Lekha Books

A+ A A-

மண்டை ஓடு - Page 10

mandai-odu

அந்த வகையில் அவர்களுடைய உரையாடல் வேறு சில அதிகாரிகளையும் அவர்களுடைய மனைவிகளையும் பிள்ளைகளையும் பற்றி நடந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு பேஷ்காரின் இளைய மகள் யாருக்குப் பிறந்தது என்று தெரியுமா? போலீஸ் உயர் அதிகாரியின் நல்ல காலம் கிட்டத்தட்ட முடிவடைந்ததைப் போலத் தான். இன்னொரு டிப்பார்ட்மெண்டின் தலைவர் இப்போது அந்த வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்படி ஆட்சியைப் படைத்துக் கொண்டிருக்கும் முக்கிய நபர்களைப் பற்றியெல்லாம் அந்த அதிகாரிகளின் மனைவிமார்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். இறுதியில் விலாசினி சொன்னாள்:

“இப்போதைய காலத்தில் ஒரு விஷயம்தான் இருக்கிறது. எப்போது பதவி போகும் என்பதே தெரியாது.''

அதுவும் உண்மைதான் என்று எல்லாரும் ஒப்புக் கொண்டார்கள். யாரையும் எப்போதும் எதற்காகவும் எதுவும் செய்யலாம்! யாரும் கேள்வி கேட்க முடியாது. யாரிடம் கூறுவது?

மிகவும் சமீபத்தில் ஒரு நாள் பிரதம அமைச்சரின் இல்லத்தில் நடக்கப் போகும் புல்வெளி விருந்திற்கு கவுமுதியின் கணவருக்கும் அழைப்பு கிடைத்திருந்தது. அனைத்து பெரிய பதவியில் இருப்பவர் களுக்கும் அழைப்பு இருந்தது. அவர்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் அழைத்திருந்தார்கள். அவர் வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம் கூறினார்.

“நீ புல்வெளி விருந்திற்கு வருகிறாயா?''

கணவரின் எண்ணத்தைத் தெரிந்து கொள்வதற்காக அந்தப் பெண் அவருடைய முகத்தையே பார்த்தாள். அவர் சொன்னார்:

“எல்லாரும் வருவாங்க. நீயும் வர்றதா இருந்தால் வா.''

மனைவி கேட்டாள்:

“வரவில்லையென்றால், அதனால் பிரச்சினை வருமா?''

“அதுவும் உண்டாகலாம். எப்படித் தெரிந்து கொள்வது? முதல் தடவையாகப் பெண்களை அழைத்திருக்கிறார்கள். அந்த நிலையில், நான் கலந்து கொண்டு என்னுடைய மனைவி கலந்து கொள்ளவில்லை என்ற விஷயம் பெரிதாக ஆகலாம். அது ஒரு மீறலாகவும் நினைக்கப்படலாம்.''

“அய்யோ... அப்படியென்றால் நானும் வந்திடுறேன்.''

“ஆமாம்... விசாரிக்கிறேன்.''

தொடர்ந்து அவர் நடத்திய விசாரணையில் தலைநகரில் இருக்கும் அனைத்து அதிகாரிகளும் அவர்களுடைய மனைவிகளும் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டார். பெண்கள் கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கம் இருக்கிறது. அந்த நிலையில் போகாமல் இருக்க முடியாது.

அன்றிலிருந்து அந்த தம்பதிகள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தார்கள். வெளியே காண்பிப்பதற்கு ஏற்ற நகைகள் எதுவும் தன்னிடம் இல்லை என்று அந்தப் பெண் குறைப்பட்டுக் கொண்டாள். உண்மைதான் என்று அவருக்கும் தெரியும். ஆனால், திடீரென்று நகைகளைத் தயார் பண்ண முடியுமா? அது இருக்கட்டும். நல்ல ஆடைகள் இருக்கின்றனவா? இப்படிப்பட்ட முக்கியமான நிகழ்ச்சிகளில் அணியக்கூடிய வகையில் ஒரு புடவைகூட இல்லை.

அவர் சொன்னார்: “புடவை வேண்டாம் என்று வைத்துக் கொள்ள வேண்டும். கிராமத்து பாணியில் அங்கு போக வேண்டும்.''

“பிறகு?''- கவுமுதி கேட்டாள்: “என்ன, எனக்குப் புடவை அணியக்கூடிய வயது தாண்டி விட்டதா? என்னால் அப்படிப் போக முடியாது. அப்படியென்றால் நான் தயார் இல்லை.''

அவர் சொன்னார்:

“நான் சொன்னது அதுவல்ல. கிராமத்து பாணியில் நீ ஆடைகள் அணிந்து நடப்பதுதான் அழகானது என்று எனக்கு எப்போதும் தோன்றியிருக்கிறது. அதுதான் எனக்கு விருப்பம்.''

“அதற்காக நான்கு பேர் கூடும் இடத்தில் அப்படிப் போக என்னால் முடியாது.''

அவளைப் புடவையிலேயே அழைத்துச் செல்வதாக அவர் ஒப்புக் கொண்டார்.

குறிப்பிட்ட அந்த நாள் வந்து சேர்ந்தது. அன்று அவளுக்கு ஒரே பரபரப்பாக இருந்தது. இளமையாக இருந்த அந்தக் காலத்தில் நடந்த திருமண நாளன்றுகூட அவள் அந்த அளவிற்கு பதை பதைப்புடன் இருந்ததில்லை. எவ்வளவு மணி நேரங்கள் செலவழித்து அலங்கரித்தும், அது முடிவடையவில்லை. எதுவுமே சரியாக வரவில்லை. ஒரு பதினாறு வயது கொண்ட பெண்ணைப்போல அழகுபடுத்திக் கொண்டால், அது பொருத்தமாக இருக்காது என்பது புரிந்தது. நாற்பது வயது உள்ள பெண்ணாக அலங்காரம் செய்து கொண்டால்- அது முதுமையை வெளிப்படுத்தக் கூடிய அடையாளமாக இருக்கும். எனினும், அவள் ஒரு வகையில் கணவரின் "நேரமாயிடுச்சு... நேரமாயிடுச்சு...” என்ற அவசரப்பாட்டிற்கு மத்தியில் அலங்கரித்துக் கொண்டு வெளியேறினாள். திருப்தி உண்டாகவில்லை.

கவுமுதியின் இதயம் எப்படித் துடித்துக் கொண்டிருந்தது தெரியுமா? அங்கு என்ன நடக்கப் போகிறது என்று அவளுக்குத் தெரியாது. அது அவளுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான சம்பவமாக இருந்தது. அங்கு சென்றால், எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவளுடைய கணவர் சொல்லிக் கொடுத்திருந்தார். எனினும், அப்படியெல்லாம் நடக்க முடியுமா? என்னவோ? நடந்து கொள்வது சரியாக இல்லையென்றால்... எல்லா வற்றையும் அவள் நினைத்துப் பார்த்தாள். மாநிலத்தையே "கிடுகிடு”வென்று நடுங்க வைத்துக் கொண்டிருக்கும் அசாதாரணமான புத்திசாலித்தனமும் திறமையும் கொண்டவர் என்ற பெயரைப் பெற்றிருக்கும் ஒரு ஆட்சி அதிகாரியுடன் நேரடியாக அவள் அறிமுகமாகப் போகிறாள்.

வெளி வாசலைக் கடந்து அவளுடைய கார் உள்ளே நுழைந்தது. விசாலமான ஒரு புல்வெளி. ஆங்காங்கே தலை நகரத்தின் முக்கிய பதவியில் இருப்பவர்களும் அவர்களுடைய மனைவிமார்களும் நின்றிருந்தார்கள்.

மனைவியும் கணவரும் கீழே வந்தார்கள். அவர் முன்னாலும் அவள் பின்னாலும் இறங்கி காலடியை எடுத்து வைத்தபோது பிரதம அமைச்சரின் தனிச் செயலாளர் வந்து அவரிடம் கைகளைக் குலுக்கினார்.

கணவர் மனைவியை அறிமுகப்படுத்தினார். தனிச் செயலாளர் உற்றுப் பார்த்தார். அவர் சொன்னார்:

“நான் பார்த்திருக்கிறேன்ல?''

“இல்ல...''

கவுமுதியின் கண்கள் அந்தப் புல்வெளியில் இருந்த சீஃப் செகரட்டரியின் மனைவியை ஆராய்ந்து கொண்டிருந்தன. ஒரு அசோக மரத்திற்குக் கீழே தனியாக அந்தப் பெண் நின்று கொண்டிருந்தாள். ஓ! அவள் எப்படியெல்லாம் தன்னை அலங்கரித்துக் கொண்டிருக்கிறாள்! தங்க நிறத்தில் இருக்கும் நூல்களால் உண்டாக்கப்பட்ட புடவை!

ஹிரண்மயி கவுமுதிக்கு அருகில் ஓடி வந்தாள். அவளும் அழகு படுத்திக்கொண்டதில் பின்னால் இல்லை.

கவுமுதிக்கு அறிமுகமில்லாத சில பெண்களும் வந்திருந்தார்கள். ஹிரண்மயி அவர்கள் எல்லாரும் யார் என்று கூறி அறிமுகப்படுத்தி வைத்தாள்.

பாரிஜாதத்திற்குக் கீழே பிரைவேட் செகரட்டரி ஒரு இளம் பெண்ணுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.

கவுமுதி கேட்டாள்:

“அது யார் ஹிரண்மயி?''

“அது ஒரு புதிய ஆள். ஒரு பேராசிரியரின் மனைவி. சமீபத்தில்தான் திருமணம் நடந்தது.''

“அசோக மரத்திற்குக் கீழே பார். நான் சொன்னது பொய்யா? மர பொம்மைதானே? என்ன தனியா நிற்கிறாள்?''

“தனியா இல்லை. பிரைவேட் செகரட்டரி இதுவரை அங்கேதான் இருந்தார்.''

புதிய புதிய விருந்தாளிகள் வந்து கொண்டே இருந்தார்கள். பிரைவேட் செகரட்டரி மிகவும் சுறுசுறுப்புடன் செயலாற்றிக் கொண்டிருந்தார்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel