Lekha Books

A+ A A-

மந்திரப் பூனை - Page 9

mandhira-poonai

நான் ஏன் பேசப் போகிறேன்? ஊஞ்சலில் இருந்து கீழே விழுந்தால் வலிக்காமல் இருக்குமா? நான் விழுவதற்குக் காரணம் என்ன? ஆவியும் பேயும் உண்டு என்று பொதுவாகச் சொல்வார்களே! இது ஏகப்பட்ட மனிதர்கள் வாழ்ந்து மறைந்த இடம். சௌபாக்யவதிகள் ஆவிகளின் வேலையாக இது இருக்குமோ? அவைதான் ஊஞ்சலில் இருந்து என்னை கீழே விழ வைத்திருக்குமோ? மண்ணை விட்டு மறைந்து போனாலும், மனதில் வைத்திருக்கும் வைராக்கியத்தை மறக்காமலே இருக்கும் இனமாயிற்றே பெண்கள்! சொல்லப்போனால்... பழிக்குப் பழி வாங்குவதில் பெண்களுக்கு நிகர் வேறு யார் இருக்கிறார்கள்? இதை எல்லாம் பார்த்தபோது பெண்மணிகளான சௌபாக்யவதிகள்மீது எனக்கே ஒருவித வெறுப்பு தோன்றியது. அப்படியே நடந்து நாங்கள் மகள் விளையாடிக் கொண்டிருந்த இடத்தை அடைந்தோம். மகளும் பூனைக்குட்டியும் சோறு, குழம்பு வைத்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். மகள் இருந்த அந்தச் சிறு அறை, எவ்வளவு பெரிய தச்சனும் பொறாமைப்படக்கூடிய விதத்தில் அவ்வளவு அழகாக அமைக்கப்பட் டிருந்தது. மகளின் தாய், ராஜலா, கதீஜா பீபி, சௌமினி தேவி ஆகிய சௌபாக்யவதிகளின் ஒட்டுமொத்த கற்பனையில் உருவாக்கப்பட்ட சிறிய அறை அது. மகள் சோறு ஆக்கி அந்த அறையில் விளையாட லாம். அதில் படுக்கை இருக்கிறது. விருந்தினர்கள் யாராவது வந்தால், அங்கு தங்கலாம். அதில் சமையல் செய்யக்கூடிய வசதிகளை உண்டாக்க மட்டும் நாங்கள் மறந்து போனோம். சமையல்தான் எங்கிருந்து வேண்டுமானாலும் பண்ணலாமே! அந்த அறை உண்டாக்கப்பட்டதன் பிரதான நோக்கமே பேன்களைக் கொல்வதற்குத்தான்! முன்னால் நான் குறிப்பிட்ட சௌபாக்யவதிகள் எல்லாரும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒன்றாக அங்கு அமர்ந்து பேன்களை எடுத்துக் கொல்வார்கள். ஊர்க்கதைகள் பேசிக் கொண்டிருப்பார்கள். இப்போது மகளும் கைஸுக்குட்டியும் உள்ளே அமர்ந்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். நான் மேலே பார்த்தேன். பார்த்தவுடன் நானே பயந்துவிட்டேன். முற்கள் கொஞ்சமும் இல்லாமல்- ஏதோ அரிவாளை வைத்து சுத்தம் செய்தது மாதிரி பளபளப்புடன் நான்கு இளவங்காய்கள், நீளமான கொடியில் அந்தச் சிறிய அறைக்கு நேர்மேலே, மாமரத்தின் கிளையில் படர்ந்து தொங்கிக் கொண்டிருந்தன. இங்கிருந்து பார்த்தபோது, அவை மாங்காய்கள் மாதிரியே தெரிந்தன. எல்லாம் மகளின் தாயுடைய கைங்கர்யம். தொழுவத்தின்மேல் படர்ந்து கிடக்கும் பூசணிக்கொடி, இல்லா விட்டால் அதுவும் இளவங் கொடிதானா? எது வேண்டுமானாலும் இருக்கட்டும்... மகளின் தாய்தான் அதை அங்கு படரவிட்டது. அது தொழுவத்திற்கு வெளியே படர்ந்து மாமரத்தில் ஏறிப் படர்ந்து காய்த்திருக்கிறது. முந்தாநாள் வரை அது மிகவும் சிறியதாக இருந்தது. இப்போது அவை வெள்ளை உப்பு மாங்காய்கள் போல மகளுக்கும் பூனைக்குட்டிக்கும் மேலே தொங்கிக் கொண்டிருந்தன! எப்போது வேண்டுமானாலும் அந்த நான்கு காய்களும் கொடியில் இருந்து அறுந்து கீழே விழலாம்!

“மகளே!'' நான் அழைத்தேன்: “இங்க நீ விளையாட வேண்டாம். உன்னோட தலையிலும், கைஸுக்குட்டி தலையிலும் இளவங்காய் விழப்போகுது...''

அவ்வளவுதான்-

மகள் பூனைக்குட்டியுடன் ஓடிவந்து எங்களுடன் ஒட்டிக் கொண்டாள். நாங்கள் முன்பக்கம் வந்தபோது, ஒயிட் லெகான் சேவல் ஸார் என்னுடைய நாற்காலியில் உட்கார்ந்து நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார்.

காலை மடக்கி ஒரு உதை கொடுத்தால் என்ன என்று நினைத்தேன். என்னுடைய எண்ணத்தைப் புரிந்துகொண்ட மகளின் தாய் சொன்னாள்:

“அதை ஒண்ணும் செஞ்சிடாதீங்க. பாவம்... அதுங்களுக்கெல்லாம் இருக்கிறது இது ஒண்ணுதான்...''

“அதுங்களுக்கெல்லாம்...'' என்று மகளின் தாய் குறிப்பிட்டது- அவனின் சௌபாக்யவதிகளான மனைவிமார்களை. நியாயமாகப் பார்த்தால் அவன்மீது கருணை காட்டித்தான் தீர வேண்டும். ஒரு பெண் கோழி மட்டும் என் நாற்காலியில் உட்கார்ந்திருந்தால் இப்போது நடந்திருக்கும் கதையே வேறு. காலில் கிடக்கும் செருப்பை அகற்றி அடித்து உதைத்திருப்பேன். ஆண் கோழி! ஆண் இனம்! அவனுக்கு மரியாதை கொடுக்க வேண்டியது நம்முடைய கடமை. நான் பக்கத்தில் இருந்த சிமெண்ட் திண்ணையில் போய் சாய்ந்து அமர்ந்தேன். எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தேன். ஒயிட் லெகான் சேவல் ஒரு கண்ணைப் பாதி திறந்து, என்னை இலேசாகப் பார்த்தவாறு உறங்கத் தொடங்கினான்.

“அடியே... இவன் ரொம்ப களைப்பா இருப்பான்போல இருக்கு!'' நான் மெதுவான குரலில் சொன்னேன். தூங்கிக்கொண்டிருக்கும் ஒருவனுக்குத் தொந்தரவு தரக்கூடாது பாருங்கள். “பொண்டாட்டிகளோட தொல்லையில இருந்து தப்பிச்சு வந்து ஒளிஞ்சிருக்கான் இவன். அவனோட கவலைகளைச் சொல்றதுக்கு நண்பன்ற முறையில அவனுக்கு நான் மட்டும்தான் இருக்கேன்!''

“கொஞ்சம் சும்மா இருக்கீங்களா?'' மகளின் தாய் என்னைப் பார்த்துச் சொன்னாள். தொடர்ந்து முணுமுணுக்கும் குரலில் அவள் சொன்னாள்: “பதினேழு கோழிகளும் முட்டை போடுது. அடுத்த வருஷம் என்கிட்ட எப்படியும் நூறு கோழிகளாவது இருக்கும்.''

என்னுடைய இந்த உடல் வலிமையும், தடிமனும், பேச்சும் கோழி முட்டை சாப்பிட்டு உண்டானதல்ல. முட்டைகள் முழுவதும் குஞ்சுகள் உண்டாக்கப் போய்விடுகின்றன. இந்த ஒயிட் லெகான் சேவல் திருமணம் செய்திருப்பது அத்தனையும் நாட்டுக் கோழிகள். நாட்டுக் கோழிகளுக்கு பொதுவாகவே நல்ல சக்தி உண்டு. நோய்களை எதிர்த்து நிற்பதற்கும், எதிரிகளுடன் போராடுவதற்கும் அவற்றிடம் நல்ல பலம் இருக்கின்றன. ஆனால் முட்டைகள் குறைவாகத்தான் போடும். இந்தக் குறை ஒயிட் லெகான் சேவலின் உதவியால் உண்டாகும் முட்டைகள் விரிந்தால், தீர்ந்துவிடும். அப்போது முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் எல்லாமே ஒயிட் லெகான் குஞ்சுகளாக இருக்கும். ஒயிட் லெகானின் எல்லா குணங்களும், நாட்டுக் கோழிகளின் எல்லா குணங்களும் அவற்றிற்கு இருக்கும். அப்படிப்பட்ட குஞ்சுகளைத்தான் பருந்து சில நேரங்களில் "லபக்”கென்று தூக்கிக்கொண்டு போய்விடும். அதற்கு நான் என்ன செய்வேன்? நான் அமைதியாக உட்கார்ந்து கொண்டு உலக இலக்கியம் படைப்பதில் ஈடுபட்டிருக்கிறேன். இருந்தாலும் கோழிக்குஞ்சுகளை ஒரு அறையில் அடைத்துப் போட்டு வைத்து வளர்க்கும்படி ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். ஆனால், என்ன பிரச்சினை என்றால் அந்த அறையில் காற்று, வெளிச்சம் எதுவும் கிடையாது. விளைவு- எல்லா குஞ்சுகளையும் நன்றாக இரை பொறுக்கித் தின்னட்டும் என்று இரண்டு ஏக்கர் நிலத்திலும் சுதந்திரமாக விட்டுவிட்டோம். எதுவோ ஞாபகம் வந்தது மாதிரி மகளின் தாய் சொன்னாள்:

“நல்ல இரை போடுறேன். நெய் ஊத்தி சோறு குழைச்சு தர்றேன்.''

“நெய் கொடுக்குறேல்ல... கொடுத்து வச்சவன்தான்!'' இவ்வளவுதான் சொல்லி இருப்பேன். பூமியே அதிர்கிற மாதிரி ஒரு பெரிய ஓசையுடன் என்னவோ வந்து விழுந்தது. அடுத்த நிமிடம்- ஒயிட் லெகான் சேவல் பயந்துபோய் "கொக் கொக் கொக்” என்று கத்தியவாறு விழுந்தடித்துக் கொண்டு ஓடினான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel