Lekha Books

A+ A A-

மண்டை ஓடு - Page 12

mandai-odu

கவுமுதியின் உறுதியான நம்பிக்கையைப் பற்றி அவர் ஆச்சரியப்பட்டார். ஒருவேளை, அந்த நம்பிக்கை தெய்வீகமான அருளின் வெளிப்பாடாக இருக்கலாம். அவர் பிரைவேட் செகரட்டரியையும் பிரதம அமைச்சரையும் போய் பார்த்தார். கவலைகளை வெளியிட்டார். நியாயத்தைப் பார்த்துச் செய்வதாக பிரதம அமைச்சர் பதில் சொன்னார். ஆனால், பிரதம அமைச்சர் ஒரு கேள்வி கேட்டார்:

“அந்தப் பதவியை நீங்கள் என்ன காரணத்திற்காக விரும்புகிறீர்கள்? பொறுப்புகள் அதிகமாக இருக்கும். இப்போது உங்களுக்கு கிடைக்கக்கூடிய சம்பளம்தான் கிடைக்கும்.''

செகரட்டரி ஒரு நிமிட நேரத்திற்கு நெளிந்தார். என்ன பதில் கூறுவார்? தன்னுடைய நோக்கங்கள் வெளியே தெரிந்துவிட்டன என்று அவர் பயப்பட்டார். இருந்த பதவியும் போய்விட்டது. ஆனால், அடுத்த நிமிடம் ஒரு பதில் நாக்கில் உதயமானது.

“இந்த வேலையைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்று தோன்றுகிறது. அதனால்தான்.''

“ஓஹோ! இருக்கட்டும்... நியாயப்படி செய்வோம்.''

பிரைவேட் செகரட்டரியின் கைகளால் தாங்கப்பட்டு, அவருடைய மடியில் சாய்ந்து கிடந்து கொண்டு செகரட்டரியின் மனைவி கொஞ்சினாள்.

“அதை நிறைவேற்றித் தரணும். அது எனக்கும் அவருக்கும் அல்ல.''

பிரைவேட் செகரட்டரி கேட்டார்:

“பிறகு யாருக்காக?''

“அது... அது புரியவில்லையா? இல்லாவிட்டாலும்... இந்த ஆண்கள் எல்லாரும் அப்படித்தான். அன்பே இல்லாதவர்கள்...''

கவுமுதியின் கன்னத்தில் முகத்தை வைத்துக் கொண்டு, அவளை மார்புடன் சேர்த்து வைத்துக் கொண்டு பிரைவேட் செகரட்டரி சொன்னார்:

“இப்படி அர்த்தத்தை வைத்துக் கொண்டு சொன்னால் எனக்குப் புரியாது.''

அந்த அணைப்பின், முத்தத்தின் இன்பத்தில் மூழ்கிப் போய் பாதி திறந்த கண்களுடன் அவள் சொன்னாள்:

“உங்களுடைய குழந்தைக்காக... இந்த வயிற்றில் இருக்கும் என்னுடைய கடைசி குழந்தைக்காக... எங்களுக்கு சம்பாத்தியம் எதுவும் இல்லை!''

அவருடைய கைகள் இறுகின. கவுமுதியின் கைகள் அவருடைய கழுத்தை வளைக்க, அந்த முத்தம் அழுத்தமாகப் பதிந்தது. அதுதான் அந்த வேண்டுகோளுக்கு பதிலாக இருந்தது.

காரியம் நிறைவேறிவிட்டது என்று கவுமுதி நம்பினாள். தன்னுடைய சொந்தக் குழந்தைக்காக அந்த அளவிற்காவது அவர் செய்யாமல் இருப்பாரா?

ஆனால், அப்படி எங்கெங்கெல்லாம் அவருக்கு குழந்தைகள் இருக்கின்றன?

மாநிலத்தின் முக்கிய விவசாயிகளையும் வர்த்தகர்களையும் ஒவ்வொருவராக பிரதம அமைச்சர் அழைத்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அது எதற்கு என்று யாருக்கும் தெரியாது. உணவுப் பொருட்களின் விநியோகப் பிரிவை மறுசீரமைக்கப் போவதாக தகவல் பரவிவிட்டிருந்தது. அத்துடன் அதன் தலைமைப் பொறுப்பில் இருப்பவரின் நியமனமும் செயலாக்கமும்.

அப்படி யூகங்கள் பல விதத்திலும் உலாவிக் கொண்டிருந்தபோது, ஒரு அதிகாலை வேளையில் அந்தப் பதவியில் ஆளை நியமித்த அறிவிப்பு வெளியானது. அதுவரை சஸ்பென்ஷனில் இருந்த விலாசினியின் கணவரை அந்த இடத்திற்கு நியமித்திருந்தார்கள்.

சில பெரிய ஒப்பந்தங்களில் லஞ்சம் வாங்கினார் என்ற காரணத்திற்காக அவரின்மீது ஒரு வெளிப்படையான விசாரணை நடந்து கொண்டிருந்தது. அந்த விசாரணையின் தீர்ப்பும் வெளியாகி விட்டது. அவரின்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்பது நிரூபணமாகியிருக்கிறது.

அவருடைய திறமையைப் பற்றி யாருக்கும் நம்பிக்கையில்லாமல் இல்லை. நிறைய படித்திருக்கும் மனிதர். அப்படிப்பட்ட ஒரு மனிதரை அந்த முக்கியமான பதவியில் நியமித்ததற்காக அரசாங்கத்தைப் பாராட்டி பத்திரிகைகள் தலையங்கங்கள் எழுதின.

அந்த பேஷ்கார் ஒரு மாதிரி ஆகிவிட்டார். அந்த டிப்பார்ட் மெண்ட்டின் மேலதிகாரிக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்ற தகவல் நகரம் முழுக்கப் பரவியது. கவுமுதி தன் கணவரை கணக்கு பார்க்காமல் திட்டினாள்.

“அரைக் காசு கையில் இல்லாமல், பதவி உயர்வு இல்லாமல் நீங்க இருப்பதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இப்படியே உட்கார்ந்து பைத்தியம் பிடிச்சு செத்துடுவீங்க. ஆம்பளைன்னா சொரணை இருக்கணும்.''

பாவம்! அவர் என்ன செய்வார்? எனினும் அவர் சொன்னார்:

“அவர் நல்ல தொகையைக் கொடுத்திருக்கிறார். அதற்கு நம்மிடம் பணம் இருக்கிறதா?''

“பணம் இல்லையென்றால், கடன் வாங்கணும். பிறகு அந்தக் கடனை அடைக்கணும்.''

“அதற்கு நீ சம்மதிச்சிருப்பியா?''

அந்தப் பெண்ணின் கடுமையான ஏமாற்றம், அந்த நியாய வாதங்கள் எதனாலும் சாந்தமாவதாகத் தெரியவில்லை. செகரட்டரி புரிந்து கொண்டிருப்பதைவிட அந்த ஏமாற்றம் ஆழமாக வேர் விட்டதாகவும், பலம் கொண்டதாகவும் இருந்தது. அதை அவர்மீது காட்டாமல் வேறு எங்கு போய் காட்டுவது?

அடுத்து வந்த ஒரு நாளன்று நகரத்திலிருந்த ஒரு முக்கியமான ரெஸ்ட்டாரெண்டின் மேல் மாடியில் ஏமாற்றத்திற்குள்ளான பேஷ்காரும் டிப்பார்ட்மெண்ட்டின் மேலதிகாரியும் செகரட்டரியும் ஒன்றாகச் சேர்ந்து இரண்டு மூன்று புட்டிகளை காலி பண்ணிவிட்டு உட்கார்ந்திருந்தார்கள். ஒரு முழு புட்டியும் பாதி நிறைந்த கண்ணாடிக் குவளைகளும் மேஜைமீது இருந்தன.

பேஷ்கார் எழுந்து, கால் தரையில் உறுதியாக நிற்காமல் நின்று கொண்டு கூற ஆரம்பித்தார்:

“என்னுடைய அனைத்தும் முடிந்து போய்விட்டது- அனைத் தும். எல்லாமும் இல்லாமல் போய்விட்டது. இனிமேல் ஒரு காசுகூட இல்லை. அந்த மகாபாவி எனக்கு அந்தப் பதவியைத் தரவில்லை. அதற்காக என்னிடம் வாங்கியதையும் தரவில்லை. நான் பணத்தைக் கேட்டதற்கு அவன் கேட்கிறான்- அது நான் லஞ்சம் வாங்கி சம்பாதித்ததுதானே என்று. என்னுடைய லஞ்சத்தைப் பற்றி அவன் விசாரணை நடத்தியிருப்பான் போல! நான்...''

பேஷ்காரின் கண்கள் இருண்டன. அவர் விரல்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. பிறகு, தொடர்ந்து சொன்னார்:

“எனக்கு மேலே பூமியும்... கீழே வானமும்... நான்... நான்.''

மேஜை மீதிருந்து அவர் தன்னுடைய கண்ணாடிக் குவளையை எடுத்தார். டிப்பார்ட்மெண்ட்டின் மேலதிகாரிக்கு கோபம் வரவில்லை. அழுகைதான். அவர் பரிதாபமான குரலில் சொன்னார்:

“நான் கடன்காரனாக ஆகிவிட்டேன். என் தெய்வமே! நான் கடன்காரனாக ஆகிவிட்டேனே!''

செகரட்டரியின் மனதிற்குள்ளிருந்து ஒரு குற்றச்சாட்டு தயங்கித் தயங்கி வெளியே வர முயற்சித்தது. ஆனால், அது வெளியே வரவில்லை.

“எனக்கும்... எனக்கும்... என் மரியாதை... பும்...''

குடித்தது முழுவதையும் அவர் வாந்தி எடுத்துவிடுவார் என்பதைப் போல தோன்றியது.

அந்தக் கண்ணாடிக் குவளைகள் காலியானவுடன் அந்த அறையிலேயே கட்டளையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு நின்றிருந்த ஹோட்டலின் பணியாள் புட்டியின் கார்க்கை திறந்து கொடுத்தான். அரை குவளை வீதம் ஊற்றியவாறு பேஷ்கார் கேட்டார்:

“இதற்கு என்ன பரிகாரம்?''

அவர் ஆழமாக யோசித்தார். வேலை போனால் போகட்டும். ஒவ்வொருவரும் தங்களுடைய அனுபவங்களை விளக்கிக் கூறி ஒவ்வொரு அறிக்கையையும் எழுத வேண்டும். அது அவரவர்கள் தங்களின் முகத்திலேயே கரியைத் தேய்த்துக் கொண்டதைப் போல இருக்கும். எனினும், பரவாயில்லை.''

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel