
"மகளே"- படுக்கையறைக்குள் நுழையாமல் ஹாலில் நின்றவாறே மாதவி அம்மா அழைத்தாள்.
"என்னம்மா?"- நிர்மலா கேட்டாள்.
"நீ அங்கே என்ன செய்யற?"
"ஒண்ணும் இல்ல..."
அப்போதும் மாதவி அம்மாவின் மனதில் அந்தக் கறுப்பு நிறக் கார்தான் ஓடிக் கொண்டிருந்தது. அது உண்டாக்கிய சந்தேகம் மீண்டும் மீண்டும் அவளுடைய மனதில் தோன்றிக் கொண்டேயிருந்தது. கேட்கலாமா, வேண்டாமா என்று அவள் தடுமாறினாள். அதனால் சிறிது நேரம் தயங்கியவாறு அந்த இடத்திலேயே நின்றிருந்தாள். பிறகு தயங்கிய குரலில் கேட்டாள்: "மகளே, நீ கார்லயா வந்தே?"
"ஆமாம்மா..."- நிர்மலா சொன்னாள்.
"யார் கார்ல வந்தே?"
"சசி கார்ல."
"சசி கார்லயா?"
"ம்..."
"நீ சசியை எங்கே பார்த்தே?"
"கல்லூரியை விட்டு வெளியே வர்றப்போ."
"சசி கல்லூரிக்கு வந்திருந்தானா?"
"ம்..."
"எதுக்கு?"
"அம்மா, நீங்க என்ன தெரிஞ்சுக்கணும்?"
"தெரியறதுனால என்ன தப்பு? எது வேணும்னாலும் இருக்கட்டும்- இங்கே வரை வந்துட்டு அவன் வீட்டுக்குள்ள வராம ஏன் போனான்?"
"எனக்குத் தெரியாது."
"நீ அவன அழைக்கலியா?"
"இல்ல..."
"ஏன் கூப்பிடல?"
"வர்றதா இருந்தா கூப்பிடாமலே வரமாட்டாரா? அவர் எங்கேயோ அவசரமா போகணும்னார். அதுனாலதான் வரல."
"அப்படி அவசரம்னா ஏன் இப்படி தாமதமா வரணும்?"
- இந்தக் கேள்விக்கு அவள் பதில் எதுவும் சொல்லவில்லை.
"ம்..."- மகள் பதில் எதுவும் கூறாவிட்டாலும் அவள் என்ன கூற வேண்டுமோ அதைத் தான் புரிந்துகொண்டு விட்டாகிவிட்டது என்பதைப் போல மெதுவாக முணுமுணுத்துவிட்டு மாதவி அம்மா வேறு எதையோ எதிர்பார்த்ததைப் போல அங்கேயே நின்றிருந்தாள். அப்போது அடுப்பில் வைத்திருந்த பிரஷர் குக்கர் விசிலடிக்க ஆரம்பித்தது.
மாதவி அம்மா வேகமாகச் சமையலறையை நோக்கி ஓடினாள். அவளுடைய உடல் மட்டுமே அந்தச் சூழ்நிலையில் அந்தச் செயலுடன் உறவு கொண்டிருந்தது. மனம் அவளுடைய மகளுடன் படுக்கையறையிலேயே தயங்கி நின்றிருந்தது. அவளிடம் அதற்குப் பிறகும் என்னவோ தெரிந்து கொள்ள வேண்டுமென்று மாதவி அம்மா நினைத்தாள். சசியை அவள் தினந்தோறும் சந்திக்கிறாளா? சசியுடன் இந்த அளவிற்கு இருட்டும்வரை அவள் எங்கு போயிருந்தாள்? சசியைச் சந்திக்கும் நிமிடங்களில் அவன் இப்போது செய்ததைப் போல நிர்மலாவைத் தன் காரில் ஏற்றிக் கொண்டு போவானோ? அதுதான் உண்மையென்றால் வழக்கமாக அவர்கள் எங்கு போவார்கள்? என்ன செய்வார்கள்? இதுதான் வழக்கமான செயல் என்றால் இந்த நிமிடம் வரை இந்த விஷயத்தை அவர்கள் ஏன் தன்னிடம் கூறவில்லை? இப்படி நூறாயிரம் கேள்விகள் மாதவி அம்மாவின் மனதில் வலம் வந்தன.
ஸ்டவ்வை அணைத்து விட்டு அவள் பிரஷர் குக்கரை எடுத்து கீழே வைத்தாள். குழாயைத் திறந்து ஒரு குவளையில் சிறிது நீர் எடுத்து கையில் ஊற்றி, அந்தக் குக்கருக்கு மேலே தெளித்தாள். கோபம் கொண்ட பாம்பைப் போல அது 'ஸ்...' என்று சீறியது. அவள் மீண்டும் சிறிது நீரைத் தெளித்தாள். குக்கரின் கோபம் அடங்கியது. அப்போது அவளுடைய பார்வை ஜன்னல் கம்பிகள் வழியே வெளியே பாய்ந்தது. அந்த மரக்கிளைகள் இருட்டில் பயங்கரத்தைத் தரும் நிழல்களாகத் தெரிந்தன. காகங்களை எங்கும் காணவில்லை. வானத்தில் மேகங்கள் மிகவும் குறைவாகவே இருந்தன. வாகை மரத்தின் உச்சியில் தேவாலயத்தின் சிலுவைக்கு மேலே விளக்கு போல ஒரு நட்சத்திரம் தெரிந்தது. சாலையில் அப்போதும் வண்டிகளின் ஓட்டம் குறைந்திருக்கவில்லை. சுவருக்கு அப்பால் அந்தக் கறுப்புநிறக் கார் அப்போதும் இருப்பதைப் போல் அவள் உணர்ந்தாள்.
கறுப்புநிறக் கார்! அது வெறுமனே அப்படியொரு தோற்றத்தை அவளுக்குத் தந்தது. அங்கு கறுப்பாகத் தெரிந்தது சுவரோடு சேர்ந்து இருந்த செம்பருத்திச் செடியின் நிழலாக இருக்குமோ? இருக்கலாம். எது எப்படியிருந்தாலும், நிச்சயமாக அது கார் இல்லை. காரின் மேற்பகுதி இப்படி கூர்மையாகவும், ஊசிமுனை போன்றும், உயரமாகவும், இறங்கியும் வடிவமில்லாமல் இருக்காது அல்லவா?
கல்லூரியை விட்டு மிகவும் தாமதமாக வந்தாலும நிர்மலா அறைக்குள்ளேயே இருந்தாள். உட்கார்ந்திருக்கவில்லை. கட்டிலில் காலை நீட்டிப் படுத்திருந்தாள். அவளுடைய மனதில் அப்போது சசிதான் முழுமையாக நிறைந்திருந்தான். வேறு எந்த விஷயத்திற்கும் சிறிது கூட இடமில்லை என்ற அளவிற்கு அவன் ஆக்கிரமித்திருந்தான். தன்னுடைய சசியை இறுக அணைத்துக்கொண்டு அவள் கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தாள். படுத்துக்கொண்டே அவள் கனவு கண்டு கொண்டிருந்தாள். "என் சசி..." -அவனுடைய தோளில் தன் தலையைச் சாய்த்துக் கொண்டு அவனை அழைத்தாள். அவனுடைய கையைத் தன் மார்புடன் சேர்த்து அவள் இறுக அணைத்திருந்தாள்.
அவள் அப்போது ஒரு கனவு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். அவளும் அவளுடைய சசியும் மட்டுமே இருக்கம் மாய உலகத்தில்... மேகங்கள் சிறிதும் தொந்தரவுகள் உண்டாக்காத வானத்திற்குக் கீழே.
நடந்த விஷயங்கள் ஒவ்வொன்றையும் ஞாபகத் திரைச்சீலையை நீக்கி மன அரங்கிற்குக் கொண்டு வந்தபோது அவளுக்கே வெட்கமாக இருந்தது.
'திருடன்! நேர்ல பார்க்குற மாதிரி இல்ல ஆள்'- அவள் தனக்குள் கூறிக்கொண்டாள். அன்று யாருக்கும் தெரியாமல் நடந்த விஷயம்!
அன்று கல்லூரியின் ஆண்டு விழாவையொட்டி பரதநாட்டியம் ஆடிவிட்டு க்ரீன் ரூமிற்குள் நுழைந்து அணிந்திருந்த ஆடைகளை நீக்கிக் கொண்டிருந்தபோது எந்தவித சந்தடியும் உண்டாக்காமல் சசி அங்கு வந்தான். அப்போது மற்ற நிகழ்ச்சிகளில் எல்லாரும் ஈடுபட்டிருந்ததால், வேறு யாரும் அங்கு இல்லை.
திடீரென்று க்ரீன் ரூமிற்குள் சசியைப் பார்த்ததும் நிர்மலா பதைபதைத்துப் போனாள்.
"ம்... என்ன இங்கே?"- அவள் கலக்கத்துடன் கேட்டாள்.
"உன்னைப் பார்க்கறத்துக்குத்தான்"- அவன் சொன்னான். அதைச் சொன்னபோது அவனிடம் ஒரு பதட்டம் தெரிந்தது.
"சரிதான்... இதென்ன பைத்தியக்காரத்தனமா இருக்கு? சீக்கிரம் போங்க. யாராவது பார்த்துறப் போறாங்க?"- அவள் எழுந்து திரும்பி நின்று அவனையே உற்றுப் பார்த்தவாறு தாழ்வான குரலில் சொன்னாள்.
அதை அவள் கூறி முடிக்கவில்லை. அதற்குள் கண் இமைக்கும் நேரத்திற்குள் அவளுடைய முகத்தைத் தன்னுடைய கைகளுக்குள் அடக்கி அவளின் உதடுகளில் ஆவேசத்துடன் ஒரு முத்தத்தைப் பதித்து வேகமாகத் திரும்பிய அவன் படுவேகமாக அந்த இடத்தை விட்டு நீங்கினான். அவள் அதிர்ச்சியடைந்துபோய் ஒரு சிலையைப்போல நின்றுவிட்டாள். அவளுடைய உடல் கிடுகிடுவென நடுங்கிக் கொண்டிருந்தது. கால்கள் தளர்வதைப்போல அவள் உணர்ந்தாள்.
அந்த அளவிற்குச் சிறிதும் எதிர்பார்க்காமல், விரல் சொடுக்கும் நேரத்தில் அந்தச் சம்பவம் நடந்தது.
ஆரம்பம் அப்படித்தான் இருந்தது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook