
“அவன் அவனோட மாமா வீட்டுக்குப் போயிருக்கான்.”
“ரொம்ப நல்லதாப்போச்சு” - பாப்பன் குழைவான குரலில் கூறியவாறு சிரித்தான். “நான் இன்னைக்கு இங்கேதான் தூங்கப்போறேன்.”
“அப்படியா?” ஜானம்மா சிரித்தாள். “இந்த வயசுக் காலத்தில சின்னப் பையன்னு நினைப்பா?”
“யாரைப் பார்த்து வயசாச்சுன்னு சொல்ற?” பாப்பன் கையை நீட்டி அவளை இழுத்து தன் மடியின்மேல் படுக்கப் போட்டான். ஜானம்மா அடுத்த நிமிடம் விளக்கை வாயால் ஊதி அணைத்தாள்.
சிறிது நேரம் சென்றதும் பாப்பன் சொன்னான். “அடியே ஜானு... நீ சொன்னது சரிதான். நமக்கு வயசாயிடுச்சு. நமக்கு இல்ல; உனக்கு... இப்போ வயசு அறுபதை நெருங்கிடுச்சு...!”
ஒரு பூனைக்குட்டியைப் போல அவன் நெஞ்சோடு சேர்ந்து படுத்துக்கொண்டு அவன் நெஞ்சுப் பகுதியில் இருந்த ரோமங்களை விரல்களால் தடவியவாறு ஜானம்மா கொஞ்சுகிற குரலில் சொன்னாள். “ஆயிரம் சொல்லுங்க... என்னைப் பொறுத்தவரை நீங்க என்னைக்குமே இளவட்டம் தான். அன்புக்கு வயசிருக்கா என்ன?” பனியின் கொடுமையிலிருந்து காப்பாற்றும் எண்ணத்துடன் அவர்கள் ஒருவரையொருவர் இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். நடுத்தர வயதைத் தாண்டிய அவர்கள் தங்களின் இளமையைப் புதுப்பித்துக் கொள்ளும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள்.
திருமணம் முடிந்தவுடன், சிறுபிள்ளைகளுக்கே உரிய பல பழக்க வழக்கங்களும் ஒரோதாவை விட்டுப் போக ஆரம்பித்தன. பக்குவப்பட்ட ஒரு மனைவியைப் போல, குடும்ப வாழ்க்கையில் நன்கு தேர்ந்த ஒரு இல்லத்தரசியைப் போல அவள் நடந்து கொண்டாள். பகல் முழுவதும் அவள் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்தாள். கணவனையும் தந்தையையும் மிகவும் அக்கறையுடன் கவனித்துக் கொண்டாள். இரவு நேரங்களில் கணவனுடன் சேர்ந்து உறங்கினாள். காலையில் எழுந்து தன் கணவனின் காலைத் தொட்டு வணங்கி அன்றைய காரியங்களைச் செய்வதை வாடிக்கையாகக் கொண்டாள்.
ஒரோதா கர்ப்பவதி ஆனாள். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். ஒரோதாவைத் தூக்கிக் கொண்டு நடந்த மாதிரி, தன்னுடைய பேரக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு நடந்தான்.
“நல்லவேளை... இவனுக்கு பால் எங்கே கிடைக்கும்னு பொம்பளைகளைத் தேடி அலைய வேண்டியது இல்ல...” - பாப்பன் ஜானம்மாவிடம் சொன்னான்.
“இதைச் சொல்றதுக்கு வெட்கமாக இல்லியா?” ஜானம்மா செல்லமாக அவனைப் பார்த்து கோபித்தாள்.
பாப்பன் மீண்டும் இளைஞனைப் போல மாறினான். அவன் கஷ்டப்பட்டு வேலை செய்தான். விருப்பப்படி குடித்தான். அடிபிடி சண்டைக்குப் போனான்.
ஒரோதாவின் இரண்டாவது குழந்தைக்கு ஏழுமாதம் ஆனபோது அந்த வருடத்தின் ராக்குளிபெருநாள் வந்தது. திருவிழாவிற்கு எல்லோரும் ஒன்று சேர்ந்து பாலா பெரிய சர்ச்சுக்குப் போனார்கள். திரும்பும்போது ஒரோதாவிடம் பாப்பன் சொன்னான். “மகளே நீயும் பிள்ளைகளும் குஞ்ஞுவர்க்கி கூட போங்க. நான் பிறகு வர்றேன்...”
அவர்கள் கிளம்பினார்கள். பிள்ளைகளும் கணவனும் உறங்கின பிறகுதான் ஒரோதா தூங்கவே ஆரம்பித்தாள். என்றாலும், அவள் பொழுது புலர்வதற்கு முன்பே தூக்கம் கலைந்து எழுந்தாள். வாசலில் தன் தந்தையைக் காணோம் என்றதும் அவள் வீட்டிற்குள் வந்து குஞ்ஞுவர்க்கியைத் தட்டி எழுப்பினாள். “இங்க பாருங்க... அப்பா வரவே இல்லை போல இருக்கே.” பாப்பனுக்கும் ஜானம்மாவுக்கும் இடையில் இருக்கும் உறவை நன்கு தெரிந்து வைத்திருந்த குஞ்ஞுவர்க்கி லேசாகச் சிரித்தவாறு கூறினான். “எப்படியும் வருவாரு. கவலைப்படாதே...” அப்போது முத்துகிருஷ்ணன் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடி வந்தான். “ஒரோதா... குஞ்ஞுவர்க்கி… சீக்கிரம் துணியை மாத்திட்டு கிளம்புங்க. ராத்திரி வழியில கத்தி குத்து நடந்திருச்சு. மடுக்காம்குழிக்காரங்களோட ஆளுங்க ஒரு இடத்துல மறைஞ்சிருந்து பாப்பன் அண்ணனை தாக்கியிருக்காங்க. பாப்பன் அண்ணன் அவங்களைக் குத்திட்டாரு. வந்தவங்கள்ல ரெண்டுபேரு அந்த இடத்துலேயே செத்துப் போயிட்டாங்க. பாப்பன் அண்ணனுக்கும் கத்தி குத்து விழுந்திருச்சு. இப்போ அவரு ஆஸ்பத்திரியில இருக்காரு. சீக்கிரம் கிளம்புங்க. நாம எல்லாரும் அங்கே போகணும்...”
“அப்பா... என் அப்பா...” -ஒரோதா நின்றிருந்த இடத்திலேயே மயக்கம் போட்டு கீழே விழுந்தாள்.
கிழக்குத் திசையில் ஆகாயத்தில் அந்த அதிகாலை வேளையில் சூரியனின் முதல் கதிர்கள் தெரிய ஆரம்பித்தன.
மடுக்காம்குழி கொச்சுதொம்மி ஆற்று வெள்ளத்தில் மிதந்து வந்த ஊத்தை என்று தன்னைப் பற்றி கூறிய நாளன்று இரவில் பாப்பன் தன்னிடம் சொன்ன கதை, தன்னை அவன் பார்த்த வரலாறு, தன்னுடைய பிறப்பைப் பற்றி எதுவுமே தெரியாத நிலை ஆகியவற்றைக் கேட்டபோது ஒரோதாவிற்கு மனதில் இனம் புரியாத வேதனை தோன்ற ஆரம்பித்தது. வாழ்க்கையில் முதல் தடவையாக தான் ஒரு அனாதை என்ற எண்ணம் அவளுக்கு உண்டாக ஆரம்பித்தது. தனக்கென்று உலகில் யாரும் இல்லை என்ற சிந்தனை அவள் மனதில் ஒருவித வெற்றிடத்தை உண்டாக்கியது. அந்த வெற்றிடத்தை அவள் மறக்க கண்டுபிடித்த வழி- தனக்கு உயிர் தந்த அந்தப் பெரிய மனிதனிடம், தன்னுடைய சொந்தத் தாயின் பெயரை தனக்கு வைத்து அந்தப் பெயரால் தன்னை அழைத்து அன்புடன் தன்னை வளர்த்த வளர்ப்புத் தந்தையிடம் மேலும் நெருக்கத்தை உண்டாக்கிக் கொண்டதுதான். மனைவியாக ஆனபோது, தாயாக ஆனபோது அவள் மேல் புதிய பொறுப்புகள் வந்து சேர்ந்தன. அந்தப் பொறுப்புகளையும் சுமைகளையும் பெரிதாக எண்ணி அவள் செயல்பட்ட போது தான் ஒரு அனாதை என்பதையும், தான் ஒரு முக்கியத்துவம் இல்லாத பெண் என்பதையும் மனதில் தோன்றிய வெற்றிடத்தையும் கிட்டத்தட்ட அவள் மறந்தே போனாள். ஆனால், அவளுக்கு எல்லாமுமாக இருந்த வளர்ப்புத் தந்தை கொஞ்சமும் எதிர்பார்க்காமலேயே அவளை விட்டு நிரந்தரமாக நீங்கியது பார்வையே தெரியாத அளவிற்கு இருள் நிறைந்த ஒரு அதலபாதாளத்தில் அவளை விழச்செய்துவிட்டது. சிறிது கூட வெளிச்சத்தின் ரேகையே தெரியாத அந்தக் குழிக்குள் கிடந்து அவள் புழுவென துடித்துக் கொண்டிருந்தாள்.
உலகம் என்றால் என்னவென்றே தெரியாத இரண்டு குழந்தைகள் அவளுக்கு. குழந்தைகளை விட குழந்தையாக இருந்த அவளின் கணவன் குஞ்ஞுவர்க்கி காலை நேரம் வந்ததும் படகு ஓட்டக் கிளம்பி விடுவான். தொழிலில் பாப்பன் மாதிரி பணம் சம்பாதிப்பதற்கான சாதுரியம் அவனிடம் கிடையாது. மாமனிடம் இருந்த கள்ளுக் குடி பழக்கம் மட்டும் பரம்பரை நோய் மாதிரி அவனையும் தொற்றிக் கொண்டிருந்தது. இரவு நேரத்தில் பனங்கள்ளைக் குடித்துவிட்டு சீட்டு விளையாடிவிட்டு நடக்க முடியாமல் நடந்து வீட்டுக்குள் நுழையும் குஞ்ஞுவர்க்கியின் மடியில் மருந்துக்குக்கூட காசு இருக்காது. சில நேரங்களில் மூத்த பையனுக்காக இரண்டு வாழைப்பழத்தையோ, இல்லாவிட்டால் இரண்டு நெய் அப்பத்தையோ அவன் வாங்கிக் கொண்டு வருவான்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook