
விலைமாதர்கள் தங்கியிருக்கும் பழைய இரண்டு மாடி கட்டிடத்தின் முன்பாக நடந்து சென்று அவன் மெயின்ரோட்டை அடைந்தான். விளக்கு வெளிச்த்தில் இங்குமங்குமாய் நகர்ந்து கொண்டிருந்த மக்களைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அவன் தான் தேடிவந்த இளம் பெண்ணின் வீட்டிற்கு முன்னால் போய் நின்றான். வெளி வாசலுக்கு மேலே படர்ந்திருந்த செடிகளுக்குக் கீழே நின்றவாறு கேட்டைத் திறக்க முயற்சித்தபோது, அந்த இளம் பெண்ணின் சகோதரன் முன்னால் நடந்து வந்தான். அடுத்த நிமிடம் அந்த இளைஞன் என்ன செய்வது என்று தெரியாமல், கேட்டின் மேல் இருந்த தன்னுடைய கையை எடுத்தான்.
“என்ன?” - இருட்டில் நின்றவாறு அவன் கேட்டான்.
“நான் இந்த புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கேன். லட்சுமி கொண்டு வரச் சொல்லியிருந்தா...” - இளைஞன் சொன்னான்.
“லட்சுமி இங்கே இல்லையே!”
“ஆனா. நான் ஏழு மணிக்கு வர்றதா சொல்லியிருந்தேனே!” - இளைஞன் தடுமாறிய குரலில் சொன்னான்.
“எனக்கு அதைப்பற்றி தெரியாது. புத்தகங்களை என்கிட்ட கொடுத்துட்டுப் போனா, நான் கொடுத்திர்றேன்...”
அவன் ஜன்னலில் இருந்து விழுந்த வெளிச்சத்திற்கு மாறி நின்று கொண்டு தன் கைகளை நீட்டினான். அவனின் முகத்தில் அர்த்தமே இல்லாத ஒரு புன்சிரிப்பு தவழ்ந்து கொண்டிருந்தது. அந்த இளைஞன் லட்சுமியின் சகோதரன் கையில் தான் கொண்டு வந்திருந்த புத்தகங்களைக் கொடுத்தான். அப்போது ஜன்னல் திரைச்சீலைக்குப் பின்னால் யாரோ நின்று கொண்டிருக்கிறார்கள் என்பதை அவன் உணர்ந்தான். ஜன்னலை இரண்டாவது தடவையாக பார்க்கும் தைரியம் அவனுக்கு வரவில்லை. அவன் மனதிற்குள் சந்தேகப்பட்டான். ‘என்னைப் பார்க்கக் கூடாது என்று வீட்டிற்குள் அடைத்து வைத்திருப்பார்கள்!’ அப்படி நினைத்துப் பார்த்தபோது அவனுக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது. புத்தகங்களைக் கொடுத்துவிட்டு அவன் தெருவில் வந்து நின்றான். லட்சுமியின் சகோதரன் புத்தகங்களுடன் உள்ளே போய் கதவை அடைத்தான். என்ன நினைத்தானோ அந்த இளைஞன் அமைதியாக பின்னால் நடந்து சென்று கேட்டுக்கு அருகில் இருந்த தூணுக்குப் பின்னால் மறைந்து கொண்டு நின்றான். அப்போது அவனின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. தலைக்கு மேலே படர்ந்திருந்த செடியில் மின்மினிப் பூச்சிகள் ஜொலித்துக் கொண்டிருந்தன. மறைந்திருந்த இடத்தில் இருந்தவாறு அவன் தான் தேடிவந்த பெண்ணின் குரலைக் கேட்டான்.
“அந்த ஆள் போயாச்சா?”
அவளின் சகோதரன் சிரித்துக் கொண்டே சொல்வதை அவன் கேட்டான்: “போயாச்சு...”
“பைத்தியக்காரன்...” - லட்சுமி சிரித்துக் கொண்டே கூறுவதை அவன் கேட்டான்.
அவன் தூணுக்குப் பின்னால் ஒரு நிமிடம் மனவேதனையுடன் நின்றான். அடுத்த நிமிடம் மீண்டும் தெருவிற்கு வந்தான். தெருவின் விளக்கு வெளிச்சத்திற்கு மத்தியில் இலேசாக அழுதவாறு பைத்தியத்தைப்போல ஓடினான். தெருவில் போய்க் கொண்டிருந்தவர்கள் அவனைத் திரும்பிப் பார்த்தார்கள். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியவாறு ஓடிய அவன் குளத்தின் கரைக்கு வந்தான். அங்கே கீறல் விழுந்த ஒரு இடத்தில் நின்றிருந்த அவன் தற்கொலை செய்து கொள்வதைப் பற்றி சிந்தித்துப் பார்த்தான். குளத்தில் குதித்து மரணமடைவதைப் பற்றி யோசித்துப் பார்த்த அவன் நீண்ட நேரம் அங்கே இருட்டையே பார்த்தவாறு நின்றிருந்தான்.
அவன் முன்பு பார்த்த பசு அதே இடத்தில் அப்போதும் நின்று கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து அது கருங்கல் பாதையில் இறங்கி நீரைக் குடித்துவிட்டு மெல்ல நடந்து சென்று புல் மேல் போய் படுத்துக் கொண்டது. அவன் அதன் அருகில் சென்று அமர்ந்து அதன் கன்னத்தை இலேசாக சொறிந்து கொடுத்தவாறு அதனிடம் என்னவோ சொன்னான். சிறிது நேரம் சென்றபின் அவன் மரத்திலிருந்து ஒரு இலையைப் பறித்து வாயில் வைத்து கடித்து சுவைத்தவாறு வெளியே மண் பாதையில் இறங்கி அசைவே இல்லாத மனதோடு தன் நிழலுடன் சேர்ந்து நடந்து போனான்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook