Lekha Books

A+ A A-

மண்டை ஓடு - Page 20

mandai-odu

அந்த அறுவடை முடிந்ததும், நிலத்தை அவனிடமிருந்து எடுத்துக் கொண்டார்கள். குத்தகைக்கும் கடன் வாங்கியதற்கும் அவர் ஒரு பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொண்டார்.

புதிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் வந்த பிறகும் வழக்கம்போல அப்பிராணி விவசாயி விவசாயம் செய்வதும், இருப்பிடத்தைப் பணத்திற்காகப் பணயம் வைத்து எழுதிக் கொடுப்பதும், விளைச்சல் கரிந்து போவதும் நடந்து கொண்டுதான் இருந்தன. அரசாங்கம் மாறிவிட்டதைத் தெரிந்து கொள்வதற்கு மக்களுக்கு இயலவில்லை.

அந்த விஷயங்கள் அப்படி கிராமப் பகுதிகளில் நடந்து கொண்டிருந்தபோது, நகரத்தில்...?

கயிறுக்கு விலை இல்லை. கயிறு விவசாயம் பாதிக்கப்பட்டது. நெசவு செய்பவனுக்கு நூல் கிடைக்கவில்லை. அவனுடைய தொழிலும் நடக்கவில்லை. செம்மீன் பருப்பின் வெளிநாட்டு வியாபாரம் மிகவும் பாதிப்படைந்து விட்டதைப் போல தோன்றுகிறது. அந்த வகையில் தொழிலின்மை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருந்தது. இதற்கிடையில் உணவுப் பொருட்களின் பற்றாக்குறை வேறு.

அதைத் தொடர்ந்து நகரத்தின் தெருக்களில் சோர்வடைந்த முகங்களுடனும், எதையோ தேடிக் கொண்டிருக்கும் குழி விழுந்த கண்களுடனும், அழுக்கு ஆடைகளுடனும் எந்தவொரு இலக்கும் இல்லாமல் மனிதர்கள் திரிவதைப் பார்க்க முடிந்தது. அவர்களுடைய வீடுகள் இல்லாமல் போயின. குழந்தைகள் மரணத்தைத் தழுவ ஆரம்பித்தார்கள். வாழ்க்கை ஒரு மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது.

நகரத்தின் வெளிப் பகுதியில் ஒரு சிறிய குடிசை. ஒரு காலத்தில் அது சந்தோஷம் நிறைந்த ஒரு வீடாக இருந்தது. வெள்ளை அடிக்கப்பட்ட மூங்கிலாலான தடுப்புகள் அமைத்து மறைத்து உண்டாக்கப்பட்ட அந்த வீடு ஒரு காலத்தில் பார்ப்பதற்கு மிகவும் அழகான ஒன்றாக இருந்தது. இப்போது வீடே சாய்ந்து நின்றிருந்தது. தடுப்புகள் பல இடங்களிலும் பாதிப்படைந்து, பெரிய ஓட்டைகள் இருந்தன.

அங்குள்ள வீட்டின் தலைவனை, மனைவியும் ஒரு வயதான தந்தையும் இரண்டு பிள்ளைகளும் சார்ந்திருந்தார்கள். தினமும் காலையில் அவன் வேலை தேடிச் செல்வான். அந்த வீட்டில் இருப்பவர்கள், அப்போதிருந்து அவன் திரும்பி வரும் மாலை நேரத்தை எதிர்பார்த்து பகல் நேரத்தின் நீளத்தை மனதில் திட்டிக் கொண்டே இருப்பார்கள். வெளியே காலடிச்சத்தம் கேட்டவுடன் குழந்தைகளின், "அப்பா வந்துட்டாரு” என்ற குரல் எழும். கிழவன் தன் மகனை அழைப்பான். அன்றும் அரிசி போட்டு கொதிக்க வைத்த நீரைக் குடிக்க முடியாது. இரண்டு ராத்தல் மரவள்ளிக் கிழங்கைக் கொண்டு வந்திருந்தான். அதற்குத் தேவையான காசுதான் அன்று கிடைத்தது. அவன் எங்கேயோ அன்று கஞ்சி நீரைக் குடித்தான்... சில நாட்களில், சிறு குழந்தைக்கு ஒரு பிடி சாதத்தை அவன் பொட்டலமாகக் கட்டிக் கொண்டு வருவான். வெறும் கையுடன் திரும்பி வர வேண்டிய நாட்களிலும் அவன் தன்னுடைய தந்தைக்கு காலணாவிற்கு புகையிலை வாங்கிக் கொண்டு வருவான்.

அப்படியே நாட்கள் கடந்தன. ஒரு துண்டு மரவள்ளிக் கிழங்கையோ, உப்பு மட்டுமே போட்ட கொஞ்சம் செம்மீனையோ, சிறிது புண்ணாக்கையோ சாப்பிட்டு நாட்களை ஓட்டி, அந்த வீட்டிற்குள் அன்பு கலந்த உறவுகளைத் தொடர்ந்து காப்பாற்ற முடிய வில்லை. ஒருமுறை வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு, மரணத்தைத் தழுவிவிட வேண்டும் என்று கிழவனுக்குத் தோன்றியது. "இன்றைக்கும் அரிசி கொண்டு வரவில்லை” என்று கூறி, குழந்தைகள் அழுதார்கள். படுத்த இடத்தில் இருந்து எழுந்திருக்க முடியாமல் மனைவி, பிள்ளைகளை வைத்துக் கொண்டு சிரமப்பட்டாள். பகல் முழுவதும் வேலை தேடி அலைந்துவிட்டு வெறும் கையுடன் திரும்பி வர வேண்டிய சூழ்நிலையில் இருந்த வீட்டின் தலைவன், மனைவியையும் பிள்ளைகளையும் தந்தையையும் மனதிற்குள் திட்டினான். அங்கு எப்படிச் செல்வது?

எல்லாரும் இறந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று அவன் நினைத்தான். ஒரு ஆள் சாப்பிடக்கூடிய சோற்றுக்காக அவன் எந்த வேலையையும் செய்வதற்குத் தயாராக இருந்தான். ஆனால், யாருக்கும் வேலைக்காக அவன் தேவைப்படவில்லை. சாகும் நிலையில் இருந்த அவனை வைத்து என்ன வேலை செய்ய முடியும்?

மனைவி கணவனையும், கணவன் மனைவியையும் வெறுத்தார்கள். பிள்ளைகள் சுமையாகத் தெரிந்தார்கள். அந்தக் கிழவன் சாகக் கூடாதா? கிழவனை எடுத்துக் கொண்டால், தான் எந்த அளவிற்கு கஷ்டப்பட்டோம், எப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு ஒரு ஆண் பிள்ளையை வளர்த்தோம் என்பதையெல்லாம் நினைத்துப் பார்த்தான். வயதான காலத்தில் அவனால் பலன் இல்லை என்றாகிவிட்டது. தான் மட்டுமே என்றால் எப்படியும் வாழ்ந்துவிடலாம் என்று வீட்டின் தலைவனுக்குத் தோன்றியது. அந்த சுமைகளைத் தாங்கிக் கொண்டு எப்படிப் போவது? அவனுக்குத் தான் தப்பித்தால் போதும் என்று தோன்றியது.

தன்னுடைய தந்தைக்குத் தேவைப்படுபவற்றைக் கொடுத்து காப்பாற்றி, அந்த வகையில் கடனை மீட்டு, தன்னுடைய பிள்ளை களை வளர்த்து, தன்னுடைய வயதான காலத்தில் இப்போது கொடுக்கும் கடனை திரும்பவும் வாங்கி வாழலாம் என்று மனதில் நினைத்துக் கொண்டிருந்த ஒரு மனிதன் அவன். அவனுடைய திருமணம் ஒரு காதல் திருமணமாக இருந்தது. அவன் பணி செய்த தொழிற்சாலையில் கயிறைக் கொண்டு வந்து விற்பனை செய்து கொண்டிருந்த பெண் அவள்.

ஒருநாள் அந்த வீட்டின் தலைவன் எப்போதும் போல வெளியே சென்றான். வரவில்லை. மறுநாளும் அவனைக் காண வில்லை. பிள்ளைகளுக்கு முத்தம் தந்துவிட்டு அவன் போயிருந்தான். தந்தையிடம் விடை பெற்றுவிட்டுத்தான் சென்றான். மகனைக் காணவில்லை என்பதால், தந்தை தேடிக் கொண்டு போனார். நான்காவது நாள் மூத்த பையனும் அந்த வீட்டை விட்டுச் சென்றான். சில நாட்களில் தாய் மரணத்தைத் தழுவினாள்.

அந்த வகையில் அந்த வீடு சின்னாபின்னமாக ஆகியது. அவர்கள் எல்லாரும் எங்கு போனார்களோ? அவரவர்களின் வேலைகளைப் பார்த்துப் போயிருக்கலாம். ஒவ்வொருவரும் இன்னொரு வரைப் பார்க்காமல் மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கலாம்.

11

ணவுப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் விநியோகத்தை முறைப்படுத்துவதற்கும் என்ற பெயரில் அரசாங்கம் நடைமுறைக்குக் கொண்டு வர திட்டமிட்டிருக்கும் திட்டத்தைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டன. அத்துடன் மாநிலத்தை தொழில் மயமாக ஆக்குவதற்கும் இன்னொரு திட்டம் இருந்தது. இரண்டையும் ஒரே நேரத்தில் செயல் வடிவத்திற்குக் கொண்டு வர அரசு நினைக்கிறது. இந்த திட்டங்களின் செயல்பாடுகளை ஆரம்பிக்கும்போது உணவுப் பற்றாக்குறையும் தொழிலின்மையும் நீக்கப்பட்டுவிடும் என்று அறிவைப் பயன்படுத்தியும் கணக்குகளின் மூலமாகவும் கூறுவதற்கு அரசாங்கத்தால் முடிந்தது.

செய்திப் பத்திரிகைகள் அனைத்தும் அந்த திட்டத்தைப் புகழ்ந்தன. அரசு ஒரு துணிச்சலான காலை முன்னோக்கி வைக்கும் செயல் என்று பாராட்டின. கம்யூனிஸ்ட்டுகள்கூட அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாமல் இல்லை.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel