Lekha Books

A+ A A-

வாழ்க்கை அழகானது- ஆனால்... - Page 5

valkai alaganathu - aanal...

அப்போது கவுரி, லாக்கப்பில் இருக்கும் ஆட்கள் ஆகியோரின் வாக்குமூலங்கள்தான் முக்கியமான ஆதாரங்களாக இருந்தன. சசிதரன், ரைட்டர் ஆகியோரின் விளக்கங்களைப் பற்றிய சுருக்கத்தைத் தெரிந்தவுடனேயே, வேலுப்பிள்ளை கவுரியைப் போய் பார்த்தார்.

கிருஷ்ணன் என்ற மனிதன் யார் என்று வேலுப்பிள்ளை கவுரியிடம் கேட்டார். அவள் வாயையே திறக்கவில்லை. அவளுடைய அடி முதல் முடி வரை பார்த்தபோது, ஒரு விஷயத்தை வேலுப் பிள்ளையால் உணர முடிந்தது. மரணத்தைத் தழுவினால் போதும் என்று முன்பு விரும்பிய கவுரி அல்ல அவள். அவளுக்கு வாழ வேண்டும் என்ற ஆசை இருந்தது.

வேலுப்பிள்ளை கேட்டார்.

"நீ வாழ வேண்டும் என்று விரும்புகிறாயா?''

ஆரம்ப நாட்களாக இருந்தால், அந்தக் கேள்விக்கு உடனடியாக பதில் கிடைத்திருக்கும்.

"இல்லை.''

இன்று "இல்லை" என்று கூற மாட்டாள். "ஆமாம்" என்றும் கூற மாட்டாள். வாழ முடியுமா என்று அவள் சந்தேகப்படுகிறாள். வாழ வேண்டும் என்ற ஆசை வாழ்வதற்கான சக்தியாக மாறியிருக்கவில்லை. அவ்வளவுதான். வேலுப்பிள்ளை அந்த வாழ வேண்டும் என்ற ஆசையை ஊதி விளையாட முயற்சித்தார்.

"நடந்தவையெல்லாம் நடந்து விட்டன. இனிமேல் அவற்றையெல்லாம் மறந்து விடு. அந்தக் குழந்தைகள் உடம்புக்கு முடியாமல் இறந்து விட்டார்கள் என்று வைத்துக் கொள்.''

கவுரியின் கண்கள் நிறைந்துவிட்டன. அவள் குழந்தைகளை நினைத்திருக்கலாம். வேலுப்பிள்ளை தொடர்ந்து சொன்னார்:

"குழந்தைகளுக்கு பொதுவாக உடல்நலக்கேடு வருவதற்குக் காரணமே தாய்மார்களின் கவனக் குறைவுதான். அந்த வகையில் குழந்தைகள் இறந்துவிட்டால், தங்களால்தான் அவர்கள் இறந்து விட்டார்கள் என்று தாய்மார்கள் நினைக்க ஆரம்பித்து விடுவார்கள்.''

அவளுடைய கண்களிலிருந்து ஒரு துளி நீர் அரும்பி விழுந்தது. அவர் தொடர்ந்து சொன்னார்:

"எல்லாம் விதிதான். யார் நினைத்தாலும், விதியின் போக்கை மாற்ற முடியாது. அந்தக் குழந்தைகளுக்குக் கிடைத்த வாழ்க்கையே அவ்வளவுதான். அந்த இடத்தில் அந்த வாழ்க்கை முடிய வேண்டும் என்று இருக்கிறது. நீ நினைத்திருந்தாலும், வேறு மாதிரி நடந்திருக்காது!''

கவுரியின் மனதிற்குள் நெருப்புப் பொறிகள் அணைய ஆரம்பித்தன. இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், அதுதான் வேலுப்பிள்ளைக்குத் தேவை என்றுகூட இருக்கலாம். அவர் ஒரு போலீஸ்காரர். எப்படி ஆட்களை அணுகுவது என்பதைப் பற்றிய சில வழிமுறைகளும் தெரியும். எது எப்படி இருந்தாலும், அவள் மரத்துப் போன நிலையில் இருந்து சற்றுவிடுபட்டாள். சாதாரண பெண்கள் ஆறுதலாகக் கூறக் கூடிய விஷயங்களை அவர் கூறினார். அவளுடைய மனதைத் தேற்றுவதில் ஈடுபட்ட முதல் மனிதரே அவர்தான்.

வேலுப்பிள்ளை தொடர்ந்து சொன்னார்:

"நீ உன்னுடைய குழந்தைகள்மீது பாசம் வைக்காமல் இருந்தாயா என்ன? இல்லை. அன்றும் நீ அவர்களைத் தேய்த்து குளிப்பாட்டியதாகவும், பொட்டு வைத்துவிட்டதாகவும் கூறுகிறாய். அவர்கள் வளர்ந்து பெரியவர்களாக ஆவதை நீ மனதில் கற்பனை பண்ணிக் கொண்டு தானே இருந்தாய்? பிறகு ஏன் இப்படி நடந்தது?''

வேலுப்பிள்ளை ஒரு கேள்வியை அவளைப் பார்த்து எறியவில்லை. தன்னைப் பார்த்தே கேட்டுக் கொண்டார். பதிலும் கூறிக் கொண்டார்.

"விதி... விதியைத் தவிர வேறு என்ன? உன்னுடைய கைகளால் அது நடக்கணும்னு இருக்கு!''

கவுரி குலுங்கிக் குலுங்கி அழுதாள். வேலுப்பிள்ளை அவளைத் தேற்றினார்.

"நான் அழுவதற்காக இவை எதையும் கூறவில்லை. அழுவதால் பயனில்லை என்பதைச் சொல்ல வர்றேன்.''

தன்னுடைய திட்டம் வழி தவறி விட்டதோ என்று வேலுப்பிள்ளை பயந்தார். இனிமேலும் தான் இறந்தால் நல்லது என்று அவள் நினைக்கலாம். அவளுக்கு வாழ வேண்டும் என்ற ஆசை இல்லாமற் போனால், நினைத்த காரியம் நடக்காமல் போய்விடும்.

வேலுப்பிள்ளைக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஆனால், திடீரென்று ஒரு வழியைக் கண்டுபிடித்தார்.

"மறந்துவிடு. எல்லாவற்றையும் மறந்துவிடு. தெய்வம் அந்த அளவிற்குக் கருணை இல்லாதவன் இல்லை!''

இல்லை... அது மட்டும் போதாது. வேலுப்பிள்ளை விடவில்லை.

"உனக்கு வயது மிகவும் குறைவு. ஒரு நல்ல கணவன் கிடைக்காமல் போகமாட்டான்.''

அதிர்ஷ்டமே இல்லாமலிருந்த சில பெண்களுக்கு நல்ல காலம் வந்த கதையை வேலுப்பிள்ளை விளக்கிச் சொன்னார். கொலைகாரியான ஒரு பெண் விடுதலையான பிறகு நல்ல நிலைமைக்கு வந்தாள். ஒரு திருடியாக இருந்தவள் இன்று நல்ல இல்லத்தரசியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவர்களை வழக்கிலிருந்து தப்பித்துச் செல்வதற்கு வேலுப்பிள்ளை உதவவும் செய்திருக்கிறார்.

"மறந்து விடு... கவுரி, மறந்து விடு. நான் உன்னை இந்த வழக்கிலிருந்து தப்பிக்க வைக்கிறேன். பாரு... இந்த தென்னையும் மாமரங்களும் வாழையும் உள்ள உலகம் எந்த அளவிற்கு அழகாக இருக்கிறது! இந்த உலகத்தைத் திட்டாதே. மனிதர்களும் நல்லவர்கள்தான்!''

தொடர்ந்து அவர் சொன்னார்:

"உனக்கு நல்லது வர்றதுக்குத்தான், இந்த கெட்டதே நடந்திருக்கு.''

வேலுப்பிள்ளை இறுதியாகச் சொன்னார்:

"நான் உன்னை தூக்கு மரத்தில் தொங்கவிடமாட்டேன். அது மட்டும் உண்மை.''

அன்று அந்த இடத்திலேயே நிறுத்திக் கொள்வதுதான் நல்லது என்று தோன்றவே, வேலுப்பிள்ளை நகர்ந்தார்.

வேலுப்பிள்ளையைப் போலவே வேலுப்பிள்ளையின் எதிரிகளும் கவுரியை நம்பியே இருக்க வேண்டிய நிலையில் இருந்தார்கள். கிருஷ்ணன் என்ற ஒரு மனிதன் இல்லவே இல்லை என்றும், அப்படிப்பட்ட ஒரு ஆள் தன்னைப் பார்ப்பதற்கு வரவே இல்லை

என்றும் அவள் வாக்குமூலம் கொடுக்க வேண்டும். அப்படியென்றால்தான் சசிதரன் தப்பிக்க முடியும்.

காதராக்ஷி தன்னுடைய காதல் கதையை எதையும் மறைக்காமல் கவுரியிடம் கூறினாள். கவுரி மிகவும் கவனித்து அதைக் கேட்டாள். புரிந்து கொண்டாள். அந்தக் காதல் கதையில் குறிப்பிட்டுக் கூறுகிற மாதிரி எதுவும் இல்லை. எனினும், காதல் கதையைக் கேட்பது என்பது மிகவும் சுவாரசியமான ஒரு விஷயமாயிற்றே! அந்தக் காதல், நிறைவேறும் அதிர்ஷ்டம் இல்லாதது என்ற ஏமாற்றத்துடன் காதராக்ஷி கூறி நிறுத்தினாள்.

கவுரி கேட்டாள்:

"என்ன காரணம்?''

"நாங்க பணியில் இருக்குறப்போ திருமணம் செய்யக்கூடாது.''

கவுரி ஆர்வத்துடன் கேட்டாள்:

"அப்படின்னா...?''

"நாங்கள் எப்போதும் இப்படிக் காதலித்துக் கொண்டு மட்டுமே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் வேலையை விடணும்.''

கவுரி சொன்னாள்:

"அப்படின்னா, அந்த வேலையை உதறிவிட்டுடுங்க.''

காதராக்ஷி சொன்னாள்:

"நாங்கள் அதைப் பற்றி சிந்தித்தோம். என்னுடைய வேலையை ராஜினாமா பண்ணிட்டு, திருமணம் செஞ்சிக்கணும்னு...''

"பிறகு என்ன?''

"இப்போ இரண்டு பேருக்குமே வேலை இல்லாமற் போகிற நிலைமை!''

கவுரி மேலும் ஆர்வம் கொண்டவளாக ஆனாள். அன்று கவுரியைப் பார்ப்பதற்காக கிருஷ்ணனுக்கு வசதிகள் உண்டாக்கிக் கொடுத்ததிலிருந்து உள்ள கதை முழுவதையும் காதராக்ஷி விளக்கிச் சொன்னாள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

மரணம்

மரணம்

May 23, 2012

நிலவு

நிலவு

April 2, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel