Lekha Books

A+ A A-

காதல் - Page 25

kadhal

அது சீறிப் பாய்ந்து வேகமாக அடிக்க ஆரம்பித்தது. கருமேகங்கள் திரண்டு ஆர்ப்பரித்தன. கண்ணைக் கூசச் செய்யும் மின்னல் கீற்றுகள் நாலாபக்கங்களிலும் வெள்ளி நாகங்களைப் போல சீறிப் பாய்ந்து கொண்டிருந்தன. பெருமழையில் சிக்கிய மரக்கிளைகள் பேய் பிடித்த பெண்களைப் போல முடிவை அவிழ்த்துவிட்டு ஊழித் தாண்டவம் ஆட ஆரம்பித்தன. திடீரென்று மழை விழத் தொடங்கியது. பாறைக் கற்களைப்போல மழைத்துளிகள் வீட்டிற்கு வெளியே விழுந்து கொண்டிருந்தன.

திடீரென்று மின்சாரம் இல்லாமற் போனது. வீட்டிற்குள் இருள் நிறைந்தது. அப்போதும் கட்டுப்பாடில்லாமல் பெருமழை பயங்கர ஆரவாரத்துடன் பெய்து கொண்டிருந்தது.

"அம்மா"- நிர்மலா அழைத்தாள்.

"என்ன மகளே"- அவள் அழைப்பதைக் கேட்ட மாதவி அம்மா தன் மகள் இருக்குமிடத்திற்கு வேகமாக ஓடி வந்தாள்.

"அம்மா எனக்குப் பயமா இருக்கு..."- மகள் சொன்னாள்.

"எதுக்குப் பயப்படணும்? மழை இப்போ நின்னுடும். அதுவரை நான் உன் பக்கத்துலயே உட்கார்ந்திருக்கேன். நீ பயப்படாம படுத்திரு" என்று கூறியவாறு மாதவி அம்மா கட்டிலின் ஒரு ஓரத்தில் உட்கார்ந்தாள்.

அப்போது பயங்கரமான ஒரு சத்தத்துடன் வெளியே ஏதோவொன்று தரையில் விழுவதைப் போல இருந்தது.

அம்மாவும் மகளும் நடுங்கிப் போனார்கள்.

"என்னம்மா அது!" தன் தாயின் கையை இறுகப் பற்றியவாறு நிர்மலா கேட்டாள். அவளுடைய உடல் தலை முதல் கால் வரை நடுங்கிக் கொண்டிருந்தது.

"என்னன்னு பார்க்குறேன்" என்று கூறியவாறு மாதவி அம்மா மெதுவாக எழுந்து சென்று அடைக்கப்பட்டிருந்த சாளரத்தைத் திறந்து வெளியே பார்த்தாள். மடை திறந்த வெள்ளத்தைப் போல காற்று படுவேகமாக உள்ளே பாய ஆரம்பித்தது.

வெளியே ஆக்கிரமித்திருந்த கடுமையான இருட்டில் மாதவி அம்மாவிற்கு எதுவும் தெரியவில்லை.

அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்! சிறிதும் எதிர்பாராமல் அப்போது அங்கு வெள்ளி முலாம் பூசிக்கொண்டு தோன்றிய மின்னல் வெளிச்சத்தில் அவளால் அதைப் பார்க்க முடிந்தது. அந்த மிகப்பெரிய வாகை மரம் அடியோடு பெயர்ந்து கீழே விழுந்திருந்தது. அது அங்கு விழுந்ததற்குப் பதிலாக வீட்டின் மீது விழுந்திருந்தால்...? மாதவி அம்மா அதிர்ச்சியடைந்து நின்றிருந்தாள்.

"இந்த மரம் வளர்ந்து பெருசாயி பூ பூக்குறப்போ அதைப் பார்க்குறதுக்கு நான் இருக்க மாட்டேன்"- அப்போது அந்த அடர்ந்த இருட்டைக் கிழித்துக் கொண்டு ஒலித்த அந்தக் குரலை அவள் கேட்டாள். பல வருடங்களுக்கு முன்பு அவளுடைய கணவர் சொன்ன வார்த்தைகள் அவை. அவளுடைய உடல் கால் முதல் தலை வரை நடுங்கியது. உடம்பு முழுக்க மயிர்கள் சில்லிட்டு நின்றன.

"அம்மா"- நிர்மலா மீண்டும் அழைத்தாள்.

வேகமாகச் சாளரத்தை மூடிய மாதவி அம்மா தன் மகள் இருக்குமிடத்திற்கு வந்து மீண்டும் கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தாள்.

"நம்ம அந்தப் பெரிய வாகை மரம் சாலையில விழுந்து கிடக்கு. அது இந்தப் பக்கமா விழுந்திருந்தா...?"

அப்போது தன் தாயின் கையை இறுகப் பற்றியவாறு நிர்மலா சொன்னாள்:

"மம்மீ... நீங்க கவலைப்படாதீங்க. நான் சசி கூட போக மாட்டேன். உங்களைத் தனியா விட்டுட்டு நான் வேற எங்கேயும் போகல!"

"என் மகளே"- தன் மகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு மாதவி அம்மா உரத்த குரலில் அழுதாள்.

வானத்தைப் பிளந்து கொண்டு பயங்கர ஆர்ப்பரிப்புடன் ஒலித்துக் கொண்டிருந்த இடிச் சத்தத்தில் மாதவி அம்மாவின் அழுகைச் சத்தம் கரைந்து போனது.

அப்போது மின்சாரம் வந்தது.

விளக்குகள் மீண்டும் எரிந்தன.

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel