Lekha Books

A+ A A-

காதல் - Page 5

kadhal

"எனக்கு பல்லியைப் பார்த்தா ஒரே பயம்னு உங்களுக்குத் தெரியாதா, அம்மா?"

"சரிதான். நீதான் வளர்ந்த பொண்ணாச்சே!"

"அம்மா, அதை இன்னும் விடாம பிடிச்சிக்கிட்டு இருக்கீங்களே?"

"நீ சொன்னதுக்காக நான் சொன்னேன். அவ்வளவுதான்."

"சரி... சரி... நான் ஒத்துக்குறேன்.அது இருக்கட்டும்... அம்மா, அதை நீங்க அடிச்சுக் கொல்லக்கூடாதா? அதைப் பார்க்கவே பிடிக்கல..."

"நான் அதைச் செய்யமாட்டேன். அது எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா?"

"என்ன பெரிய பாவம்?"

"அப்படின்னா நீயே அதைக் கொல்லேன்..."

அதைச் சொன்ன மாதவி அம்மா நிலைக்கண்ணாடிக்கு முன்னால் அமர்ந்து தலைமுடியை ஒழுங்குபடுத்த ஆரம்பித்தாள்.

நிர்மலா கட்டிலை விட்டு எழுந்து நின்று "சூ...சூ..." என்று கூறியவாறு சிறிது நேரம் கையை வீசியதும், பல்லி அந்த இடத்தை விட்டு நீங்கியது. அடுத்த நிமிடம் அவள் கட்டிலில் போய் 'பொத்'தென்று மல்லாக்க விழுந்து, மீண்டும் படித்துக் கொண்டிருந்ததைத் தொடர்ந்தாள். அவளுடைய தாய் சீப்பில் சிக்கிய தலைமுடிகளைக் கையால் எடுத்து இடது கையின் சுட்டு விரலில் ஒரு வளையத்தைப் போல சுற்றி குப்பைக் கூடையில் போட்டாள். பிறகு எப்போதும் செய்வதைப் போல தலைமுடியை இழுத்து மேலே கட்டினாள். நிர்மலா படித்துக் கொண்டிருந்தாலும், அவளின் பார்வை சுவரிலேயே இருந்தது. ஓடிப்போயிருந்த பல்லி இதற்கிடையில் மீண்டும் திரும்பி வந்திருந்தது. அது சுவரில் இருந்தபடி வாலை ஆட்டிக் கொண்டிருந்தது. இதற்கிடையில் சிறிது தூரத்தில் விளக்கின் நிழலுக்குக் கீழே வேறொரு பல்லியும் வந்து சேர்ந்திருந்தது. அதுவும் வாலை ஆட்டிக் கொண்டிருந்தது.

அறையின் முன் மூலையில் இருந்த ஒரு பீடத்தின்மீது குருவாயூரப்பனின் கண்ணாடி போட்ட படம் இருந்தது. மாதவி அம்மா அதற்கு முன்னால் இரண்டு மூன்று சாம்பிராணி வர்த்திகளை எரிய வைத்தாள். பிறகு சிறிது நேரம் கண்களை மூடி நின்றவாறு கடவுளை மனதில் நினைத்து விட்டு ஒரு சிறு டப்பாவிலிருந்து சிறிது திருநிறை எடுத்து தன் நெற்றியில் வைத்துக் கொண்டாள்.

அத்துடன் அவளின் அன்றைய எல்லா வேலைகளும் முடிவடைந்தன. "சுவாமி குருவாயூரப்பா, கடவுளே!"- சாலையில் போகும் யாரையோ அழைக்கிறாள் என்று மற்றவர்கள் நினைக்கும் வண்ணம் ஜன்னல் வழியே வெளியே பார்த்து உரத்த குரலில் கூறியவாறு அவள் கட்டிலில் காலை நீட்டிப் படுத்தாள்.

"என்ன வினோதமான வாசனை!" -நிர்மலா முணுமுணுத்தாள். அந்த சாம்பிராணிவர்த்தி எரிந்து கொண்டிருக்கும் நிமிடத்திலெல்லாம் அவள் அப்படிக் கூறுவதுண்டு. அதன் வாசனை அவளுக்குச் சிறிது கூடப் பிடிக்காது. "நீ இன்னும் தூங்கலையா?"- மாதவி அம்மா கேட்டாள்-

"அம்மா, நீங்க தூங்குங்க. நான் விளக்கை அணைக்கிறேன்"- நிர்மலா சொன்னாள்.

"இந்த மின்விசிறியை ஏன் இவ்வளவு வேகமா வச்சிருக்கே? கொஞ்சம் மெதுவா வைக்கக்கூடாதா?"

"கொசு கடிச்சு, தூங்க முடியல. அதுனாலதான் வேகமா வச்சேன்." மாதவி அம்மா திரும்பிப் படுத்தாள்.

"குட் நைட் மம்மி."

"குட் நைட் மகளே."

தூரத்தில் எங்கோ ஒருபுகை வண்டி போய்க்கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. ஸ்டேஷனுக்கு வெளியே சிக்னலுக்காகக் காத்திருக்கும் ஏதோ ஒரு    வண்டியின் ஓசை அது. ஒரு பிடிவாதம் பிடித்த குழந்தையைப் போல அது முரண்டு பிடித்துக் கொண்டிருந்தது. ஆனால், என்னதான் பிடிவாதம் பிடித்தாலும் அதைப்பற்றி கவலையில்லை, தாய்க்கு எப்போது நேரம் ஒத்து வருகிறதோ அப்போது மட்டுமே அவள் குழந்தையைப் பற்றி கவலைப்படுவாள். அதுவரையில் வெறுமனே கிடந்து ஓசை எழுப்பிக் கொண்டிருக்க மட்டுமே முடியும்.

வடக்குப் பக்கம் ஒரு நாய் இடைவிடாமல் குரைத்துக் கொண்டேயிருந்தது. இரவு நேரம் வந்துவிட்டால் பொழுது புலரும் வரையில் அது குரைத்துக் கொண்டேயிருக்கும். அந்தக் குரைப்பொலியை ஊர் முழுவதும் நாம் கேட்கலாம். அந்த அளவிற்கு உரத்த குரலில் அது கத்தும். சாலையில் போகும் யாருடைய அசைவைக் கேட்டாலும் போதும், அது தன் குரைக்கும் வேலையை ஆரம்பித்து விடும். ஒரு ஆண் நாயோ, பெண் நாயோ அருகில் வருவதைப் பார்த்து விட்டால் கூட போதும், அது தன் குரைக்கும் வேலையை ஆரம்பித்துவிடும். ஆனால், சிக்னலுக்கு வெளியே நின்றிருக்கும் புகைவண்டியின் சத்தத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நாயின் நடத்தையில் ஒரு வித்தியாசம் இருக்கவே செய்தது. தான் குரைப்பதை யாராவது பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அதற்குச் சிறிதும் இல்லை.

இப்படியே பல நிமிடங்கள் அமைதியாகத் திரும்பிப் படுத்திருந்த மாதவி அம்மா மீண்டும் மல்லாக்கப் படுத்தாள். ஏதோ ஒரு விஷயம் அவளைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருப்பது நன்றாகவே தெரிந்தது.

நிர்மலா எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. புகை வண்டியின் இரைச்சலோ நாயின் இடைவிடாத குரைக்கும் சத்தமோ படுவேகமாகச் சுற்றிக் கொண்டிருந்த மின்விசிறியின் காற்றில் பட்டு பறந்து கொண்டிருந்த காலண்டர் தாள்களின் சத்தமோ எதுவும் அவளைச் சிறிதும் பாதிக்கவில்லை. ட்ரான்சிஸ்டரிலிருந்து கிளம்பி வந்து கொண்டிருந்த மேற்கத்திய இசையின் வெறிபிடித்த தாள மேளங்களும் இரைச்சலும் அவளுடைய கவனத்தில் பதிந்திருக்குமா? அதுவும் கூட சந்தேகம்தான்.

வாசிப்பதில் மூழ்கிவிட்டால் அவள் மற்ற எல்லாவற்றையும் மறந்து விடுவாள்.

"நான் ஒரு விஷயம் கேட்கட்டுமா? இதைக் கேக்கறதுக்காக நீ என் மேல பாயக்கூடாது தெரியுதா?" மாதவி அம்மா மெதுவான குரலில் சொன்னாள். "ம்.."- நிர்மலா புத்தகத்தை விட்டு தன் கண்களை எடுக்காமல் சொன்னாள். "உனக்கும் சசிக்கும் இடையில்... அப்படி உண்மையிலேயே ஏதாவது?"

தான் எதிர்பார்த்த ஒன்றுதான் அது என்பதைப் போல நிர்மலா மெதுவாக புத்தகத்தை மூடி வைத்துவிட்டு திரும்பிப் படுத்து தன் தாயின் முகத்தையே உற்றுப் பார்த்தாள். பிறகு சந்தேகக் குரலில் அவள் கேட்டாள்: "அம்மா, இன்னைக்கு ஏன் விடாம நீங்க எங்க பின்னாடியே திரும்பத் திரும்ப வந்துக்கிட்டு இருக்கீங்க?"

"இல்ல... தெரிஞ்சிக்கிறதுக்குத்தான் கேட்டேன். நீங்க இப்போ சின்ன பசங்க ஒண்ணுமில்ல- முன்னாடி இருந்த மாதிரி விளையாடிக்கிட்டு இருக்கிறதுக்கு!"

"அப்பாடா! இப்பவாவது நீங்க ஒத்துக்கிட்டீங்களே- நாங்க சின்னப்பிள்ளைங்க இல்லைன்றதை. அந்த அளவுக்கு சந்தோஷம். அதே நேரத்துல, பிள்ளைங்க வளர்ந்த பிறகு முன்னாடி இருந்த மாதிரி நட்பா இருக்கக்கூடாதா என்ன? அது என்ன சட்டம்? சசியை நான் இன்னைக்கோ நேற்றோ பார்த்தது இல்லையே! நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து அவரை நான் பார்த்து வந்திருக்கேனே!"

"அதுனாலதான் நான்..."

"என்ன?"

"இல்ல... அப்படி ஏதாவது இருந்தா அம்மா நான் தெரிஞ்சிக்கக்கூடாதா?"

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel