Lekha Books

A+ A A-

மண்டை ஓடு - Page 18

mandai-odu

“என்னடா மகனே, சொற்பொழிவு?''

தந்தை வெளியே வந்தான். பாலசந்திரனுக்கு வெட்கம் வந்து விட்டது. அவன் ஓடி மறைந்துவிட்டான். நளினி கேட்டாள்.

“எனினும், அவன் சொன்னதைக் கேட்டீங்களா?''

“கேட்டேன்.''

“அப்பா செய்ததைப் பற்றித்தான் மகன் கூறுகிறான்.''

“அந்த சொற்பொழிவாளர்கள் யாரோ கூறியதை அவன் பின்பற்றிக் கூறுகிறான். பாவம்... குழந்தை...''

“ஆமாம்... ஆனால், அவன் சொன்னது உண்மைதானே?''

“என்ன உண்மை? போர் நடக்கும் இடத்தில் என்னவெல்லாம் நடக்கின்றன என்று உனக்குத் தெரியுமா? கண்டமாரில் அப்படி எதுவும் நடக்கவில்லை. நான் அனுமதிக்கவில்லை!''

“எனினும், எனக்கு சில நேரங்களில் தோன்றியிருக்கிறது- அதெல்லாம் தவறானவை என்று. அங்கு இறந்தவர்கள் கூறுவதிலும் உண்மைகள் இருக்கின்றன. இந்த மகா பாவங்களுக்கு நீங்கள்தான் முழுமையாக பதில் கூற வேண்டும்!''

“பட்டாளக்காரனுக்கு பாவ புண்ணியங்களைப் பற்றி பார்க்க முடியாது. அவன் உத்தரவுகளைப் பின்பற்றுகிறான். அவ்வளவுதான். அதனால்தான் எனக்கு இவ்வளவு சீக்கிரம் பதவி உயர்வு கிடைத்தது!''

“அது சரி... ஆனால், அங்கு மரணமடைந்தவர்களின் பிள்ளை கள் பழிக்குப் பழி வாங்காமல் இருப்பார்களா?''

“ஓ... பழிக்குப் பழி...! பேசாமல் இரு. உனக்கு என்ன பைத்தியமா?''

“இருந்தாலும்... கவனமா இருக்கணும். இந்த மண்டை ஓட்டுக்கு சொந்தக்காரனின் மகன் இங்கே பிச்சை எடுத்துக் கொண்டு திரியவில்லை என்று எப்படித் தெரியும்? அவனுக்கு வாழ்க்கையில் வேறு எந்த இலக்கும் இல்லையென்றால்... நாம் கவனமாக இல்லாமல் இருக்கும்போது ஆபத்து வருவதற்கு நீண்ட நேரம் தேவையில்லை. நான் இந்தப் பிச்சைக்காரர்களைப் பார்த்து பயப்படுகிறேன். கண்டமாரில் இருந்துதான் இவர்கள் எல்லாரும் வருகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அங்குள்ள இழப்பின் எச்சங்களாக இருக்க வேண்டும்.''

அடுத்து வந்த ஒரு நாளன்று பாலசந்திரன் பள்ளிக்கூடத்திற்குச் சென்றபோது, அங்குள்ள அவனுடைய நண்பர்கள் இங்குமங்குமாக தனித்தனியாக உட்கார்ந்திருந்தனர். அன்று அவர்கள் படிப்பு நிறுத்தம் செய்கிறார்கள். கோஷங்கள் கொண்ட ஊர்வலமும் இருந்தது. அவன் கோஷங்களை நன்கு கற்று வைத்திருந்தான். பால சந்திரன் தன்னுடைய நண்பர்களிடம் சொற்பொழிவு ஆற்றினான்.

“அந்த கம்யூனிஸ்டின் மண்டை ஓடு என்னுடைய வீட்டில் இருக்கிறது!''

அன்று மாணவர்களில் சிலர் அவனுடைய வீட்டிற்கு வந்தார்கள். கம்யூனிஸ்டின் மண்டை ஓடு ஒரு குறிப்பிடத்தக்க காட்சிப் பொருளாக இருந்தது.

10

பொதுமக்களின் போராட்டத்தின் பலனாக அரசாங்கம் தகர்ந்து போய்விடும் என்ற சூழ்நிலை உண்டானது. மாநிலமே அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டது. பொதுமக்களின் தலைவர்களுடன் அரசாங்கம் பேச்சு வார்த்தை நடத்தியது.

ஸ்ரீகுமாரின் குரல் அப்போதும் கேட்டுக் கொண்டிருந்தது. ராஜினாமா எண்ணம் முன்னால் இருக்கும்போதெல்லாம் அவனுக்கு கூறுவதற்கு சில விஷயங்கள் இருந்தன.

சட்டசபை புறக்கணிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் விஷயத்தில் ஈடுபாடு இருக்கிறது என்ற நிலை வந்தது. போராட்டம் பின் வாங்கப்பட்டது.

தேர்தல் வந்தது. ப்ரஜா பரிஷத்தின் பல முக்கிய தலைவர்களும் சட்டமன்றத்திற்குள் வந்தார்கள். அவர்கள் எல்லாரும் ஊரில் உள்ள பெரிய நிலச்சுவான்தார்களாகவும் வர்த்தகர்களாகவும் தொழிலதிபர் களாகவும் இருந்தார்கள். அந்தப் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திய நாயகர்கள் அரசாங்க காரியங்களைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

புதிய அரசாங்கம் மாநிலம் முழுவதும் மிகப் பெரிய கொண்டாட்டங்களுடன் ஆரம்பமானது. எல்லா இடங்களிலும் பொதுக்கூட்டங்களும் சொற்பொழிவுகளும் நடந்தன. இனிமேல் அந்த மாநிலத்தை அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களே ஆளப்போகிறார்கள். புதிய அரசாங்கத்தின் நோக்கங்கள் வெளிப்படையாகக் கூறப்பட்டது. பரவாயில்லை. அவை அனைத்தும் நல்லவையாகவே இருந்தன.

அந்த சொற்பொழிவுகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் மத்தியில் அப்போதும் ஒரு சத்தம் உரத்த குரலில் கேட்டுக் கொண்டிருந்தது. அது அந்த இளைஞனுடையதுதான். ஸ்ரீகுமார் அன்றும் சொன்னான்:

“எதிர்காலம் எங்களை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை நாங்கள் பார்க்கிறோம். மன்னிக்க வேண்டும். எங்களுக்கு உங்களைப் பற்றி சந்தேகம் இருக்கிறது. கண்டமாரின் கொலையாளிகளை நீங்கள் கண்டுபிடித்து தண்டனை அளிப்பீர்களா? கடந்த போராட்டத்தின் போது மாநிலத்திற்கு சேவை செய்த மாணவர்களின் தலையை அடித்து உடைத்தவர்களை நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அப்பிராணி விவசாயிக்கும் தொழிலாளிக்கும் என்ன செய்யப் போகிறீர்கள்? முதலாளியையும் நிலச்சுவான்தாரையும் நீங்கள் எப்படிக் கையாளப் போகிறீர்கள் என்பதைப் பார்க்கிறோம். அதிகரித்து வரும் வேலையின்மை, உணவுப் பற்றாக்குறை ஆகியவை உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் என்பது உங்களுக்குத் தெரியுமா?''

இப்படிச் சென்ற அவனுடைய சொற்பொழிவு, பலமான ஒரு எதிர்க்கட்சியை, அமைச்சர்களின் பிள்ளைகளும் மருமகன்களும் சேர்ந்து உண்டாக்கியிருக்கிறார்கள் என்பதையும் கூறி எச்சரித்தது. அது இப்படி நிறைவடைந்தது:

“கம்யூனிஸ்ட் பாவிகள் என்று நீங்கள் முத்திரை குத்துபவர்களும், பசிக்கு உணவும் படுப்பதற்கு இடமும் மட்டுமே கேட்டதற்கு மரணத்தைத் தழுவிய கண்டமாரின் ஆயிரக்கணக்கான மனிதர்களின் ஆன்மாக்களும் எங்களுக்குத் தூண்டுகோலாக இருக்கும்!''

அந்த அறிவிப்பிற்கு அமைச்சரவை பதில் கூறியது. சட்டம், சமாதானம் ஆகியவற்றை நிலை நிறுத்துவதற்கு ஒவ்வொரு அரசாங்கமும் அந்தந்தக் காலத்தில் நடவடிக்கைகள் எடுக்கும். அன்று அதிகாரத்தின் கட்டளைப்படி செய்யும் செயல்கள் சற்று கட்டுப் பாட்டை மீறி இருந்தாலும், தண்டனைக்குரியவை அல்ல. கண்ட மாரில் மரணத்தைத் தழுவியவர்களைப் பற்றி அரசாங்கமும் கனிவு மனம் கொண்டு பார்க்கிறது என்றாலும், அவர்கள் கெட்ட நோக்கங்கள் கொண்டவர்களின் நட்புக்குள் சிக்கிக்கொண்டு வழி மாறிச் சென்றுவிட்டவர்கள். விவசாயி, தொழிலாளி ஆகியோரின் நிலைமை களை அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலித்துக் கொண்டிருக்கிறது. நிலச்சுவான்தாரும் முதலாளியும் மாநிலத்தின் பொருளாதார உயர்வுக்கு காவல்காரர்களாக இருக்கிறார்கள் என்று அரசாங்கம் நம்புகிறது. உணவுப் பற்றாக்குறையைச் சந்திப்பதற்கு ஒரு பரவலான திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருகிறது. பூமியைத் துண்டு துண்டாக வைத்துக் கொண்டு விவசாயம் செய்வதால் உற்பத்தி குறைகிறது. அதற்குப் பரிகாரமாக கூட்டுறவு சங்கங்களின் மூலம் விவசாயத்தை நடத்த விரும்புகிறது... திறமை அதிகம் தேவைப்படும் செயல்களுக்கு அறிவுரை கூறிக் கொண்டிருக்காமல், ஒத்துழைப்பு அளிக்கும்படி அரசாங்கம் எல்லா கட்சிகளையும் கெஞ்சி கேட்டுக் கொள்கிறது.

அந்த வகையில் நரம்புகளின் போருடன் அரசாங்கம் ஆரம்பமானது. அமைச்சர்கள் மாநிலத்தின் கார்களில் அப்படியே மாநிலமெங்கும் பயணித்துக் கொண்டிருந்தார்கள். வாழ்த்து மடல்களும் தேநீர் விருந்துகளும் டின்னர்களும் முறைப்படி நடந்து கொண்டிருந்தன. மாதங்கள் பல கடந்தும், அது முடிவுக்கு வரவில்லை. பத்திரிகைகளுக்கு இடம் போதவில்லை.

பலப்பல புதிய விஷயங்களையும் நடைமுறைக்குக் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாகத் தகவல் பரவிவிட்டிருந்தது. தினமும் காலையில் ஒரு புதுமையைப் பற்றிய செய்தியைக் கேட்டுக் கொண்டு மட்டுமே மாநிலம் கண்விழித்துக் கொண்டிருந்தது. இந்தப் புதிய திட்டங்கள் அனைத்தும் செயல் வடிவத்திற்கு வந்தால் இந்த மாநிலம் என்ன ஆகும் என்று ஆட்கள் அச்சப்பட்டார்கள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel