Lekha Books

A+ A A-

மந்திரப் பூனை - Page 12

mandhira-poonai

அப்போது சம்பந்தமேயில்லாமல் திடீரென்று நினைத்தேன்- ஒயிட்  லெகான் சேவல் எங்கே போனான்? விவரத்தைத் தெரிந்து கொள்ளலாம் என்று இங்கிருந்தே சத்தம் போட்டுக் கேட்டேன். அங்கிருந்து வந்த பதில் ஆண் இனத்திற்கே அவமானம் என்பது மாதிரி இருந்தது. சிறிய அளவில் கிடைத்த ஒரு அடி என்று கூட அதைச் சொல்லலாம். மகளின் தாயின் தங்கையான சௌபாக்யவதியும், எனக்கு முன்பின் அறிமுகமே இல்லாத இன்னொரு சௌபாக்யவதியும் அங்கே உட்கார்ந்திருந்தார்கள். மகளின் தாய் எனக்குச் சொன்ன பதிலைக் கேட்டு அவர்கள் குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பது எனக்குக் கேட்டது.

“அவன் அவளோட பொண்டாட்டிமார்கள்கூட இருக்கான்!''

மற்றவர்கள் மனைவிகளுக்கு அருகில் இல்லை. சொல்லப்போனால் மனைவிகளைப் பார்க்கவே வேண்டாம் என்பது அவர்களின் எண்ணம். என்ன இருந்தாலும், உலக இலக்கியத்தை எழுதிக் கொண்டிருக்கிற போது, இடையில் என்னென்ன விஷயங்களில் எல்லாம் கவனத்தைச் செலுத்த வேண்டி நேரிடுகிறது! எதையெல்லாம் விசாரிக்க வேண்டியிருக்கிறது! திடீரென்று மனதில் ஒரு தோணல். காதல், பசி, பக்தி. இதில் காதல், பசி- இரண்டையும் விளக்கிவிட முடியும். பக்தி என்ற உணர்வு எப்படி உண்டானது? மனிதப் பிறவிகள் எல்லாருக்குமே இந்த உணர்வு இருக்கிறதா? கடவுள் இல்லை என்று சொல்பவர்களும் இந்த உலகத்தில் இருக்கவே செய்கிறார்கள். பக்தி என்ற உணர்வைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

இப்படிப் பல விஷயங்களையும் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது... வீட்டின் பின்பக்கத்திலிருந்து ஒரே ஆரவாரம். “ஓடி வாங்க... ஓடி வாங்க... பாம்பு...!'' கோழிகள் கொக்கரிக்கின்றன. காகங்கள் கரைகின்றன. எங்கு பார்த்தாலும் ஒரே கலவரம்! நான் மெல்ல எழுந்து பின்பக்கம் சென்றேன். சம்பவம் நடந்த இடம் தொழுவம். நாட்டுக் கோழிகளுக்கும், ஒயிட் லெகான் சேவலுக்கும் பிறந்த பத்து குஞ்சுகள்... ஐந்தாறு தாய்க்கோழிகள். சுமார் பத்து அடி நீளம் உள்ள தடிமனான ஒரு சாரை. நிறம் கருப்பு. அது தன் தலையை உயர்த்திய வாறு கோழிக்குஞ்சுகளுக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறது. கைஸுக்குட்டியைக் கையில் வைத்தவாறு மகள் முற்றத்தில் நின்று கொண்டிருக்கிறாள். பயம் முகத்தில் தெரிந்த நிலையில் வாசலில் நின்றிருக்கின்றனர் மூன்று சௌபாக்யவதிகளும். ஒயிட் லெகான் சேவல் சிறகுகளை விரித்துக்கொண்டு தலையையும் கழுத்தையும் தாழ்த்திக்கொண்டு நெருங்கிப் போய் சாரையை இரண்டு கொத்து கொத்துகிறான். அவனோடு சேர்ந்து தாய்க்கோழியும் ஒரு கொத்து கொத்தியது. அவ்வளவுதான். சாரை மெதுவாக நகர்ந்து ஊர்ந்து போனது. இவ்வளவு விஷயங்களும் ஒரு சில நொடிகளிலேயே நடந்து முடிந்துவிட்டன என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். மகளின் தாய் கோபத்துடன் கேட்டாள்:

“அது ஊர்ந்து போறதைப் பார்த்தீங்கள்ல...? கல்தூண் மாதிரி பார்த்துக்கிட்டு நின்னா எப்படி?''

நான் பிறகு என்ன செய்ய முடியும்? அதை அடித்துக் கொல்ல முடியுமா? அது முடியாத விஷயம். அதனால் எதற்கு வீண் வம்பென்று எதுவுமே பேசாமல் மவுன விரதம் அனுஷ்டித்தேன்.

“உங்களைப்போல இல்ல ஒயிட் லெகான். அவனுக்கு சூடு, சொரணை இருக்கு. அவன்தான் ஆம்பளை. அவன் அந்தப் பாம்பை எப்படி கொத்தினான் பார்த்தீங்களா?''

நான் சொன்னேன்:

“என் மகளையும் பொண்டாட்டியையும் காப்பாத்தணும்னா நான் எவ்வளவு கொடிய நல்ல பாம்புடன்கூட போராடத் தயார். ஒயிட் லெகான் சேவல் அவனோட மனைவிமார்களையும் குஞ்சுகளையும் காப்பாத்துறதுக்காகக் கொத்தினான்.''

“காப்பாத்தினதைப் பார்த்தீங்கள்ல...'' திரும்பிப் பார்த்து தன் தங்கையிடம் சொன்னாள்: “கொண்டு வாடி ஒரு நாழி கோதுமையை. அவன் எப்படி மலைபோல இருந்த அந்த சாரைப் பாம்பைக் கொத்தி விரட்டினான் பார்த்தியா?''

மகள் சொன்னாள்:

“டாட்டோ...! அது வாயைத் திறந்து கடிக்க வந்துச்சு- கைஸுக்குட்டியை...''

“ம்க்கும்...'' மகளிடம் நான் சொன்னேன்: “மகளே, ஊர்ந்து போகுதுல்ல பூச்சி... எதைப் பார்த்தாலும், நீ பார்த்துக்கிட்டு நிக்கக் கூடாது. ஓடி வந்து அம்மாக்கிட்ட இல்லாட்டி டாட்டோக்கிட்ட சொல்லணும்... என்ன?''

இப்போது மகளின் தாயிடம் சொன்னேன்:

“வாசல் கதவுகளைத் திறந்து வைக்காதே. கொஞ்ச நாட்கள் கோழிக்குஞ்சுகளை அறைக்குள் பூட்டி வளர்க்குறதுதான் சரியா இருக்கும்.''

நான் திரும்ப வந்து உட்கார்ந்தேன். ஏற்கெனவே எழுதிய ஒரு பக்கத்தை வாசித்துப் பார்த்துவிட்டு எழுத்தைத் தொடர்ந்தேன். அப்போது ஒரு தந்தி வருகிறது. அதன்படி அடுத்தநாள் நான் வேறொரு ஊருக்குப் போக வேண்டும். அங்கிருந்து மகளுக்கும், மகளின் தாய்க்கும் வாங்கி வர வேண்டிய பொருட்களின் பட்டியல் ஒன்று என்னிடம் நீட்டப்பட்டது. கடைசியில் மகள்: “டாட்டோ... கைஸுக்குட்டிக்கு ஒரு மாலை வேணும்!''

அடுத்த நாள் நான் பயணமானேன். சுமார் நானூறு மைல்களுக்கப்பால் உள்ள ஒரு நகரத்திற்கு நான் போய், காண வேண்டியவர்களைக் கண்டேன். நான்கு நாட்கள் அங்கு தங்கிவிட்டுத் திரும்பினேன். வீட்டில் இருந்து பன்னிரண்டு மைல் தூரத்தில் உள்ள ஒரு சிறிய ரெயில்வே ஸ்டேஷனில் நான் இறங்கினேன். அப்போது இரவு பதினொன்றரை மணி. போவதற்கு வாகனங்கள் எதுவும் இல்லை. இரவில் தங்கிச் செல்லலாம் என்றால் அதற்கேற்ற நல்ல ஹோட்டல்களும் இல்லை. என்ன செய்வது? திடீரென்று ஞாபகத்தில் வந்தது. ரெயில்வே தண்டவாளத்தின் வழியே நடந்தால் ஒரு குறுக்குப் பாதை இருக்கிறது. மூன்று மைல்கள்தான் வரும். கையில் குடை இருக்கிறது. ஒரு பெட்டியும். பெட்டியைத் திறந்து டார்ச் விளக்கை எடுத்தேன். பெட்டியில் இரண்டு மெழுகுவர்த்திகள் இருந்தன. முன் ஏற்பாடாக எதற்கும் இருக்கட்டும் என்று அந்த மெழுகுவர்த்திகளை வாங்கி வைத்திருந்தேன். என்ன இருந்தாலும் மின்சாரத்தை முழுக்க முழுக்க நம்ப முடியாது அல்லவா? ஒருவேளை டார்ச் விளக்கின் பல்பு திடீரென்று, கொஞ்சமும் எதிர்பாராமல் ஃப்யூஸ் ஆகலாம். ஒரு சினிமாவில் நடித்திருக்கும் அரிவாளை எடுத்து சட்டைக்குக் கீழே பெல்ட்டில் வைத்துக் கட்டினேன். இது வெறுமனே ஒரு தைரியத்திற் காகத்தான். அடுத்த நிமிடம் பெட்டியைக் கையில் தூக்கியவாறு மெல்ல நடந்தேன். ரெயில்வே ஸ்டேஷனின் வெளிச்சம் முழுமையாக மறைந்ததும், டார்ச் விளக்கை அடித்தேன். ரெயில்வே தண்டவாளங்கள் நீண்டு, முடிவே இல்லாத வண்ணம் கிடக்கின்றன நீளமான பாம்புகளைப்போல. டார்ச் விளக்கை அணைத்தபோது ஒன்றுமே தெரியவில்லை. ஒரே இருட்டு. மின்மினிப் பூச்சிகளின் ஓசை மட்டும் கேட்டது. டார்ச்சை மீண்டும் அடித்தவாறு மிகவும் கவனமாக நடந்தேன். அதிக நேரம் பெட்டியைக் கையிலேயே வைத்திருந்ததால் மிகவும் அதிகமாகக் கனப்பது மாதிரி அது தெரிந்தது. அதனால் அதைத் தூக்கித் தலையில் வைத்தேன்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel