Lekha Books

A+ A A-

வாழ்க்கை அழகானது- ஆனால்... - Page 10

valkai alaganathu - aanal...

சுரேந்திரன் ஏமாற்றமடையவில்லை. விருந்து மேலும் சற்று கடந்து போய்க் கொண்டிருந்த ஒரு கட்டத்தில் ஒரு இருபத்தைந்து ரூபாயை வேலுப்பிள்ளையின் பாக்கெட்டிற்குள் நுழைத்தார். வர்க்கீஸுக்கு ஒரு ஐந்து ரூபாய். வேலுப்பிள்ளை சம்மதிக்கவில்லை. கவுரியின் வழக்கிற்காக என்றால், சாப்பிட்டவை அனைத்தையும் அங்கேயே வாந்தி எடுத்துவிட்டுப் போகத் தயார் என்று வேலுப்பிள்ளை கூறினார்.

இனிமேலும் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டிருப்பதால் பலன் ஏதும் இல்லை என்று சுரேந்திரனுக்கு புரிந்தது. அவர் அந்த விஷயத்தில் இருந்து விலகிக் கொண்டுவிட்டதாகக் கூறினார். வேலுப்பிள்ளைக்கு அதைக் கேட்டு சந்தோஷம் உண்டானது. வேலுப்பிள்ளை ஒரு விட்டுக்கொடுத்தலுக்குத் தயாராக இருந்தார்.

"அவன் இருக்கானே... அவளைக் காப்பாற்றுவதற்காக இருப்பவன்.... அவனுடைய பெயர் என்ன? கிருஷ்ணன்... அவனை நான் தூக்குறதுக்கு முடிவு பண்ணியிருந்தேன். முதலாளி, நீங்க தலையிட்டதால் அவனை நான் விடுறேன். ஆனால், ஒரு விஷயத்தைச் சொல்லிடுங்க... மேலும் தொந்தரவு கொடுத்தால், நான் ஆளே மாறிடுவேன்.''

முதலாளி எல்லா விவரங்களையும் கிருஷ்ணனிடம் கூறவில்லை. ஹெட் கான்ஸ்டபிள் அந்த அளவிற்கு நெருங்கி வரவில்லை என்பதை மட்டும் கூறினார். கிருஷ்ணன்மீது கொண்ட பகை முடிவுக்கு வந்துவிட்டது என்பதை உறுதியான குரலில் கூறினார்.

அந்த வகையில் சுரேந்திரன் முதலாளிக்கு, எது எப்படி இருந்தாலும், ஐம்பது ரூபாய்களுக்கும் அதிகமாகக் கிடைத்தது.

5

றுநாள் காலையில் கவுரி சந்திக்க வேண்டியதிருந்தது- வேலுப்பிள்ளையின் மிரட்டலைத்தான்.

"உன்னுடைய நாட்களை எண்ணிக் கொள்.''

சிறிது நேரம் கடந்ததும் ப்ராசிக்யூட்டர் வந்தார். சற்று நேரம் ஆனதும் வர்க்கீஸுடன் கவுரியின் பக்கத்து வீடுகளைச் சேர்ந்த கார்த்தியாயனியும் நாணியும் கிட்டுவும் வெளிவாசலைக் கடந்து வருவதை கவுரி பார்த்தாள். அவர்கள் எதற்காக வருகிறார்கள் என்று கவுரிக்குத் தெரியாது. அப்போது குட்டி சொன்னாள்:

"அவர்கள் சாட்சிகளாக இருக்க வேண்டும்.''

சாட்சிகளா? அவர்களுக்கு கவுரி எந்தவொரு தவறும் இழைத்ததில்லை. அது மட்டுமல்ல- அவர்கள்மீது அவள் நிறைய அன்பும் பாசமும் வைத்திருந்தாள். அவர்களுடன் சற்று பேசியிருக்கலாம் என்று கவுரிக்குத் தோன்றியது. கதவிற்கு அருகில் எழுந்து நின்று கவுரி சைகை காட்டினாள். அவர்கள் அதைப் பார்த்தார்களோ என்னவோ?

நாணி அவளைப் பார்த்தாள். அவள் கவுரியை நோக்கி நடப்பதற்குத் தயாரானாள். அப்போது வேலுப்பிள்ளை சத்தம் போட்டுக் கத்தினார்:

"எங்கேடீ?''

நாணி முன்னால் வைத்த காலைப் பின்னால் வைத்தாள். ப்ராசிக்யூட்டர் இருந்த அறைக்குள் அவர்கள் மூவரையும் அழைத்துக் கொண்டு சென்றார்கள்.

குட்டி சொன்னாள்:

"பொய் சொல்ல கற்றுத் தருவதற்காக அவர்களை அழைத்துக் கொண்டு போகிறார்கள்.''

கவுரி வியப்புடன் கேட்டாள்:

"எதற்கு?''

"உன்னை தூக்குல தொங்க விடுறதுக்கு...''

"அதற்கு நான் அவர்களுக்கு ஒரு துரோகமும் செய்யலையே!''

குட்டி சொன்னாள்:

"அது அப்படித்தான்... ஒரு துரோகமும் செய்ய வேண்டாம். என்னுடைய கடந்த வழக்கில், நான் ஒரு நூறு நன்மைகளைச் செய்தவர்கள் பச்சைப் பொய்யைச் சொன்னார்கள்.''

கவுரி கிருஷ்ணனை நினைத்தாள். இப்போதிருந்துதான் கிருஷ்ணனின் உதவி தேவைப்படுகிறது. அன்று வந்து போனதற்குப் பிறகு கிருஷ்ணனைக் காணவே இல்லை. அவன் வாழ்க்கைமீது ஆசையை உண்டாக்கிவிட்டுப் போய் விட்டானா? அவன் எதற்காக லாக் அப்பிற்கு வந்தான்? இது இன்னொரு துரோகமாக இருக்குமோ?

தெரிந்து கொள்ள வேண்டியவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு சாட்சிகள் மூவரும் அறையை விட்டு வெளியே வந்தார்கள். அப்போது கார்த்தியாயனிக்கும் நாணிக்கும் அவளைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் இருப்பதைப் போல தோன்றியது. ஆனால், வர்க்கீஸ் அவர்களை அழைத்துக் கொண்டு போய்விட்டான்.

வேலுப்பிள்ளை கூறியது உண்மையாக இருக்கலாம். அவள் இப்போது நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இருக்கலாம். முன்பு கவுரிக்கு இந்த விஷயத்தில் வருத்தம் என்ற ஒன்று இல்லாமலிருந்தது. இப்போது மனதில் வேதனை உண்டானது.

பதினோரு மணிக்கு அவளையும் குட்டியையும் நீதிமன்றத்திற்கு அழைத்துக் கொண்டு சென்றார்கள். நீதிமன்றப் பகுதியில் எங்கேயாவது கிருஷ்ணன் இருக்கிறானா என்று பார்த்தாள். இல்லை.

குட்டி கேட்டாள்:

"நீ யாரைத் தேடுகிறாய்? அந்த ஆளையா?''

கவுரி சொன்னாள்:

"ஆமாம்.... இன்றைக்கு விசாரணை என்ற விஷயம் தெரியாமல் இருக்கலாம்.''

குட்டி நம்பிக்கையே இல்லாமல் சொன்னாள்:

"முட்டாள் பெண்ணே! நீ அப்படியே நம்பிக் கொண்டு இரு. அந்த ஆள் வரப் போறது இல்லை. இந்த ஆம்பளைகளே இப்படித்தான்.'' அப்படியென்றால், அவள் உயிருடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறான் என்று நினைத்த மனிதனும் அவளைக் கைகழுவி விட்டானா? அவன் வழக்கிற்காக எதுவும் செய்யவில்லையா?

ஆனால், குட்டி அவளுக்கு தைரியம் சொன்னாள்:

"நமக்கு யாரும் உதவி செய்வார்கள் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். நாம்தான் நம்முடைய காரியங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.''

நீதிமன்றத்தில் கவுரியின் வழக்குதான் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நபரின் பெயரை அழைத்தார்கள். கவுரி குற்றவாளிக் கூண்டில் போய் நின்றாள். சாட்சிகளில் கிட்டுவைத்தான் முதலில் கூண்டில் ஏற்றினார்கள். கிட்டுவை சத்தியம் பண்ணச் சொன்னார்கள். கவுரியின் காதுகள் இறுக மூடிக் கொண்டன.

ப்ராசிக்யூட்டர் எழுந்து நின்று, "இந்த கூண்டில் நின்று கொண்டிருக்கும் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பெண்ணைத் தெரியுமா?'' என்று கேட்டார். "தெரியும்'' என்று கிட்டு சொன்னான். தொடர்ந்து அவன் வாக்கு மூலம் தந்தான். அந்த குறிப்பிட்ட நாளன்று கிட்டு கடல் பகுதிக்குப் போயிருந்தான். ஒரு லுங்கியில் ஒன்று சேர்த்துக் கட்டப்பட்ட இரண்டு குழந்தைகளின் இறந்த உடல்கள் கடற்கரையில் ஒதுங்கிக் கிடப்பதை அவன் பார்த்தான். அந்தக் குழந்தைகள் கவுரியின் குழந்தைகள். கவுரியின் வீட்டிற்கு அருகில்தான் கிட்டு வசிக்கிறான். கடற்கரையில் பார்த்த விஷயத்தை அவன் போலீஸிடம் போய் சொன்னான். போலீஸ்காரர்கள் வாக்குமூலத்தை வாங்கிக் கொண்டார்கள். அந்த லுங்கியைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். நீதிமன்றத்தில் அந்த கைலியை அவன் அடையாளம் காட்டினான். கவுரியின் வீட்டில் அவன் அதைப் பார்த்திருக்கிறான். அவனுடைய வாக்குமூலம் அந்த வகையில் இருந்தது.

அதில் பொய் எதுவும் இருப்பதாக கவுரிக்குத் தோன்றவில்லை. எனினும், அது அவளுக்கு எதிரான வாக்குமூலம்தான். சந்தேகமே இல்லை. அதைக் கூறாமல் இருந்திருந்தால் அவளுக்கு நல்லதாக இருந்திருக்கும். குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நபர் சாட்சிகளிடம் ஏதாவது கேட்பதற்கு இருக்கிறதா என்று நீதிமன்றம் கேட்டது. உண்மையாகச் சொல்லப்போனால் ஏராளமான கேள்விகளை கிட்டுவிடம் அவளுக்குக் கேட்க வேண்டும் போல இருந்தது. எப்படிப்பட்ட கேள்விகள்? அவள் உதவி செய்தவள்தானே?

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel