Lekha Books

A+ A A-

வாழ்க்கை அழகானது- ஆனால்... - Page 4

valkai alaganathu - aanal...

காதராக்ஷிதான் பதில் சொன்னாள். காதராக்ஷி காதலி ஆயிற்றே!

"ம்... இப்போ தெரிஞ்சு என்ன ஆகப் போகுது?''

துப்பாக்கியைத் தோளில் வைத்துக் கொண்டு நின்று கொண்டிருக்கும் அந்தக் காதலன் சொன்னான்:

"எனக்கு அதைத் தெரிந்து கொள்வதற்கு உரிமை இருக்கிறது!''

"ஆனால், இப்போ சொல்ல மாட்டேன்.''

தொடர்ந்து காதராக்க்ஷி கண்காணிப்பாளனின் உரிமையைக் கேள்வி கேட்கும்படி கவுரியிடம் சொன்னாள்.

"நீங்க இப்போ சொல்ல வேண்டாம். அதிகாரம் உள்ளவர்கள் அறிந்து கொள்ளட்டும்!''

சசிதரன் உண்மையான கண்காணிப்பாளனாக மாறி துப்பாக்கியைத் தோளில் வைத்துக் கொண்டு அங்குமிங்குமாக நடந்தான்.

வெளியே இருந்த அந்த ஆணை சிறிது நேரத்திற்குக் காணவேயில்லை. அவன் போய் விட்டானோ? கவுரியின் உள் மன ஆர்வம் அதிகரித்தது.

அந்தப் பக்கத்தில் காதலனும் காதலியும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். கவுரி கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்:

"கொஞ்சம் வாங்களேன்... ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லணும்.''

சசிதரன் அனுமதி அளித்தான்.

"அவளுக்கு என்ன வேணுமோ, அதைச் செய்து கொடு!''

தொடர்ந்து அவன் மீசையைத் தடவினான். காதராக்ஷி வாயை மூடிக் கொண்டு குனிந்தவாறு சொன்னாள்:

"உத்தரவு.''

அதற்குப் பிறகும் கிருஷ்ணன் வெளி வாசலில் தோன்றி மறைந்தான். காதராக்ஷி புடவைத் தலைப்பைக் கொண்டு முகத்தைத் துடைத்தாள். அதாவது- காதலியின் புன்சிரிப்பையும் முக சிரிப்பையும் துடைத்து மாற்றினாள்.

அவள் கவுரியிடம் கேட்டாள்:

"என்ன விஷயம்?''

கவுரி சொன்னாள்:

"எனக்கு ஒரு உதவியைச் செய்து தரணும். அந்த வெளி வாசலில் ஒரு மனிதர் நின்று கொண்டிருக்கிறார். அவரை நான் பார்க்கணும். அவ்வளவுதான்!''

காதராக்ஷி அந்த திசையில் பார்த்தாள். ஒரு மனிதன் சாலையில் அந்த திசையில் நடந்து கொண்டிருந்தான். அவன் வெளி வாசலுக்கு அருகில் வந்து ஒரு நிமிடம் நின்றான். பிறகு நடையைத் தொடர்ந்தான்.

கவுரி சொன்னாள்:

"அதோ அந்த ஆள்தான்.''

காதராக்ஷி கேட்டாள்:

"அந்த ஆள் உனக்கு என்ன வேணும்?''

கவுரி பதில் கூறவில்லை. அவன் அவளுக்கு யார்? அவளை இந்த நிலைமைக்குக் கொண்டு வருவதற்கு மூலகாரணமாக இருந்தவனா? அப்படிக் குறிப்பிடலாமா?

காதராக்ஷி கேள்வியை மீண்டும் கேட்டாள்:

"அந்த ஆள் யார்?''

"என்மீது விருப்பம் வைத்திருக்கும் ஒரு ஆள்!''

அந்த பதில் சற்று வெட்கத்துடன் இருந்தது.

வேதனையுடன் பெற்றெடுத்த குழந்தைகளை கடலில் வீசி எறிந்து கொன்று அதிக நாட்கள் ஆகவில்லை. உப்பு நீரில் மிதந்து வந்த அந்தப் பிள்ளைகளின் இறந்த உடல்கள் அழுகக்கூட இல்லை. அவளுடைய கழுத்தில் சுருக்கு விழுந்து உண்டான அடையாளம் மறையக்கூட இல்லை. அவள் குற்றத்தை ஒப்புக் கொண்ட கொலைகாரி. தூக்குக் கயிறு அவளை அழைக்கிறது. அவளுக்கு தான் விரும்பும் மனிதனைக் காண வேண்டும்!

இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், வாழ வேண்டும் என்ற ஆசை அவளிடம் உண்டாகி இருக்க வேண்டும்.

அந்த மனிதனை அழைத்துக் கொண்டு வருவது என்பது காதராக்ஷிக்கு அதிகாரம் உள்ள ஒரு விஷயம் அல்ல. அவன் அவளுக்கு பிரியமானவனாக இருக்கலாம். அவர்களை சந்திக்க வைத்தால் நல்லதுதான் என்று அவளும் நினைத்தாள்.

கவுரி கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்:

"எனக்கு அந்த மனிதரிடம் கேட்பதற்கு எவ்வளவோ கேள்விகள் இருக்கின்றன. கொஞ்சம் அழையுங்களேன்!''

அது இறுதி கெஞ்சலைப் போல இருந்தது. காதராக்ஷியால் மறுக்க முடியாது.

சிறிது நேரத்திற்கு காதராக்ஷி எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தாள். பிறகு அவள் வெளிவாசலை நோக்கி நடந்தாள். எங்கு போகிறாய் என்று கண்காணிப்பாளன் கேட்டான். காதராக்ஷி பேசவில்லை. கிருஷ்ணன் அங்கே நின்றிருந்தான். அவன் கவுரியைப் பார்ப்பதற்குத்தான் வந்திருந்தான்.

சசிதரனும் காதராக்ஷியும் சேர்ந்து பல விஷயங்களையும் கூறி, கிருஷ்ணனை முதலில் ரைட்டரின் அறைக்கு அழைத்துக் கொண்டு சென்றார்கள். ரைட்டர் சில விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். பிறகு அவர் சொன்னார்: "லாக் அப்பில் இருக்கும் ஆளைப் பார்ப்பதற்கு சட்டம் அனுமதிக்கவில்லை!''

ரைட்டருடன் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்த கான்ஸ்டபிள், கிருஷ்ணனை அழைத்து அந்தப் பக்கமாகக் கொண்டு சென்றார். அது எதற்கு என்பது தெரிந்ததுதானே! கிருஷ்ணன் நேராக கவுரியின் அறை வாசலை நோக்கிச் சென்றான்.

2

சிறிது காலமாகவே அந்த காவல் நிலையத்தில் பணி செய்பவர்கள் ஒருவரோடொருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு ஆள் தவறு செய்துவிட்டால், அவனுக்கு துரோகம் செய்வதற்கு இரண்டு பேர் முயற்சி செய்வதைப் பார்க்கலாம். ரைட்டருக்கும் வேலுப்பிள்ளைக்குமிடையே சரியான உறவு இல்லாமலிருந்தது. சசிதரனின் ஒரு பெரிய எதிரியே வர்க்கீஸ் என்ற கான்ஸ்டபிள்தான்.

அந்த வகையில் எல்லாருக்கும் எதிரிகள் இருந்தார்கள். கிருஷ்ணன் வந்ததையும் கவுரியைப் பார்த்ததையும் கிருஷ்ணனிடமிருந்து பத்து ரூபாய் பெற்று, அப்போது காவல் நிலையத்தில் இருந்தவர்கள் பிரித்தெடுத்ததையும் வர்க்கீஸ் தெரிந்து கொண்டான். வர்க்கீஸ் வேலுப்பிள்ளையின் ஆள். ரைட்டரை அடிப்பதற்கு ஒரு கொம்பு வேலுப்பிள்ளைக்குக் கிடைத்தது. வர்க்கீஸுக்கு சசிதரனை வேதனைப் படுத்துவதற்கும். வேலுப்பிள்ளையின் பொறுப்பில் இருக்கும் ஒரு வழக்கு அது. அது சம்பந்தப்பட்ட விஷயத்தில் பெரிய பிரச்சினை எதுவும் இல்லை என்று நினைத்துக் கொண்டு வேலுப்பிள்ளை வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார். அப்போதுதான் ஒரு புதிய கதாபாத்திரம் வந்து தோன்றுகிறது. விசாரணை சமயத்தில் கிருஷ்ணன் என்ற ஒரு ஆள் இருக்கிறான் என்ற விஷயம் வேலுப் பிள்ளைக்குத் தெரியாமல் இருந்தது. இந்த கிருஷ்ணன் இனிமேலும் வழக்கைப் பற்றி சர்ச்சை செய்வதற்கும் தொந்தரவுகள் உண்டாக்குவதற்கும் வருவானோ என்பதுதான் வேலுப்பிள்ளையின் பயமாக இருந்தது.

எது எப்படி இருந்தாலும் ரைட்டரும் சசிதரனும் சேர்ந்து ஒரு மனிதனை, லாக் அப்பில் இருக்கும் கவுரி என்ற குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பெண்ணைப் பார்ப்பதற்கு அனுமதித்தார்கள் என்ற குற்றச்சாட்டு அதிகார பீடத்தில் போய்ச் சேர்ந்தது. அவர்களிடம் விளக்கம் கேட்டு விசாரணையும் உண்டானது.

மிகவும் ஆழமான ஒரு குற்றம் அது. வேலைகூட போனாலும் போகலாம். லஞ்சம் வாங்கினார்கள் என்றும் குற்றச்சாட்டு இருந்தது. டி.எஸ்.பி. ஒரு கண்டிப்பான ஆள். இன்ஸ்பெக்டர் எதிலும் பிடிப்பே இல்லாத ஒரு ஆள். காதராக்ஷி மாட்டிக் கொண்டு தவித்தாள். அவள் மூலம்தானே அந்த விபரீதமான செயலே நடந்தது! சசிதரனின் தொப்பி போனது மாதிரிதான் என்று வர்க்கீஸ் கூறிக் கொண்டு திரிந்தான்.

ரைட்டரும் சசிதரனும் கான்ஸ்டபிள் பப்புவும் கிருஷ்ணன் என்ற ஒரு ஆள் வரவே இல்லை என்றும், குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் தெரிவித்திருந்தார்கள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel