Lekha Books

A+ A A-

மண்டை ஓடு - Page 13

mandai-odu

செகரட்டரிக்கு அதில் அந்த அளவிற்குத் திருப்தி இல்லை. அவர் சொன்னார்:

“எனக்கு உண்டான இழப்பை அறிக்கையில் கொண்டு வர முடியாது. நான் உரையாற்ற மாட்டேன்.''

டிப்பார்ட்மெண்ட்டின் தலைவர் சொன்னார்:

“அதுதான் தவறு. நமக்குள் ஒற்றுமையில்லை.''

செகரட்டரிக்கு ஒரு புத்திசாலித்தனமான எண்ணம் தோன்றியது.

“ப்ரஜா பரிஷத்காரர்களையும் பிடிக்க வேண்டும். அதுதான் நல்லது.''

அதுதான் சரி என்பதை பேஷ்காரும் ஒப்புக் கொண்டார். அந்த வகையில் ஒரு தீர்மானம் நிறைவேறியது.

சிறிதுகூட தாமதிக்காமல் உயர்ந்த பதவிகள் இருக்கும் மையங்களில், குற்றச் செயலான ஊழல் -ஆட்சியின் தலைவருக்கு தனிப்பட்ட முறையில் எதிராக இருக்கும் ஒரு சதிச் செயல் ஆகியவற்றின் உறைவிடமான ஒரு குழுவைக் கண்டு பிடித்திருப்பதாக அரசாங்கத்தின் அறிவிப்பு ஒன்று வெளியானது. அந்தக் குழுவைப் பற்றி விசாரணை நடந்து வருகிறது. அந்த விசாரணையின் விளைவு சில சீனியர் அதிகாரிகளைக்கூட பாதிக்கும் என்று ஒரு பத்திரிகைக் குறிப்பு கூறியது. அது இப்படி முடிந்தது:

“அரசாங்கம் ஊழலுக்கு மன்னிப்பு அளிக்காது. அதே போல அதிகாரத்தை மீறுவதும் மன்னிக்கக் கூடியது அல்ல.''

சில நாட்களுக்குப் பிறகு பேஷ்காரை தரம் தாழ்த்தியதாகவும், டிப்பார்ட்மெண்ட் மேலதிகாரியை சஸ்பெண்ட் செய்ததாகவும் உள்ள செய்தி வெளியே வந்தது. செகரட்டரி சில குழப்பங்களை உண்டாக்க இருப்பதாகத் தகவல் வந்தது. தொடர்ந்து பல கதைகளும் நகரத்தில் உலாவின. விநியோக கமிஷனருக்கான பதவி நியமனம் நடந்த மறுநாள் பிரைவேட் செகரட்டரிக்கும் பேஷ்காருக்குமிடையே அடிதடி நடந்ததாகக் கூறப்படுகிறது. அதை ஊழியர்கள் கேட்டிருக்கின்றனர். இப்படிப் பல கதைகளும்...

பேஷ்காருக்கு ஒரு சந்தேகம் இருந்தது. ரெஸ்ட்டாரெண்டில் இருந்த வெயிட்டர் ஒரு சி.ஐ.டி அல்லவா? அப்படித்தான் இருக்க வேண்டும். அங்கு அதிகாரிகள் அனைவரும் ஒன்று.

7

ராஜசேகரனின் வீட்டில் ஒரு மண்டை ஓடு பற்களை இளித்துக் கொண்டு இருக்கிறது. அது இருந்த இடத்தைவிட்டு அசையவே இல்லை. அங்கு இருக்கும் காட்டெருமையின் தலையைப் போல அது ஒரு பொருள். அவ்வளவுதான்.

ஒரு பட்டாளக்காரனின் மனைவியாக அந்த வகையில் நாட்கள் ஓடிக் கொண்டிருந்தபோது, பயங்கரமான மானிட வேட்டைகளைப் பற்றிய கதைகளைக் கேட்டும், துப்பாக்கிக் குண்டுகள் பட்டு உண்டான வடிவங்களைப் பார்த்தும் அப்படியே அனுபவங்கள் அதிகரித்துக் கொண்டிருந்தபோது அவள் மோசமான கனவுகளைக் காணவில்லை. ரிவால்வரையும் பிஸ்டலையும் கையால் எடுத்து நளினி வேறொரு இடத்தில் வைப்பாள். அந்த வகையில் ஒரு பட்டாளக்காரனின் மனைவியாக ஆவதற்கு அதிக நாட்கள் தேவைப்படவில்லை.

அந்த வகையில் ஒரு மண்டை ஓட்டையும் சங்கிலியால் கட்டப்பட்ட கைகளையும் வீட்டில் இருக்கும் அலங்காரப் பொருட்களாகப் பார்க்கலாம் என்ற சூழ்நிலை உண்டானது. அவளுடைய சினேகிதிகள் பார்ப்பதற்காக வரும்போது அந்த காட்சியைப் பார்த்து நடுங்கு வதுண்டு- எந்தவொரு வீட்டிலும் பார்த்திராத காட்சியாக இருந்தது மனிதனின் மண்டை ஓட்டை அலங்காரத்திற்காக வைத்திருப்பது என்பது. அவர்களுக்கு அவளிடம் முதலில் கேட்க வேண்டும் என்று இருந்தவை- அது யாருடைய மண்டை ஓடு என்பதும், எதற்காக அங்கு அது வைக்கப்பட்டிருக்கிறது என்பதும்தான்.

“எனினும்... என் நளினி, இதை இங்கே வைத்துக் கொண்டிருக்கிறாயே!''

நளினி அதற்கு பதில் கூற வேண்டும் என்று நினைத்தாள்.

“இது ஒரு பட்டாளக்காரரின் வீடு. வேட்டைக்காரனின் வீட்டில் காட்டெருமை, மான் ஆகியவற்றின் தலை இருக்கும். பட்டாளக்காரனின் வீட்டில் மனிதனின் தலை...''

“இருந்தாலும்... இதற்குக் கீழே படுத்துத் தூங்க முடிகிறதே!''

“காட்டெருமையின் தலைக்கு அடியில் படுத்துத் தூங்குகிறீர்கள் அல்லவா?''

பதில் கூற முடியாத கேள்விதான். எனினும், அது எதிர்பாராத ஒன்றாக இருந்தது.

எனினும், அந்த கைகளை எதற்காக சங்கிலியால் பிணைத்திருக்கிறார்கள் என்று இப்போதும் சிந்திப்பாள். பிணைக்காமல் இருந்தால் அசையுமோ? அவள் ராஜசேகரனிடம் கேட்டாள். குறிப்பிட்டுக் கூறும் அளவிற்கு காரணம் எதுவும் இல்லை. அப்படியே சங்கிலியால் பிணைத்து வைக்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால்தான் அந்த அமைப்பு சரியாக இருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. அவ்வளவுதான்.

வரவேற்பறையில் தைத்துக் கொண்டு தனியே இருக்கும்போது, சில நேரங்களில் நளினியின் பார்வை கதவிற்கு மேலே செல்லும். அறிமுகமானதுதான் என்றாலும், எப்போதும் பார்க்கக் கூடியதுதான் என்றாலும், கூர்ந்து கவனித்தால் அந்தப் பற்களின் இளிப்பிற்கு ஒவ்வொரு நிமிடமும் புதுமை இருக்கவே செய்தது. அதற்கு என்னவோ கூறுவதற்கு இருந்தது. கூறப் போவது நமக்கு நன்கு தெரிந்ததுதான். ஆனால், நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்கள்... சப்தம் இல்லையென்றாலும் அது கூறுகிறது.

சில நேரங்களில் அவள் சந்தேகப்படுவாள். அந்த மண்டை ஓட்டின் சொந்தக்காரன், அவளுடைய கணவன் விளக்கிக் கூறியதைப் போல ஒரு கெட்டவனாகவும் அரக்க குணம் கொண்டவனாகவும் இருந்திருப்பானா என்று. அப்படியென்றால் அது இந்த அளவிற்கு பரிதாபப்படும் காட்சிப் பொருளாக இருக்காது. அழுகிறதோ? ஏன் இப்படி ஆக்கி விட்டீர்கள் என்று கேட்கிறதோ?

அந்த மனிதனுக்கு ஒரு மனைவி இருந்திருப்பாளோ? அவள்மீது அவன் பாசத்துடன் இருந்திருப்பானோ? இந்தக் கேள்விகள் எதற்கும் பதில் கூறுவதற்கு கணவனுக்கு முடியவில்லை. அது எதுவும் அவனுக்குத் தெரியாது... அந்த மனிதன் அந்த அளவிற்கு பயங்கரமானவனாக இருந்திருந்தால், அவன் சிரித்துக் கொண்டு இருந்திருக்க மாட்டான். அப்படியென்றால் அவன் தன் மனைவி மீது அன்பு வைத்திருக்க மாட்டான். அந்த விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நளினி விரும்பினாள். அந்த மனிதனை ஒரு தாய் பெற்று வளர்த்திருப்பாளா? நண்பர்கள் இருந்திருப்பார்களா?

மண்டை ஓட்டின் படைப்பில் இருந்த சிறப்பையும் கை எலும்புகளின் வினோதமான அமைப்பையும் அவள் கூர்ந்து படித்தாள். மண்டை ஓடு மிகவும் கனமாக இருந்தது. மேலே காணப் படும் கோடுகள்தான் தலையெழுத்துகளாக இருக்க வேண்டும்.

அந்த மொழியைத் தெரிந்தவர்கள் இருந்தால், இந்த வாழ்க்கைக் கதையைப் புரிந்துகொள்ள முடியும். அவள் அறிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பக்கூடியவை எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம். அந்த வரவேற்பறைக்கு அது வந்து சேர்ந்ததும், இனி எவ்வளவு நாட்களுக்கு அது அதே நிலையில் இருந்து கொண்டிருக்கும் என்பதையும் தெரிந்துகொள்ளலாம். அதன் சொந்தக் கதையையும் தெரிந்துகொள்ளலாம். அவனுடைய கண்கள் இந்த அளவிற்குப் பெரியதாக இருந்தனவா? மூக்கிற்கு நீளமான எலும்பு இல்லை.

அந்தப் பற்களைத் தாண்டி நாக்கு இருந்தது. பற்கள் மிகவும் நீளமாக இருந்தன. சதையும் குருதியும் தோலும் இருந்த காலத்தில் அந்த முகம் எப்படி இருந்தது? மிகவும் பலம் கொண்டவை என்று கூறப்படும் அந்தக் கைகள் முற்றிலும் எதுவும் இல்லாமல் இருந்தன.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel