Lekha Books

A+ A A-

வாழ்க்கை அழகானது- ஆனால்... - Page 3

valkai alaganathu - aanal...

அசரீரியைப் போல அந்த வார்த்தைகள் கவுரியின் காதுகளுக்குள் கேட்டன. அந்தப் பெண் கான்ஸ்டபிள் கூறிக் கொண்டிருக்கிறாள்.

காதராக்ஷி, தான் கூறியதை வேறு யாராவது- கவுரி உட்பட, கேட்டிருப்பார்களோ என்று பயந்தாள். முழங்கால்களை ஊன்றியவாறு கம்பிகளைப் பிடித்து நின்று கொண்டு கவுரி பார்க்கிறாள். சசிதரனிடம் காதராக்ஷி சைகை காட்டுகிறாள். என்ன கூற விரும்புகிறாள்? கவுரி கேட்டுக் கொண்டிருக்கிறாள் என்பதை அவள் கூற விரும்புகிறாள்.

கவுரி தலையை நீட்டிக் கொண்டு பார்த்தாலும், அவளுடைய காதுகளுக்குள் அந்த வார்த்தைகள் கேட்டுக் கொண்டேயிருந்தன.

சாலையின் வழியாக நடந்து சென்ற மனிதன் திரும்பி வந்தான். அப்போதும் அவன் வெளிவாசல் வழியாக லாக் அப் அறையையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் யாரையோ பார்க்க விரும்புகிறான் என்பது உண்மை. அவன் மறைந்தான். மீண்டும் தோன்றினான். மேற்குப் பக்கமாக நடந்தான். இடத்தையும் நேரத்தையும் மறந்து விட்டு, கவுரி அவனை அழைத்தாள். சத்தம் உண்டாக்கவில்லை என்பது மட்டுமே விஷயம்.

சற்று நேரம் கடந்த பிறகு அவன் கிழக்கு நோக்கி நடந்தான். அதே மாதிரி மேற்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் பல முறை அவன் நடந்தான். அவன் எதற்காக அப்படி நடக்கிறான்? உண்மையாகவே அவன் யாரையோ பார்க்க விரும்புகிறான். அப்படிப் பார்க்க விரும்பும் ஆள் யார்? கவுரிக்கு அது உறுதியாகத் தெரிந்தது. அது அவள்தான். தான் அவனைப் பார்த்துவிட்டோம் என்ற விஷயத்தைத் தெரிவிக்க

வேண்டும் போல கவுரிக்குத் தோன்றியது. எப்படித் தெரிவிப்பது? அவன் அவளைப் பார்ப்பதற்காக அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தான்.

கவுரி எழுந்து நின்றாள். அவன் சாலையில் கிழக்கும் மேற்குமாக நடந்து கொண்டிருந்தான். இப்போது வெளிவாசலைத் தாண்டி அதிக தூரம் இங்குமங்குமாக நடக்கவில்லை. நோக்கம் தெளிவாகத் தெரிந்தது. உள்ளே வர வேண்டும். ஒரு ஆர்வம் அதில் வெளிப்பட்டது. அந்த நிலைக்கு அவன் வந்துவிட்டான். "எதற்கடா?" என்று காவல் நிலையத்திலிருந்து யாராவது கேட்டால், அவன் உள்ளே வந்துவிடுவான்.

அந்த நிமிடங்கள் கவுரியைப் பொறுத்தவரையிலும் ஆர்வமானவையாக இருந்தன. இந்த நிமிடம் வரை, தான் இரும்புக் கம்பிகளுக்கு உள்ளே இருக்கிறோம் என்ற எண்ணமே கவுரிக்குத் தோன்றியதில்லை. இப்போது அவள் பிணைப்பு என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொண்டாள்- முதல் முறையாக. அந்த கதவைத் திறந்தால் நன்றாக இருக்கும் என்று அவளுக்குத் தோன்றியது. அழைப்பதற்கான சுதந்திரம் அவளுக்கு இல்லை. "எனக்கு விருப்பம்தான்... ஆனால்...''- இந்த வார்த்தைகள் காதுகளுக்குள் அப்போதும் கேட்டுக் கொண்டேயிருந்தன. காதராக்ஷி இன்று சொன்னாள். சில வருடங்களுக்கு முன்னால் வெளி வாசலில் இங்குமங்குமாக நடந்து கொண்டிருக்கும் அந்த மனிதன், கவுரியின் காதுகளில் வந்து சேர வேண்டும் என்பதற்காக, யாரிடம் என்றில்லாமல் அந்த வார்த்தைகளைக் கூறியிருக்கிறான். அவள் குளித்து முடித்து போய்க் கொண்டிருந்தாள். பாதையின் அருகில் நின்று கொண்டு அவன் சொன்னான். அவள் கேட்டாள். பதிலெதுவும் சொல்லவில்லை.

"எனக்கு விருப்பம்தான். ஆனால்...''

அந்த வகையில் அவன் வந்திருக்கிறான்.

அன்பு வைத்திருக்கும் மனிதன் வந்திருக்கிறான். இன்றுவரையில் ஒருவர்கூட அந்த லாக் அப்பில் கவுரியைப் பார்ப்பதற்காக வந்ததில்லை. யாரும் வர வேண்டும் என்று அவள் ஆசைப்படவும் இல்லை. அது அவள் நினைக்கக்கூடிய விஷயமே இல்லை. அவளுக்கு வேண்டியவர்கள் என்று யாருமில்லை. கடந்த வாழ்க்கை துடைத்து அழிக்கப்பட்டு விட்டது. லாக் அப்பில் இருந்து தூக்குமரம் வரை ஒரு வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கை சம்பவங்கள் எதுவும் இல்லாதது. அதிகமான மனிதர்களுடன் பழகுவதற்கு வாய்ப்பே இல்லாதது.

அன்று குழந்தைகளின் இறந்த உடல்களைப் பார்த்தது சம்பந்தப்பட்ட பிண விசாரணை நடந்தபோது, அவளுடைய வீட்டைச் சுற்றி வசிப்பவர்கள் எல்லாரும் இருந்தார்கள். எல்லாரும் அவளை வெறுப்பதைப் போலத் தோன்றியது. அதைப் பார்த்து எந்தவொரு வருத்தமும் கவுரிக்குத் தோன்றவில்லை. அது மட்டுமல்ல- எதுவுமே தோன்றவில்லை. அந்த வகையில் பக்கத்து வீட்டுக்காரர்கள்கூட இல்லாதவளாக அவள் ஆகிவிட்டாள்.

கிருஷ்ணன் மட்டும் வந்திருந்தான். கவுரி அவனுடன் உள்ள உறவைப் பற்றிய வரலாற்றை நினைத்துப் பார்த்தாள். அவளுடைய கணவன் கோவிந்தனின் நெருங்கிய நண்பனாக கிருஷ்ணன் இருந்தான். அவர்கள் எப்போதும் ஒன்றாகச் சேர்ந்தே இருந்தார்கள். அவன் அவள்மீது கொண்ட காதலை மனதில் மறைத்து வைத்துக் கொண்டு அப்போது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான் என்ற விஷயம் அவளுக்குத் தெரியாது. முதலில் அவளுக்கு சந்தேகம் தோன்றவில்லை. அந்தக் காதலை அவன் வெளிப்படுத்தியதாகவும் ஞாபகத்தில் இல்லை. ஆனால், பின்னால் ஏதோ ஒரு சந்தேகம் தோன்றும். ஒரு மனிதன் மனதிற்குள் காதலை மறைத்து வைத்துக் கொண்டு நடந்து திரிந்ததற்கு

அவள் பொறுப்பா? தெரிந்திருந்து, அவள் அதை ஆதரிக்கவில்லை. ஒருத்தி இன்னொருவனுக்கு மனைவியாக இருக்கும் நிலையில், அவளை இன்னொரு மனிதன் காதலிக்கிறான் என்ற விஷயம் தெரிய வரும்போது, மனதளவில் சலனமடையலாம். ஏனென்றால், அவளுடைய பெண்மையின் விலை அதிகமாகிறதே? அதுகூட கவுரியின் விஷயத்தில் நடக்கவில்லை. எனினும், கவுரியை அவளுடைய கணவன் சந்தேகப்பட்டான். அந்த சந்தேகம் அதிகரித்தது.

அந்தக் குடும்பத்தின் சந்தோஷமற்ற சூழ்நிலை அதிகமானது. அன்று தான் கிருஷ்ணன் சொன்னான்- "நான் காதலிக்கிறேன். ஆனால்...'' என்று. ஊர் முழுவதும் பேசப்படக்கூடிய விஷயமாக அது ஆனது. கோவிந்தன் ஊரை விட்டுக் கிளம்பினான். அதற்குப் பிறகு திரும்பி வரவேயில்லை. பிறகு, கிருஷ்ணனும் கண்களில் படவில்லை. அதற்குப் பிறகு பல விஷயங்களும் நடந்துவிட்டன. இப்போது கிருஷ்ணனைப் பார்க்கிறாள்.

இந்த உலகத்தில் அவள்மீது அன்பு வைத்திருக்கும் ஒரு மனிதன் இருக்கிறான். ஒரே ஒரு மனிதன். அவன்- கிருஷ்ணன். அவன் கூறியிருக்கிறான்:

"நான் காதலிக்கிறேன். ஆனால்...''

கவுரி காதராக்ஷியிடம் சொன்னாள்:

"ம்... ஒரு விஷயத்தைச் சொல்லட்டுமா?''

காதராக்ஷி எழுந்து கதவிற்கு அருகில் சென்றாள். கவுரியிடம் உண்டான மாறுதல்கள் வெளிப்படையாகத் தெரிந்தன. அவளுடைய கண்களுக்கு இப்போது உயிரின் பிரகாசம் இருந்தது. அவள் அசைந்து கொண்டிருக்கிறாள். அந்த மாற்றம் திடீரென்று உண்டானது. காதராக்ஷி கேட்டாள்: "ம்... என்ன விஷயம்?''

கவுரியின் உதடுகளில் ஒரு புன்சிரிப்பின்- இன்னொரு வார்த்தையில் கூறுவதாக இருந்தால் ஒரு பிரகாசத்தின் வெளிப்பாடு பரவி இருப்பதைப் பார்த்தாள். அவளுக்கு சிரிப்பதற்கு ஒரு விஷயம் கிடைத்தது. கெஞ்சுகிற சாயல் குரலில் இருந்தது. அவள் சொன்னாள்: ""ஒரு விஷயத்தை நிறைவேற்றித் தரணும்!''

"என்ன அது?''

கண்காணிப்பாளர் சசிதரன் அருகில் வந்தான். அவன் கேட்டான்:

"அவளுக்கு என்ன வேண்டும்?''

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel