Lekha Books

A+ A A-

வெளுத்த இரவுகள் - Page 30

velutha iravugal

இல்லையா? நீங்கள் என் மீது முன்பு மாதிரியே அன்பு வைத்திருக்கிறீர்கள். இல்லையா?

தயவு செய்து என்மீது அன்பு வைத்திருங்கள். என்னை கைவிட்டு விடாதீர்கள். காரணம்- இந்த நிமிடத்தில் நான் உங்கள்மீது அந்த அளவிற்கு அன்பு வைத்திருக்கிறேன். உங்களுடைய அன்பிற்கு தகுதியுடையவளாக இருப்பதற்கு நான் ஆசைப்படுகிறேன்.... என் அன்பு நண்பரே! நான் அவனை அடுத்த வாரம் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன்.

என்மீது கொண்ட காதலால்தான் அவன் திரும்பி வந்தான். அவன் என்னை சிறிதுகூட மறக்கவில்லை. நான் அவனைப் பற்றி எழுதுவதால், நீங்கள் கோபப்பட மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். ஆனால், அவனுடன் சேர்ந்து உங்களைத் தேடி வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் அவன்மீது அன்பு செலுத்த மறுக்க மாட்டீர்கள். அப்படித்தானே?

உங்களுடைய நாஸ்தென்காவிற்கு மன்னிப்பை அளியுங்கள். இவளை நினைவில் வைத்திருங்கள். அன்பு செலுத்துங்கள்.

-நாஸ்தென்கா

நான் அந்தக் கடிதத்தை பல முறை திரும்பத் திரும்ப வாசித்தேன். நான் குலுங்கிக் குலுங்கி அழவேண்டும் என்று விரும்பினேன். இறுதியில் கடிதம் என்னுடைய விரல்களுக்கு நடுவிலிருந்து நழுவிக் கீழே விழுந்தது. நான் கையால் முகத்தைப் பொத்திக் கொண்டேன்.

“மகனே... மகனே...'' மத்ரயோனா அழைத்தான்.

“என்ன?''

“பார்.... நான் காய்ந்த இலைகளையெல்லாம் பெருக்கி விட்டேன். இப்போது ஒரு திருமண விருந்திற்கோ உபசரிப்பிற்கோ சரியாக இருக்கும்- அப்படி ஒரு எண்ணம் இருந்தால். அந்த அளவிற்கு சுத்தமாக இருக்கிறது.''

நான் மத்ரயோனாவையே பார்த்தேன். இப்போதும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் சுறுசுறுப்பும் உள்ள ஒரு "இளம் கிழவி”யாக அவள் இருந்தாள். ஆனால், என்ன காரணம் என்று தெரியவில்லை -திடீரென்று எனக்குத் தோன்றியது.... கூன் விழுந்த, கண்கள் மங்கலாகிப்போன, முகம் நிறைய சுருக்கங்கள் விழுந்த ஒரு வயதான கிழவி அவள் என்று. என்ன காரணம் என்று தெரியவில்லை திடீரென்று எனக்குத் தோன்றியது. என்னுடைய அறைக்கும் மத்ரயோனாவைப்போல முதுமை வந்துவிட்டது என்று. மாடியும் சுவர்களும் அழுக்கு படிந்தும் அனைத்தும் இருண்டும் சிலந்தி வலைகள் நிறைந்தும் காணப்பட்டன. என்ன காரணம் என்று தெரிய வில்லை- சாளரத்தின் வழியாக வெளியே பார்த்தபோது, எதிர்ப்பக்கம் இருந்த வீடு இடிந்து கீழே விழும் நிலையில் இருப்பதைப் போலவும், தூண்களிலிருந்து பூச்சு உதிர்ந்து விழுந்து கொண்டிருப்பதைப்போலவும், சுவர்களுக்கு மேலே இருக்கும் சிற்ப வேலைப்பாடுகள் கரி படிந்து விரிசலுடன் இருக்கின்றன என்பதாகவும், அடர்த்தியான மஞ்சள் நிறத்தைக் கொண்ட சுவர்களில் பல நிறுத்திலுள்ள அடையாளங்கள் தெரிவதாகவும் எனக்குத் தோன்றியது.

என் கண்களுக்கு முன்னால் அனைத்தும் மீண்டும் களையிழந்தவை போல காணப்பட்டதற்குக் காரணம், ஒருவேளை... சிறிதும் எதிர்பாராமல் எட்டிப் பார்த்த சூரியன் தொடர்ந்து கரிய மேகங்களுக்குப் பின்னால் மறைந்துகொண்டதால் இருக்கலாம். இல்லாவிட்டால் ஒருவேளை, இனி இருக்கக் கூடிய வாழ்க்கை முழுவதும் எனக்கு முன்னால் ஊமையாகவும் சோகங்கள் நிறைந்ததாகவும் இருப்பதைப் பார்த்ததால் இருக்க வேண்டும். சரியாக பதினைந்து வருடங்கள் கடக்கும்போது நான் எப்படி இருப்பேன் என்று நான் கற்பனை பண்ணிப் பார்த்தேன். வயது அதிகரித்திருந்தாலும் சிறிதுகூட அறிவு அதிகரித்திராத இதே மத்ரயோனாவுடன் இதே அறையில் இதே தனிமைச் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கிழவன்...

ஆனால், நாஸ்தென்கா, நான் எந்தச் சமயத்திலும் அனுபவிக்க நேர்ந்த அநீதிகளை நினைத்து மனம் புண்படுவதில்லை. உன்னுடைய கள்ளங்கபடமற்ற அளவற்ற சந்தோஷத்தில் கவலையின் நிழலைப் பரவச் செய்வது, வருத்தங்களாலும் எதிர்ப்புகளாலும் உன்னுடைய இதயத்தை துக்கத்தில் ஆழ்த்துவது, ஆனந்தம் நிறைந்திருக்கும் நிமிடத்தில் மனசாட்சியின் கூர்மையான அம்புகளை எய்து அதைக் காயப்படுத்தி அது வேதனையுடன் துடித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையை உண்டாக்குவது, திருமண மேடைக்கு அவனுடன் நடந்து செல்லும்போது உன்னுடைய கறுத்த கூந்தலில் பின்னி சேர்க்கப்பட்டிருக்கும் அந்த அழகான மலர்களின் ஒன்றையாவது கசக்கி நசுக்குவது- இல்லை... நாஸ்தென்கா. நான் அந்தக் காரியத்தை எந்த சமயத்திலும் செய்யமாட்டேன். எந்த சமயத்திலும் உன்னுடைய மனம் எப்போதும் கள்ளங்கபடமற்ற தன்மையுடன் இருக்கட்டும்! உன் இனிய வாழ்க்கை துன்பத்தின் நிழல் படாமல் சந்தோஷம் நிறைந்ததாக இருக்கட்டும், தனிமையும், நன்றியுணர்ச்சியும் நிறைந்த இன்னொரு இதயத்திற்கு நீ அளித்த ஆனந்தமும் புனிதத் தன்மையும் நிறைந்த அந்த ஒரு நிமிடத்திற்கு, நீ எப்போதும் அனைத்தும் கொண்டவளாய் இருப்பாயாக!

கடவுளே! பேரானந்தம் நிறைந்த ஒரு முழு நிமிடம்! ஒரு ஆயுள் காலத்திற்கு அது போதாதா...?

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel