Lekha Books

A+ A A-

வாழ்க்கை அழகானது- ஆனால்... - Page 8

valkai alaganathu - aanal...

"அடுத்த விசாரணையின்போது சாட்சிகளை ஆஜர்படுத்துவதாக அவர் சொல்லியிருக்கார்.''

குட்டி அதற்குப் பிறகும் விடவில்லை.

"சாட்சிகளா? அது யார்?''

நீதிமன்றத்தை அவமதிப்பதைப் போல சிலருக்குத் தோன்றியது. அவள் புத்திசாலி என்று வேறு சிலர் கூறினார்கள். நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவரின் பக்கம் பார்த்துக் கேட்டது:

"பிரதியைக் கொடுத்துவிட்டார்களா?''

ப்ராசிக்யூட்டர் "கொடுத்துவிட்டேன்'' என்று கூறினார். குட்டி விடவில்லை.

"தரவில்லை... எஜமான், அது பொய். அப்படியே தந்தாலும் எனக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது.''

அந்த வழக்கிற்காக ப்ராசிக்யூட்டரிடம் பேசுவதற்காக வந்த ஹெட் கான்ஸ்டபிள் கண்களை உருட்டினார். குட்டி குற்றம் சாட்டினாள்.

"ஹெட் கான்ஸ்டபிள் கண்களை உருட்டி பயமுறுத்துகிறார்.''

நீதிபதி ஹெட் கான்ஸ்டபிளைப் பார்த்து எச்சரித்தார். தொடர்ந்து அவர் சொன்னார்:

"நீங்கள் குற்றம் செய்தவள் என்பதை நிரூபிப்பதற்காக சிலரை சாட்சிகளாக ஆக்கியிருக்கிறார்கள்.''

குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பெண் இந்த நடவடிக்கைகள் எல்லாவற்றையும் நன்கு தெரிந்திருப்பவள் என்பதை ப்ராசிக்யூட்டரும் நீதிமன்றத்திற்குக் கூறினார்.

அந்த சாட்சிகள் யார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று குட்டி நினைத்தாள். நீதிமன்றம் அந்தப் பெயர்களை வாசித்துக் கேட்கச் செய்தது. பதைபதைப்புடன் குட்டி சொன்னாள்:

"அவர்கள் எல்லாரும் திருடர்கள். அவருடைய ஆளுங்க...''

இவ்வளவு ஆனதும் நீதிமன்றம் தீவிர சூழ்நிலையை கடைப்பிடித்தது. நீதிபதி சொன்னார்:

"போதும்... அதை விசாரணை முடிஞ்ச பிறகு தீர்மானிப்போம்.''

அவர் வழக்கை ஒத்தி வைத்தார். குட்டி வெளியேறினாள்.

லாக்கப்பில் தனியாக இருந்தபோது, குட்டி கவுரியிடம் கேட்டாள்:

"என்ன... நீ பயந்துட்டியா?''

உண்மையாகவே கவுரி பயந்துதான் போனாள். குட்டி தொடர்ந்து சொன்னாள்:

"இந்த அளவுக்கு பயப்படுவதற்கு அவசியமே இல்லடி குழந்தை! நாம நம்ம விஷயத்தைச் சொல்லணும். எப்படிப்பட்ட ஆளுங்களெல்லாம் பொய் சாட்சி சொல்ல வருவாங்கன்ற விஷயம் தெரிய வேணாமா?''

கவுரி கேட்டாள்:

"இருந்தாலும், அதை எப்படி உங்களால கேட்க முடிந்தது, அக்கா?''

"நாம எதுக்குடி பயப்படணும்? மேலே வானம் கீழே பூமி.''

தன்னுடைய வழக்கில் சாட்சிகளாக இருப்பவர்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் கவுரிக்கும் இருந்தது. அடுத்த விசாரணையின்போது நேரடியாகப் பார்த்துக் கேட்க வேண்டும் என்று குட்டி ஆலோசனை சொன்னாள். ஆனால், அது அவளால் முடியுமா?

4

சிதரனும் ரைட்டரும் இடம் மாற்றம் பெற்றுப் போவதற்கு முன்னால் வழக்கு சம்பந்தப்பட்ட தகவல்கள் அனைத்தும் கிருஷ்ணனுக்குக் கிடைத்திருந்தன. அவர்கள் கொடுத்திருந்தார்கள். வழக்கில் கவுரியைக் காப்பாற்றக்கூடிய எல்லா உதவிகளையும் செய்து தருவதாக அவர்கள் கூறினார்கள். துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்- அவர்கள் இடம் மாறிப் போய்விட்டார்கள். எனினும், வழக்கில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அவர்கள் அவளிடம் கூறிப் புரிய வைத்திருந்தார்கள்.

முதலில் தயார் பண்ண வேண்டியது பணம்தான். கிருஷ்ணனுக்கு அவனுடைய ஊரில் பதினைந்து சென்ட் நிலம் இருந்தது. அதை எழுதிவிற்றான். நானூறு ரூபாய் கிடைத்தது. அதைக் கையில் வைத்துக் கொண்டுதான் கிருஷ்ணன் களத்திலேயே கால் வைத்தான். குற்றப் பத்திரிகையில் பதினாறு சாட்சிகள் இருந்தார்கள். அவர்களைக் கைக்குள் போட வேண்டும். சாட்சிகளின் பெயர்களைப் பற்றிய விவரத்தை ரைட்டர் கொடுத்திருந்தார். மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் முக்கிய விசாரணை முடிந்ததும், வழக்கை செஷன்ஸுக்கு மாற்றுவார்கள். அப்போது அரசாங்கத்தின் பக்கத்திலிருந்து ஒரு வக்கீலை அவளுக்காக நியமிப்பார்கள். அந்த வக்கீலைப் பார்த்து தேவையான உதவிகளைச் செய்து தர வேண்டும். எல்லாவற்றையும் ரகசியமாகவும் செய்ய வேண்டும். ஏனென்றால் வேலுப்பிள்ளை கிருஷ்ணன்மீது திருட்டு வழக்கு சுமத்தியாவது பிரச்சினைகளை உண்டாக்க முயற்சி செய்வார். அவருக்கு அந்த அளவிற்கு பழிவாங்க வேண்டும் என்ற உணர்ச்சி இருந்தது. அதில் கட்டாயம் கவனம் செலுத்தியாக வேண்டும்.

கவுரியின் வீடு வண்டானத்தில் இருந்தது. அந்த பகுதி கிருஷ்ணனுக்கு நன்கு தெரிந்ததுதான். கவுரியின் பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் எல்லாருக்கும் அவனை நன்றாகத் தெரியும். கோவிந்தனுடன் சேர்ந்து அவன் சிறிது காலம் அந்த இடத்தில் வாழ்ந்திருக்கிறான். ஆனால், அங்கு செல்வதற்கும் பக்கத்து வீட்டுக்காரர்களைப் பார்ப்பதற்கும் கிருஷ்ணனுக்கு சற்று தயக்கம் இல்லாமல் இல்லை. கிருஷ்ணனால்தான் கோவிந்தன் கவுரியை விட்டுப்பிரிந்தான் என்று நினைப்பவர்கள் அங்கு இருந்தார்கள். ஒரு காலத்தில் அவனையும் கவுரியையும் இணைத்து வதந்தியும் அங்கு பரவிவிட்டிருந்தது. எந்தவொரு உண்மையும் இல்லாத கெட்ட வதந்தியாக அது இருந்தாலும், அங்கு போகாமல் இருக்க முடியாதே!

கவுரியின் வீட்டிற்குத் தெற்குப் பக்கத்தில் இருந்த வீட்டில் இருக்கும் கார்த்தியாயனி வழக்கில் ஒரு சாட்சியாக இருந்தாள். கிருஷ்ணன்

முதலில் அங்குதான் சென்றான். கார்த்தியாயனியின் கணவன் அங்கு இருந்தான்.

எதிர்பார்த்திருந்ததைவிட கடுமையான கேள்வி கார்த்தியாயனியின் கணவனான பத்மநாபனிடமிருந்து வந்தது.

"கடித்த பாம்புதான் விஷத்தை இறக்க வேண்டும். ஆனால், அந்த சிறு குழந்தைகள் போயிட்டாங்க. நல்ல குழந்தைகள்! அவளைக் காப்பாற்றி நீ என்ன செய்யப் போகிறாய்?''

அதற்கு கிருஷ்ணனிடமிருந்து பதில் வந்தது.

"நான் திருமணம் செய்து கொள்வேன்.''

தொடர்ந்து தன்னுடைய நிரபராதித் தன்மையை வெளிப்படுத்துவதற்காக கிருஷ்ணன் முயன்றான். கவுரியைத் தான் காதலித்ததென்னவோ உண்மைதான். ஆனால், அவள் பதிலுக்கு காதலிக்கவில்லை. அவள் புனிதமான ஒரு மனைவியாக இருந்தாள். ஊரில் இருப்பவர்கள் பலவற்றையும் சொன்னார்கள். கோவிந்தன் தவறாக நினைத்திருக்க வேண்டும். இவை அனைத்தும் உண்மை. இப்படியெல்லாம் நடக்கும் என்று அவனுக்குத் தெரியாது.

பத்மநாபனும் நாணியின் கணவனும் (நாணி இன்னொரு சாட்சி) கிட்டுவும் அதை முழுமையாக நம்பினார்களா என்று உறுதியாகக் கூறுவதற்கில்லை. எனினும், ஒரு விஷயத்தில் எல்லாருக்கும் அவனைப் பற்றி மதிப்பு உண்டானது. அவன் கவுரியைத் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்த விஷயமே அது.

அவள் நடக்கக் கூடாத வகையில் நடந்து கொண்ட அந்த நாளன்று ஊரில் உள்ள எல்லாருக்கும் ஒரு வெறுப்பு இருந்தது. ஆனால், பிறகு அவள்மீது பரிதாபம் உண்டானது. அவள் காப்பாற்றப்படுவதில் யாருக்கும் எதிர்ப்பு இல்லை. இப்போது அவர்களுக்கு ஒரு பயம் இருந்தது. நம்பிக்கையுடன் போலீஸ்காரர்கள் அவர்களை சாட்சிகளாக ஆக்கினார்கள். வேறு மாதிரி நடந்தால் போலீஸ்காரர்கள் கோபப்படமாட்டார்களா? யாருக்கும் தைரியம் வரவில்லை.

பத்மநாபன் கிருஷ்ணனிடம் சொன்னான்:

"நீங்கள் எங்களுக்காக ஒரு பைசாகூட செலவழிக்க வேண்டாம். ஆனால், ஒரு விஷயம். போலீஸ்காரர்கள் அத்துமீறி நடந்தால், உங்களால் தடுக்க முடியுமா?''

முடியும் என்று கூறுவதற்கு கிருஷ்ணனுக்கு தைரியமில்லை. அவனுடைய விஷயமே மிகவும் சிக்கலில் இருந்தது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel