Lekha Books

A+ A A-

மண்டை ஓடு - Page 14

mandai-odu

அப்போது நளினி நினைத்தாள்- அந்த விரல்கள் ஒரு பெண்ணின் உடலைத் தழுவியிருக்குமோ என்று. ஒரு குழந்தையை அந்தக் கைகள் வாரி எடுத்திருக்குமா? மூக்கின் இடத்தில் இருந்த அந்த துவாரத்தின் வழியாகப் பாசம் கலந்த மூச்சுடன் அந்தக் குழந்தையை முத்த மிட்டிருப்பானா?

அவன் எதற்காக துப்பாக்கிக்கு நேராகப் போய் நின்றான்? துப்பாக்கி குண்டு பட்டபோது, அவனுக்கு வலி உண்டாகவில்லையா?

கண்டமார் கிராமத்தில் வெளிப்படுத்தப்பட்ட தைரியம், தன் கணவன் கூறியதைப் போல ஒழுங்கே இல்லாத காட்டெருமையின் பாய்ச்சலாக இருந்தது என்று நளினிக்குத் தோன்றவில்லை. அங்கு இறந்தவர்கள் எல்லாரும் மனிதர்களாக இருந்தனர். துப்பாக்கி குண்டு பாய்ந்தால் மரணத்தைத் தழுவுவோம் என்பதைத் தெரிந்திருக்கும் மனிதர்கள். துப்பாக்கி குண்டு பாய்ந்து ஒன்றோ இரண்டோ பத்தோ பதினைந்தோ பேர்கள் இறக்கும்போதெல்லாம் மற்றவர்களுக்கும் அப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தாலும், அனுபவ அறிவு கிடைத்திருக்கக் கூடிய மனிதர்கள்! குண்டு பாய்ந்து ஏராளமானவர்கள் வீழ்ந்த பிறகும், அவர்களுடைய படையில் பிளவு என்பதே உண்டாகவில்லை. அப்படியென்றால்- அவர்கள் மிருகங்களைப் போல இறந்து கொண்டிருந்தார்களா?

அங்கு நடைபெற்றது மிருகத்தனமான மனிதர்களுடைய ஆக்கிரமிப்பாக இல்லை. பட்டாளத்தைப் பற்றி அவளுடைய கணவன் விளக்கிக் கூறியபோது, அங்கு அந்த மாதிரி புரண்டு புரண்டு விழும்போது துப்பாக்கி குண்டை ஏற்றுக்கொள்வார்கள் என்றும், அடுத்த நொடியே இறந்து விழுந்துவிடுவோம் என்ற முழுமையான உணர்வுடன் பாய்ந்து சென்று படையின் இடைவெளியைச் சரி செய்யப் பார்ப்பார்கள் என்றும் கூறினானே. அதை ஒரு உற்சாகத்துடன்... இறப்பதற்கான உற்சாகம்... கண்டமாரில் இறந்ததும் அப்படித் தான். அவர்களும் வெற்றி பெறுவதற்காகப் பாய்ந்து உள்ளே வந்தார்கள்.

அவர்கள் வெற்றி பெற்றிருந்தால்...? அப்படி நடந்திருந்தால், அவளுடைய கணவனின் மண்டை ஓடும் கை எலும்புகளும் இதேபோல அந்த மண்டை ஓட்டின் சொந்தக்காரனின் வரவேற்பறையின் வாசலுக்கு மேலே வைக்கப்பட்டிருக்கும்.

எல்லாரின் மண்டை ஓடுகளும் இதே மாதிரிதான் இருக்கும். அது ஒரு தாயின் வயிற்றுக்குள் சிறிய எலும்புகளுடன் கருவாக உருவானது தான். அந்த வகையில் ஒரு மண்டை ஓடு நளினியின் வயிற்றுக் குள்ளும் உருவம் எடுத்துக் கொண்டிருக்கிறது.

நளினி அந்த மண்டை ஓட்டின் சொந்தக்காரனைப் பார்க்க ஆரம்பித்தாள். அவனை சட்டையும் வேட்டியும் அணிந்து அல்ல- பட்டாள ஆடைகளுடன்! அவளுடைய மனக்கண்கள் அப்படித்தான் பார்த்தன. சீவி சீராக்கப்பட்ட தலைமுடி, பிரகாசமான கண்கள், மீசை- இப்படி ஒரு இளைஞன். ஆனால், அவனுடைய எலும்புக் கூட்டையும் பார்க்க முடிந்தது.

அவனிடம் சிலவற்றைக் கேட்கவும் தெரிந்துகொள்ளவும் நளினி விரும்பினாள்.

மேலும் சில மாதங்கள் கடந்த பிறகு, ஒரு புத்திசாலி ஆண் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு அவள் அந்த மண்டை ஓட்டையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். அப்போதும் அவளுக்குப் புதிய புதிய விஷயங்கள் அதைப் பற்றி நினைப்பதற்கு இருந்தன.

அந்த மண்டை ஓட்டின் முடிவு என்னவாக இருக்கும்? அது எப்போதும் அதே இடத்தில் இருந்து கொண்டிருக்குமா? அந்த மண்டை ஓட்டை ஒட்டிக்கொண்டிருக்கும் இதர விஷயங்கள் காலப்போக்கில் பிரிந்து போய் விடாதா? தலைப்பகுதியில் இருக்கும் துண்டுகளை இணைக்கும் பற்கள் எந்தச் சமயத்திலும் விலகிப் போகாதா? அந்த மூட்டுகள் பிரியாமல் இருக்குமா?

அவளுடைய குறும்புத்தனம் கொண்ட சிறுவனும் மண்டை ஓட்டைப் பார்க்கவும், சிரிக்கவும், பயமுறுத்துவதைப் போல பற்களைக் கடிக்கவும் செய்து கொண்டிருந்தான். மண்டை ஓடு அவனைப் பார்த்து, முடிவே இல்லாமல் பல் இளிப்பைத் தொடர்ந்து கொண்டிருந்தது.

ராஜசேகரன் அவனைத் தூக்கிப் படங்கள் அனைத்தையும் காட்டுவான். அப்போது அவன் கம்யூனிஸ்டின் தலையையும் காட்டுவான். அந்தப் படங்கள் அனைத்தையும் பார்ப்பதைப் போலவே கம்யூனிஸ்டின் தலையையும் அவன் பார்த்துச் சிரிப்பான். அது குழந்தைக்கு ஒரு விளையாட்டுப் பொருளாக இருந்தது.

பேச ஆரம்பித்தபோது, தன்னைத் தூக்கிக் கொண்டு போய் கம்யூனிஸ்டின் தலையைக் காட்டும்படி அவன் தந்தையிடம் பிடிவாதம் பிடிப்பான். கம்யூனிஸ்டின் பற்கள் மிகவும் நீளமாக இருக்கின்றன என்று அவன் கூறுவான். மூக்கும் வாயும் ஒன்றாக அமைந்த ஒரு பிச்சைக்காரியை ஒருமுறை பார்த்து, அது கம்யூனிஸ்டின் முகத்தைப் போல இருக்கிறது என்று அவன் கூறியிருக்கிறான்.

பாலசந்திரன் கம்யூனிஸ்டின் மண்டை ஓட்டைத் தொட்டுப் பார்த்தான்.

அதைப் பார்த்த நளினி சொன்னாள்:

“அவனுக்கு பயமே இல்லையே! அவனைத் தூக்கிக் கொண்டு போய் தொட வைப்பதற்கு ஒரு தந்தை வேறு...''

ராஜசேகரன் சொன்னான்:

“அவன் பட்டாளக்காரனின் மகன். அவனுக்கு மண்டை ஓட்டைப் பார்த்து பயமில்லை. அவன் அதைத் தொட்டுப் படிக்கட்டும்.''

“அப்படின்னா அவனும் பட்டாளக்காரனா ஆகணும்னு சொல்றீங்களா?''

“ஆமாம்.''

“சரிதான்... நல்லாத்தான் இருக்கு.''

“ம்... என்ன?''

“நான் என்னுடைய தலையெழுத்தைப் பற்றி நினைத்துப் பார்த்தேன்.'' நளினி சிரித்தாள். “இனி மகன் கொண்டு வரும் மண்டை ஓடுகளை வைத்து இந்த சுவர் முழுவதும் நிறையும். பல அளவுகளிலும் எடைகளிலும் வடிவத்திலும் உள்ள மண்டை ஓடுகளின் ஒரு கண்காட்சி மையமாக இந்த வீடு இருக்கும்.''

அது தமாஷுக்காகக் கூறப்பட்ட விஷயம் என்று கணவனுக்குத் தோன்றியது. அவன் சொன்னான்:

“அந்த மண்டை ஓடுகள் அனைத்தையும் கொண்டு வந்து வைப்பதென்றால், இடம் போதவே போதாது.''

நளினி இறுதியாகச் சொன்னாள்:

“எது எப்படி இருந்தாலும் அவன் ஒரு பட்டாளக்காரனாக ஆவதை நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன்.''

8

கோபத்திற்கு ஆளான பேஷ்காரும் டிப்பார்ட்மெண்ட் மேலதிகாரியும் ஊர்க்காரர்கள்தானே? அவர்களுக்கு சில விஷயங்களைச் செய்ய முடியாமல் இருக்குமா?

புதிய விநியோக கமிஷனரின் உற்சாகமான ஆட்சி ஆரம்பமானது. விவசாயிகள் நசுங்கத் தொடங்கினார்கள். ரேஷன் வர்த்தகர்கள் மாட்டிக்கொண்டு தவித்தார்கள். ஏராளமான திருட்டு வர்த்தகங் களையும் மறைத்து வைத்தல்களையும் கண்டுபிடித்து வழக்கு போட்டார். முகத்தைப் பார்க்காமல், பல பெரிய மனிதர்களின் அலுவலகங்களுக்கும் "சீல்” வைத்தார். கீழ் வேலை செய்யும் ஊழியர்கள் பலரும் தண்டிக்கப்பட்டனர். அதன் மூலம் ரேஷன் நிலைமை சற்று சீரடைந்தது. இந்த உற்சாக நடவடிக்கை எதற்கோ? யாருக்குத் தெரியும்?

ஒரு விஷயம் உண்மை.

மாநிலத்தில் நல்ல நிலையில் இருந்தவர்கள் எல்லாரும் கவலைப்பட ஆரம்பித்தார்கள். அவர்களுடைய கோபம் அதிகரித்துக் கொண்டிருந்தது. இந்தச் சூழ்நிலை அரசாங்கத்திற்கு எதிரான ஒரு போராட்டத்திற்குப் போதுமானது என்று யாருக்கும் புரியும்.

பேஷ்காரின் மருமகன் ப்ரஜா பரிஷத்தின் தலைமைப் பிரிவில் ஒரு முக்கிய நபராக இருந்தார். அவர் ஒரு அட்வகேட்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel