Lekha Books

A+ A A-

மண்டை ஓடு - Page 22

mandai-odu

விவசாயம் ஒரு தொழிலாக ஆனதைத் தொடர்ந்து நூற்றாண்டுகளாக விவசாயிகளுக்கும் விவசாய தொழிலாளிகளுக்குமிடையே இருந்து வந்த உறவு தகர்ந்துவிட்டது. முன்பு விவசாயத் தொழிலாளி விவசாயத்தையும் பூமியையும் பாசத்துடன் நினைத்தான். வயலும் விளைச்சலும் அவனுக்கும் விவசாயிக்கும் நெருக்கமானவைகளாக இருந்தன. இன்று? அவன் இத்தனை மணி முதல் இத்தனை மணி வரை வேலை செய்ய வேண்டும். முறையான கூலியை நாணய வடிவில் வாங்கிக் கொள்ள வேண்டும். நெல் கூலியாகக் கிடைத்துக் கொண்டிருந்த காலம் மறந்தே போனது. அறுவடை செய்யும் காலத்தில்கூட ஒரு நெல்மணிக்கும் அவனுக்கு உரிமை இல்லை. நெல் வேண்டுமென்றால், விலைக்கு வாங்கிக் கொள்ள வேண்டும்.

ஆனால், நெல் கிடைக்கும். ஒரு பறைக்கு ஐந்து ரூபாய் விலையாகக் கொடுக்க வேண்டும்.

சிறு விவசாயிகளில் பலரும் விவசாயத் தொழிலாளிகளாக ஆகி விட்டார்கள். எஞ்சியவர்கள் ஊரைவிட்டே போய்விட்டார்கள்.

மக்களுடைய கோபம் அதிகமாகிறது. அது அடுத்த வடிவத்தை அடைந்து கொண்டிருக்கிறது. பெரிய விநியோக சங்கங்களும் விவசாய சங்கங்களும் செய்த கள்ளச் சந்தை விவகாரம் கண்டு பிடிக்கப்பட்டது. அத்துடன் முக்கிய நபர்களான பலரின் பெயர்களும் நாறத் தொடங்கின.

மீண்டும் தொழிலாளர் அமைப்புகள் பலமான எச்சரிக்கைகளை வெளியிட்டன. ஸ்ரீகுமார் அரசாங்கத்தை விமர்சனம் செய்தான். அந்த அரசாங்கத்தை உருவாக்கிய பொதுமக்கள்தான் அதைத் தகர்க்கவும் செய்வார்கள். இந்த நிலை தொடர்ந்து நடப்பதற்கு சம்மதிக்க மாட்டார்கள்.

தொழிலாளிக்கும் முதலாளிக்குமிடையே உண்டான கருத்து வேறுபாடு, மாநிலமெங்கும் மீண்டும் ஒரு பிரச்சினையாக மாறியது. விவசாயத் தொழிலாளிகளும் வேலை நிறுத்தம் செய்தார்கள். மாநிலம் மிகவும் வேகமாக ஸ்தம்பிக்கும் நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.

ப்ரஜா பரிஷத்துக்கும் தன்னுடைய அரசாங்கத்தைப் பற்றிக் குறை கூற வேண்டிய சூழ்நிலை வந்தது. பரிஷத்தின் பல முக்கிய நபர்களின் ஈடுபாடுகள் ஆபத்திற்குள்ளாயின. அது மட்டுமல்ல- ஒரு பிரிவினருக்கும் திருப்தி உண்டாவதாக இல்லை. இப்படிப் போனால் அடுத்த தேர்தலை பரிஷத்தால் எப்படி சந்திக்க முடியும்?

அடுத்த சட்டமன்றம் கூடுகிறபோது, அமைச்சரவை பதவி இல்லாமல் போய்விடும் என ஒரு வதந்தி ஊரெங்கும் பரவிக் கொண்டிருந்தது. அமைச்சரவைக்கு ஆதரவு தருவதற்கு யாருமே இல்லை. அமைச்சரவையின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறிக் கொண்டார்கள்.

சட்டமன்றம் கூடியது. சட்டசபை பார்வையாளர்களால் நிறைந்திருந்தது. உள்ளே இடம் இல்லாததால், நிறைய ஆட்களுக்கு நுழைவதற்கான வாய்ப்பு தரப்படவில்லை. அந்த மூலையில் தனக்கு எதுவுமே தெரியாது என்பதைப் போல அப்பிராணியாக ஒதுங்கி உட்கார்ந்திருக்கும் ஒரு மனிதர்தான் நம்பிக்கையில்லா தீர்மானத் தைக் கொண்டு வருகிறார்.

சபை ஆரம்பித்தவுடன் கேள்விகளும் பதில்களும் தொடங்கின.

அமைச்சரவைக்கு முதல் தடவையாக பதில் கூற வேண்டியிருந்த கேள்வி இதுதான்:

"கண்டமாரிலிருந்து மறைந்தோடிய கம்யூனிஸ்ட்டுகள், மாநிலம் முழுவதும் கிராமங்கள் கிராமங்களாக பரவி ரகசியமாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற விஷயம் அரசாங்கத்திற்குத் தெரியுமா?'

தெரியாது என்று அரசாங்கம் பதில் கூறியது. தொடர்ந்து கிளை கேள்விகள்:

"எவ்வளவு கம்யூனிஸ்ட்டுகள் தப்பித்திருக்கிறார்கள்?'

பதில்: "தெரியாது!'

கேள்வி: "தப்பித்திருக்கிறார்களா?'

பதில்: "தெரியாது!'

கேள்வி: "தப்பித்துப் போயிருந்தால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?'

பதில்: "தெரியாது!'

அந்த சூழ்நிலையில் தலைவரின் வேண்டுகோளை ஏற்று ஒரு அமைச்சர் ஒரு சொற்பொழிவை ஆற்றினார். கடந்த அரசாங்கத்தின் திறமைக்குறைவின் விளைவுதான் கண்டமார் சம்பவம் என்றும்; கம்யூனிஸ்ட்டுகளின் ரகசிய செயல்பாடுகள் மாநிலத்தில் ஆரம்பித் திருக்கின்றன என்ற விஷயம் சமீபத்தில் அரசாங்கத்தின் கவனத்திற்கு வந்திருக்கிறது என்றும்; உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அரசாங்கம் எடுக்க இருக்கிறது என்றும் அவர் கூறினார். பொது மக்களின் சுதந்திரத்திற்கு மிகப் பெரிய மதிப்பு தரும் அரசாங்கம் முன்கூட்டியே எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்ததற்கு பொதுமக்கள் மன்னிக்க வேண்டும் என்று தொடர்ந்து அவர் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.

பரிஷத் கட்சியில் இல்லாத ஒரு உறுப்பினர் கேட்டார்: "ஒரு புரட்சிவாதியும் உண்மையான கம்யூனிஸ்ட்டுமான ஸ்ரீகுமாரை கைது செய்யாததற்குக் காரணம் - அவருடைய செல்வாக்கிற்கு பயந்தா, அல்லது முன்பு ப்ரஜா பரிஷத்தின் செயற்குழுவில் உறுப்பினராக இருந்தார் என்பதற்காகவா?'

தலைவர் அந்தக் கேள்வியை அனுமதிக்கவில்லை. இன்னொரு உறுப்பினர் சில ஆட்களின் பெயர்களைக் கூறிவிட்டு, "அவர்களின் பெயரில் கள்ளச்சந்தை நடத்தியதாகக் குற்றச்சாட்டுகள் உண்டான பிறகும் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்கான காரணம்- அவர்கள் ப்ரஜா பரிஷத்தின் உறுப்பினர்களாக இருந்ததும் முக்கிய நபர்களாக இருந்ததும்தானே?' என்று கேட்டார். அந்தக் கேள்வியையும் தலைவர் அனுமதிக்கவில்லை.

இன்னொரு கேள்வி எல்லாவற்றையும்விட முக்கியமானதாக இருந்தது. புதிய விவசாய சங்கங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அமைச்சருக்கும் எத்தனை பங்குகள் வீதம் இருக்கின்றன என்பதே அந்தக் கேள்வி. அமைச்சரவை உருவானதற்குப் பிறகு, புதிய தொழில் கொள்கையின்படி எத்தனை தொழிற்சாலைகள் உண்டாகி இருக்கின்றன என்பதும் அதில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அமைச்சருக்கும் உள்ள உரிமைகள் என்ன என்பதும் இன்னொரு கேள்வியாக இருந்தது.

அப்போது சபை மதிய உணவிற்காகப் பிரிந்தது. மதிய உணவிற்குப் பிறகுதான் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வாத, எதிர் வாதங்களுக்காக எடுக்க இருக்கிறார்கள்.

சபை மதிய உணவிற்காகப் பிரிந்தபோது, அமைச்சரவையின் ஒரு அவசர கூட்டம் கூடியது. அது மிகவும் ரகசியமாக நடத்தப்பட்டது. அவையின் காலை வேளை போக்கைப் பார்த்ததில் அவர்களுடைய கட்சியேகூட அவர்களை ஆதரிப்பதாக இல்லை.

அமைச்சரவைக் கூட்டம் முடிந்து, சட்டமன்றக் கட்டிடத்தை விட்டு அமைச்சர்கள் வெளியே வந்தபோது, வெளிவாசலில் ஒரு பிச்சைக்காரி படுத்து மரண மூச்சை விட்டுக் கொண்டிருந்தாள். அவளை அங்கு யாரோ இழுத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

மதியத்திற்குப் பிறகு மீண்டும் அவை கூடியது. கடுமையான காவலும் கட்டுப்பாடும் இருந்தன. நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் வெளியே போராட்டம் நடக்கும்.

தலைவர் தன்னுடைய இடத்தில் வந்து அமர்ந்தார். என்ன ஒரு முழுமையான அமைதி! நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வருவதற்காக வந்திருந்த உறுப்பினரை தலைவர் அழைத்தார். அவரை எல்லாரும் சுவாசத்தை அடக்கிப் பார்த்துக் கொண்டிருந் தார்கள்.

அந்த மதிப்பு மிக்க உறுப்பினர் எழுந்து, குறிப்பிட்ட அந்த தீர்மானத்தைக் கொண்டு வர தான் விரும்பவில்லை என்று கூறினார்.

சூழ்நிலையின் இறுக்கம் எவ்வளவு விரைவாக இல்லாமல் போனது!

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel