Lekha Books

A+ A A-

காதல்

kadhal

மாதவி அம்மாவின் ஒரே மகள் நிர்மலா. ஒரே ஒரு மகள். ஒரே ஒரு வாரிசு.

மாதவி அம்மா சமையலறையில் இருந்தாள். அப்போதுதான் அந்தச் சத்தம் கேட்டது. கேட் திறக்கும் சத்தம். அந்தச் சத்தத்திற்காக அவள் காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டு காத்திருந்தாள்- சாயங்காலம் ஐந்து மணி முதல். வழக்கமாக ஐந்து மணி நெருங்கும் நேரத்தில்தான் நிர்மலா கல்லூரியை விட்டுத் திரும்பி வருவாள்.

சில நேரங்களில் பேருந்து கிடைத்தால் அதற்கும் முன்பேகூட அவள் வந்து விடுவாள். ஏதாவது காரணத்தால் வருவதற்கு நீண்ட நேரம் ஆகும் என்றால் அவள் முன்கூட்டியே தொலைபேசி மூலம் விவரத்தைச் சொல்லி விடுவாள். அந்தப் பழக்கத்தை அவள் எப்போதும் கைவிட்டதில்லை.

அன்று நேரமாகி விட்டிருந்தது. எனினும் நிர்மலா வந்து சேரவில்லை. தொலைபேசியும் வரவில்லை.

வேக வைப்பதற்காக முந்தைய நாள் நீரில் கழுவி எடுத்த வேர்க்கடலை ப்ரஷர் குக்கருக்குள் போடப்பட்டு அடுப்பிற்கு அருகில் வைக்கப்பட்டிருந்தது. அது வேக அப்படியொன்றும் அதிக நேரம் ஆகாது. கியாஸ் அடுப்பு. கியாஸ் தீரும் நிலையில் இருக்கிறது. எந்த நிமிடத்தில் அது தன் இறுதி மூச்சை விடும் என்று யாருக்கும் தெரியாது. மனிதனின் நிலைதான் அதற்கும். ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்து விட்டால் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று அது அணைந்துவிடும். அதற்குப் பயந்துதான் மாதவி அம்மா அடுப்புக்கு அருகிலேயே நின்றிருந்தாள்.

வெறுமனே அப்படி நின்றிருந்தபோது அவளுடைய மனம் தன் மகளைத் தேடி அலைந்தது. பார்வை திறந்து கிடந்த ஜன்னல் வழியே சிறிது நேரம் வானவெளியில் சஞ்சரித்தது. வானம் இன்னும் இருட்டவில்லை. சிறிய சிறிய வெள்ளை நிற மேகங்கள் ஆங்காங்கே அலைந்து கொண்டிருந்தன. நீல நிறத்தில் இருந்தது வானம்.

வடக்குப் பக்கமிருந்த இடத்தில் கட்டப்பட்டிருந்த வேலிக்கருகிலுள்ள வாகை மரத்தின் கிளைகளுக்கு மத்தியில் முன்பே வந்தடைந்திருந்த மாலை நேரத்தின் இருட்டில் காகங்கள் தனியாகவும் கூட்டமாகவும் படுப்பதற்காக வந்திருந்தன. அந்த மரத்தின் கன்றைக் கொண்டு வந்து வேலிக்கருகில் குழி தோண்டி நடும்போது தன் கணவர் சொன்னதை அவள் நினைத்துப் பார்த்தாள். "இது பெருசா வளர்ந்து பூ பூக்குறப்போ, அதைப் பார்க்குறதுக்கு நான் இருக்க மாட்டேன்" என்றார் அவர்.

"அப்படின்னா இனிமேல் நடவேண்டாம். அதே நேரத்துல, ஒவ்வொருத்தரும் அவங்கவங்களுக்கு வேண்டியதுன்னு நினைச்சா எல்லா காரியத்தையும் செய்யிறாங்க?"- அவள் கேட்காமல் இல்லை: "யாருக்காகச் செய்தாலும் தேவையில்லாமல் இதையெல்லாம் சொல்லணுமா? எப்போ யாரைப் பார்ப்பாங்கன்னு யாருக்குத் தெரியும்?"

"நீ சொல்றது சரிதான். மனிதனோட நிலைமை அதுதான். ஆனா, மரங்களுக்கு மாரடைப்பு வந்து இறந்ததாக நீ கேள்விப்பட்டிருக்கியா?" - அவர் விளையாட்டாகக் கேட்டார்.

எவ்வளவோ நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவம் அது. எனினும், அன்று அவை ஒவ்வொன்றையும் அவள் நினைத்துப் பார்த்தாள்.

மாலை நேரத்தின் நெருக்கடி நிறைந்த சாலையில் வாகனங்களின் சத்தமும் இரைச்சலும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. அதன் மீது கொண்டிருக்கும் வெறுப்பை வெளிப்படுத்துவது மாதிரி மரக்கிளைகளில் உறங்குவதற்காகக் காத்திருந்த காகங்கள் தங்களுக்குள் முணுமுணுத்தன. நேரம் இருட்ட ஆரம்பித்தது. எனினும், பகல் வெப்பத்தின் அடையாளம் இன்னும் முழுமையாக அடங்கவில்லை. வேனில் காலம் என்றால் எப்போதும் அப்படித்தான். பகல், இரவு எல்லா நேரமும் ஒரே மாதிரி புழுக்கம் நிறைந்ததாகவே இருக்கும்.

மாதவி அம்மாவின் உடலில் வியர்வை அருவியென வழிந்து கொண்டிருந்தது. தாங்க முடியாத அளவிற்கு அவளுக்கு வெறுப்பு உண்டானது. உடலில் தண்ணீர் ஊற்றினால்தான் சரியாக இருக்கும் என்று அவள் நினைத்தாள். அந்தப்பெண் வீடு வந்து சேர்ந்துவிட்டால், அவளுக்கான தேநீரைத் தயாரித்துக் கொடுத்துவிட்டு வேகமாகக் குளித்து விட்டு வரலாம் என்று நினைத்தாள். கல்லூரி விடும் நேரம் எப்போதோ முடிந்து விட்டது. 'இப்போ அவ வரட்டும்...'- அவள் மனதிற்குள் கூறினாள்.

அப்போது வெளியே அழைப்பு மணி ஒலித்தது. மாதவி அம்மா வேகமாக ஸ்டவ்வை அணைக்க முயற்சித்தாள். ஆனால், செய்யவில்லை. அவளுக்குச் சந்தேகமாக இருந்தது. கடலை முழுமையாக வெந்திருக்குமா என்பதைப் பற்றித்தான். எப்படி இருந்தாலும் சந்தேகத்தைத் தீர்ப்பதற்கான நேரம் அப்போது இல்லை. அதனால் தோளில் போட்டிருந்த துவாலை முனையால் வியர்வை அரும்பியிருந்த நெற்றியையும் கழுத்தின் கீழ்ப்பகுதியையும் அழுத்தித் துடைத்துவிட்டு அவள் ஹாலை நோக்கி நடந்தாள்.

அழைப்பு மணி மீண்டும் ஒலித்தது.

அப்போது கதவும் திறக்கப்பட்டது.

புத்தகங்களை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு முகத்தைக் குனிந்தவாறு ஒரு பக்கமாகச் சற்று ஒதுங்கியவாறு தன் தாயை உரசிக்கொண்டு நிர்மலா உள்ளே போனால். பள்ளிக்கூடத்தில் சேட்டை பண்ணியதற்காகத் தண்டனை கிடைத்த சிறுமியைப் போல அவளுடைய செயல் இருந்தது. மாதவி அம்மா கதவைத் திறந்து பிடித்தவாறு அங்கேயே நின்றிருந்தாள். அப்போது கேட்டுக்கு வெளியே ஒரு காரின் சத்தம் கேட்டது. நின்றிருந்த கார் 'ஸ்டார்ட்' ஆகிப் புறப்படும் சத்தம் கேட்டது. மாதவி அம்மா ஒரு எட்டு முன்னால் வைத்து யாருடைய கார் அதுவென்று பார்த்தாள். சுவருக்கு அப்பால் ஓடி மறைந்த காரின் மேற்பகுதியை மட்டுமே அவளால் பார்க்க முடிந்தது. கறுப்பு நிறத்தில் அந்தக் கார் இருந்தது.

மாதவி அம்மாவிற்குச் சந்தேகம் தோன்றியது. வேகமாகக் கதவை அடைத்து தாழ்ப்பாள் போட்டு விட்டு உள்ளே வந்தாள். படுக்கையறையில் நிர்மலா அலமாரியைத் திறந்து அடைக்கும் சத்தம் கேட்டது. கல்லூரிக்கு அணிந்துகொண்டு போயிருந்த ஆடைகளை அவள் அவிழ்த்து மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். எனினும் அவள் வீட்டுக்குள் நுழைந்து சிறிதுகூட முகத்தை உயர்த்தி தன்னைப் பார்க்காமல் போனது ஏன் என்று மாதவி அம்மா நினைத்தாள். அது ஒரு நல்ல விஷயமாக அவளுக்குத் தோன்றவில்லை. வாய்திறந்து கூறுவதற்கு எதுவும் இல்லாமல் இருக்கலாம். தலையை உயர்த்திப் பார்க்க வேண்டிய தேவையும் இல்லாமல் இருக்கலாம். அதற்காக அப்படி நடக்கலாமா என்று அவள் நினைத்தாள். மனதில் நினைத்த அந்த நினைப்பு அந்த நிமிடத்திலேயே முடியவேண்டும் என்றும் அவள் விரும்பினாள். அந்தக் கருப்பு நிற கார் மட்டும் கண்களில் படாமல் இருந்திருந்தால், அவள் அந்த விஷயத்தைப் பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டாள். அந்தக்காரின் கறுப்பு நிறம்தான் அவளுடைய மனதைப் பாடாய்ப் படுத்திக்கொண்டிருந்தது. அந்தக் கறுப்பு நிறக் காரில்தான் நிர்மலா வந்திருக்க வேண்டும் என்று அவள் சந்தேகப்பட்டாள்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel