Lekha Books

A+ A A-

வெளுத்த இரவுகள் - Page 7

velutha iravugal

முந்தைய நாளைப் பற்றி மனதில் நினைத்துப் பார்த்து ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருப்பேன். இந்த இடம் இப்போது எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு இடமாக ஆகி விட்டது. பீட்டர்ஸ்பர்க்கில் எனக்கு இதைப் போன்ற இரண்டு மூன்று இடங்கள் இருக்கின்றன. ஒருமுறை என்னுடைய நினைவுகள் என்னை அழவைக்கக்கூட செய்திருக்கின்றன- மேடம், நீங்கள் அழுததைப்போல. யாருக்குத் தெரியும்? ஒருவேளை, சற்று முன்பு நீங்கள் அழுதது உங்களின் நினைவுகளை நினைத்துப் பார்த்ததால் கூட இருக்கலாம். தயவு செய்து மன்னித்து விடுங்க. நான் மீண்டும் நினைத்துப் பார்க்காமல் கூறிவிட்டேன். ஒருவேளை, ஒரு காலத்தில் இந்த இடம் உங்களுக்கு சந்தோஷத்தை தரக்கூடிய ஒன்றாக இருக்கலாம்.''

“சரி...'' அந்த இளம்பெண் கூறினாள்: “நான் நாளை பத்து மணிக்கு இங்கு வருவேன் என்று மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வருவதை விலக்குவதற்கு இயலாது என்ற விஷயம் எனக்குத் தெரியும். நான் இங்கே வந்தே ஆகவேண்டும் என்பதுதான் விஷயம். நான் உங்களுடன் ஒரு உடன்பாட்டிற்கு ஒப்புக் கொண்டிருக்கிறேன் என்று மனதில் கற்பனை பண்ணிக்கொள்ளாதீர்கள். என்னுடைய சொந்த காரணங்களுக்காக நான் இங்கு வந்தாக வேண்டியிருக்கிறது என்பதை முன்கூட்டியே கூறிக்கொள்கிறேன். ஒரு விஷயம் மட்டும். அல்லது வெளிப்படையாகவே கூறுகிறேன்... உங்களுடன் சேர்ந்து வருவதில் எனக்கு எந்தவொரு எதிர்ப்பும் இல்லை. முதல் காரணம்- இன்று உண்டானதைப்போல ஏதாவது தொந்தரவு உண்டாகலாம். ஆனால், அதுவல்ல விஷயம். சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால்- உங்களைப் பார்ப்பதற்கு, உங்களுடன் சிறிது பேசுவதற்கு நான் விரும்புகிறேன். உங்களுக்கு என்னைப் பற்றி எந்தவொரு அபிப்ராயமும் தோன்றாது அல்லவா? நான் சொல்வது சரிதானே? நினைத்தபடியெல்லாம் உடன்பாடுகள் நடத்திக் கொண்டிருப்பவள் அல்ல நான் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இதற்குக் கூட நான் ஒப்புக் கொண்டிருக்க மாட்டேன். ஆனால்... அது என்னுடைய ரகசியமாக இருக்கட்டும். அதே நேரத்தில், ஒரு நிபந்தனை இருக்கிறது.''

“நிபந்தனையா? சொல்லுங்கள். இப்போதே கூறுங்கள். நான் எப்படிப்பட்ட நிபந்தனைக்கும் சம்மதிப்பேன். நான் எதற்கும் தயார்.'' ஆனந்தக் கடலில் மூழ்கிய நான் உணர்ச்சி வசப்பட்டு சொன்னேன்: “நான் பொறுப்புணர்வுடனும் நீங்கள் கூறியபடியும் நீங்கள் விருப்பப்படுகிற மாதிரியும் நடந்துகொள்வேன். மேடம், என்னை தெரியுமல்லவா?''

“தெரிந்து கொண்டிருக்கிறேன் என்ற காரணத்தால்தானே நான் உங்களை நாளை வருமாறு அழைக்கிறேன்?'' அந்த இளம்பெண் குலுங்கிக் குலுங்கி சிரித்துக்கொண்டே சொன்னாள்: “எனக்கு உங்களைப் பற்றி நன்கு தெரியும். ஆனால், ஆனால், ஒரு நிபந்தனையின்படி வந்தால் போதும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். தயவு செய்து நான் கூறுவதன்படி பின்பற்றி நடக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்கிறேன். நான் எந்த அளவிற்கு வெளிப்படையாக மனதைத் திறந்து உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதைப் பார்த்தீர்கள் அல்லவா? என்னை காதலிக்கக் கூடாது... உண்மையாகவே கூடாது... நான் உங்களுடைய சினேகிதியாக இருப்பதற்குத் தயார். இதோ என்னுடைய கை... ஆனால், என் மீது காதல் கொண்டு விடாதீர்கள் என்று நான் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.''

“நான் ஆணையிட்டுக் கூறுகிறேன்.'' அவளுடைய கையைப் பிடித்து அழுத்திக்கொண்டே நான் சொன்னேன்.

“ஆணையிட்டுக் கூற வேண்டிய அவசியமில்லை. நீங்கள் வெடி மருந்தைப்போல வெடித்துச் சிதறுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்ற விஷயம் எனக்குத் தெரியும். நான் இப்படிக் கூறுகிறேன் என்பதற்காக பதைபதைப்பு அடையக் கூடாது. என்னுடைய நிலையை நீங்கள் அறிந்திருந்தால்....

எனக்கும் பேசுவதற்கு யாருமில்லை. அறிவுரை கூறுவதற்கு யாருமில்லை. உண்மையாகவே அறிவுரை கூறுபவர்களைத் தேட வேண்டிய இடம் தெருவில் அல்ல என்ற விஷயம் எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் இந்த விஷயத்தில் நேர் எதிர். உங்களை நெருக்கமாகத் தெரியும் என்பதைப்போல எனக்குத் தோன்றுகிறது. இருபது வருடங்களாக நாம் சினேகிதர்களாக இருந்ததைப்போல... நீங்கள் வார்த்தை தவற மாட்டீர்கள் அல்லவா?''

“பாருங்கள்... ஆனால், இடையில் உள்ள மணித்துளிகளை நான் எப்படி கடத்தப் போகிறேன் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியவில்லை.''

“சுகமாக உறங்குவதுதான் நல்லவழி. நான் புறப்படுகிறேன். நான் உங்கள்மீது நம்பிக்கை வைத்துவிட்டேன் என்ற விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். எந்தவிதமான உணர்ச்சிகளுக்கும்- சகோதரத்துவம் நிறைந்த கனிவுக்குக்கூட- காரணம் காட்ட வேண்டிய அவசியமில்லை என்று நீங்கள் கூறியது மிகவும் சரியானது. அதை அந்த அளவிற்கு அழகாகக் கூறியதால் தான் உங்களிடம் என்னுடைய மனதில் உள்ள விஷயங்களைக் கூறலாம் என்று உடனடியாகத் தீர்மானித்தேன்.''

“கடவுளை மனதில் நினைத்துக்கொண்டு கூறுங்கள். ஆனால், என்ன கூறப் போகிறீர்கள்?''

“நாளை கூறுகிறேன். அதுவரை அது ஒரு ரகசியமாகவே இருக்கட்டும். உங்களுக்கும் அதுதான் நல்லது. கற்பனையிலாவது அது ஒரு காதல் கதையைப்போல இருக்குமல்லவா? ஒருவேளை, நாளை நான் உங்களிடம் எல்லா விஷயங்களையும் கூறிவிட்டேன் என்று வரலாம். சில நேரங்களில் சொல்லவில்லை என்றும் வரலாம். முதலில் உங்களிடம் பேசுகிறேன். அப்போது ஒருவரையொருவர் அதிகமாக நன்கு தெரிந்துகொள்ள முடியும்.''

“சரிதான்... மேடம், நான் நாளை உங்களிடம் என்னைப் பற்றிய எல்லா விஷயங்களையும் கூறுகிறேன். ஆனால், என்ன இது! எனக்கு ஏதோ அற்புதம் நிகழ்வதைப்போல தோன்றுகிறது. கடவுளே, நான் எங்கிருக்கிறேன்? ஒரு விஷயத்தைக் கேட்கட்டுமா? வேறு யாரும் செய்வதைப்போல கோபப்பட்டு, ஆரம்பத்திலேயே என்னை விரட்டியடிக்காமல் இருந்து விட்டோமே என்ற வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா? மேடம், இரண்டே இரண்டு நிமிடங்களில் நீங்கள் எனக்கு என்றென்றைக்குமாக சந்தோஷத்தைத் தந்திருக்கிறீர்கள். ஆமாம்... சந்தோஷம்! ஒருவேளை... மேடம், நீங்கள் என்னுடைய சந்தேகங்களை நீக்கிவிட்டு, எனக்கு என்மீது ஈடுபாடு உண்டாக்கி செயல்படும்படி செய்துவிட்டிருக்கலாம். யாருக்குத் தெரியும்? ஒரு வேளை, நான் இடையில் அவ்வப்போது அப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனமான செயல்களுக்கு அடிபணியவும் செய்யலாம். எது வேண்டுமானாலும் நடக்கட்டும்... நாளை நான் உங்களிடம் எல்லா விஷயங்களையும் கூறுகிறேன். மேடம், நீங்கள் எல்லாவற்றையும் தெரிந்துகொள்வீர்கள்.... எல்லாவற்றையும்...''

“அப்படியென்றால் அப்படியே நடக்கட்டும்... நீங்கள்தான் ஆரம்பிக்க வேண்டும்.''

“அதுதான் விருப்பமென்றால் அப்படியே நடக்கட்டும்.''

நாங்கள் விடைபெற்றுக் கொண்டு பிரிந்தோம். இரவு முழுவதும் நான் நடந்து திரிந்தேன். வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று தோன்றவில்லை. அந்த அளவிற்கு நான் சந்தோஷத்தில் மூழ்கியிருந்தேன். நாளை வரை...

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel