
“நான் என் பணத்தை யார்கிட்ட வேணும்னாலும் தர்றேன்.”
“அது எதுக்கு?” என்பது மாதிரி எல்லாரும் குட்டி அம்மாவின் முகத்தைப் பார்த்தார்கள். குட்டி அம்மா சொன்னாள்.
“இல்ல... என் வாசுவோட அப்பாதான் வழக்கை நடத்துறது. அதனால சொன்னேன்.”
“இப்படித் தனித்தனியா ஒவ்வொருத்தர்கிட்டயும் பிரிச்சு வாங்கினா பணத்தை மோசடி பண்ணிடுவாங்கன்னு யாராவது நினைச்சாங்களா என்ன?”
“இல்ல... வெறுமனே சொன்னேன்.”
அந்த ஊரெங்கும் அந்த விஷயம் பரவி விட்டது. கேசவன் நாயர் மீது வழக்குத் தொடுக்கப் போகிறார்கள் என்ற செய்தி எல்லா இடங்களிலும் பரவியது. ஒவ்வொருவரும் அவரைப் பார்த்துக் கேட்க ஆரம்பித்தார்கள். அதற்கு அவர் சொன்ன பதில் இதுவாக இருந்தது.
“நானும் வழக்கைப் பார்த்தவன்தான்.”
கோயில் மைதானத்திலும், ஈச்சரமேனனின் கடையிலும் இருக்கும்போது குட்டன்பிள்ளை இந்த விஷயத்தைப் பற்றி எல்லாரும் கேட்கும் வண்ணம் சவால்விட்டு சொன்னார். அந்த சம்பவத்தைப் பற்றி கேசவன் நாயரும் அறிந்தார். அப்போது அவருக்கு மனதில் சிறிது அச்சம் உண்டாகவில்லை என்று கூறுவதற்கில்லை.
நிலைமை இப்படியிருக்க, அஞ்சல் பணியாள் தன்னைத் தேடிக் கொண்டிருக்கும் விஷயத்தை கேசவன் நாயர் அறிந்தார்.
விளையாட்டாக நினைத்தது வினையாகப் போகிறது. கேசவன் நாயரின் மனதில் பதைபதைப்பு அதிகமாகியது. அவர் திடீரென்று காணாமல் போனார். அவர் எங்கு இருக்கிறார் என்று யாருக்குமே தெரியாது. சமீப காலமாக அவர் யார் கண்ணிலும் படவில்லை. மாராம் மடத்தில் கேசவன் நாயர் என்றுதான் அஞ்சலின் வெளிப்குதியில் எழுதப்பட்டிருந்தது. அந்த வீட்டில் அப்படியொரு மனிதரே இல்லை என்று வீட்டிலுள்ளவர்கள் கூறிவிட்டார்கள்.
குட்டன்பிள்ளை நோட்டீஸை அனுப்புவதற்கு முன்பே அதைப்பற்றி அஞ்சல் பணியாளரிடம் கூறியிருந்தார். அப்போதே அந்த அஞ்சல் பணியாளருக்கு மனதில் ஒருவித வெறி உண்டாகிவிட்டது. ஆளை எப்படியாவது கண்டுபிடித்து நோட்டீஸைத் தந்தே ஆவது என்பதில் அவன் மிகவும் தீவிரமாக இருந்தான்.
மாராம் மடத்தில் கேசவன் நாயர் என்ற பெயரில் ஒரு ஆளே இல்லை என்ற சூழ்நிலை வந்ததும், அஞ்சல் பணியாள் குட்டன் பிள்ளையிடம் வந்தான். அப்படியொரு சூழ்நிலையில் குட்டன்பிள்ளை என்ன செய்ய முடியும்? கேசவன் நாயர்தான் காணாமல் போய்விட்டாரே!
கேசவன் நாயர் பயந்து எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறார் என்ற விஷயத்தை குட்டன்பிள்ளை பெண்களிடம் கூறினார். அது ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திதான். சந்தேகமேயில்லை. குட்டன்பிள்ளை சொன்னார்.
“அவன் பயந்துட்டான். மறுபடியும் வராம அவன் எங்கே போயிடுவான்?”
தன் கணவரின் திறமையைப் பார்த்து குட்டி அம்மா மிகவும் பெருமைப்பட்டாள். அவள் சொன்னாள்.
“அரசாங்கத்தை எதிர்க்க முடியுமா?”
குட்டன்பிள்ளை தன் மனைவியைப் பார்த்து சொன்னார்.
“ஹா.. போடி அந்தப் பக்கம்! அரசாங்கம் இந்த விஷயத்துல இன்னும் தலையிடலடி.. அது இனிமேல்தான்.”
குட்டி அம்மாவின் அரைகுறை அறிவு கேட்டது.
“பிறகு, இந்த அஞ்சல் பணியாள் யாரு? அரசாங்கத்தோட ஆள்தானே?”
அப்போது குட்டன் பிள்ளைக்குப் பேச்சு வரவில்லை. அஞ்சல் பணியாள் அரசாங்கத்தைச் சேர்ந்தவன்தான். சந்தேகமில்லை. அவள் அதை சொன்னபோது தன்னை யாரோ முதுகில் அடித்ததைப்போல் அவர் உணர்ந்தார். எனினும் அவர் சொன்னார்.
“போடி, அந்தப் பக்கம். உனக்கு என்ன தெரியும்?”
ஒரு மாலை நேரத்தில் கோயிலின் மேற்குப் பக்கத்திலிருக்கும் வெற்றிடத்தில் அஞ்சல் பணியாள் கேசவன் நாயரைப் பார்த்தான். அங்கிருந்து ஓடி ஒளிய பல முயற்சிகளையும் அவர் செய்து பார்த்தார். அஞ்சல் பணியாள் அவரைத் தப்பியோட விடவில்லை. கையெழுத்துப் போட்டு அந்த நோட்டீஸை வாங்க வேண்டும். இல்லாவிட்டால் அதை வாங்கிக் கொள்ள அவர் மறுத்துவிட்டார் என்று தான் எழுதிவிடுவதாக அவர் அவரை மிரட்டினான். அந்தப் பகுதியில்தான் குட்டன் பிள்ளையும் இருந்தார். வேறு வழியில்லாமல் கேசவன் நாயர் கையெழுத்துப் போட்டு நோட்டீஸை வாங்கினார்.
வக்கீல் அனுப்பிய நோட்டீஸ் அது. மிகவும் கடுமையாக அது எழுதப்பட்டிருந்தது. அதில் கூறப்பட்டிருந்தவை எல்லாமே சரியாக இருந்தன. அந்த நோட்டீஸை ஊரிலுள்ள யாரிடமாவது காட்டி அறிவுரை பெறலாமென்றால், கேசவன் நாயருக்கு உதவி செய்ய அந்த ஊரில் யாருமில்லை. அது மட்டுமல்ல... அந்த நோட்டீஸை வேறு யாரிடமும் காட்டவும் முடியாது.
ஆலப்புழை வரை சென்று வேறொரு வக்கீரை அவர் ஏற்பாடு செய்தாக வேண்டும். அதற்குப் பணம் தேவை. சில நாட்களாகவே அவரால் அன்றாட வாழ்க்கையை நடத்தவே முடியவில்லை. அப்போது அறுவடை முடிந்து நெல் வியாபாரம் நன்றாக நடந்து கொண்டிருந்த நேரமாக இருந்தாலும், அவர் கையில் ஒரு பைசாகூட இல்லை என்பதே உண்மை. பார்ப்பவர்களெல்லாம் அவரைப் பார்த்துக் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள்.
“என்ன கேசவன் நாயரே, வழக்குல சிக்கிக்கிட்டீங்களா?”
கேசவன் நாயர் அதற்குப் பதிலாக வெறுமனே ‘உம்’ கொட்டுவார். இந்த அளவிற்கு தன் நிலைமை வரும் என்று கேசவன் நாயர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இந்த விஷயத்திற்கு இந்த அளவிற்கு முக்கியத்துவம் கிடைக்குமா? தடத்தில் வீட்டு பாப்பிக்கு யாரோ ஆட்கள் கிடைத்திருக்கிறார்கள்.
கேசவன் நாயர் வாழ்க்கையில் முதல் தடவையாக ஒரு பெரிய பிரச்சினையை நேரில் சந்திக்கிறார். ஒரு பெரிய பிரச்சினை! இப்போது தன்னைப் பார்த்துக் கேட்பவர்களிடம் கேசவன் நாயர் கூறுவது இதைத்தான்.
“அந்தக் குட்டன் இருக்கிறானே, அவனை நான் ஒரு வழி பண்ணுறேன்.”
“இந்தா பணம்.”
பாப்பி அம்மாவின் கையை அந்த இருட்டில் கண்டுபிடித்து அவர் என்னவோ கொடுத்தார்.
“மூணு ரூபா இருக்கு. ஒரு ரூபா நோட்டு.”
“அஞ்சுன்னு சொல்லிட்டு மூணைக் கொடுத்தா?”
“எங்கேயிருந்து பணம் உண்டாக்குறது, பாப்பி?”
“நான் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டேன் தெரியுமா?” அவர் வாசலிலிருந்து அறைக்குள் மெதுவாக வந்தார். பாப்பி அம்மா சொன்னாள்.
“அந்தக் குழந்தை அங்கே படுத்திருக்கு.. மிதிச்சுடாதீங்க.”
“இல்ல...”
பிறகு நீண்ட நேரம் அந்த அறைக்குள் மெதுவான குரலில் அவர்களுக்குள் உரையாடல் நடந்தது. மன வேதனை வெளிப்பட்ட குரலில் அவர் கேட்டார்.
“இருந்தாலும் நீ என் மேல வழக்குப் போட்டுட்டியே. நீ என்மேல அன்பே இல்லாம நடந்துக்கிட்ட. நான் இதை எதிர்பார்க்கவே இல்ல.”
பாப்பி அம்மா பதைபதைப்பான குரலில் சொன்னாள்.
“நான் வழக்குப் போட்டிருக்கேனா? என்ன சொல்றீங்க? என் குழந்தைங்க சத்தியமா சொல்றேன், எனக்கு அதைப்பற்றி எதுவுமே தெரியாது.”
குழந்தைகள் மீது சத்தியம் செய்து அவள் சொன்ன வார்த்தைகளை அவர் சரியாகக் காதில் வாங்காமல் அவர் சொன்னார்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook