Lekha Books

A+ A A-

மந்திரப் பூனை - Page 4

mandhira-poonai

அவற்றை தண்ணீர் நிறைந்த ஒரு பாத்திரத்தில் இட்டோம். பழம்பொருட்கள் பலவும் கிணற்றுக்குள் கிடந்தன. அவை எல்லாவற்றையும் எடுத்து தென்னை மரத்தினடியில் போட்டோம். சேறு, அழுக்குகள், கயிறுகள், சட்டிகள், பாத்திரங்கள், மந்திரங்கள் எழுதிய குப்பிகள், பழைய துணிகள், கிழிந்துபோன சட்டைகள், துண்டுகள், சீயக்காய் அட்டைகள்... இப்படி எத்தனையோ பொருட்கள் அங்கே- கீழே கிடந்தன. கிணற்றைக் கழுவி சுத்தமாக்கி னோம். பொட்டாசியம் பெர்மாங்கனேட், க்ளோரின் பவுடர் எல்லாம் கலந்து உள்ளே ஊற்றினோம்.

கிணற்றிலிருந்து எடுத்த மீன்களை கிணறு சுத்தம் செய்ய வந்தவர்களுக்குக் கொடுத்தோம். அவர்களால் அதை நம்பவே முடியவில்லை.

“கிணத்துல இந்த மீன்களை போட வேண்டாமா?''

“வேண்டாம்.''

“பிறகு எப்படி தண்ணி சுத்தமாகும்?''

அவர்கள் சிரித்தவாறு மீன்களுடன் போனார்கள். கழுவி சுத்தம் செய்த வெள்ளை மணலை, கிணற்றின் அடிப்பகுதியில் போட்டோம். ஒரு ஆள் உயரத்திற்கு சுத்தமான நீர் உண்டானது.

வீட்டையொட்டி இருக்கும் நிலத்தில் நிறைய மரங்கள் இருக்கின்றன. பக்கத்து வீடுகளையொட்டி இருக்கும் நிலங்களில்கூட இதே மாதிரி ஏராளமான மரங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்தப் பகுதியில் ஏராளமான பறவைகள்!

மொத்தத்தில்- இந்த இடத்தை ஒரு அழகான பர்ணசாலை என்று கூட சொல்லலாம். இங்கு அமைதியாக உட்கார்ந்து சிந்தனை செய்யலாம். எழுதலாம். எந்தப் பக்கம் பார்த்தாலும் மலர்கள் இருக்கின்றன. எந்தத் திக்கில் நோக்கினாலும் அழகின் ஆட்சி! அமைதியோ அமைதி என்று கூறிவிடுவதற்கில்லை. ஓசை எழுப்பும் வண்டுகள், "கீச்கீச்” என்று கத்தும் பறவைகள்... இது போதாதென்று அமைதியை இல்லாமல் விரட்டும் சௌபாக்யவதிகளான பெண்களின் சிரிப்பு வேறு...

பக்கத்து வீடுகளில் பகல் நேரத்தில் ஆண்கள் இருப்பது அபூர்வம். பெரும்பாலானவர்கள் காலை நேரத்திலேயே வேலைக்குப் போய் விடுவார்கள்.

வேலை எதுவும் இல்லாத நான் மட்டும்தான் இந்தப் பகுதியிலேயே பகல் நேரத்தில் வீட்டில் இருக்கும் ஒரே ஆண். நான் எதையாவது எழுதிக்கொண்டிருப்பதை ஒரு வேலையாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை. "உடலால், மனசால் முழுமையான ஈடுபாட்டுடன் வேலை செய்றேன். தயவு செஞ்சு தொந்தரவு செய்யாதீங்க” என்று எல்லாரிடமும் கூறிக்கொண்டிருக்க முடியுமா?

நான் ஒரு டம்ளர் பால் கலக்காத தேநீர் குடித்து, ஒரு பீடி பிடித்து முடித்து, உலக இலக்கியம் படைக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறேன். எனக்கு முன்னால் வெள்ளை மணல் விரித்த விசாலமான முற்றம் வெயில் பட்டு தங்கம்போல தகதகத்துக் கொண்டிருக்கிறது அங்கு போடப்பட்டிருக்கும் மணல் பரப்பு. அங்கு பறந்து கொண்டிருக்கும் பட்டாம்பூச்சிகள்கூட அப்படித்தான். பொன் நிறத்தில் மின்னிக் கொண்டிருக்கின்றன. அந்தப் பட்டாம்பூச்சிகளையே வைத்த கண் எடுக்காது பார்த்தவாறு முற்றத்தின் ஒரு மூலையில் நின்று கொண்டிருக்கிறான் அழகான- தடிமனான ஒயிட் லெகான் சேவல்.

நான் இந்த நாற்காலியை விட்டு எழுந்துவிட்டால் போதும்- அடுத்த நிமிடம் அவன் வந்து இதில் பந்தாவாக உட்கார்ந்து கொள்வான். அவனுக்கு என்னைப் பார்த்து பயமோ உயர்ந்த மரியாதையோ ஒன்றும் கிடையாது. அவன் மகளின் தாய் பக்கத்தைச் சேர்ந்தவன். அதனால் அவனைப் பற்றி நான் ஒன்றும் பேசுவதற்கும் இல்லை. நியாயமாகப் பார்த்தால் என்னைவிட நிச்சயம் அவன் பெரியவன்தான். அவனுக்கு மனைவிகள் என்று இருப்பவர்கள் பதினேழு அழகான கோழிகள் அல்லவா? எல்லா கோழிகளுமே அவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவைதாம். "கொ... கொ...” என்று அவன் மெதுவான குரலில் அழைத்தால் போதும். அடுத்த நிமிடம் அந்த பதினேழு கோழிகளுமே அவனுக்கு முன்னால் வந்து ஆஜர் ஆகிவிடும். என்னை எடுத்துக் கொண்டால் எனக்கு மகளின் அம்மா ஒருத்தி மட்டுமே மனைவி! அவள் மட்டும்தான். இப்படிப் போகிறது என்னுடைய கதை. இருந்தாலும் பரவாயில்லை. கடவுளை மனதில் நினைத்துக்கொண்டு உலக இலக்கியம் படைக்கலாம் என்று தாளில் பேனாவை வைக்கப் போனால்-

“டாட்டோ...'' என்று கவலை கலந்த குரலில் அழைத்தவாறு என்னுடைய மகள் ஷாஹினா என் அருகில் வந்து நிற்கிறாள். (மகள் என்னை "அப்பா” என்று அழைப்பதற்குத்தான் "டாட்டோ” என்று அழைக்கிறாள். இதற்காக மன்னிக்க வேண்டும்.) மகள் என்னைத் தேடி வந்திருப்பது நிச்சயம் ஒரு கவலை தோய்ந்த விஷயத்திற்காகத்தான். ஐந்தரை வயதான இந்த என் மகளின் மனதிற்குள் ஒரு மிகப் பெரிய விஷயம் அணுகுண்டு மாதிரி புகைந்து எரிந்து கொண்டிருக்கிறது. அது என்ன தெரியுமா?

மகளுக்கு விளையாடுவதற்கு ஆள் இல்லை.

என்ன செய்வது? பீப்பிளி என்று அழைக்கப்படும் பீப்பி, பொம்மைகள், ரப்பர் பந்துகள், சிறிய வீடு, பாடப் புத்தகங்கள், பக்கெட், பாத்திரங்கள், ஊஞ்சல், சைக்கிள்- எல்லாம் அவளுக்கு இருக்கின்றன. சொல்லப்போனால் நான் வாங்கிக் கொடுத்திருக்கும் இந்தப் பொருட்களை வைத்து மணிக்கணக்கில் விளையாடலாம். ஆனால், இந்த விளையாட்டுப் பொருட்கள் என் மகளுக்குத் தேவையில்லையாம். அப்படியொரு விரக்தி அவளின் மனதில். மகளுக்கு இப்போது தேவை அவளைப் போன்ற சிறு குழந்தைகள். உரக்க சத்தம்போட்டவாறு மண்ணில் உருண்டு விளையாட வேண்டும். இதற்கு என்ன வழி? கடவுளே! அவளுடன் விளையாடுவதற்கு குழந்தைகள் எங்கேயிருந்து கிடைக்கும்?

நேரம் கிடைக்கிறபோதெல்லாம் நானும், மகளின் தாயும் மகளின் விளையாட்டுகளில் பங்கு கொள்வது உண்டு. மகளின் தாய்க்கு ஏகப்பட்ட வேலைகள். இங்கே வீட்டில் வேலைக்காரர் என்று யாரும் இல்லை. முற்றத்தை வாரிச் சுத்தம் செய்ய வேண்டும். பாத்திரங்கள் கழுவ வேண்டும். வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்ய வேண்டும். சமையல் பண்ண வேண்டும். இரண்டு ஏக்கர் நிலத்தில் நடந்து பல விஷயங்களையும் பார்க்க வேண்டும். ஓலையோ தேங்காயோ கீழே விழுந்திருந்தால், அவற்றை எடுக்க வேண்டும். வேலிகளில் கரையான் புற்று இருந்தால் அவற்றை அழிக்க வேண்டும். வேலிகளுக்கு பதிலாக நான்கு பக்கங்களிலும் சுவர்கள் கட்ட வேண்டும். அதைச் செய்வதாக இருந்தால், அதற்குக் கொஞ்சம் பணம் செலவாகும். கோழிகள், பசுக்கள், நாய் ஆகியவற்றுக்கு உணவும் தண்ணீரும் கொடுக்க வேண்டும். அதனால் மகளின் விளையாட்டில் நான்தான் சேர வேண்டியதிருக்கிறது. ஆனால், எனக்கும் வேலை என்ற ஒன்று இருக்கிறதே! நான் இந்த உலக இலக்கியத்தைப் படைப்பதற்காக உட்காருகிறபோது, மகள் என்னை அழைப்பது எதற்காக என்கிறீர்கள்? "நொண்டி விளையாட்டு” விளையாடுவதற்காக. முற்றத்தில் இருக்கும் மணலில் சில கோடுகளும் கட்டங்களும் இருக்கும். ஒரு காலை மட்டும் வைத்துக்கொண்டு நாம் அதைத் தாண்ட வேண்டும். பொதுவாக நான் நன்றாகவே தாண்டுவேன்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel