Lekha Books

A+ A A-

மண்டை ஓடு - Page 8

mandai-odu

நளினிக்கு எப்படியாவது அங்கிருந்து தப்பித்தால் போதும் என்றிருந்தது. ஆனால், அந்த மண்டை ஓட்டிற்குக் கீழே உள்ள இடத்தின் வழியேதான் அவள் உள்ளே செல்ல முடியும். அந்த வாசலைத் தாண்டி உள்ளே நின்று கொண்டு ராஜசேகரன் திரும்பியவாறு சொன்னான்:

“வா... என்ன அங்கேயே நின்னுட்டே? இது உன்னுடைய வீடு. உனக்காகக் கட்டி அலங்கரிக்கப்பட்டது. உள்ளே வருவதற்கு ஏன் தயங்குகிறாய்?''

அவன் வந்து அவள் தோளில் கையை வைத்துப் பிடித்துக் கொண்டு நடந்தான். அந்த வாசலுக்குக் கீழே வந்தபோது, மேலே இருந்து ஒரு குளிர்ச்சியான காற்று அவளுடைய தலையின் மீது திடீரென்று பட்டது. முழு உடலும் மரத்துப் போய்விட்டதைப் போல அவளுக்குத் தோன்றியது. உடம்பு முழுவதும் நடுங்கியது. அவள் வியர்வையில் குளித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய மூச்சுக்காற்று மிகவும் வெப்பத்துடன் காணப்பட்டது.

அந்தக் கணவன் அவளுடைய தோளில் கையைச் சுற்றி, அவளுடைய நெற்றியில் முத்தமிட்டான். அவன் சொன்னான்:

“இது என்னுடைய செல்லத்தின் வீடு.''

அன்று இரவு நளினிக்கு உறக்கமே வரவில்லை. அவளுக்கு அருகிலேயே அவளுடைய கணவன் படுத்து உறங்கிக் கொண்டிருந் தான். நீல நிறத்தில் இருந்த சுவரும் மேற்கூரையும், படுக்கையறையின் மங்கலான குத்து விளக்கின் பிரகாசத்தில் அவளுக்கு ஏதோ போல் தோன்றியது. தான் பூமியில் இருக்கவில்லை என்றும்; ஏதோ ஒரு பயங்கரமான மாய உலகத்தில் இருக்கிறோம் என்றும்; அருகில் படுத்திருப்பது யாரென்று தெரியவில்லை என்றும் அவளுக்குத் தோன்றியது. அவளால் மூச்சு விட முடியவில்லை. உடுக்கைச்சத்தம் ஒலிப்பதைப் போல் நளினிக்குத் தோன்றியது. அந்தக் கைகள் விடுதலை பெறுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. மேலே கூரையில் ஒரு நிழல் தெரிந்தது. விரல்களின் அந்த நீளமான எலும்புகள்.

அவளுக்கு உரத்த குரலில் அழ வேண்டும் போல இருந்தது. ஆனால் சத்தம் வெளியே வரவில்லை. அவளுக்கு எழ வேண்டும் போல இருந்தது. ஆனால் உடல் ஒத்துழைக்கவில்லை. அவளுக்கு மூச்சு அடைத்தது. நாக்கு வறண்டு போய்விட்டதைப் போல தோன்றியது. எனினும் அவள் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு படுத்திருந்தாள்.

எப்படியோ சற்று திரும்பிப் படுக்க அவளால் முடிந்தது. அப்படி சிறிது அசையவில்லையென்றால் அவள் மரத்துப்போய் இறந்திருப்பாள். அப்படியா! என்ன ஒரு நிம்மதி? அவளுக்கு உயிர் இருக்கிறது. ஆனால் அவள் யாரையோ தொட்டுக் கொண்டு படுத்திருக்கிறாள்.

“நளினி, நீ உறங்கவில்லையா?''

அது மனிதக் குரல் இல்லை. அவளால் பேச முடியவில்லை.

“உனக்கு குளித்திருப்பதைப் போல வியர்க்கிறதே?''

ராஜசேகரன் எழுந்து உட்கார்ந்தான்.

அவன் அவளுடைய முகத்தில் நீரைத் தெளித்தான். பருகுவதற்கு நீர் கொடுத்தான்.

தான் ஒரு கனவு கண்டதாக அவள் சொன்னாள்.

மறுநாள் அவள் தன் கணவனிடம் அந்த மண்டை ஓட்டைப் பற்றிக் கேட்டாள். அவன் அவளைப் பற்றியவாறு வரவேற்பறைக் குச் சென்றான்.

அப்போதும் அந்த வாசலைத் தாண்ட வேண்டும்.

அந்த மண்டை ஓட்டிற்கு முன்னால் போய் நின்று கொண்டு அதை நோக்கி விரலை நீட்டியவாறு அவன் சொன்னான்:

“இது யாருடைய மண்டை ஓடு என்று உனக்குத் தெரியுமா?''

அந்தப் பக்கம் பார்க்க அவளால் முடியவில்லை. அந்த அளவிற்கு அச்சத்தை உண்டாக்கக் கூடிய பல் இளிப்பு அது! அது யாருடைய மண்டை ஓடாக இருந்தாலும், அதன் உரிமையாளர் ஒரு மனிதனாக இருந்தான் என்பதை அவளால் நம்ப முடியவில்லை.

அவன் தொடர்ந்து சொன்னான்:

“ஒரு பட்டாளக்காரன் வாழ்க்கையின் வெற்றிச் சின்னங்கள் இவை. இந்த மண்டை ஓடுகளும் கை எலும்புகளும் அவனுடைய பெருமையை வெளிப்படுத்துகின்றன. அவன் வெற்றி பெற்றான் என்பதற்கான ஆதாரங்கள் இவை. பார்... இந்த மண்டை ஓடு உன்னுடைய கணவனின் மிகப் பெரிய சம்பாத்தியம்...''

நளினி அந்தப் பேச்சைக் கேட்கவில்லை. அவள் எதுவும் பேசவும் இல்லை. திருமணம் ஆகாமல் இருந்தபோது, அவளுடைய கனவுகள்- அன்பு செலுத்தக் கூடியவனாகவும் அழகான தோற்றத் தைக் கொண்டவனாகவும் இருக்கக்கூடிய ஒருவன் தனக்குக் கணவ னாக வர வேண்டும் என்பதாக இருந்தன. அவளுடைய கணவன் நல்ல தோற்றத்தைக் கொண்டவன்தான். அன்பு செலுத்தக் கூடியவனாக வும் இருந்தான். ஆனால், அவன் ஒரு பட்டாளக்காரனாக இருந்தான்! ஒரு மனிதனின் மனைவியாக இருந்தால்... -இப்படித்தான் அவளுக் குத் தோன்றியது.

ராஜசேகரன் சிரித்துக் கொண்டே தொடர்ந்து சொன்னான்:

“ஒரு பட்டாளக்காரனின் மனைவியாக இருக்கும் பட்சம், சில விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வாழ்க்கையே ஒரு வகையானது... உனக்கு அதெல்லாம் புரியும்.''

அந்த மண்டை ஓட்டைப் பார்த்து அவன் மனதில் ஆனந்தம் அடைவதைப் போல தோன்றியது.

“உன் கணவனுக்குப் பதவி உயர்வு மட்டுமல்ல- புகழும் மதிப்பு மிக்க கேடயங்களையும் பிற பரிசுகளையும் சம்பாதித்துக் கொடுத்தது இந்த மண்டை ஓடுதான்.''

அதற்குப் பிறகும் அவள் பேசவே இல்லை. அவன் தொடர்ந்து சொன்னான்: “இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த அந்தப் புகழ் பெற்ற தொழிலாளர்களின் போராட்டத்தை நீ நினைத்துப் பார்த்ததுண்டா?''

ஆமாம்... அதை அவள் நினைத்துப் பார்க்கிறாள். பத்திரிகையில் வாசித்திருக்கிறாள். மாநிலத்தையே மிகவும் பயங்கரமாக நடுங்க வைத்த அந்தப் போராட்டத்தைப் பற்றி அவள் அந்த சமயத்தில் ஆர்வத்துடன் வாசித்திருக்கிறாள்.

“அந்தப் போராட்டத்தை நசுக்குவதற்காகச் சென்ற ராணுவத்தின் தலைவன் ஒருவேளை... அவன் உன்னுடைய கணவனாக இருப்பான் என்று நீ நினைத்திருக்கவே மாட்டாய். அப்படித்தானே?''

அவள் கவலையுடன் புன்னகைத்தாள்.

“அந்தப் போராட்டத்தின் தலைவன் சுப்பிரமணியத்தின் தலைதான் இது. அந்தக் கைகள் அவனுடையவைதான். நான்தான் இந்தக் கைகளால் அவனை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினேன். அடடா! அந்த நாளை நினைக்கும்போது... அது மறக்கவே முடியாத நாள்... சம்பவங்களின் போக்கு சற்று மாறிவிட்டிருந்தால், என்னுடைய மண்டை ஓடு அவனுடைய வீட்டின் சுவரில் இருந்திருக்கும். நாங்கள் முழுமையாக அழிந்து போய் விட்டிருப்போம். பார் நளினி... என்னுடைய உடலில் இருக்கும் உரோமங்கள் எழுந்து நிற்கின்றன.''

அந்த நாளன்று நடைபெற்ற சம்பவங்களைப் பற்றி அவன் விளக்கிச் சொன்னான். என்ன ஒரு கதை அது! அந்த மண்டை ஓட்டின் சொந்தக்காரன் உண்மையாகவே சொல்லப்போனால் ஒரு பிசாசாகத்தான் இருந்திருக்கிறான். அவள் கேட்டாள்:

“எனினும், அந்த மண்டை ஓட்டை எதற்கு இங்கே வைக்க வேண்டும்?''

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel