![வெளுத்த இரவுகள் velutha iravugal](/images/vellutha-iravugal.jpg)
நாம் அனைவரும் நம்முடைய தலைவிதியைப் பற்றி நினைத்து சந்தோஷமற்று இருப்பதாகவும், நம்முடைய வாழ்க்கையில் முழுமையான வெறுப்பு அடைந்தவர்களாக இருப்பதாகவும் அவன் காண்கிறான். உண்மையாகக் கூறுவதாக இருந்தால், எந்த அளவுக்கு அலட்சியமாகவும், உணர்ச்சியே இல்லாமலும், உயிரற்றும் நாம் வெளியே தெரியக்கூடிய அளவுக்கு ஒருவரோடொருவர் நடந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள்.
"அப்பிராணிகள்...” நம்முடைய கனவு மனிதன் நினைக்கிறான். அவன் அப்படி நினைப்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை. அந்த கற்பனைக் காட்சிகள் அவனுக்காக இந்த அளவுக்கு இதயப்பூர்வமாகவும் முழுமையாகவும் ஈடுபாட்டுடனும் நெய்து உண்டாக்கும் அழகான மந்திரத்தன்மை கொண்ட ஓவியத்தைச் சற்று பாருங்கள். எப்போதும் முன்வரிசையில் காணப்படும் அதன் மிக முக்கியமான கதாநாயகன் நம்முடைய கனவு மனிதன்தான் என்பதைக் கூற வேண்டியதில்லையே! அந்த வீரச் செயல்களின் மாறுபட்ட தன்மைகளை சற்று பாருங்கள். அவனை ஆனந்தக் கடலில் மூழ்க வைக்கும், அந்தக் கனவுகளின் நினைத்துப் பார்க்க முடியாத பிரவாகத்தைச் சற்று பாருங்கள். அவன் எதைக் கனவு காண்கிறான் என்று கேட்கலாம். எதற்கு கேட்கிறீர்கள்? எல்லாவற்றைப் பற்றியும்.. தான் முதலில் சாதாரண மனிதனாகவும், பின்னால் புகழின் உச்சியில் ஏறிய ஒரு கவிஞனாக ஆனதைப் பற்றி... ஹாஃப்மனின் நட்பையும் செயின்ட் பர்த்தோலோமியாவின் இரவையும் டயானா வெர்னோனேயையும் பற்றி... கஸானுக்கு எதிராக இவான் மன்னர் நடத்திய படையெடுப்பில் வீரத்தனமான ஒரு பங்கு வகித்ததைப் பற்றி... க்ளாராமொம்ப்ராவையும் எஃபி டீன்ஸினையும் விளக்கிக் கூறும் மதக் குழுவைப் பற்றி... "பேயாக மாறிய ராபர்ட்” என்ற இசைப் பாடலில் சுடுகாட்டின் வாசனை கொண்ட அதன் இசை ஞாபகத்தில் இருக்கிறதா? இறந்தவர்கள் உயிருடன் எழுந்து வந்ததைப் பற்றி... மின்னயேவையும் ப்ரெண்டாயேவையும் பற்றி... பெர்யோஸினாவில் நடந்த போராட்டத்தைப் பற்றி... வி.டி. பிரபுவின் வரவேற்பறையில் கவிதைகள் வாசிப்பதைப் பற்றி... டான்டனேவையும் கிளியோ பாட்ராவையும் பற்றி... கொலோனாவில் உள்ள தன்னுடைய சிறிய இல்லத்தைப் பற்றி... தனக்கு மட்டுமே சொந்தமென இருக்கும் அந்த மூலையில் இனிமையான இரவு வேளையில் தான் கூறுவதை, என் சிறிய தேவதையே, நீங்கள் இப்போது செய்வதைப்போல, நம்பிக்கை கொண்ட கண்களுடனும் மலர்ந்த உதடுகளுடனும் கேட்டவாறு சமீபத்தில் அமர்ந்திருக்கும் அழகான பெண்ணைப் பற்றி... இல்லை... நாஸ்தென்கா, நீங்களும் நானும் சுவைத்துப் பார்ப்பதற்கு ஏங்கும் வாழ்க்கையைப் பற்றி அந்த ஆதரவற்ற உணர்ச்சிகள் நிறைந்த மனிதனுக்கு வெறுப்பு. மிகவும் மோசமான, வெறுத்து ஒதுக்கக்கூடிய ஒரு வாழ்க்கை அது என்று அவன் நினைக்கிறான்.
ஒருநாள் தனக்கும் மரணத்திற்கான மணி ஒலிக்கும் என்பதும், அந்த நேரத்தில் இந்த கேவலமான வாழ்க்கையின் ஒரு நொடிக்காக கற்பனை உலகத்தில் தான் கடந்து வந்த எல்லா வருடங்களையும் விட்டுச் செல்வதற்குத் தான் தயாராக இருப்போம் என்பதும் அவனுக்குத் தெரியாது. அது கையை விட்டு விலகிச் செல்வது சந்தோஷத்திற்காகவோ சுகத்திற்காகவோ அல்ல. கவலை, இரக்கம், அடக்க முடியாத துக்கம் ஆகியவை நிறைந்திருக்கும் அந்த வேளையில் எது கிடைத்தாலும் அவன் அதை எடுத்துக்கொள்வான். ஆனால், அந்த பயங்கரமான நேரம் வரும் வரை அவன் எதற்கும் ஆசைப்படுவதில்லை. அவன் ஆசைப்படுவதிலிருந்து விலகி இருக்கிறான். காரணம்- அவனிடம் அனைத்தும் இருக்கின்றன. போதும் என்று கூறக்கூடிய அளவிற்கு இருக்கிறது. ஏனென்றால்- புதிய ஒரு ஆசைக்கான தூண்டுதல் உண்டாகும் போதெல்லாம், புதிய புதிய சாம்ராஜ்ஜியங்களை தனக்காக படைக்கும் கலைஞன் அவன். அது மட்டுமல்ல- இந்த மாய உலகம், இந்த கற்பனை சாம்ராஜ்ஜியம்- அது ஒரு கற்பனை படைப்பே அல்ல என்பதைப் போல மிகவும் அலட்சியமாகவும் இயல்பாகவும் உண்டாக்கப்படக் கூடியதே. இந்த உலகம் ஒரு மாயை அல்ல என்று, என்னுடைய வெற்றி பெற்ற உணர்ச்சிகளின் படைப்பு அல்ல என்று, என்னுடைய கற்பனையின் அடையாளம் அல்ல என்று, அதற்கு நேர்மாறாக- சக்தி படைத்த... உண்மையான... நடைமுறையில் உள்ள... ஒரு உலகம்தான் இது என்று நான் சில நேரங்களில் உண்மையாகவே நம்பி விடுவதுண்டு. நாஸ்தென்கா, பிறகு எதற்கு இதைப் போன்ற நிமிடங்களில் என்னுடைய மனம் வேதனைப்பட வேண்டும்? என்ன காரணம், கூறுங்கள்? கற்பனை பண்ணிக் கொண்டிருக்கும் மனிதனின் நாடித் துடிப்பின் வேகம் அதிகமாவதற்கும் கண்கள் நிறைவதற்கும் அவனுடைய கண்ணீர் வழிந்து கொண்டிருக்கும் விரிந்த கண்களில் பிரகாசம் பரவி இருப்பதற்கும், அவனுடைய உடல் முழுவதும் சொர்க்கத்திற்கு நிகரான ஆனந்தம் நிறைந்து இருப்பதற்கும் காரணம் என்ன? எந்த இனம்புரியாத சக்தியின் காரணமாக அது நடக்கிறது? அவனுடைய உறக்கமில்லாத இரவுகள் அடக்க முடியாத ஆனந்தத்துடனும் சந்தோஷத்திலும் மிகவும் வேகமாக நகர்ந்து கொண்டிருப்பதைப்போல தோன்றுவதற்குக் காரணம் என்ன? சூரியனின் முதல் செங்கதிர்கள் சாளரத்தின் வழியாகப் பிரகாசித்துக் கொண்டும், இங்கு... செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில்... நடப்பதைப்போல புலர்காலைப்பொழுது தன்னுடைய அழகான, உயிரோட்டமுள்ள வெளிச்சத்தை அறைக்குள் பரவச் செய்து கொண்டும் இருக்கும்போது, என்ன காரணத்திற்காக நம்முடைய கனவு கண்டுகொண்டிருக்கும் மனிதன் தளர்ந்து போய், உணர்ச்சிவசப்பட்டு மெத்தையின்மீது விழுந்து தூங்க வேண்டும்? அவனுடைய மென்மையான, அமைதியான மனதை ஆக்கிரமித்து விட்டிருக்கும் ஆனந்தமும் அவனுடைய இதயத்தில் ததும்பி நின்று கொண்டிருக்கும் தாங்கிக் கொள்ள முடியாத இனிய வேதனையும் அவனை இனம்புரியாத ஒரு உணர்வில் மூழ்கச் செய்திருப்பது ஏன்? ஆமாம்...நாஸ்தென்கா, அது நம்மை ஏமாற்றுகிறது. அவனுடைய மனதில் நிறைந்திருக்கும் உணர்ச்சி, இயல்பானது... உண்மையானது என்பதை நாம் நினைத்துப் பார்க்காமல் நம்பி விடுகிறோம். பலம் கொண்ட, பிரிக்க முடியாத ஏதோவொன்று அவனுடைய ஆழமான கனவுகளில் இருக்கிறது என்பதாக நாம் நம்புகிறோம். அது என்ன ஒரு வஞ்சனையான விஷயம்! உதாரணம்- காதல் தன்னுடைய அனைத்து ஆனந்தத்தின் அடையாளங்களுடனும் பலத்துடனும் அவனுடைய இதயத்திற்குள் நுழைகிறது. அவனை நோக்கி வெறுமனே சற்று கண்களைச் செலுத்தினாலும் அது தெரியும்- தன்னுடைய சந்தோஷமான கனவுகளில் தோன்றும் காதல் ராணியை அவன் எந்தச் சமயத்திலும் பார்த்ததில்லை என்பதை... அன்பான நாஸ்தென்கா, அவனைப் பார்த்தால் நம்புவீர்களா? அவன் அவளை தன்னுடைய ஏமாற்றத்தைத் தரும் கனவுகளில் மட்டுமே பார்த்திருக்கிறான் என்பதும், இந்த உணர்வைப் பற்றி கனவு காண மட்டுமே செய்திருக்கிறான் என்பதும்தான் உண்மையோ? உலகம் முழுவதையும் முழுமையாக மறந்துவிட்டு, தங்களுடைய செயல்களை- தங்களுடைய இரண்டு சொந்த உலகங்களை ஒன்று சேர்த்துக் கொண்டு அவர்கள் இருவர் மட்டும் கைகளைக் கோர்த்துக் கொண்டு கடந்து சென்ற வருடங்கள் எல்லாவற்றையும் தாண்டி வரவில்லை என்பதுதான் உண்மையோ?
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook