Lekha Books

A+ A A-

மண்டை ஓடு - Page 6

mandai-odu

வீட்டின் தலைவர் கை குலுக்கி அவர்களை வரவேற்று, அறையில் அமர வைத்தார். விருந்து ஆரம்பிக்கும் வரையில் விருந்தினர் அங்கு சிகரெட் புகைத்துக் கொண்டும் வெற்றிலை போட்டுக் கொண்டும் தமாஷாகப் பேசிக் கொண்டும் உட்கார்ந்திருந்தார்கள். முக்கிய விருந்தாளி வந்து சேரவில்லை.

ப்ரஜாபரிஷத்தின் முக்கிய நபர் வந்ததும், எல்லாரும் எழுந்து அவரை வரவேற்றார்கள். நல்ல உயரத்தையும் பருமனையும் கொண்ட ஒரு மனிதராக அவர் இருந்தார். முகத்தில் பிரகாசமும் கம்பீரமும் உயர்ந்த நிலையும் விளையாடிக் கொண்டிருந்தன. அவர் ஒரு வழக்கறிஞராகவும் பெரிய தொழில்கள் சிலவற்றை நடத்திக் கொண்டிருப்பவராகவும் ஒரு நிலச்சுவான்தாராகவும் இருந்தார். மாநிலத்திற்காக ஏராளமான தியாகங்களைச் செய்திருக்கிறார்.

தலைவர் ஆசனத்தில் அமர்ந்தவுடன் மீதி இருந்தவர்களும் அமர்ந்தார்கள். அவருடைய வருகையைத் தொடர்ந்து சொற்பொழிவிற்கு ஒரு உயிர்ப்பு உண்டானது. தலைவர் தன்னுடைய நிலைக்கு ஏற்றபடி புன்னகையுடன் ஒவ்வொரு விஷயத்தையும் கூறிக் கொண்டிருந்தார். அங்கு அப்போது நடந்து கொண்டிருந்த சொற்பொழிவு, சர்வதேச அளவில் நிலவிக் கொண்டிருந்த பெரிய விஷயங்களைப் பற்றியதாக இருந்தது.

ஒரு விவசாயி இனிமேலும் போர் உண்டாகுமோ என்று கேட்டான். தலைவர் அதற்கு "இல்லை” என்று பதில் கூறினார். ஆனால் சோவியத் ரஷ்யாவின் பலத்தை மேலும் அதிகரிக்கக் கூடாது. கம்யூனிசத்தையும் சோஷலிசத்தையும் நாடுகள் ஒன்றாகச் சேர்ந்து நசுக்கவில்லையென்றால், போர் உண்டாகும் என்றார். சீனாவின் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தைப் பற்றிக் கருத்து கூறும்போது அது ரவுடிகளின் அமைப்பு என்றார் அவர். உணவுப் பற்றாக்குறையைப் பற்றிப் பேசும்போது சமீப காலத்தில் அதைப் போக்க முடியாது என்று அவர் கூறினார். நெல்லின் விலை அதிகரிக்கவே செய்யும் என்றார். தொடர்ந்து அந்த சொற்பொழிவு மாநிலத்தின் அரசியல் நிலைமையைப் பற்றித் திரும்பியது. ஒரு போராட்டம் அவசியம் தேவைப்படுகிறது. அதற்கு ப்ராஜாபரிஷத் தயாராகிக் கொண்டு இருக்கிறது. முழுமையான சொற்பொழிவாற்றும் திறமையுடன், ஒரு அவையைச் சந்திப்பதைப் போல தலைவர் அரசியல் நிலைமையைப் பற்றி உரையாற்றினார். அவர் இப்படிக் கூறினார்:

“இந்த நாசம் பிடித்த ஏகாதிபத்தியத்திடமிருந்து மாநிலத்தைக் காப்பாற்ற வேண்டும். நாம் நம்முடைய பிள்ளைகளிடம் விளக்கிக் கூற வேண்டிய ஒரு சூழ்நிலை இது. இந்த சந்தர்ப்பத்தை இழந்துவிட்டால் ஒரு நூற்றாண்டு காலத்திற்கு எதுவும் செய்ய முடியாது. அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். கைப்பற்றியே ஆக வேண்டும்!''

அந்தச் சூழ்நிலையில் மேஜர் ராஜசேகரனும் அவருடைய அலுவலகத்தில் உள்ள அலுவலர்களும் பிற அதிகாரிகளும் அங்கு வந்து சேர்ந்தார்கள். தலைவர் உட்பட முக்கிய மனிதர்கள் எழுந்து வரவேற்றார்கள். அந்தப் பட்டாள அதிகாரி தலைவரிடம் கேட்டார்:

“என்ன சார்? அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்றா கூறுகிறீர்கள்?''

தலைவர் சற்று வெளிறிப் போய்விட்டார். அப்போதும் ராணுவ ஆட்சி முடிவடையவில்லை என்று அவருக்குத் தெரியும். ஒரு வாரம் ஆன பிறகே அது முடிவுக்கு வரும். அவருடைய அந்த வார்த்தைகளை அடிப்படையாக வைத்து, வேண்டுமென்றால் இப்போது மேஜர் அவரைக் கைது செய்யலாம். எனினும், அவருக்கு பயமில்லை. பல தடவை சிறைக்குச் சென்றிருக்கிறார். அவர் மன்னிப்புக் கேட்கிற தொனியில் சொன்னார்:

“இல்லை... இந்த மாநிலத்தில் மக்களின் போராட்டம் ஆரம்பமாகப் போகிறது என்பதைச் சொன்னேன்.''

அந்த அறிவிப்பு ஒரு தைரியமான அறிவிப்பாக இருந்தது. மேஜர் சொன்னார்:

“பேசணும் சார்.... பேசணும். பேச்சுதான் தேவையற்ற தொல்லைகளை உண்டாக்குகின்றது. இங்கே பார்த்தீர்கள் அல்லவா? நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம். எங்களுக்குத்தான் பிரச்சினையே. இங்கே இரண்டு வருடங்களாகக் கிடந்து கஷ்டப்படுகிறோம். எல்லாவற்றுக்கும் பேச்சுத்தானே காரணம்?''

தலைவர் பதில் சொன்னார்:

“இப்படிப்பட்ட பிரச்சினைகள் எங்களுடைய அமைப்பில் இல்லை. இங்கு இறந்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். அவர்களுடைய நம்பிக்கைக் கொள்கையே வன்முறைதான். நாங்கள் வன்முறை இன்மையையும் அகிம்சையையும் நம்புகிறோம். நாங்கள் மகாத்மா காந்தியைப் பின்பற்றுபவர்கள்.''

“யாருடைய தொண்டர்களாக இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, சார். நீங்களும் பிரச்சினைகளை உண்டாக்குபவர்கள் தான்!''

தலைவர் தங்களுடைய நிலையை விளக்கிக் கூறுவதற்காக படாதபாடு பட்டார். மேஜருக்கு அப்படி ஒரு தவறான எண்ணம் இருப்பது ஆபத்தானது. அவர் சொன்னார்:

“இல்லை சார்... நாங்களும் கம்யூனிஸ்ட்டுகளும் எதிர் எதிரானவர்கள். அவர்கள் எங்களுடைய விரோதிகள்.''

விருந்திற்கு அழைத்தவர் வந்து வரவேற்பறையில் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாகக் கூறினார். விருந்தாளிகள் எழுந்தார்கள்.

அலங்கரிக்கப்பட்டிருந்த சாப்பிடும் மேஜையைச் சுற்றிலும் விருந்தாளிகள் எல்லாரும் போய் உட்கார்ந்தார்கள். சாப்பாடும் குடியுமாக அந்த விருந்து ஆரம்பமானது.

அது ஒரு நீண்ட நிகழ்ச்சியாக இருந்தது. முக்கிய விருந்தாளிகளின் நல்ல உடல் நிலைக்காக பானத்தை அருந்தியவாறு, விருந்தை ஏற்பாடு செய்தவருக்காக அந்தப் பொது மக்களின் தலைவர் சொற் பொழிவாற்றினார். அந்த சொற்பொழிவை அவர் இப்படி நிகழ்த்தினார்:

“உயிருக்கும் சொத்துக்கும் பாதுகாப்பு இல்லாமல் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையில் கிடந்து சிரமப்பட்டபோது, இது போன்ற சந்தர்ப்பங்களில் இந்து தர்மம் உயிர்களுக்கு ஆறுதலாக இருப்பதைப் போல, நீங்கள் தர்ம அமைப்பிற்காக எங்களுக்கு மத்தியில் தோன்றினீர்கள். ஆமாம்... கம்யூனிஸ்ட் அரக்கர்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றிய உங்களை ஒரு அவதாரமாக இந்த ஊரின் எதிர்காலத் தலைமுறை நினைக்கும். இந்த சந்தர்ப்பத்தில் உங்களுடைய மனதிற்குள் இப்போது நிலவிக் கொண்டிருக்கிறது என்று நான் நம்பும், தவறான அர்த்தங்களுக்கு காரணமாக இருக்கக்கூடியதுமான ஒரு தவறான எண்ணத்தைப் பற்றி மேலும் இரண்டு வார்த்தைகள் கூறிக் கொள்கிறேன். ப்ரஜா பரிஷத் வன்முறையின்மை, அகிம்சை, மனிதாபிமானம், சகோதரத்துவம் ஆகிய உயர்ந்த கொள்கைகளின்மீது கட்டப்பட்டிருக்கும் ஒரு அரசியல் அமைப்பு. அதன் செயல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. ப்ரஜா பரிஷத்தின் தலைவர்களின் சொற்பொழிவுகள் அதை உறுதிபடத் தெளிவாக்கு கின்றன. உங்களுக்கு நல்ல உடல் நிலை நீடிக்கட்டும்.''

மேஜர் ராஜசேகரன் சமூக சிந்தனையுடன் பதில் சொற்பொழிவு நடத்தினார். ப்ரஜா பரிஷத்தைப் பற்றி அவர் எதுவும் கூறவில்லை. தலைவருக்கு மனதில் சிறிது வருத்தம் இருந்தது. பட்டாளக்காரர்.... என்ன செய்வார்? அவருக்கு தவறுகள் உண்டாகி இருக்கலாம்.

அந்த நேரத்தில் விருந்து முடிந்து, பட்டாளக்காரர்கள் நீளமான கூடத்தில் பல பிரிவுகளாக வட்டமாக உட்கார்ந்து நகைச்சுவையாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். விருந்து மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel