Lekha Books

A+ A A-

மந்திரப் பூனை - Page 14

mandhira-poonai

அவரின் தலைக்கும் பாலத்திற்கும் நான்கு விரல் தூரம்தான். நான் மேலே ஏறி உட்கார்ந்து விவரத்தைச் சொன்னேன். அப்போதே என்னை வீட்டில் கொண்டு விடுவதாக அவர் சொன்னார். “வேண்டாம். அதிகாலையில போனா போதும்'' என்றேன் நான். பெட்டியைத் திறந்து பழங்களையும், ஆரஞ்சுப் பழங்களையும் வெளியே எடுத்தேன். நாங்கள் கொஞ்சம் சாப்பிட்டோம். அவர் ஒரு குப்பியில் சுத்தமான நீர் பிடித்து வைத்திருந்தார். அதைத் தந்தார். இருவரும் குடித்தோம். "தேநீர் போடலாம்” என்றார் அவர். நான் கொஞ்சம் சர்க்கரையும், தேயிலையும் எடுத்துத் தந்தேன். நாங்கள் ஆளுக்கு ஒரு பீடியைப் பிடித்தோம். சில நிமிடங்கள் என்னென்னவோ விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். படுத்தவாறுதான். அவர் வெறும் நிலத்தில் கையைத் தலைக்கு வைத்தவாறு படுத்திருந்தார். நான் சட்டையும் வேஷ்டியும் கட்டிக் கொண்டு, பெட்டியைத் தலைக்கு வைத்திருந்தேன். அவருக்கு ஒரு ஜமுக்காளமும், போர்வையும் வாங்கிக் கொடுத்தால் என்ன என்று அப்போது நினைத்தேன். மெழுகுவர்த்தி பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. சுத்தமான காற்று எங்கும் பரவி இருந்தது. உறங்குவதற்கு முன்பு அவர் சொன்னார்: “தனிமையான ஒரு மலை உச்சியில் படுத்தபடியே, "தெய்வமே”ன்னு கூப்பிட்டுக்கிட்டே என்னோட கடைசி மூச்சை விடணும். இதுதான் என்னோட ஆசை!''

மெழுகுவர்த்தி அணைந்தது. நல்ல இருட்டு. இலேசாக கண்களை மூடியிருப்பேன்... ஒரு மிகப் பெரிய சத்தம்... புகை வண்டி வரும் ஓசைதான்! பயங்கரமான ஓசையுடன் அது நாங்கள் படுத்திருக்கும் இடத்தில் இருந்து நான்கடி உயரத்தில் சீறிப்பாய்ந்து ஓடிக்கொண்டி ருந்தது. அப்போது மண்ணும் தூசியும் உடல்மேல் விழுந்தன. நான் உறங்க ஆரம்பித்தேன். ஒரு கனவு. என்னையா இல்லை சந்நியாசியையா என்று தெரியவில்லை. கொல்லப் பார்க்கிறார்கள். ஆகாயம் இருட்டாக இருக்கிறது. வெறும் நிலத்தில் நாங்கள் படுத்திருக்கிறோம். கண்கள் இரண்டையும் யாரோ தோண்டியெடுத்து ஆகாயத்தில் இரண்டு இடங்களில் வைக்கிறார்கள். அப்போது நல்ல பிரகாசம்! யாரோ காலின் பெருவிரல்களுக்குத் தீ வைக்கிறார்கள். அடுத்த நிமிடம் உடல் நெருப்புப் பற்றி எரிகிறது. தீ முழங்கால் வரை எரிந்த பிறகு ஒரு குரல்-

“கடைசியா என்ன சொல்ல விரும்புறே?''

“ஓம் சாந்தி சாந்தி சாந்தி...'' எரிந்து கொண்டிருந்த உடல் சொன்னது: “லோக மைஸ்தான ஸுகினோ பவந்து...''

உடல் முழுமையாக எரிந்து முடிந்தது. அது இப்போது சாம்பலாகி இருந்தது. காற்றடித்தபோது அந்தச் சாம்பல் நாலாப் பக்கங்களிலும் பரவியது. நிலம் யாருமே இல்லாமல் சூனியமாகக் கிடந்தது.

ஆகாயத்தில் இரண்டு கண்கள் பயங்கர ஒளியுடன் பிரகாசித்துக் கொண்டிருந்தன.

அடுத்து ஒரு கம்பீரமான குரல்: “அடுத்த ஆள்!''

நான் திடுக்கிட்டுப் போனேன். கண்களைத் திறந்தேன். பொழுது இன்னும் புலரவில்லை. தீக்குச்சியை உரசி பீடியைப் பற்ற வைத்தேன். நேரம் என்னவென்று பார்த்தேன்.

மணி ஐந்து, சந்நியாசி எங்கே போனார்?

“என்ன... எந்திரிச்சிட்டீங்களா?'' என்று கேள்வியுடன் அவர் வந்தார். அவர் குளித்து முடித்திருந்தார். உடம்பு முழுக்க விபூதி மணம் கமழ்ந்து கொண்டிருந்தது. ஒரு குப்பியிலும் ஒரு அலுமினிய பாத்திரத்திலும் அவர் தேநீர் கொண்டு வந்தார். நான் குப்பியில் இருந்த தேநீரைக் குடித்தேன். பெரிய ஒரு கட்டு அவரைப் பயறை என் முன் கொண்டு வந்து வைத்தார். “இதுல சில பயறுகள் நல்லா காய்ஞ்சு போயிருக்கும். அதை மண்ணுக்குள்ள விதைச்சுடுங்க. கொஞ்ச நாள்ல வளர்ந்து கொடி கொடியா படர்ந்து நிற்கும். நான் நாற்பது வருஷமா பல இடங்கள்லயும் இதை நட்டு வளர்த்து வர்றேன்.''

நாங்கள் நடந்தோம். தார் சாலை வரை அவர் என்னுடன் வந்தார்.

என்னை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் மகளின் தாய். நான் வாங்கி வந்திருந்த மாலையை மகள் கைஸுக்குட்டிக்கு அணிவித்தாள். மிட்டாயைக் கைஸுக்குட்டி தின்னவில்லை. சந்நியாசி தந்த அவரைப் பயறில் காய்ந்து போயிருந்த சில விதைகளை மண்ணில் வித்தாக ஊன்றி வைத்தோம். குளித்துமுடித்து, தேநீர் குடித்தேன். உலக இலக்கியத்தைத் தொடரலாம் என்று உட்கார்ந்தேன். ஆரம்பத்தில் எழுதியதிலிருந்து இதுவரை எழுதியதுவரை ஒரு முறை படித்துப் பார்த்தேன். அவ்வளவு நன்றாக எழுதியிருப்பதாகப் படவில்லை. அதனால் எழுதியவற்றைச் சிறு சிறு துண்டுகளாகக் கிழித்து, நிலத்தின் ஒரு மூலையில் தூக்கி எறிந்தேன். பிறகு... எந்தவித பரபரப்பும் இல்லாமல் "ஹாயாக” நடந்தேன். அப்போது மகள் கைஸுக்குட்டியுடன் வந்தாள்.

“டாட்டோ... கைஸுக்குட்டியை புள்ளிக்கோழி கொத்திடுச்சு...''

என்னை நலம் விசாரிப்பதற்காக வந்த ஒயிட் லெகான் சேவலிடம் நான் சொன்னேன்:

“தோழரே... உங்களோட மனைவிமார்கள்ல ஒருத்தி கைஸுக்குட்டியைக் கொத்தியிருக்கா. நீங்க அதைப் பத்தி என்ன சொல்றீங்க?''

ஒயிட் லெகான் சேவல் தலையைத் திருப்பி ஒரு கண்ணால் என்னைப் பார்த்தான். அப்போது திடீரென்று என் ஞாபகத்தில் வந்தது- ஆகாயத்தில் பிரகாசம் தந்து கொண்டிருக்கும் அந்த இரண்டு கண்கள்!

நான் வீட்டின் ஜன்னல்களையும் கதவுகளையும் முழுவதுமாகத் திறந்துவிட்டேன். இருந்தாலும் உள்ளே வெளிச்சம் சரியாக வரவில்லை. இது முன்பு சில முஸ்லிம்கள் உண்டாக்கிய வீடு. அதாவது- அவர்கள் சொல்லி தச்சன் கட்டிய வீடு. முஸ்லிம்கள் இந்த வீட்டில் குடியிருந்தார்கள். அறைகள் நிறையவே இருக்கின்றன. தீப்பெட்டி மாதிரி சின்னச் சின்ன அறைகள். பிரார்த்தனை செய்வதற்கென்று தனியாக ஒரு இடம், படுக்கையறை, சமையலறை, ஸ்டோர் ரூம், விசிட்டர்ஸ் அறை என்று பல அறைகள் திட்டமிட்டுக் கட்டப்பட்டி ருந்தன. படுக்கையறைக்கு இரண்டு ஜன்னல்கள். அதற்கு எதிராக ஜன்னல்கள் எதுவும் இல்லாததால், காற்று எங்கே போவது என்று தெரியாமல் வெளியே நின்று கொண்டிருக்கும். இந்தப் படுக்கை அறையைவிட பெரியது ஹால். அதற்கு நான்கு ஜன்னல்கள், நான்கு கதவுகள். இந்த அளவுக்கு பெரிய அறை தேவைதானா? இதற்கு இந்தியா, எகிப்து, அரேபியா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் பத்தாயிரம், பதினைந்தாயிரம் வருட சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால்தான் உங்களுக்கே இதைப்பற்றி தெளிவாகப் புரிந்தகொள்ள முடியும். பொதுவாக செத்துப்போன பிணத்தை வீட்டு ஹாலின் மையத்தில்தான் வைப்பார்கள். உதாரணத்திற்கு- நான் இறந்து போகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். என்னைக் குளிப்பாட்டி, புதிய ஆடைகள் அணிவித்து, அந்த அறையின் மத்தியில் கொண்டு போய் வைப்பார்கள். ஆட்கள் வந்து கடைசி முறையாக என்னைப் பார்த்துவிட்டுப் போவார்கள். இறந்துவிட்டால், காற்றும் வெளிச்சமும் மிகவும் முக்கியம் அல்லவா? வாழும்போது காற்று வேண்டாம்... வெளிச்சம் வேண்டாம்... எதுவுமே வேண்டாம்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel