Lekha Books

A+ A A-

காதல் - Page 10

kadhal

"நிர்மலா, நான் போறேன். நீ வர்றியா?"

"இப்பவே போறதா?"- அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள்.

"ம்... எனக்கு உடம்புக்குச் சரியா இல்ல..."- மாதவி அம்மா சொன்னாள்.

நிர்மலாவால் அதை நம்பவே முடியவில்லை. எனினும் உடல்நலமில்லை என்ற சூழ்நிலையில் அங்கிருந்து போவதே நல்லது என்று நினைத்த அவள் சசியை அழைத்தாள். தன் தாயை வீட்டில் கொண்டுபோய் விடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தாள்.

போகும் விஷயத்தைவேறு யாரிடமும் சொல்லாமல் யாருடைய கவனத்தலும் படாமல் அங்கிருந்து புறப்பட வேண்டும் என்றுதான் மாதவி அம்மா விரும்பினாள். ஆனால், அவளின் ஒவ்வொரு அசைவையும் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்த சசியின் தாய், மாதவி அம்மா கிளம்பப் போகிறாள் என்பதைத் தெரிந்து கொண்டவுடன் அங்கு ஓடி வந்து கேட்டாள்.

"என்ன, சாப்பிடாமலே போறீங்களா?"

"ம்..." மாதவி அம்மா முணுமுணுத்தாள்.

பிறகு எதையும் கேட்பதற்கு முன்னால் அவள் படுவேகமாக வெளியே நடந்து அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

5

பிரபாகர் அப்போதுதான் அலுவலகத்திற்குள் நுழைந்திருந்தார். அறைக்குள் பழைய தரை விரிப்பின் வாசனை நிறைந்திருந்தது. அவர் மேஜை மேலிருந்த அழைப்பு மணியின் பொத்தானை அழுத்தினார். மணியோசை மனித வடிவம் எடுத்தது போல் அடுத்த நிமிடம் கதவைத் திறந்து கொண்டு ப்யூன் உள்ளே நுழைந்தான். அவனிடம் அவர் எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. உள்ளே நுழைந்தவுடன் அவன் ஏர்கண்டிஷனரை இயங்கச் செய்தான். அதிர்ச்சியடைந்து எழுந்து எதிர்ப்பைக் காட்டுவது போல அது சீறிக்கொண்டு இயங்கியது. வந்ததைப் போலவே ப்யூன் வெளியே போகவும் செய்தான். தரை விரிப்பைப் போலவே அவனிடமும் ஒரு தனிப்பட்ட நாற்றம் இருந்தது.

அவர் தன்னுடைய ப்ரீஃப்கேஸைத் திறந்து கண்ணாடியையும் பேனாவையும் நேற்று வீட்டிற்குக் கொண்டு போயிருந்த அவசர ஃபைல்களையும் வெளியே எடுத்து மேஜைமீது வைத்தார். பிறகு கோட்டு பைக்குள்ளிருந்து சிகரெட் பாக்கெட்டையும் லைட்டரையும் வெளியே எடுத்து ஒரு சிகரெட்டைப் புகைத்து விட்டு கோட்டைக் கழற்றி நாற்காலியின் சாய்வுப் பகுதியில் எப்போதும் போல தொங்க விட்டார்.

அப்போது தொலைபேசி மணி ஒலித்தது. அவர் அதைக் காதில் வாங்காததைப் போல இருந்தார். ஆனால், பிடிவாதம் பிடித்த ஒரு குழந்தையைப் போல அது நிற்காமல் ஒலித்துக்கொண்டேயிருந்தது. அதற்குப் பிறகும் அதைக் காதில் வாங்காமலேயே அவர் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தார். பிடிவாதம் பிடிக்கும் குழந்தையின் தாயைப்போல அவர் நடந்து கொண்டார். தொலைபேசி நிற்காமல் ஒலித்துக்கொண்டிருந்தது காரணமாக இருக்கவேண்டும் வெளியே நின்றிருந்த ப்யூன் கதவை மெதுவாகத் திறந்து உள்ளே எட்டிப் பார்த்தான். சார் உள்ளேதான் இருக்கிறார் என்பது தெரிந்தவுடன் அவன் வேகமாக மீண்டும் கதவை மூடினான்.

தொலைபேசி அதற்குப் பிறகும் குறைந்தபட்சம் பத்து தடவைகளாவது அடித்திருக்கவேண்டும். மீண்டும் அது ஒலிக்க ஆரம்பிக்கவே, பொறுமையை இழந்த அவர் சற்று முன்னால் நகர்ந்து ரிஸீவரைக் கையில் எடுத்தார். அதைக் கையில் வைத்துக் கொண்டு கடவுளின் நாமத்தைச் சொல்வது போல உதட்டை நக்கிக் கொண்டு மெதுவான குரலில் என்னவோ முணுமுணுத்தார். அவர் ரிஸீவரைத் தன் காதோடு சேர்த்து வைத்தார். காதின் கீழ்ப்பகுதி வரை வளர்ந்திருந்த அவருடைய தலைமுடி நன்கு நரைத்திருந்தன. நெற்றியின் இருபக்கங்களிலும் வழுக்கை கொஞ்சம் கொஞ்சமாக மேல்நோக்கி ஏறிக்கொண்டிருந்தது என்றாலும் மீதி இருந்த தலைமுடி அவ்வளவாக நரைக்காமலே இருந்தன. அது மட்டுமல்ல- மழை பெய்யும் காட்டில் வளர்ந்திருக்கும் புதர்களைப் போல இடைவெளி விட்டு அவை வளர்ந்திருந்தன.

மொத்தத்தில் இளமை அவரிடமிருந்து விடைபெற்றிருந்தாலும், பிரபாகர் பார்ப்பதற்குக் கம்பீரமாகவே இருந்தார். தலையில் இருந்த சிறு வழுக்கை அந்த கம்பீரமான தோற்றத்திற்கு மெருகு சேர்க்கக்கூடிய ஒன்றாகவே இருந்தது.

"பிரபாகர் ஹியர்..."- அவர் தொலைபேசியில் சொன்னார்.

அடுத்த நிமிடம் அவருடைய முகம் முற்றிலுமாக மாறியது. சிறிதும் எதிர்பார்த்திராத ஏதோவொன்று நடந்ததைப் போல அந்த முக மாறுபாடு ஒரு நிமிடம் மட்டுமே நிலைத்து நின்றது. அடுத்த நிமிடம் அவர் விளையாடுகிற தொனியில் கேட்டார்: "இல்ல... இல்ல... இப்படியும் சிலர் ஊர்ல இருக்காங்களா என்ன?"

மாதவி அம்மாவிற்குப் பொழுது போவதற்கான நேரமல்ல அது.

"உங்களை நான் முக்கிய விஷயமா பார்க்கணும்"- அவள் தொலைபேசியில் கூறினாள்.

"என்னையா?"

"ஆமா..."

"இப்பவே பார்க்கணுமா?"

"எவ்வளவு சீக்கிரமா முடியுமோ, அவ்வளவு சீக்கிரம்."

"இப்போ வரமுடியாது."

"ஓ... அப்படின்னா அந்த அளவுக்கு முக்கியம் இல்லைன்னு அர்த்தம். அது இருக்கட்டும்... என்ன விஷயம்? யாருக்கும் உடம்புக்கு எதுவும் இல்லையே!"- அவளின் குரலில் ஏதோ பாதிக்கக்கூடிய விஷயம் மறைந்திருக்கிறது என்று தோன்றியதால் அவர் விளையாட்டுத்தனத்தை விட்டு சீரியஸாகக் கேட்டார்.

"இல்ல..."

"பிறகு?"

"பார்க்கறப்போ சொல்றேன். எப்போ நான் உங்களைப் பார்க்கறது?"

"நான் இன்னைக்கே அங்கே வர்றேன். அலுவலகத்துல இருந்து போற வழியில... ஆனா, அப்போ நான் நல்ல பசியா இருப்பேன்."

"இங்கே வரவேண்டாம்"- மாதவி அம்மா அப்போதும் தன்னிடமிருந்த கம்பீரத்தை விட்டுத்தரவில்லை. அவள் சொன்னாள்:

"நாளைக்கு மதியம் பார்க்க முடியுமா?"

"நாளைக்கு நான் என் பல் டாக்டரைப் பார்க்கணும். அங்கே போயிட்டு வர்ற வழியில..."

"எத்தனை மணிக்கு நீங்க பல் டாக்டரைப் பார்க்கப் போறீங்க?"

"பதினோரு மணிக்கு. பன்னிரண்டு மணிக்கு நான் அஸ்டோரியா ஹோட்டலுக்கு முன்னாடி வந்திர்றேன். அங்கே பார்ப்போமா?"

"பார்க்காம என்ன? கட்டாயம் பார்ப்போம்."

"மதிய உணவை அஸ்டோரியா ஹோட்டல்லயே சாப்பிடுவோம் என்ன?"

"வேண்டாம்..."

"அப்படின்னா ரேடியோ க்ளப்ல..."

ஒரு நிமிட நேரத்திற்கு அமைதி நிலவியது. மாதவி அம்மா கூறுவதற்கான பதிலைத் தேடிக் கொண்டிருந்தாள்.

"ஹலோ... ஹலோ..."- குரலைக் கேட்காததால் பிரபாகர் அழைத்தார்.

"ம்... சரி.."- மாதவி அம்மா சொன்னாள்: "ஓ.கே. நாளைக்கு மதியம் பன்னிரண்டு மணிக்கு நான் அஸ்டோரியா ஹோட்டலுக்கு முன்னாடி காத்திருக்கேன். அது இருக்கட்டும்... இப்பவும் பல்வலி இருக்கா என்ன?"

"இல்ல..."

"பிறகு எதுக்கு பல் டாக்டரைப் பார்க்கப் போறீங்க?"

"போன தடவை போனப்போ இன்னும் ரெண்டு தடவை வரணும்னு சொன்னாரு."

"ஆளு கொஞ்ச வயசா?"

"ஷட்டப்..."

"வெறுமனே பணம் புடுங்குற வேலை இது. இந்த மாதிரியான ஆளுங்ககிட்ட போகவே போகாதீங்க. என் பல்லை எடுக்கறதா இருந்தா, பல்லோட விலையை எனக்குத் தரணும்."

"சரி... நாளைக்குப் பார்ப்போம். தொலைபேசியை வைக்கட்டுமா?"

"ஓகே... பை..."

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel