Lekha Books

A+ A A-

வாழ்க்கை அழகானது- ஆனால்... - Page 6

valkai alaganathu - aanal...

விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. உண்மை தெரியவரும் பட்சம், வேலை போய்விடும். திடீரென்று கவுரியின் அறிவு தெளிந்துவிட்டதைப் போல தோன்றியது. அவள் கேட்டாள்:

"இங்கே யாருமே வரலைன்னு நான் சொல்லிவிட்டால்...?''

காதராக்ஷிக்கு அதுதான் தேவை. அவளுடைய முகம் பிரகாசமானது.

"நானே அதைச் சொல்லணும்னு நினைச்சேன். அதைச் சொல்றதுக்காகத்தான் வந்தேன்.''

கவுரி சொன்னாள்:

"நான் அப்படித்தான் சொல்வேன்.''

எனினும், முன்கூட்டியே ஒரு விஷயத்தை காதராக்ஷி கூற விரும்பினாள். ஏட்டு வேலுப்பிள்ளை வருவார். பயமுறுத்துவார்.

கவுரி சொன்னாள்:

"அது எப்படி இருந்தாலும், நான் உங்களை விட்டு விலகிப் போகமாட்டேன். எதற்கும் தயாராக இருக்குற என்னை எதுக்கு பயமுறுத்தணும்?''

வழக்கை நடத்திக் கொண்டு செல்வதில் கிருஷ்ணனுக்கு சசிதரனும் ரைட்டரும் உதவி செய்யத் தீர்மானித்திருக்கிறார்கள் என்பதையும் காதராக்ஷி சொன்னாள். அப்படியென்றால், வழக்கிலிருந்து கவுரி தப்பித்து விடுவாள்.

கவுரி அதை அந்த அளவிற்குத் தீவிரமாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. கிருஷ்ணன் வழக்கை நடத்துவான் என்பதில் அவளுக்கு சந்தேகம் இல்லை. சசிதரன் உதவி செய்தாலும் இல்லாவிட்டாலும் சசிதரனையும் ரைட்டரையும் காதராக்ஷியையும் தான் கைவிடுவதாக இல்லை என்று மீண்டும் அவள் உறுதிபடுத்திக் கூறினாள்.

அடுத்து வேலுப்பிள்ளையின் வருகை. அந்த வழக்கிற்கு வடிவம் கொடுத்ததே அவர்தான். அவர் நினைத்தால் மட்டுமே அந்த வழக்கில் இருந்து அவளைக் காப்பாற்ற முடியும். தூக்குமரத்தில் இருந்து காப்பாற்ற வேண்டுமென்றால் ஏ.எஸ்.பி.க்கு முன்னால் அவர் கூறுவதைப் போல வாக்குமூலம் கொடுக்க வேண்டும். அதற்கு அவள் தயாராக இருக்கிறாளா என்பதுதான் கேள்வி.

கவுரி, கிருஷ்ணன் என்ற ஆள் வரவே இல்லையென்றும், அப்படிப்பட்ட ஒரு ஆளுடன் தான் பேசவே இல்லையென்றும் உறுதியான குரலில் கூறினாள். வேலுப்பிள்ளை பற்களைக் கடித்துக் கொண்டே கத்தினார்:

"உன்னை நான் தூக்குமரத்துல ஏத்துறேன்!''

அதற்குப் பிறகும் அவள் அசையவே இல்லை. வாழ வேண்டும் என்ற ஆசை இல்லாததால் அல்ல. வருவது வரட்டும் என்று முடிவாகத் தீர்மானித்துதான் அவள் சொன்னாள்.

ஏ.எஸ்.பி. வந்து வாக்குமூலத்தை வாங்கினார். கவுரி மிகவும் சரியாக வாக்குமூலம் தந்தாள். கிருஷ்ணன் என்ற ஒரு மனிதன் அவளுக்குத் தெரியவே தெரியாது. அப்படிப்பட்ட ஒரு மனிதன் அவளைப் பார்ப்பதற்கு வரவே இல்லை. லாக் அப்பில் இருந்தவர்கள் எல்லாரும் அப்படிப்பட்ட ஒரு விஷயம் தங்களுக்குத் தெரியவே தெரியாது என்று வாக்குமூலம் தந்தார்கள்.

வேலுப்பிள்ளையின் பழி வாங்கும் உணர்ச்சி அதிகமானது. அது இயல்பான ஒன்றுதானே? அவர் தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்தார். மிகவும் தீவிரமாக அந்த வழக்கை நடத்துவது, கிருஷ்ணனைத் தேடிப் பிடித்து பிரச்சினையில் சிக்க வைப்பது- எல்லாவற்றையும் அவர் உறுதியாகத் தீர்மானித்தார். பழி வாங்கும் வெறி உண்டான மனிதரைப் போல அவர் கவுரியின் அறை வாசலில் போய் நின்று சொன்னார்:

"உன்னுடைய அவனை நீ எதிர்பார்த்திரு. நான் அவனுடைய எலும்பில் ஒன்றைக்கூட மிச்சம் வைக்க மாட்டேன். அவன் உனக்கு உதவுவதைப் பார்க்கத்தானே போறேன்!''

உண்மையிலேயே அந்த மிரட்டல் அவளை அச்சம் கொள்ளச் செய்தது. அந்த முரட்டு மனிதர் என்னவெல்லாம் செய்யப் போகிறாரோ? கிருஷ்ணனை நினைத்து கவுரி பதைபதைப்படைந்தாள்.

ரைட்டரும் சசிதரனும் காதராக்ஷியும் அந்தப் பிரச்சினையிலிருந்து தப்பித்துவிட்டாலும், அவர்களை அங்கிருந்து இடம் மாற்றம் செய்தார்கள். அவள்மீது கனிவு கொண்ட யாருமே இப்போது ஸ்டேஷனில் இல்லை.

காதராக்ஷிக்கு பதிலாக ஒரு சிசிலி வந்தாள். ஒரு முரட்டுத்தனமான குணத்தைக் கொண்ட பெண். அழகற்ற முகத்தைக் கொண்டவள்... கண்களில் இரத்தமே இல்லாதவள்.

3

லாக் அப்பின் மூலையில் இருந்து இரும்புக் கம்பிகளாலான கதவுக்கு அருகில் வந்ததிலிருந்து கவுரியின் வாழ்க்கையில் சம்பவங்கள் அடிக்கடி நடந்து கொண்டேயிருந்தன. தூரத்தில் வயலில் இருந்த பெரிய மாமரத்தில் அமர்ந்து கொண்டு குயில் கூவியதும், பெண்குயில் பதிலுக்கு கூவியதும்... இப்படி வாழ்க்கையில் மாற்றங்கள் உண்டாயின. பிறகு... என்னவெல்லாமோ நடந்துவிட்டன. காதராக்ஷியின் காதல்

கதை, கிருஷ்ணனின் வருகை, காவல் நிலையத்தின் போட்டா போட்டி, வேலுப்பிள்ளையின் மிரட்டல், ஏ.எஸ்.பி.யின் வாக்குமூலம் வாங்குதல்... அனைத்தும் சம்பவங்கள்தான். சம்பவங்கள் என்று கூறும்போது, ஆழமாக சிந்திக்கக் கூடியவையாக அவை இருந்தன. விருப்பங்களும் விருப்பமின்மையும் அந்த சிந்தனையில் வெளிப்பட்டன. உள்ளே மறைந்திருக்கும் உணர்ச்சிப் பெருக்கு இதயத்தை நெகிழச் செய்யவும் வைத்தது. மிகவும் ஆழமாக வாழ்ந்து கொண்டிருந்த நாட்களாக அவை இருந்தன.

தினமும் அதிகமாகிக் கொண்டிருந்த பகை உணர்ச்சியுடன் வேலுப்பிள்ளை பயமுறுத்திக் கொண்டிருந்தார். அது என்ன ஒரு கஷ்டமான விஷயம்! முன்பு அவள் இறக்க வேண்டும் என்று விரும்பினாள். பிறகு வாழ வேண்டும் என்ற ஆசை மொட்டு விட்டது. இப்போது வாடிக் கருகிக் கொண்டிருக்கிறது. அந்த பயமுறுத்தலின் பயம் அதுதான். இனி நடப்பது நடக்கட்டும் என்று நினைத்தவாறு லாக் அப் கதவுக்கு அருகில் அமர்ந்து வெளியே தெரியும் பசுமையான உலகத்தைப் பார்த்துக் கொண்டு நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறாள். சில நேரங்களில் அவள் நீண்ட பெருமூச்சைவிடுவாள்.

எந்தவொரு உறவும் ஒட்டிக் கொண்டிருக்காமல் கவுரி லாக் அப்பிற்குள் வந்தாள். அவளுக்கென்று எவனும் இல்லை. அப்படி இருக்கும்போது கிருஷ்ணன் வந்து சேர்ந்தான். அவன் எதற்காக வந்தான்?

ஒருநாள் ஒரு பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துக் கொண்டு வந்தார்கள். கவுரியை விட சற்று வயதில் மூத்தவளாக இருந்தாள். அவளை கவுரி இருந்த அறைக்குள் கொண்டு வந்து அடைத்தார்கள். சில தீர்மானங்களும் தைரியமும் கொண்ட உயரம் குறைவான பருமனான பெண். அந்தப் பெண்ணின் முகத்தில் ஒரு பெண்மைத்தனமோ சிறைக்குள் நுழைந்து விட்டோமே என்ற பதைபதைப்போ தெரியவில்லை. கவுரியால் அவள் அருகில் சென்று அறிமுகமாகிக் கொள்ள முடியவில்லை.

சிறிது நேரத்திற்கு இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. பிறகு பேசிக் கொண்டார்கள். அந்தப் பெண் ஒரு நெருப்பு வைக்கும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வந்திருக்கிறாள். இதற்கு முன்பும் ஒரு முறை இதே குற்றத்திற்கு அவள் தண்டனை அனுபவித்திருக்கிறாள். இந்த முறை நெருப்பு பற்ற வைத்த வீட்டிற்கே நெருப்பு வைத்ததற்காகத்தான் முன்பு சிறைக்குள் வந்திருந்தாள்.

அதுவும் ஒரு காதல் கதைதான். அவள் இளம் வயதில் ஒருவனைக் காதலித்தாள். அவனும் காதலித்தான். அவர்கள் கணவன்- மனைவியாக வாழ்ந்தார்கள். திருமணம் நடக்கவில்லை. அதைப் பற்றி நினைக்கவில்லை. இருவரும் சேர்ந்து சிரமப்பட்டு எப்படியோ வாழ்க்கையை நடத்தினார்கள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel