Lekha Books

A+ A A-

மண்டை ஓடு - Page 23

mandai-odu

12

ரு பெரிய நகரத்தில் இருக்கும் பிச்சைக்காரர்கள் இல்லம். இரவு அதிகமாகவே இருட்டி விட்டது. உலகம் சந்தோஷமான தூக்கத்தில் மூழ்கியிருந்த நேரம். கஷ்டங்களிலும் துயரங்களிலும் இருந்து உயிர்கள் தற்காலிகமாவது தப்பிக்க முடிகிற நேரம்.

ஆனால், பிச்சைக்காரனுக்கு அந்த ஆசீர்வாதமும் இல்லை. நோயும் பசியும்தானே அவனுடைய உறவினர்களாக இருக்கிறார்கள்! அவற்றுடன் அவன் நெருங்கிய உறவு கொண்டிருந்தாலும், தூங்கும்போதுகூட முனகிக் கொண்டும், சொறிந்து கொண்டும், உருண்டு கொண்டும் அவன் இருப்பான். சில நேரங்களில் அவன் பேசவும் செய்வான். மூட்டைப் பூச்சியும் கொசுவும் கரையானும் அவனுடைய முரட்டுத்தனமான தோலைக் கடித்து உடைக்க முடியாது. அவனுடைய பழுத்துப் போன சலம் வழியும் புண்களில் நெளிந்து கொண்டிருக்கும் புழுக்களுடன் எறும்புகள் பெரிய அளவில் போர் நடத்தும்போதுகூட, தூக்கத்தில் அவன் சில நேரங்களில் அந்த இடத்தில் அடித்தான் என்று வரலாம்.

அது உறக்கமா? அதனை உறக்கம் என்று கூறலாமா? உறங்குபவர்கள் அதிர்ஷ்டசாலிகள் அல்லவா? தூக்கம் அதிர்ஷ்டத்தின் ஒரு அடையாளம். அந்த ஓய்வில் இருந்துவிட்டு, கண் விழிக்கும்போது உற்சாகமும் எழுச்சியும் இருந்தால்தானே தூக்கம் என்று கூற முடியும். தூக்கம் ஓய்வுதானே? அப்படிப் படுத்திருப்பதும் அந்த பிச்சைக்காரர்களுக்கு ஒரு கஷ்டமான விஷயம்தான். அது ஓய்வு அல்ல. பிச்சைக்காரர்களின் தூக்கத்திற்கு சுய உணர்வு இல்லாத ஒரு படுத்திருத்தல் என்று சிரமப்பட்டு பெயர் கொடுக்க வேண்டும்.

சந்தோஷத்தின் வெளிப்பாடும் அமைதியும் அந்தக் கட்டிடத்தில் இல்லை. அந்தக் கட்டிடத்திற்குள் இருக்கும் இருட்டின் பக்கங்களில் ஏராளமான மனிதர்கள் சுருண்டு படுத்திருக்கிறார்கள். இடையில் அவ்வவ்போது தாங்க முடியாத புலம்பல்கள், வேதனை கலந்த முனகல்கள், அழுகைகள்... சில நேரங்களில் நள்ளிரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு, குளிரில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் மரங்களை நடுங்கச் செய்யும் விதத்தில் எழும் அலறல்கள்- இப்படித்தான் அங்கு இரவுகள் கழிந்து கொண்டிருக்கின்றன. ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவன் தன்னுடைய மன வலிமையின் காரணமாக பைத்தியக்காரனாக ஆகாமல் வாழ்ந்தான். எப்போதாவது பைத்தியம் பிடிக்க அவனுக்கு சந்தர்ப்பம் வேண்டாமா?

அந்த கட்டிடத்திற்குள், உலகத்தை நடுங்கச் செய்து கொண்டிருக்கும் வாழ்க்கையின் வேதனைகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. அங்கு இருப்பவர்கள் எல்லாரும் பிச்சைக்காரர்களாகவே பிறந்த வர்கள் அல்லவே! எனினும், ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு வாழ்க்கை பற்றிய கதை இருக்கும். வேறுபட்ட ஒவ்வொரு வாழ்க்கைப் பாதையின், சமூக நீதியில் தவறுகளின் சான்றுகள்தான் அங்கு இருப்பவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் உடலில் மட்டு மல்ல- மனங்களில் எந்த அளவிற்குப் பெரிய புண்களைக் காண்பார்கள்!

எல்லாரையும் அன்னைதான் பெற்றெடுத்திருக்கிறாள். பத்து மாதங்கள் சுமந்து, வேதனையைச் சகித்துக் கொண்டு பெற்றெடுக்கப் பட்டவர்கள். ஒரு குழந்தை தேவை என்று நினைக்கும் கொஞ்சல் களிலும் உபசரிப்புகளிலும் சிறிய அளவிலாவது அவர்களுக்கும் கிடைத்திருக்கும். இல்லாவிட்டால் குழந்தையாக இருக்கும்போதே அழிந்து போயிருப்பார்களே! தொடர்ந்து ஒவ்வொருத்தனும் அவனவனின் அனுபவங்களை நடந்து கொண்டே கூறத் தொடங்கினால், இந்த சமூக நீதி தகர்ந்து போய்விடும் என்று கருதி அவர்கள் அனைவரையும் அங்கு அடைத்துப் பூட்டி வைத்திருக்கிறார்கள்.

அந்த கூட்டிற்குள் இருக்கும் முனகல்களுக்கும் வேதனை கலந்த புலம்பல்களுக்கும் மத்தியில், தெளிவான ஒரு உரையாடல் கேட்டது. ஒரு மனிதன் கேட்டான்:

“பரமு, தூங்கிட்டியா?''

“இல்லை.''

“எனக்கு தூக்கம் வரல.''

“எனக்கும் தூக்கம் வரல.''

அவர்கள் இருவரும் எழுந்து உட்கார்ந்தார்கள். ஒரு ஆள் சொன்னான்:

“இந்த கட்டிடத்திற்குள் எப்படிப்பட்ட சத்தங்கள் எல்லாம் கேட்கின்றன. அழுகையும் முனகலும் சத்தங்களும்...''

“அது அப்படித்தான் இருக்கும்'' -பரமு சொன்னான். “நாமும் கொஞ்சம் கண்களை மூடிவிட்டால், வாய்க்கு வந்ததைக் கூற ஆரம்பித்துவிடுவோம். நேற்று நள்ளிரவு தாண்டினப்போ, நீ ஏதோ உளறிக் கொண்டிருப்பதைக் கேட்டேன். "சாத்தா' என்று அழைக்கவோ வயலில் காளையைப் பூட்டவோ- என்னவோ செய்தாய். இடையில் மகனை அழைப்பதையும் ஏதோ வேலை செய்யச் சொல்லிக் கூறுவதையும் கேட்டேன்.''

“நினைவுகள்... பரமு... நினைவுகள்... இந்த நினைவுகள் முழுவதும் மறைந்து போய் விட்டிருந்தால் நல்லா இருந்திருக்கும். நானும் காளைகளைப் பூட்டியவன்தான். நிலத்தில் விவசாயம் செய்தவன்தான். எனக்குப் பணியாள் இருந்தான். அவனுடைய பெயரைத்தான் "சாத்தா” என்று நான் அழைத்தேன். எல்லாம் இருந்தன. அது எதையும் மறக்கவில்லை. கண்களை மூடிவிட்டால் வேதனை கலந்த கனவுதான். என்ன செய்வது? நான் ஒரு கனவு கண்டவன் அல்ல.''

“அது சரிதான்... நானும் கனவு கண்டவன் அல்ல'' -பரமு தொடர்ந்து சொன்னான்: “எனக்கு வேலை செய்தால்தான் தூக்கம் வரும்.''

பரமுவின் நண்பனும் அதை ஒப்புக் கொண்டான். அவர்கள் இருவரும் நல்ல முறையில் அவர்களுடைய காலத்தில் வேலை செய்தவர்கள்.

அவர்கள் தங்களுடைய கடந்து சென்ற வாழ்க்கையைப் பற்றி விளக்கிப் பேசினார்கள். அப்போது பிச்சைக்காரர்களின் பலவீனமான குரலுக்கு பலம் வந்து சேர்ந்தது. அவர்களுக்கும் ஒரு சக்தி உண்டானது. அதைக் கூறுவதும் கேட்பதும் சுவாரசியமான ஒரு விஷயமாக இருந்தது.

கேசவன் சொன்னான்:

“எனக்கு ஒரு புலையன் இருந்தான். சாத்தன்... என்னுடைய நிலத்தின் ஒரு மூலையில்தான் அவன் வாழ்ந்து கொண்டிருந்தான். நாங்கள் பத்து... பதினைந்து தலைமுறைகளாக பணியாளும் தம்புரானுமாக இருந்திருக்கிறோம். அந்தப் பகுதி முழுவதும் காடாகக் கிடந்த காலத்தில் என்னுடைய பெரிய மூத்தவரும், ஒரு புலையனுடன் அங்கு சென்றார்கள். இரண்டு பேரும் சேர்ந்து காட்டை வெட்டி சீர்படுத்தினார்கள். அதற்குப் பிறகு அவர்கள் அங்கேயே வசிக்க ஆரம்பித்தார்கள். அங்கு ஏராளமான புலிகளும் கொசுக்களும் இருந்தன. அங்குள்ள தாழ்வாரத்தை நிலமாக ஆக்கினார்கள். அதற்குப் பிறகுதான் அங்கு மனிதர்கள் வந்தார்கள். பிறகு பிள்ளைகள் வழியாக தம்புரானும் பணியாளுமாக அங்கேயே வாழ்ந்து வருகிறார்கள். நானும் என்னுடைய சாத்தனும் சேர்ந்தால் எப்படிப்பட்ட நிலத்திலும் ரத்தினத்தை விளையச் செய்வோம்.''

பரமு இரவு பகலாக வேலை செய்தவன். அவனும் தன்னுடைய கதையைக் கூறினான். இரண்டு பிள்ளைகளும் ஒரு மனைவியும் தந்தையும் அவனுக்கு இருந்தார்கள். வேலை செய்து அவன் அந்தக் குடும்பத்திற்கு இல்லாமையைக் காட்டிக் கொள்ளாமல் வாழ்க்கையை நடத்தினான். அப்படி வாழ்வதற்கு இரவும் பகலும் பாடுபட்டாலும் போதுமானதாக இல்லை. பாடுபட்டு வளர்த்த தந்தையை வயதான காலத்தில் காப்பாற்ற வேண்டாமா? அப்படி நடந்தால்தானே, அவனுக்கும் வயதாகும்போது அவனுடைய பிள்ளைகள் நாழி நீர் கொடுப்பார்கள். அந்த இரண்டு பிள்ளைகளையும் பெற்றெடுத்தான். அவர்களை வளர்க்க வேண்டியது அவனுடைய பொறுப்புதானே? அதேபோல அவனுடன் வாழ்க்கைக்குள் நம்பி காலை எடுத்து வைத்த மனைவியையும்... ஆசைகளும் கடமைகளும்தான் அவனுக்கு வேலை செய்வதற்கான தூண்டுகோல்களாக இருந்தன. பரமுவிற்கு வாழ்க்கையில் சோர்வு என்ற ஒன்றே தோன்றியதில்லை.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel