
அதற்குப் பிறகு ஒன்றிரண்டு நாட்களுக்கு ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளவே அவர்களுக்கு வெட்கமாக இருந்தது. அத்துடன் பதைபதைப்பும்.
ஆனால், அந்த வெட்கமும் பதைபதைப்பும் அந்த இரண்டு நாட்கள் மட்டுமே இருந்தன. அதற்குப் பிறகு சம்பவங்களின் போக்கே முழுமையாக மாறிவிட்டது. சசி அவளுடன் முன்பு இருந்ததைவிட நெருங்கிப் பழக ஆரம்பித்தான். ஆனால், நிர்மலா முட்டாளாக இருக்கவில்லை. எதுவரை எல்லை என்பதைப் பற்றிய அறிவு அவளுக்கு முழுமையாக இருந்தது. அதைத் தாண்டி தன்னை மறந்துகூட வழுக்கி விழுந்து விடாமல் இருப்பதில் அவள் மிகவும் கவனமாக இருந்தாள். அந்த விஷயத்தில் அவள் வெற்றி பெறவும் செய்தாள்.
ஒருநாள்... அதை நினைத்துப் பார்த்தபோது அவளையும் மீறி அவளுடைய உதடுகளுக்கும் இதயத்தின் துடிப்பு படர்ந்தது. ஒரு முட்டாளைப்போல அவள் சிரித்துக் கொண்டிருந்தாள்- தனிமையாகப் படுத்துக்கொண்டு, யாருக்கும் தெரியாமல். ஒருநாள்... கல்லூரியிலிருந்து திரும்பி வரும் வழியில் பூங்காவிலிருந்த பாறைக்குப் பின்னால் உட்கார்ந்திருக்கும்பொழுது சசியின் கை இரையை விழுங்கிய பாம்பைப் போல தன்னுடைய உடம்பில் படர்ந்து கொண்டிருப்பதை நிர்மலா உணர்ந்தாள். "எங்கே கை போகுது?"- சுற்றிலும் பார்த்தவாறு அவள் கேட்டாள்.
"என்ன இருந்தாலும் நீ நடனம் ஆடுகிற பெண் ஆச்சே! கண் போகுற இடத்துக்கு கை போகணும், கை போகுற இடத்துக்கு மனம் போகணும்... இதுதான் நாட்டிய சாஸ்திரத்தில் சொல்லித் தர்ற ஆரம்பப் பாடமே. இதுவே உனக்குத் தெரியல..."
"எடுங்க..."- பலமாக அவனுடைய கையை விலக்கியவாறு அவள் சொன்னாள். "ம்... நேரம் வரட்டும். அப்போ என் கையை எங்கே வைக்கணுமோ, அங்கே வைக்கிறேன். எங்கே வைக்கணும்னு எனக்குத் தெரியும்."
"அப்படியா? எனக்காக நீங்க காத்திருக்க வேண்டாம்."
"நான் சொல்றதும் அதைத்தான். யாரும் எதுக்காகவும் காத்திருக்க வேண்டாம். எல்லாமே நடக்குறபடி நடக்கும்."
"போதும்... போதும்... இதுக்கு மேல எதுவும் சொல்ல வேண்டாம்."- அவள் கோபமாகச் சொன்னாள்.
அப்போது அவன் அவளை பலமாகப் பிடித்து தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டு அவளுடைய உதடுகளில் ஒரு முத்தத்தைப் பதித்தான். அவளுக்கு மூச்சு விடவே கஷ்டமாக இருந்தது.
"இப்படியா நடக்கறீங்க? இங்கே பாருங்க... இப்படி நடக்கறதா இருந்தா நான் இனிமேல் வரவே மாட்டேன்."- அவள் பொய்க் கோபம் காட்டியவாறு சொன்னாள். அதுவெறுமனே சொல்லப்படும் வார்த்தைகள் என்பது அவளுக்கும் சசிக்கும் நன்றாகவே தெரியும்.
இப்போது அதையெல்லாம் நினைத்துப் பார்க்கும் பொழுது அவளுடைய உடல் தலையிலிருந்து பாதம் வரை சிலிர்த்தது. தன்னை மறந்து மீண்டும் மீண்டும் அவள் குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக் கொண்டிருந்தாள்.
ஆமாம்- ஒரு முட்டாளைப் போல.
ஆடையை மாற்றியவுடன் மகள் வெளியே வருவாள் என்ற எண்ணத்துடன் மாதவி அம்மா சமையலறையில் அவளுக்காகக் காத்திருந்தாள். கல்லூரியிலிருந்து வந்தவுடன் அவள் தேநீர் குடித்தாக வேண்டும். அதுதான் தினந்தோறும் நடப்பது. அதற்காக பேய் பிடித்தவளைப் போல சமையலறையை நோக்கி அவள் வேகமாக ஓடிவருவாள். சில நேரங்களில் சிறிதுகூட ஓசை உண்டாக்காமல் பதுங்கிப் பதுங்கி வந்த தன் தாய்க்குப் பின்னால் நின்றுகொண்டு இரு கைகளாலும் அவளை நிர்மலா கட்டிப் பிடிப்பாள்.
"இந்த அம்மா எனக்கு தேநீரே தரல..." அவள் பரிதாபமாகக் கூறுவாள்.
"சரிடா கண்ணு... இதுக்காக கோவிச்சுக்காதே"- தன் கழுத்தைச் சுற்றியிருக்கும் அவளுடைய கைகளை விலக்க முயற்சித்துக்கொண்டே மாதவி அம்மா கேட்பாள். "நான் தேநீர் தந்தாத்தான் குடிப்பியா? நீயே தேநீர் தயாரிச்சுக்கக் கூடாதா?"
"நீங்க தேநீர் தயாரிச்சுத் தரலைன்னா, நான் தேநீர் குடிக்காமலே இருந்திடுவேன்னு நினைக்கிறீங்களா?" நிர்மலா மிடுக்கான குரலில் கூறுவாள். "குடிப்பே... குடிப்பே... எவ்வளவு தேநீர் குடிப்பேன்னு நானும் பார்க்கத்தானே போறேன்! தேநீர் குடித்த கோப்பையைக் கழுவி வைக்கக் கூட உனக்குத் தெரியாது. நீ தேநீர் போடப் போறியா?"
"என் செல்ல அம்மால்ல... என் அம்மா எனக்கு இருக்கறப்போ நான் எதுக்கு தேநீர் தயாரிக்கணும்? பிறகு... யார் தேநீர் தயாரிச்சாலும் நீங்க தயாரிக்கிறது மாதிரி நல்லா இருக்காது..."
அவள் தன் தாயின் கன்னத்தில் முத்தமிடுவாள்.
அப்படிப்பட்ட சம்பவங்கள் சிறு சிறு மாற்றங்களுடன் வழக்கமாக நடந்துவரக் கூடியவையே. தாய்க்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்த சம்பவங்கள் அவை.
ஆனால், அன்று அவள் தேநீருக்காக சமையலறையைத் தேடி வரவில்லை. கல்லூரியை விட்டு வந்தவுடன் அணிந்திருந்த ஆடைகளை மாற்றிவிட்டு படுக்கையறையிலேயே படுத்துக்கிடந்தாளே தவிர, அறையை விட்டு வெளியிலேயே வரவில்லை. வழக்கமில்லாத அந்தச் செயலைப் பார்த்து மாதவி அம்மாவிற்கு கலக்கம் உண்டானது. எங்கேயோ ஏதோ பிரச்சினை இருக்கிறது என்ற சந்தேகம் அவளுக்கு உண்டானது. போதாததற்கு சசியுடன் சேர்ந்து அவள் அவனுடைய காரிலேயே வந்திருக்கிறாள். எது எப்படி இருந்தாலும் எதுவுமே நடக்காதது மாதிரி அவள் அழைத்துக் கேட்டாள்: "மகளே, உனக்கு தேநீர் வேண்டாமா?"
"வேண்டாம்மா"- நிர்மலா சொன்னாள்.
சமையலறையில் சாப்பாட்டு மேஜையின்மீது உணவைப் பரிமாறிக் கொண்டிருந்தபோதுதான் அதற்குப் பிறகு அவள் தன் மகளைப் பார்த்தாள். குளித்து விட்டு தலைமுடியை அவிழ்த்துப் பரவ விட்டு இரவு நேரத்தில் அணியக் கூடிய மெல்லிய நைட் கவுனை அணிந்து நிர்மலா சாப்பிடுவதற்காக வந்திருந்தாள்.
மாதவி அம்மா தன் மகளைக் கால்முதல் தலைவரை கூர்மையாகப் பார்த்துவிட்டு வேகமாகத் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். தன்னைப்போலவே மகளையும் ஏதோ ஒரு பிரச்சினை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது என்பதை ஒரே பார்வையில் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அவ்வளவுதான்- அவளிடம் பதைபதைப்பு இரண்டு மடங்குகளாகக் கூடியது.
நிர்மலா நாற்காலியை இழுத்து மேஜையோடு சேர்த்துபோட்டுக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தாள்.
"என்ன மகளே, உனக்கு உடம்புக்கு ஏதாவது ஒத்துக்கலையா?"- மாதவி அம்மா கேட்டாள்.
ஏதாவது கேட்க வேண்டுமே என்பதற்காக அந்தக் கேள்வியை அவள் கேட்டாள். கேள்வியைக் கேட்டுக்கொண்டே மகள் சாப்பிட வேண்டிய இரவு உணவை நிர்மலாவிற்கு முன்னால் எடுத்து வைத்தாள். அப்படி ஏதாவது கேட்காமலோ, செயல்படாமலோ இருந்தால் தன்னுடைய மனதிற்குள் அடக்க முடியாமல் நிறைந்திருக்கும் வெப்பத்தை எங்கே தன் மகள் கண்டுபிடித்து விடுவாளோ என்று அவள் பயந்தாள்.
"ஒண்ணுமில்ல"- நிர்மலா அலட்சியமாகச் சொன்னாள்.
"பிறகு ஏன் நீ எப்போதும் இருக்கிற மாதிரி இல்லாம...?"
"எப்படி?"
"நீ... நீ... இன்னைக்கு ஏன் இவ்வளவு தாமதமா கல்லூரியை விட்டு வந்தே?"- மாதவி அம்மா வேகமாக விஷயத்தை மாற்றினாள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook