Lekha Books

A+ A A-

மந்திரப் பூனை - Page 11

mandhira-poonai

குடையை விரித்துப்பிடித்து, மழையில் நனையாமல் என் பக்கத்தில் வந்து நின்றாள். பஸ் பலகைகள் வழியே "குர்ர்ர்” என்று மிதவைக்கு ஏறியது. பாதி தூரம் சென்றிருக்கும். திடீரென்று மிதவை நீங்கியது. கயிறுகள் அறுந்தன. தனியாகிப்போன மிதவை நீரின் போக்கில் போனது. நீருக்குள் போன பஸ்ஸில் இருந்த டிரைவர் நூறடி தூரத்தில்- எப்படியோ தப்பித்து வெளியே வந்தார்.

மகளும், மகளின் தாயும் பஸ்ஸுக்குள் இருந்திருந்தால்...?

ஆச்சரியம், பக்தி, சிநேகம்- எல்லாம் கலந்த புன்சிரிப்பு இழையோடிய முகங்களுடன் சௌபாக்யவதிகளான கதீஜா பீபியும், சௌமினிதேவியும், ராஜலாவும் என்னைப் பார்த்தார்கள். என்ன இருந்தாலும், நான் மூன்று அற்புத நிகழ்ச்சிகளை நடத்தியதாக அவர்கள் நினைப்பு! "வரட்டும்... வரட்டும். சந்தர்ப்பம் வரட்டும், நாங்க யார்னு காட்டுறோம்... அதுவரை உங்கக்கிட்ட உஷாராத்தான் இருக்கணும்' என்ற எண்ணம் அவர்கள் மனதில் இருக்கலாம். யாருக்குத் தெரியும்? பெண் இனம் என்ற சௌபாக்யவதிகளின் இதயத்தில் இருக்கும் ரகசியத்தைப் பற்றி யாரால் என்ன சொல்ல முடியும்?

இளவங்காய் துண்டுகளை ஒரு பொட்டலமாகக் கட்டி கையில் வைத்தவாறு நடந்தேன். பூனைக்குட்டியைக் கையில் அணைத்தவாறு மகள் என் அருகில் வந்தாள். அப்போது சௌபாக்யவதிகள் மூவரும் எதையோ நினைத்தவண்ணம் மூன்று நெருப்பு மாதிரியான பார்வைகளை என்மீது பாய்ச்சினார்கள். பின்னர் அவர்கள் என்ன நினைத்தார்களோ... அந்தப் பார்வையை பக்திமயமான பார்வையாக மாற்றினார்கள்.

பெண் இனத்தைச் சேர்ந்த சௌபாக்யவதிகளே, உங்களுக்கு வணக்கம்.

சௌபாக்யவதி கதிஜா பீபி மகளிடம் சொன்னாள்:

“மகளே... கைஸுக்குட்டியை பத்திரமா பார்த்துக்கணும்...''

3

பிறந்தது பாக்கிய நட்சத்திரத்தில். கடவுள் புண்ணியத்தால் எதற்கும் ஒரு குறைவும் இல்லை. கைஸுக்குட்டிக்கு சாப்பிட தனியாக தட்டு. தனி படுக்கை. உபசரிக்க ஏகப்பட்ட ஆட்கள். நன்றாகக் காய வைத்த சர்க்கரை போட்ட பால். காய்ச்சிய பாலில் முட்டையை உடைத்துப் போட்டு சுவையாக இருக்கும் வண்ணம் குடிக்கும் வாய்ப்பு. (மகானான ஒயிட் லெகான் சேவல்! அதனுடைய அருமை குஞ்சைத்தான் பாலில் சேர்த்து கைஸுக்குட்டி குடிக்கிறது.) அதோடு நிற்கவில்லை. சூப் வேறு. சின்னச்சின்ன துண்டுகளாக்கப்பட்டு பொரித்த ஆட்டிறைச்சி. முள் நீக்கப்பட்ட மீன். பொரித்த அப்பளம். நெய்யில் குழைத்த சோறு. முத்தங்கள். இன்னும் சொல்லப்போனால் இங்கு பல சௌபாக்யவதி களான இளம் பெண்களும் ஒவ்வொரு நாளும் வருவார்கள். மகளின் தாயின் தையல் மெஷினில் புதிய மாடல் இங்கிலீஷ் மார்புக் கச்சைகளும், ப்ளவுஸுகளும் தைக்க, புத்தகங்களோ பத்திரிகைகளோ வாங்க, பாட்டு கேட்க என்று பல விஷயங்களுக்காகவும் இந்தப் பெண்கள் இந்த வீட்டுக்கு வருவார்கள். வரும் எல்லாருமே கைஸுக்குட்டியைக் கையில் எடுத்து கன்னத்தோடு கன்னம் வைத்து முத்தம் தருவார்கள். தலையிலும், தோளிலும், நெஞ்சிலும் அதை வைத்து ஆசையாகக் கொஞ்சுவார்கள்.

நாட்கள் படுவேகமாக ஓடிக்கொண்டிருந்தன. வாரங்கள் பல கடந்த பிறகு சந்நியாசியும் நானும் ரொம்பவும் நெருக்கமானோம். நாங்கள் பால் போடாத தேநீர் அருந்துவோம். பீடி குடிப்போம். பல விஷயங்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருப்போம். வேதாந்தம், தெய்வத்தைப் பற்றியுள்ள கருத்துகள், மதங்கள், பெரிய நூல்கள், மதங்களின் வளர்ச்சிக்கு சங்கீதம் எந்த அளவிற்கு உதவியிருக்கிறது, ஓவியர்கள், கவிஞர்கள், கதாசிரியர்கள்- இவர்கள் மதங்களை எப்படியெல்லாம் வளர்த்திருக்கிறார்கள், மதங்கள் காலாகாலமாக நிலைபெற்று நிற்குமா, ஏகப்பட்ட மதங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயிருக்கின்றனவே, ஆத்மா என்ற ஒன்று உண்மையிலேயே இருக்கிறதா, பேய், பிசாசுகளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள், சொர்க்கம்- நரகம்... இப்படி இதுதான் என்றில்லை... எத்தனையோ விஷயங்களைப் பேசினாலும், அதில் ஒரு தீர்மானமான முடிவுக்கு வரவே முடியாது. “என்னதான் நம்பிக்கைகளும் கொள்கைகளும் இருந்தாலும்...'' சந்நியாசி சொன்னார்: “இப்பவும் நமக்கு தாழ்ப்பாளும் வேணும், சாவியும் வேணும். போலீஸும் பட்டாளமும் வேணும். சிறையும் தூக்குமரமும் வேணும்...''

அவர் தொடர்ந்து சொன்னார்:

“சுருக்கமா சொல்லப்போனா, நடக்குற கக்கூஸ் - மனிதன்- ஆணும் பெண்ணும். வயித்துக்குள்ள கிருமிகள், கழிவுப்பொருட்கள், தலையில் பேன், உடல் முழுக்க அணுக்கள், வாய்நாத்தம், உடல் முழுக்க ஒரே வீச்சம். இவ்வளவு நாத்தம் எடுத்த வேற ஏதாவது உயிரினத்தை உங்களால உலகத்துல காட்ட முடியுமா? சுவாமிஜி, நீங்க என்ன சொல்றீங்க?''

அவர் பொதுவாக என்னை "சுவாமிஜி' என்றுதான் அழைப்பார். இதற்கு பெரிய அர்த்தமொன்றும் கிடையாது. காலாகாலமாக பல்வேறு பெயர்களில் பலரும் என்னை அழைத்திருக்கிறார்கள். நாய், பன்றி, கழுதை, எருமை, குரங்கு- இவற்றுக்கெல்லாம் ஆத்மா என்ற ஒன்று இருக்கிறது என்று கருதப்படுகிறது அல்லவா? அதே மாதிரி மனிதனுக்கும் இருக்கிறது. ஆத்மாக்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்குமா? எனக்கு ஆத்மா எப்படி இருக்கிறதோ, அதேபோல்தான் மற்றவற்றிற்கும். என்னைவிட வித்தியாசமாக ஒன்றுமில்லை அவை என்றுதானே இதற்கு அர்த்தம்!

ப்ரஹ்மம்! ஆதிப்ரஹ்மம்!

நான் கேட்டேன்:

“மனிதனைப் பத்தி சுவாமிஜி, நீங்க என்ன நினைக்கிறீங்க?''

“என்னதான் இருந்தாலும், மனிதப் பிறவின்றது ஒரு பெரிய படைப்புதான். சந்தேகமே இல்லை.''

“இருந்தாலும், மனிதன் நடக்குற கக்கூஸ்தான். சுவாமிஜி, தெய்வம் என்னோட சாயல்ல மனிதனைப் படைச்சிருக்குன்னு சொல்லப்படுறதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?''

“பறவைகள், ஊர்ந்து திரியும் பிராணிகள், மிருகங்கள், மீன், மத்தி, நீர்வாழ் உயிரினங்கள், கிருமிகள், மரங்கள்... யார் வேண்டுமானாலும் இதையே சொல்லலாமே! ஆனா... நான் நம்புற கடவுளுக்கு உருவம் கிடையாது.''

“அந்த தெய்வம் மொத்த பிரபஞ்சத்தையும் உயிரினங்களையும் எதுக்காகப் படைக்கணும்? மொத்தத்துல வாழ்க்கையைப் பத்தி நினைச்சுப் பாக்குறப்போ...''

“எல்லாம் பகவானின் லீலா வினோதங்கள்...''

“டாட்டோ... கைஸுக்குட்டி கண்ணாடியைப் பார்த்துச்சு...'' கைஸுக்குட்டியுடன் மகள் வந்து நின்றாள். கைஸுக்குட்டி மகள் கையில் அடக்க ஒடுக்கமாக அமர்ந்திருந்தது. பூனைக்கு, பொன்னை உருக்குகிற இடத்தில் என்ன வேலை என்பது மாதிரி சந்நியாசியும் நானும் பார்த்தோம். சந்நியாசி பூனைக்குட்டியைக் கையில் வாங்கி, மகளிடம் கேட்டார்:

“பூனைக்குட்டிக்கு என்ன பேரு வச்சிருக்கு?''

மகள் சொன்னாள்:

“கைஸுக்குட்டி...''

“இது முஸ்லிம் பூனைதானே?''

கைஸுக்குட்டி சந்நியாசியின் தாடி மணத்தை முகர்ந்து பார்த்தவாறு கேட்டது:

“ம்யாவோ...?''

சந்நியாசி கைஸுக்குட்டியிடம் சொன்னார்:

“ப்ரஹ்மமயம்!''

மகள் சந்நியாசியிடம் இருந்து பூனைக்குட்டியை வாங்கிக் கொண்டு ஓடினாள்.

“அம்மா... பீப்பிளி ஊதுற மிஸ்கீன் கைஸுக்குட்டிக்கிட்ட பேசினாரு...''

சந்நியாசி போனபிறகு, நான் சில நிமிடங்கள் வெறுமனே அமைதியாக உட்கார்ந்திருந்தேன். பிறகு எழுதிக் கொண்டிருந்ததைத் தொடர ஆரம்பித்தேன்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel