Lekha Books

A+ A A-

வெளுத்த இரவுகள் - Page 8

velutha iravugal

இரண்டாவது இரவு

“பார்த்தீர்களா... நீங்கள் பொழுதைக் கழித்து விட்டீர்களே?'' என்னுடைய கைகள் இரண்டையும் பிடித்துக் குலுக்கிக் கொண்டே அவள் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தவாறு சொன்னாள்.

“நான் இங்கு வந்து இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. இந்த நாளை நான் எப்படிக் கழித்தேன் என்ற விஷயம்... மேடம்... உங்களால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது.''

“முடியும்... முடியும்... ஆனால், நாம் விஷயத்திற்கு வருவோம். நான் இங்கு எதற்காக வந்திருக்கிறேன் என்று தெரியுமா? நேற்று இரவைப் போல தமாஷாக பேசிக் கொண்டிருப்பதற்காக வரவில்லை. மேலும் அதிகமாக அறிவுப்பூர்வமாக நாம் நடந்துகொள்ள வேண்டும். நேற்று இரவு இந்த விஷயங்களைப் பற்றியெல்லாம் நான் நீண்ட நேரம் சிந்தித்தேன்.''

“ஆனால், நாம் எப்படி மேலும் அதிகமாக அறிவுப்பூர்வமாக செயல்பட வேண்டும்? நான் தயார்தான். ஆனால், உண்மையாகக் கூறுவதாக இருந்தால் என்னுடைய வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களிலேயே மிகவும் அறிவுப்பூர்வமாக நடைபெற்ற சம்பவம் இதுதான்!''

“உண்மையாகவா? முதல் விஷயம்- என்னுடைய கையை இப்படி இறுக்கிப் பிடிக்க வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். இரண்டாவது விஷயம்- நான் இன்று நீண்ட நேரம் உங்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன் என்ற விஷயத்தை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்று விருப்பப்படுகிறேன்.''

“அதற்குப் பிறகு என்ன நினைத்தீர்கள்?''

“நினைத்த விஷயமா? நாம் முதலிலிருந்தே தொடங்க வேண்டும் என்று நான் தீர்மானித்தேன். காரணம்- எனக்கு உங்களைப் பற்றி எதுவுமே தெரியாது என்பதையும், ஒரு குழந்தையைப்போலவும் மடத்தனமான பெண்ணைப்போலவும் நேற்று நான் நடந்து கொண்டேன் என்பதையும் இன்று காலையில் நான் புரிந்து கொண்டேன். குற்றம் என்னுடைய விசாலமான மனதால் உண்டானது என்பதை உணரமுடிந்தது. அதாவது சொந்த நடவடிக்கைகளை அலசி ஆராய்ந்து பார்க்கும்போது நாம் எப்போதும் செய்வதைப்போல நான் தன்னைத் தானே பாராட்டிக் கொள்வதில் போய் சேர்ந்துவிட்டேன். என்னுடைய தவறைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்றும், உங்களைப் பற்றிய எல்லா விஷயங்களையும் மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் நான் உறுதியாக முடிவெடுத்தேன். ஆனால்,வேறு யாரிடமும் கேட்பதற்கு வழி இல்லாத காரணத்தால் நீங்களே என்னிடம் எல்லாவற்றையும் கூற வேண்டும்- எல்லா ரகசியங்களையும். சொல்லுங்கள்... நீங்கள் எப்படிப்பட்டவர்? சீக்கிரமாக பதில் சொல்லுங்கள். உங்களுடைய வாழ்க்கைக் கதையைக் கேட்கிறேன்.''

“என் கதையா?'' நான் பதைபதைப்புடன் கேட்டேன்: “என்னுடைய கதையையா? எனக்கு ஒரு கதை இருக்கிறது என்று உங்களிடம் யார் கூறினார்கள்? எனக்கு கதையே இல்லை.''

“கதை என்ற ஒன்று இல்லையென்றால், பிறகு எப்படி வாழ்ந்தீர்கள்?'' ஒரு குலுங்கல் சிரிப்புடன் அவள் இடையில் புகுந்து கேட்டாள்.

“என் வாழ்க்கைக்கு எந்தவொரு கதையும் இல்லை. நான் தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்- தனி மனிதனாக. முற்றிலும் தனியாக. தனி மனிதனாக என்றால் என்ன என்று தெரியுமா?''

“தனியாகவா? அது எப்படி? நீங்கள் யாரையும் பார்த்ததே இல்லை என்கிறீர்களா?''

“அப்படி இல்லை. உண்மையாகவே நான் மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். எனினும், நான் தனிமனிதன்தான்.''

“நீங்கள் யாரிடமும் பேசுவது இல்லையா?''

“உண்மையாகக் கூறுவதாக இருந்தால்- இல்லை.''

“நீங்கள் எப்படிப்பட்டவர்? தயவு செய்து சொல்லுங்கள். ஒரு நிமிடம்... எனக்குப் புரிந்துவிட்டது என்று தோன்றுகிறது. ஒரு வேளை, உங்களுக்கு ஒரு பாட்டி இருக்கலாம். எனக்கு இருப்பதைப் போல... அவளுடைய கண்களுக்குப் பார்வை சக்தி இல்லை. என்னை வெளியே எங்கும் போவதற்கு அனுமதி தந்து எவ்வளவோ காலம் ஆகிவிட்டது. அதனால் உரையாட வேண்டும் என்ற பழக்கத்தையே நான் மறந்து போய்விட்டேன் என்றுதான் கூற வேண்டும். இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஒருநாள் நான் ஏதோ குறும்புத்தனமாக நடந்துவிட்டேன். என்னை அடக்கி நிறுத்தி வைப்பதற்கு இயலவில்லை என்ற விஷயம் பாட்டிக்குப் புரிந்துவிட்டது. அவள் என்னை அருகில் அழைத்து, எங்களுடைய ஆடைகளை ஒன்றாக இணைத்து ஒரு "பின்”னைக் கொண்டு குத்தி வைத்தாள். அன்றிலிருந்து நாங்கள் அந்த "பின்"னால் ஒருவரோடொருவர் இணைக்கப்பட்டு அதே இடத்தில் இருப்போம். கண் பார்வை தெரியாவிட்டாலும் அவள் ஒரு காலுறையைப் பின்னிக் கொண்டிருப்பாள். பின்னிக்கொண்டோ எதையாவது வாசித்து கேட்கச் செய்து கொண்டோ நானும் அவளுக்கு அருகில் இருந்தே ஆக வேண்டும். ஒருத்தியை இரண்டு வருடங்கள் முழுவதும் "பின்”னைக் குத்தி உட்கார வைப்பது என்றால்...? எந்த அளவுக்கு வினோதமான ஒரு பழக்கம் அது!''

“கடவுளே! என்ன ஒரு கஷ்டம்! ஆனால், இல்லை... எனக்கு அப்படியொரு பாட்டி இல்லை...''

“அப்படி யாரும் இல்லையென்றால், பிறகு எதற்கு வீட்டிலேயே இருக்க வேண்டும்.''

“நான் கேட்கட்டுமா? நான் யார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா?''

“உண்மையாகவே!'' உண்மையான அர்த்தத்தில்..?''

“சரி... கூறுகிறேன். நான் ஒரு டைப்பான மனிதன்.''

“டைப்பா? என்ன டைப்?'' என்று உற்சாகத்துடன் கேட்டவாறு அந்த இளம்பெண் சந்தோஷத்துடன் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். ஒரு வருடமாக அவளுக்கு சிரிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதைப்போல தோன்றியது. “நீங்கள் நல்ல ஒரு ரசிகனாக இருக்கிறீர்களே? பாருங்கள்... அதோ ஒரு பெஞ்ச் கிடக்கிறது. நாம் அங்கு சென்று உட்காருவோம். இங்கு யாரும் வர மாட்டார்கள். நம்முடைய உரையாடலை யாரும் கேட்கப் போவதில்லை. உங்களுடைய கதையை இப்போதே கூற ஆரம்பியுங்கள். நீங்கள் என்னதான் கூறினாலும், உங்களுக்கு ஒரு கதை இருக்கிறது என்பது மட்டும் உண்மை. நீங்கள் அதை ரகசியமாக வைத்திருக்கிறீர்கள். அவ்வளவுதான். முதலிலேயே கேட்டுவிடுகிறேன். டைப் என்றால் என்ன?''

“டைப்பா? வேண்டிய அளவுக்கு சிரிப்பதற்கான வாய்ப்பை அளிக்கக்கூடிய ஒரு அரைப் பைத்தியத்தைத்தான் டைப் என்று கூறுவார்கள்.'' அவளுடைய குழந்தைத்தனமான சிரிப்பில் பங்கு பெற்றுக்கொண்டு நான் சொன்னேன்: “அப்படிப்பட்ட ஒரு குணத்தைக் கொண்டவன்... அது இருக்கட்டும்... ஒரு கனவு காணும் மனிதன் என்று எடுத்துக் கொண்டால் அது யாராக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?''

“கனவு காணும் மனிதனா? சரிதான்... யாருக்குத்தான் தெரியாது? நானே ஒரு கனவு காணும் பெண்தான். பாட்டியின் அருகில் அமர்ந்திருக்கும்போது, சில நேரங்களில் என் தலைக்குள் எப்படிப்பட்ட சிந்தனைகள் எல்லாம் ஓடிக் கொண்டிருக்கின்றன? நான் கனவுகளைக் காண ஆரம்பிப்பேன். அவை என்னை வெகு தூரத்திற்குக் கொண்டு சென்றுவிடும். நான் ஒரு சைனாவைச் சேர்ந்த இளவரசனை திருமணம் செய்துகொள்வதைப்போலகூட கனவில் கண்டிருக்கிறேன். சில நேரங்களில் கனவு காண்பவளாக இருப்பதுகூட நல்லதுதான். குறிப்பாக சிந்திப்பதற்கு வேறு ஏதாவது விஷயங்கள் இருக்கும்போது.'' மேலும் அதிகமான மிடுக்கு கலந்த குரலில் அந்த இளம்பெண் சொன்னாள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel