Lekha Books

A+ A A-

வாழ்க்கை அழகானது- ஆனால்... - Page 2

valkai alaganathu - aanal...

லாக் அப் அறையின் இரும்புக் கம்பிகளாலான கதவுக்கு நேர் எதிரில் காவல் நிலையத்தின் வெளி வாசல் இருந்தது. லாக் அப் அறையின் கதவுக்கு அருகில் உட்கார்ந்திருந்தால், சாலையில் போய்க் கொண்டிருப்பவர்களைப் பார்க்கலாம். அவள் அந்த லாக் அப் அறைக்குள் வந்து பல வாரங்களாகிவிட்டன. அன்று அவளுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அந்த சாலையின் வழியாக எவ்வளவு பேர் கிழக்கு நோக்கியும், எவ்வளவு பேர் மேற்கு நோக்கியும் போகிறார்கள் என்பதை கணக்கிட்டுப் பார்க்க வேண்டும் என்று அவள் நினைத்தாள்.

உண்மையாகச் சொல்லப்போனால், யாரையும் ஆச்சரியப்படச் செய்யும் ஒரு விஷயம் அது. அது தான் அவளுடைய நிலைமை.

வேறு எதுவும் செய்வதற்கு இல்லாமல், சிந்திப்பதற்கு எதுவும் இல்லாமல், ஒரு சுவாரசியத்திற்காக பாதையின் அருகில் உட்கார்ந்திருக்கும் போது பாதையின் வழியாக எவ்வளவு பேர் கடந்து போகிறார்கள் என்பதைக் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும் என்று தோன்றியிருக்கலாம். அது அந்த அளவிற்குத் தீவிரமான சிந்தனை இல்லாதவர்களுக்குத்தான் தோன்றும். ஆனால், கவுரியின் நிலைமை அதுவல்ல. அவள் அங்கு எப்படி வந்தாள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? அவள் தன்னுடைய வாழ்க்கையையும் குழந்தைகளின் வாழ்க்கையையும் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக, குழந்தைகளைத் தன்னுடைய உடலுடன் சேர்த்துக் கட்டிக்கொண்டு கடலுக்குள் குதித்தாள். கட்டு அவிழ்ந்து, குழந்தைகள் இறந்துவிட்டார்கள். அவளை அலை கரைக்குக் கொண்டு வந்து சேர்த்துவிட்டது. அந்த இரவிலேயே மேலும் இரண்டு முறை அவள்

தற்கொலை செய்து கொள்வதற்காக முயற்சி செய்தாள். தோல்விதான் கிடைத்தது! மறுநாள் காலையில் குழந்தைகள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்த நிலையில் கடற்கரையில் ஒதுங்கினார்கள். அப்படித்தான் அவள் லாக் அப் அறைக்குள் வந்தாள்.

எல்லாவற்றையும் இழந்துவிட்டு, அந்த இழப்புடனான வாழ்க்கையே வேண்டாம் என்று நினைத்தவள் அவள். அனைத்தையும் இழந்துவிட்டாள். ஆனால், வாழ்க்கை முடியவில்லை. அதற்கான முயற்சி தொடர்ந்தது. அதற்குப் பிறகு முயற்சிக்க முடியவில்லை. அதற்குள் லாக் அப் அறைக்குள் வந்து விட்டாள். அங்கு ஒரு நிம்மதி கிடைத்தது. போலீஸ்காரர்கள் வந்தவுடனேயே குற்றத்தை ஒப்புக் கொண்டதைப் பதிவு செய்துவிட்டார்கள். அப்போது, எந்த ஒன்றுக்காக முயற்சி செய்து தோல்வியடைந்தாளோ, அது நடக்கும் என்ற உறுதி உண்டானதைப் போல அவளுக்குத் தோன்றியது.

அவள் இறக்கலாம். இன்று இல்லாவிட்டால் நாளை- தூக்கில் தொங்கி இறக்கலாம். தான் இறந்தால் போதும் என்று அவள் கூறிய போது, தலைமை கான்ஸ்டபிள் வேலுப்பிள்ளை இப்படிக் கூறினார்:

"சரி... சகோதரி. உன்னால் இந்தக் கவலையைத் தாங்கிக் கொள்ள முடியாது. அதனால் இறப்பதே நல்லது. அதனால்தான் இந்த வாக்கு மூலத்தை நீதிபதியிடம் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் சொன்னோம்!''

நீதிபதிக்கு முன்னால் தவறை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்து முடித்தவுடன், அவளுக்கு உண்மையாகவே ஒரு நிம்மதி உண்டானது.

சில நாட்கள் அவள் லாக் அப் அறையின் ஒரு மூலையில் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தாள். சில நேரங்களில் அங்கேயே சுருண்டு படுத்திருப்பாள். பிறகு இரும்புக் கம்பிகளாலான வாசலுக்கு அருகில் வந்து உட்கார ஆரம்பித்தாள். இன்று பாதையின் வழியாகச்

செல்பவர்கள் எவ்வளவு பேர் என்பதைக் கணக்கிட்டுப் பார்ப்போம் என்று தோன்றியது. அந்த எண்ணம் ஆச்சரியப்பட வைக்கும் ஒன்றுதானே?

ஒருவேளை, அது உயிரின் ஒரு தனிப்பட்ட குணமாக இருக்கலாம். மிகப் பெரிய சுமையைத் தாங்கிக் கொண்டு நீண்ட நேரம் இருப்பதற்கு உயிரால் முடியாது. மரண நாள் முடிவு செய்யப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவனுக்கு இடையில் அவ்வப்போது சாதாரண அறிவு தோன்றும். இல்லாவிட்டால் மரணம் வரை போக முடியாது. மனிதனுக்கு மரணத்தைப் பார்த்தால் பயம். மரணமடைவோம் என்ற விஷயம் எல்லாருக்கும் தெரியும். எனினும், மனிதன் சிரித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் ஏன் இருக்கிறான்? அதுதான் உயிரின் இயல்பு.

லாக் அப் அறையின் மூலையிலிருந்து இரும்புக் கம்பிகளாலான வாசலுக்கு அருகில் வந்து உட்கார்ந்தபோது, அவள் இரும்புக் கம்பிகளின் வழியாகப் பரந்த உலகத்தைப் பார்த்தாள். அந்தக் கூட்டத்தில் அவள் ஏற்கெனவே பார்த்திருப்பவர்களும் இருக்கலாம். அறிமுகமானவர்களும் நன்கு பழகியவர்களும்... அறிமுகமானவர்கள் எங்கு போகிறார்கள் என்பதை அவள் நினைத்துப் பார்க்கலாம். நன்கு பழகியவர்களிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்று நினைக்கலாம். அந்த வகையில் வாழ்க்கையுடன் மீண்டும் தொடர்பு கொண்டபோது, மனிதர்கள் அந்தச் சாலையின் வழியாக எதற்குப் போகிறார்கள் என்பதைப் பற்றி சிந்தித்திருக்கலாம். செய்வதற்கு எதுவும் இல்லாத காரணத்தால், கணக்கிட்டுப் பார்ப்போம் என்று தோன்றியது.

அவள் கணக்கிட ஆரம்பித்தாள். ஒன்று... இரண்டு... மூன்று... நான்கு... பிறகு, நான்கு பேர் ஒன்றாக... பதினொன்று... பன்னிரண்டு! அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக ஏழுபேர் வீதம் இரண்டு கூட்டம்!

ஓ.... தவறுகிறது! இல்லை... சரி பண்ணினாள்.

அந்த லாக் அப் அறைக்குள் இரண்டு அறைகள் இருந்தன. ஒன்றில் பதினேழு திருட்டு வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் ஒருவனும் கொலை செய்ய முயற்சித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவனும் இருக்கிறார்கள். இன்னொரு அறையில் கவுரி இருக்கிறாள். கவுரியின் அறையின் கதவுக்கு வெளியே போடப்பட்டிருந்த ஒரு ஸ்டூலில் கவுரிக்காக நியமிக்கப்பட்டிருந்த ஒரு பெண் கான்ஸ்டபிள் உட்கார்ந்திருக்கிறாள். அவளுடைய பெயர் காதராக்ஷி. காதராக்ஷி கண்காணிப்பாளனாக இருக்கும் சசிதரனுடன் உரையாடிக் கொண்டிருக்கிறாள்.

இன்ஸ்பெக்டரோ ஏட்டுக்களோ வேறு போலீஸ்காரர்களோ யாரும் அங்கே இல்லை. அலுவலக அறையில் ரைட்டரும் ஒரு போலீஸ்காரரும் மட்டும் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அடக்கப்பட்ட ஒரு சிரிப்பு... காதராக்ஷிதான் சிரித்தாள். கிச்சுக்கிச்சு மூட்டப்பட்டு உண்டானதைப் போல இருந்தது. சசிதரன் என்னவோ சொன்னான்... கவுரி எண்ணிக் கொண்டிருந்தாள்.

"ஓ! என்ன இது?''

காதராக்ஷி கேட்டாள். உண்மையாகவே கவுரி அதைக் கேட்டிருப்பாள்.

ஒரு மனிதன் சாலையில் வெளி வாசலுக்கு அருகில் உள்ளே பார்த்தவாறு நடந்து போய்க் கொண்டிருக்கிறான். அவன் எண்பத்து ஏழாவது ஆள். அவன் காவல் நிலையத்திற்குள் யாரையோ பார்க்க விரும்புகிறான். கவுரியின் கழுத்து சற்று நீண்டது. அந்த மனிதனை அவளுக்குத் தெரியும் போலத் தோன்றுகிறது. அவளுக்கு ஏதோ ஒரு விதத்தில் ஈடுபாடு உள்ள மனிதனாக இருப்பானோ என்ற சந்தேகம்

உண்டானது. கவுரியின் எண்ணிக்கை தவறியது. கொஞ்சம் மனிதர்கள் கூட்டமாகக் கடந்து சென்றார்கள். அவளுடைய கவனமும் சிதறியது.

"எனக்கு விருப்பம்தான்... ஆனால்...''

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel