Lekha Books

A+ A A-

காதலின் நிழல்

Kaadalin Nizhal

மேற்கு திசையில் தெரிந்த மாலை நேரம் ஒரு விளக்கைப் போல ஜொலித்தது. வானத்தின் விளிம்பில் வர்ணங்கள் நதியைப் போல கலங்கியிருந்தன. அது அந்த இளைஞன் தன் பயணத்தைத் தொடங்கியபோது இருந்த நிலை. சிறிது நேரத்தில் நிறங்கள் முற்றிலுமாக மறைந்தன. மேகங்களில் இருட்டு நிறம் வந்து சேர்ந்தது. மாலை இரவு நேரத்திற்குள் சங்கமமானது.

ஏற்கனவே எரிய வைத்திருந்த பாதை விளக்குகள் இப்போது நல்ல வெளிச்சத்துடன் காட்சியளித்தன. மாலை நேரத்தில் தனியாக நடந்து சென்ற இளைஞன் கையில் சில புத்தகங்களை மார்போடு சேர்த்து பிடித்திருந்தான். பாதை விளக்குகளுக்கு மத்தியில் அவனின் நிழல் நீண்டும் சுருங்கியும் அவனைப் பின் தொடர்ந்தது. மெதுவாக அவன் பாதையின் ஒரு பக்கத்தில் இருந்த கள்ளிச் செடிகளுக்கும் மரங்களுக்கும் நடுவில் இருந்த ஒரு குளத்தினருகில் வந்தான். பாதையை விட்டு கள்ளிவேலியில் இருந்த ஒரு இடைவெளி வழியே அவன் மரங்களுக்குக் கீழே நடந்து குளக்கரையை அடைந்தான். குளத்தையொட்டி இருந்த கருங்கல்லின் அருகில் பசு ஒன்று அசையாமல் நின்றிருந்தது. எந்தவித காரணமும் இல்லாமல் அந்த இளைஞன் எதைப் பற்றியும் சிந்திக்காமல் வெறுமனே அங்கு நின்றிருந்தான். இந்த குளத்தைப் பார்த்து அவன் எப்போதும் ஆச்சரியப்படுவான். வெளிச்சம் ஆட்சி செய்யும் நகரத்தின் நடுவில் இருட்டு முழுமையாக மூடி விட்டிருக்கும் ஒரு குளம். எப்போதாவது ஒரு ஆள் நடந்துவரும் பாதை ஒரு பக்கமும், இன்னொரு பக்கத்தில் மரங்களின் அடர்த்தியினூடே நகரத்தின் மின்சார விளக்குகளும் வாகனங்களின் இரைச்சலும், தூரத்தில் ஒரு தொழிற்சாலையிலிருந்து சங்கொலி கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆகாயத்தில் நகரத்தின் வெளிச்சம் சற்று மங்கலாகத் தெரிகிறது. ஒரு குளிர்ச்சியான காற்று அவ்வப்போது விட்டுவிட்டு வீசிக் கொண்டிருக்கிறது. குளத்தின் கரையில் இருட்டில் நின்று கொண்டு அவன் தனக்கு மட்டுமே புரியக் கூடிய ஒரு மொழியில் தனக்குத்தானே ஏதோ பேசிக் கொண்டிருந்தான். மற்றவர்களிடம் பயன்படுத்தாத புது மொழியால் அவன் தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். கவலையில் மூழ்கிப் போன மாலை எங்கே போய் ஒளிந்து கொண்டது? அடுத்த நிமிடம் அவனே அந்தக் கேள்விக்குப் பதிலும் சொல்லிக் கொண்டான்: இந்தக் குளத்தில் இந்த மரங்களுக்கு மத்தியில் தனியாக நின்று கொண்டிருக்கும் இந்தப் பசுவிற்குப் பின்னால்... அவன் பசுவைப் பார்த்து கேட்டான்: “நீ ஏன் இங்கே வந்து நின்று கொண்டிருக்கிறாய்? அடுத்த நிமிடம் வெட்கம் வந்து அவனை அணைத்துக் கொண்டது. தான் தானல்ல என்ற உண்மையை உணர்ந்த அவன் தனியனாக ஆனான்.

என்ன செய்வது என்று தெரியாமல் நின்றிருந்த அவனுக்கு குளத்தில் இருந்த நீரில் கண் சிமிட்டிக் கொண்டிருந்த நட்சத்திரங்களைப் பார்த்ததும், தான் எதற்காகப் புறப்பட்டு வந்தோம் என்ற விஷயம் ஞாபகத்தில் வந்தது. அவன் பாதையில் இறங்கி நடக்க ஆரம்பித்தான். பார்க்கப் போகிற இளம் பெண்ணைப் பற்றி மனதில் அசை போட்டவாறு அவன் பாதையில் முன்னோக்கி நடந்து போனான். அந்த மாலை நேரம் அவனுக்கு மிகவும் இனிமையான ஒன்றாகத் தோன்றியது. காற்று மிகவும் சுகமாக இருந்தது அவனுக்கு. கண்ணுக்கு மிகவும் குளிர்ச்சியாக இருப்பதுபோல் அவனுக்குத் தோன்றியது. ‘எனக்குத் தெரிந்த அந்தப் பெண் எனக்கு மட்டுமே சொந்தம். எனக்கு மட்டுமே அவள் சொந்தம். லட்சுமி, உன்மேல் நான் எந்த அளவிற்கு காதல் வைத்திருக்கிறேன் என்பது உனக்குத் தெரியாது. என் மனதிற்குள் நான் பூட்டி வைத்திருக்கும் ரகசியம் அது. நான் விரும்பி பூட்டி வைத்திருக்கும் ரகசியம். உனக்கு மட்டுமே நான் அதைச் சொல்வேன்’ - அவனின் மனம் காதல் வயப்பட்ட சந்தோஷத்தில் மூழ்கி திளைத்துக் கொண்டிருந்தது. ‘என் காதல்... என் காதல்...’ என்று தனக்குத்தானே கூறியவாறு அவன் அந்தப் பாதையில் நடந்து கொண்டிருந்தான். ‘எவ்வளவு நாட்களாக என் மனதின் கம்பிகளுக்குப் பின்னால் கண்களை மூடிக் கொண்டு உன்னைக் காதலித்திருக்கிறேன்!’ - தான் பிதற்றிக் கொண்டிருப்பதை அவன் புரிந்து கொண்டான். ‘என்னை இந்த இருட்டுக்குள் இருந்து விடுதலை அடையச் செய். இந்தக் கட்டில் இருந்து என்னை அறுத்தெறிந்து உன்னோடு என்னை இணைத்துக் கொள். உன்னுடைய வலைப் பின்னல்களால் என்னை இறுக கட்டிப் போடு. உன்னை விட்டு என்னை வேறு எங்கும் விட்டுவிடாதே. விட்டு விடாதே. உன்னுடன் இருக்கும்போதே நான் இந்த உலகத்தைவிட்டு போய் விடுகிறேன்’ - தன்னுடைய சொற்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டதோ என்பதாக உணர்ந்த அவன் தனக்குத்தானே ஒரு மூன்றாவது மனிதனாக ஆனான். ஒரு நிமிடம் அவன் மனதில் சொற்களே முளைக்கவில்லை. அவன் தன்னுடைய இதயத் துடிப்பைக் கேட்டவாறு நடந்து போய்க் கொண்டிருந்தான். திடீரென்று அவன் அதிர்ச்சியடைந்து போனான். ஒருவித குழப்ப நிலைக்கு ஆளானான். சொற்கள் ஒரு அருவியைப் போல மனதிலிருந்து கொட்ட ஆரம்பித்தது. அதோடு சேர்ந்து அவனுடைய கால்கள் படுவேகமாக பாதையில் நடக்க ஆரம்பித்தன.

‘நான் நீண்ட நாட்கள் அமைதியான மனிதனாகவே இருந்து விட்டேனா? அவளின் மனதில் காதல் என்ற ஒன்று இன்னும் அரும்பாமல் இருப்பதன் அர்த்தம் என்ன? என்னுடைய மனதில் நான் கொண்டிருக்கும் காதல் ஒரு மூலையில் ஊமையைப்போல ஒளிந்து கொண்டிருப்பது ஏன்? மடையன்! மடையன்!’ - மனதை வெளிக்காட்ட, அதைக் கிழிக்க நினைத்தான் அவன். இதயத்தை அப்படியே கசக்கி பிழிய வேண்டும்போல் இருந்தது அவனுக்கு. ‘பேரைச் சொல்லி அழைத்து நான் அழட்டுமா? உரத்த குரலில் கூப்பாடு போடட்டுமா? கவலையில் உளறிக் கொட்டட்டுமா? பயம் கலந்த காதலை நான் கொண்டிருக்கிறேன். பயத்தைக் கொண்ட காதல். பயத்தை உள்ளடக்கிய காதல். கடைசியில் மீதி இருப்பதென்னவோ அழிவுதான்’ - தன்னுடைய சொற்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதை உணர்ந்த அவனுக்கு அதை நினைத்துப் பார்ப்பதே ஒரு விஷயத்தை நினைப்பதைப் போல இருந்தது.

‘நான் மட்டும் அவளைக் காதலிக்கிறேன்’ - அவன் தேம்பி தேம்பி அழுதான். ‘என் மனதில் மட்டுமே காதல்’ - அச்ச அரக்கர்கள் சாபங்கள் இட்டவாறு அவனை முழுமையாக ஆக்கிரமித்தார்கள். அவனின் இதயம் வாளை வைத்து அறுத்ததைப்போல கவலையால் இரண்டாகப் பிளந்தது. அவன் என்ன செய்வது என்றே தெரியாமல் ஒரு விளக்கு மரத்தைப் பிடித்தவாறு தலை குனிந்து நின்றான். சிறகு கரிந்த பூச்சிகள் அவனைச் சுற்றிலும் குளிர்ந்த மண்ணில் சிதறித் துடித்துக் கொண்டிருந்தன. சிறிது நேரம் கழித்து அவன் ஒரு பொம்மையைப்போல பயணத்தைத் தொடர்ந்தான். நிலவு வானத்தில் உதித்துக் கொண்டிருந்தது.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel