Lekha Books

A+ A A-

வாழ்க்கை அழகானது- ஆனால்... - Page 7

valkai alaganathu - aanal...

அப்போது அந்த ஆண் பணம் உள்ளவளும் இளம் வயதைக் கொண்டவளுமான ஒருத்தியை ஜாதி முறைப்படி திருமணம் செய்து கொண்டான். குட்டி பிசாசாக மாறிவிட்டாள். அவனுடைய வீட்டிற்கு நெருப்பு வைத்தாள். குட்டி சிறைக்குள் கொண்டு வரப்பட்டாள். வெளியே வந்த அடுத்த நாளே மீண்டும் நெருப்பு வைத்தாள். அதைத் தொடர்ந்து வந்திருக்கிறாள். இது அவள் கூறிய கதைதான்.

குட்டி சொன்னாள்:

"நான் அப்படி இருக்க அவர்களை விடமாட்டேன். அது மட்டும் உண்மை.''

அதைக் கூறியபோது குட்டியின் முகம் கவனிக்கக் கூடிய ஒன்றாக இருந்தது. அவள் ஒரு அரக்கியைப் போல இருந்தாள். அவளுக்கு முன்னால் நிற்கும்போது பயமாக இருக்கும். யாரைப் பழி வாங்க வேண்டும் என்று நினைக்கிறாளோ, அந்த ஆள்தான் அவளுக்கு

முன்னால் நின்று கொண்டிருக்கிறான் என்று அவள் நினைப்பதைப் போல தோன்றும். கவுரி பயந்து போய்விட்டாள்.

குட்டி கவுரியிடம் கேட்டாள்:

"நீங்கள் என்ன செய்தீங்க?''

கவுரி சொன்னாள்:

"நான் என் குழந்தைகளைக் கொன்னுட்டேன்.''

குட்டி அதிர்ச்சியடைந்து விட்டாள். அவள் தன்னுடைய வட்டக் கண்களை உருட்டி கவுரியையே வெறித்துப் பார்த்தவாறு ஒரு சிலையைப் போல நின்று விட்டாள். முன்னால் ஒரு வினோதமான உயிர் உட்கார்ந்திருப்பதைப் போல தோன்றியது.

இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், வாழ்க்கையில் முதல் முறையாக குழந்தைகளைக் கொன்ற தாயை குட்டி பார்க்கிறாள்.

அடக்க முடியாமல் குட்டி கேட்டாள்:

"அய்யோ... நீங்கள் ஏன் அதைச் செய்தீங்க?''

உணர்ச்சியற்ற நிலையில் கவுரி சொன்னாள்:

"அதைச் செய்துட்டேன்.''

பிறகு கவுரி தொடர்ந்து சொன்னாள்:

"அதற்குப் பிறகு நான் சாக முயற்சித்தேன். முடியல.''

குட்டிக்கு சிறிது நிம்மதி உண்டானதைப் போல இருந்தது. அவள் சற்று நிம்மதிப் பெருமூச்சை விட்டாள். மேலும் சில விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கு குட்டி ஆர்வமானாள்.

அவள் கேட்டாள்:

"குழந்தைகளின் தந்தை அதைப் பற்றி விசாரிக்கலையா?''

ஒரே வார்த்தையில் பதில் கூறக்கூடிய கேள்வி அல்ல அது. அவன் தீவிரமாக விசாரித்துக் கொண்டிருந்தவன்தான். ஆனால், உதறிவிட்டுப் போய்விட்டான். எல்லாவற்றையும் சேர்த்துக் கூறுவதற்கு கவுரியால் முடியாது.

பதில் கிடைக்காமல் போகவே, குட்டி இன்னொரு கேள்வியைக் கேட்டாள்.

"இல்லாட்டி... குழந்தைகள் உண்டான பிறகு, அந்த ஆள் வேறு பெண் யாரையாவது தேடிப் போயிட்டானா?''

குட்டி அதற்கு மேலும் ஏதோ கூற நினைத்தாள்.

"இந்த ஆண்கள் என்று கூறப்படுபவர்களே அப்படித்தான்.''

அதற்குப் பிறகும் பதில் கிடைக்காமல் போகவே, குட்டி ஒரு கேள்வியை நேரடியாகவே கேட்டாள்:

"இல்லாவிட்டால் உங்களுக்கு ஏதாவது பிரச்சினை உண்டாகிவிட்டதா?''

அதற்கு உடனடியாக பதில் வந்தது.

"நான் நெறிமுறை எதையும் விடவில்லை. என்னுடைய கழுத்தில் தாலி கட்டியவனுக்கு நம்பிக்கைக்குரியவளாகத்தான் இருந்தேன்.''

சிறிது நேரம் சிந்தனையில் முழ்கி விட்டு, கவுரி சொன்னாள்:

"இன்னொரு ஆள் என்னை விரும்பினார். எனக்குத் தெரியாது. எனக்கு அந்த ஆள்மீது காதல் இல்லை. அந்த மனிதரின் மனதில் காதல் இருந்தது என்றால், அது என்னுடைய குற்றமா?''

"இல்லை'' என்று குட்டி சொன்னாள்.

"பிள்ளைகளின் அப்பா எங்களை விட்டுட்டுப் போய்விட்டார். நான் அவருக்காகக் காத்திருந்தேன். வரவில்லை. நானும் பிள்ளைகளும் யாருமே இல்லாதவர்களாக ஆகிவிட்டோம். அதற்கு மேலே முடியல அக்கா... வாழ முடியல. ஒரு துணை இல்லாமல் எப்படி வாழ முடியும்? நான் ஒரு தவறும் செய்யல...''

அந்தக் கதையில் எங்கேயோ ஒரு கண்ணி விட்டுப் போய் விட்டதைப் போல குட்டிக்குத் தோன்றியது. அவள் கேட்டாள்: "அந்த மனிதன் எங்கே?''

"அந்த மனிதர் என்னிடம் வாய்விட்டுப் பேசியதுகூட இல்லை. பிள்ளைகளின் தந்தை போன பிறகு அந்த ஆளை சமீபத்தில்தான் பார்த்தேன். என்னைப் பார்ப்பதற்காக அந்த ஆள் இங்கே வந்தப்போ, என்னைப் பார்க்கவே பயப்பட்டதாக அவர் சொன்னார்.''

இவையெல்லாவற்றையும் கூறிய பிறகும், குட்டிக்கு கவுரிமீது மனப் பூர்வமாக பரிதாப உணர்ச்சி உண்டாகவில்லை. அவள் தற்கொலை செய்வதற்கு முயற்சித்தவளாக இருந்தாலும், பிள்ளைகளைக் கொன்றவள். ஆனால் அதிர்ஷ்டமே இல்லாத ஒருத்தி. அவள் இரக்கத்திற்கு உரியவள்தான். குட்டி இரக்கமே இல்லாமல் சொன்னாள்:

"நீங்கள் என்ன கூறினாலும், உங்களிடம் என்னவோ பிரச்சினை இருக்கு. அது மட்டும் உண்மை."

எனினும், அவர்கள் ஒன்றாக அந்த அறைக்குள் சில நாட்கள் இருந்தபோது, ஒருவரையொருவர் மேலும் அதிகமாகத் தெரிந்து கொண்டார்கள். அங்கு அவர்களுடைய விருப்பங்கள் ஒன்றாக இருந்தன. ஒருத்திக்கு இன்னொருத்தி ஆறுதல் கூறினாள்.

"உர்" என்று முகத்தை வைத்துக் கொண்டிருக்கும் சிசிலியும், கெட்டவரான வேலுப்பிள்ளையும் இரண்டு பேருக்கும் எதிரிகளாக இருந்தார்கள்.

குட்டியும் கவுரியும் பேசிக் கொண்டிருந்தபோது, சிசிலி முகத்தைச் சுளித்துப் பார்த்துக் கொண்டிருப்பாள். சிசிலிக்கு அவர்கள்மீது வெறுப்பு. ஒருநாள் சிசிலி கேட்டாள்:

"இப்படி விடாமல் பேசிப் பேசி நாக்கு வலிக்கலையா?''

குட்டி பதில் சொன்னாள்:

"உங்களுக்கு கோபம் வருகிற அளவிற்கு நாங்கள் என்ன சொல்லிவிட்டோம்? உங்களுடைய விஷயம் எதையாவது பேசிட்டோமா?''

சிசிலிக்கு கோபம் வந்துவிட்டது. முழுமையான கோபத்துடன் அவள் சொன்னாள்:

"நீங்க யாரிடம் இப்படி வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருக்கீங்கன்னு தெரியுதா?''

காதராக்ஷியை ஒரு ஆபத்தில் கொண்டு போய்விட்டுவிட்டதற்காக, சிசிலிக்கு இந்த அளவிற்குக் கோபம் வந்தது. எனினும், கவுரி ஒருத்தியை வெறுக்க கற்றுக் கொண்டாள். குட்டி அதைக் கற்றுக் கொடுத்தாள்.

சில நாட்களில் கவுரியின் வாழ்க்கை நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. இதற்கு முன்பும் மூன்று நான்கு வாய்தாக்கள் வாங்கப்பட்டன. அன்றே குட்டியின் வழக்கும் வந்தது. முதலில் அழைத்ததே கவுரியின் வழக்குதான். அவள் கூண்டில் போய் நின்றாள். அப்போது நீதிமன்ற பிராசிக்யூஷன் தரப்பிற்கு ஒரு கட்டளை இடப்பட்டது.

"அடுத்த வாய்தாவில் வழக்கின் விசாரணை ஆரம்பமாக வேண்டும். குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நபர் கஸ்டடியில் இருக்கிறாள்.''

ப்ராசிக்யூட்டர் அதற்கு ஆங்கிலத்தில் ஏதோ பதில் சொன்னார்.

வழக்கு இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அடுத்த வழக்கு குட்டியின் வழக்காக இருந்தது. அந்த வழக்கிலும் நீதிமன்றம் பிராசிக்யூட்டரிடம் கட்டளையிட்டது.

"இந்த வழக்கிலும் அடுத்த விசாரணையின்போது சாட்சிகளை ஆஜர்படுத்த வேண்டும்.''

ப்ராசிக்யூட்டர் அதற்கு பதிலாக என்னவோ கூற ஆரம்பித்தபோது, குட்டி உரத்த குரலில் சொன்னாள்:

"தங்க எஜமானே! எனக்கு இந்த மொழி தெரியாது. மலையாளத்தில் சொல்லுங்க!''

ப்ராசிக்யூட்டர் என்ன கூறினார் என்பதை நீதிமன்றம் குட்டியிடம் கூறியது:

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel