தவை.

கேசவன் நாயர் கேட்டார்: “என்ன சொன்னே?”

“பையன் பூராடத்திற்கு இங்கே வர்றான்.”

அதைக்கேட்டு கேசவன் நாயரிடம் எந்த மாற்றமும் உண்டாகவில்லை.

“வரட்டும், அதனால என்ன?”

கேட்க வேண்டிய கேள்வியைப் பாப்பி அம்மா கேட்டாள்: “நான் எப்படி வீங்கிய வயிறோட அவன் முன்னாடி நிக்கிறது?”

எந்தவித தயக்கமும் இல்லாமல் கேசவன் நாயர் சொன்னார்: “இந்தப் பொண்ணை வயித்துல வச்சுக்கிட்டு நீ அவன் முன்னாடி நின்னல்ல?”

பாப்பி அம்மா சொன்னாள்: “அப்போ அவன் சின்னப் பையனா இருந்தான்.”

கேசவன் நாயரின் அடுத்த வாக்கியம் பாப்பி அம்மாவைத் தேற்றும் விதத்தில் இருந்தது.

“பத்மநாபன் வர்றப்போ நான் இங்கே இருப்பேன். நான் ஓடி ஒளியப்போறது இல்ல..”

எனினும், பாப்பி அம்மாவிற்கு மனநிம்மதி உண்டாகவில்லை.

பாப்பி அம்மாவை ஊர், உலகம் அறிய ஒரு மனிதன் அவளுக்கு முண்டு வாங்கிக் கொடுத்து திருமணம் செய்தான். அவன் பெயர் கிட்டு நாயர். அவனுக்குப் பிறந்த மகன்தான் பத்மநாபன். கிட்டு நாயர் திடீரென்று ஒருநாள் இறந்துவிட்டான். அப்போது பத்மநாபனுக்கு இரண்டு வயது நடந்துக் கொண்டிருந்தது. அதற்குப்பிறகு அவள் கர்ப்பமடைந்தாள். அதற்குக் காரணம் பாச்சு பிள்ளை என்றாள் அவள். இப்படித்தான் கார்த்தியாயினி இந்த பூமிக்கு வந்தாள். ஒரு குழந்தையுடன் இன்னொரு குழந்தையும் வந்து சேர்ந்தது. அந்தச் சூழ்நிலையில் பத்மநாபன் கோயம்புத்தூருக்குச் சென்றான். கேசவன் நாயர் அவளைத் தேடி வந்தார்.

ஆனால், கேசவன்நாயர் கொண்ட உறவில் ஒரு தனித்துவம் இருந்தது. அவர் எல்லோருக்கும் தெரியும்படி அந்த வீட்டிற்கு வருவார். நிறைய நேரம் அங்கிருந்து பேசிக் கொண்டிருப்பார். கேசவன் நாயர் பாப்பி அம்மாவின் கணவர் என்று நீண்ட சிந்தனைக்குப் பிறகு வேண்டுமானால் கூறலாம். அப்படி யாராவது சொன்னால், சிறிது நேரம் பேசிய பிறகு, இல்லாவிட்டால் ஒரு நீண்ட விளக்கத்திற்குப் பிறகு அவர் அதை மறுப்பார்.

பூராடம் வந்தது. பாப்பி அம்மா மனதளவில் மிகவும் கஷ்டப்பட்டாள். உள்ளுக்குள் புழுங்கினாள். எனினும், கர்ப்பமாக இருக்கும் அந்த தாய் தன் மகனை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். கார்த்தியாயினிக்கு உற்சாகமோ உற்சாகம். சொன்னதைப்போலவே கேசவன் நாயர் அங்கேயே தங்கினார். சிறிது நேரம் அந்த இடத்தை விட்டு அகன்று விட்டால் போதும்.. பாப்பி அம்மா அவரைப் பார்த்துக் கேட்பாள்:

“என்ன, கிளம்பிட்டீங்களா?”

இப்படி மூன்று நான்கு தடவைகள் அவள் கேட்டவுடன், அவருக்குக் கோபம் வந்துவிட்டது.

“என்ன கேள்வி கேக்குற? நான் உன் பக்கத்துலயே எப்பவும் நின்னுக்கிட்டு இருக்கணுமா?”

பாப்பி அம்மா அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. வயிறு வீங்கி இருப்பதற்கு சரியான பரிகாரம் அவர் தன் அருகில் இருப்பதுதான் என்று அந்தப் பெண் நினைத்தாள். அதுதானே சரியான விஷயம்!

தூரத்தில் பத்மநாபன் நடந்து வந்துக் கொண்டிருந்தான். பாப்பி அம்மா எல்லாவற்றையும் மறந்துவிட்டு பாதையில் இறங்கி அவனை நோக்கி ஓடினாள். என்ன இருந்தாலும் அவனைப் பெற்ற தாயாயிற்றே அவள்! அவனை நெருங்கியதும் ‘மகனே’ என்று அழைத்தவாறு தன் கைகளை அவள் நீட்டினாள். அந்த மகன் நீட்டிய கைகளுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு தாயுடன் சேர்ந்தான். வீங்கிக் காணப்பட்ட அவளின் வயிறு அந்த அணைப்பிற்கு இடைஞ்சலாக இருக்கவில்லை. தாயும் மகனும் சேர்ந்து வீட்டை நோக்கி நடந்தார்கள். கார்த்தியாயினி அவனுடைய கையைப் பிடித்துத் தொங்கினாள்.

வீட்டில் கேசவன் நாயர் இருந்தார். அவர் தான் சொன்ன வார்த்தைகளைக் காப்பாற்றினார். வீட்டைவிட்டு ஓடிப் போகவில்லை. அவனுக்குக் கேசவன் நாயரைத் தெரியும். ‘கேசவன் மாமா’ என்றுதான் முன்பு அவன் அவரை அழைப்பான்.

கேசவன் நாயர் ஒரு பிரகாசமான சிரிப்புடன் அவனைப் பார்த்துக் கேட்டார்.

“நீ எப்படி வந்தே?”

“கோயம்புத்தூர்ல இருந்து ரயிலேறி எர்ணாகுளத்துக்கு வந்தேன். ஆலப்புழைக்கு படகுல வந்தேன். அங்கேயிருந்து கருமாடியில இறங்கி நடந்து வர்றேன்.”

அவன் சொன்னதை ஆர்வத்துடன் எல்லாரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

கேசவன் நாயர் பாப்பி அம்மாவிடம் சொன்னார்: “நீ அவனுக்கு சாப்பிடுறதுக்கு ஏதாவது கொடு. அவன் எதுவும் சாப்பிட்டிருக்க மாட்டான்.”

பத்மநாபன் சொன்னான்: “நான் காப்பி குடிச்சேன்.”

தந்தையைப் போல கேசவன் நாயர் சொன்னார் : “இருந்தாலும் பதினாலு வயசுகூட ஆகாத ஒரு பையன் இவ்வளவு தூரம் ரயிலேறி வந்திருக்கேல்ல!”

பாப்பி அம்மா சமையலறைக்குச் சென்றாள். கார்த்தியாயினியை பத்மநாபன் தன்னுடன் ஒட்டிப் பிடித்துக் கொண்டிருந்தான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel