Lekha Books

A+ A A-

மண்டை ஓடு

mandai-odu

ரு கிராமத்தின் பாதையோரம் இருக்கும் வீட்டின் வாசற்படியில் மாலை நேரத்தில் பரிதாபத்தை வரவழைக்கும் ஒரு குரலைக் கேட்கலாம்.

“அம்மா, ஏதாவது தாங்க...''

அந்த வீட்டில் இருந்த நாய் குரைக்க ஆரம்பித்தது. திண்ணையில் குத்து விளக்கிற்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு கடவுள்களின் பெயர்களைக் கூறிக் கொண்டிருந்த குழந்தைகளின் கவனம் அந்தப் பக்கமாகத் திரும்பியது. நாய் முன்னோக்கித் தாவ முயற்சித்த வாறு குரைத்துக் கொண்டிருந்தது.

அந்த வீட்டின் வேலையாள் வந்து நாயை விரட்டிவிட்டான். அவன் வாசற்படியின் அருகில் போய் பார்த்தான். அங்கு ஒரு பிச்சைக்காரி நின்றிருந்தாள். அவளுடைய தோளில் ஒரு குழந்தை குப்புறப் படுத்திருந்தது.

அவள் தன்னுடைய பரிதாபத்தை வரவழைக்கக்கூடிய கெஞ்சலைத் தொடர்ந்தாள். “தங்கமான அய்யா! இந்தக் குழந்தைக்கு கொஞ்சம் கஞ்சி கொடுங்க... கொதிக்க வச்ச அரிசி சாப்பிட்டு இன்னையோட இரண்டு நாட்கள் ஆச்சு. பிள்ளைகளை நினைச்சு....''

“சாயங்கால நேரத்துலயாடி தர்மம்? இப்போ முடியாது...''

அவளின் தோளில் கிடந்த அந்தக் குழந்தை முனகிக் கொண்டிருந்தது.

வேலைக்காரனின் பதில் அவளை அமைதியானவளாக ஆக்கியது. எனினும், பிச்சைக் காரிதானே? அவள் உடனடியாகப் போய்விட மாட்டாள்.

“தங்கமான அய்யா... அப்படி சொல்லாதீங்க. ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. ஒரு கரண்டி கஞ்சி கிடைச்சாகூட போதும். சமையலறையில அம்மா விடம் கொஞ்சம் சொன்னால் போதும்!''

ஒரு கரண்டி கஞ்சி நீர் இருக்கிறதா, இல்லையா என்பதைக் கூறக்கூடிய உரிமை பெண்ணுக்குத்தான் இருக்கிறது என்று அவளுக்குத் தெரியும். ஒரு பிச்சைக்காரி ஒரு குழந்தையைத் தோளில் போட்டுக் கொண்டு வந்திருக்கிறாள் என்பதை இல்லத்தரசி அறிந்து கொள்ளும் பட்சம், காரியம் நிறைவேறும் என்பது அவளுக்குத் தெரியும். சமையலறைக்குக் கேட்கும் வண்ணம் அவள் உரத்த குரலில் சொன்னாள்:

“தங்கமான அம்மா! ஒரு குழந்தைக்குக் கொஞ்சம் கஞ்சி தாங்களேன்!''

அந்த வேலைக்காரன் திரும்பி நின்று கொண்டு சொன்னான்:

“இங்கே நின்று கொண்டு கூப்பாடு போடாதேடி. நாசமாப் போச்சு! ஏதாவது கொண்டு வந்து தர்றேன்!''

அவள் உட்கார்ந்தாள். பிள்ளைகள் எல்லாரும் வாசலில் வந்து பார்த்தார்கள்.

சிறிது நேரம் தாண்டியதும் ஒரு கையில் கொஞ்சம் கஞ்சியையும் இன்னொரு கையில் ஒரு மண்ணெண்ணெய் விளக்கையும் வைத்துக் கொண்டு இல்லத்தரசி வெளியே வந்தாள். அவளுக்கு உள்ளே நிறைய வேலைகள் இருந்தன.

அந்த பிச்சைக்காரி வயதில் இளையவளாக இருந்தாள். இருபது வயது இருக்கும். கிழிந்துபோய் காணப்பட்ட கொஞ்சம் துண்டுத் துணிகளை இடுப்பிலும் மார்பிலும் சுற்றியிருந்தாள். கூந்தல் ஜடை பின்னப்பட்டு ஒரு சணல் கட்டைப் போல இருந்தது.

அவளுடைய தோளில் கிடந்த குழந்தைக்கு ஒரு வயது இருக்கும்.

அவள் எழுந்து கையில் இருந்த தட்டை நீட்டினாள். அதில் இல்லத்தரசி தான் கொண்டு வந்திருந்த கஞ்சி நீரை ஊற்றினாள். அவள் அந்தத் தட்டை உதட்டிற்கு அருகில் கொண்டு சென்றபோது, அந்தக் குழந்தை ஒரு முணுமுணுப்புடன் அதைப் பிடித்தது. அவனுக்கு கோபம் வருகிறது. அவன் தன் தாயை அதைக் குடிக்க விட மாட்டான்.

முறையாக வளர்ந்தால் அது ஒரு நல்ல குழந்தையாக இருக்கும். அதன் வயிறு சற்று வீங்க ஆரம்பித்திருந்தது. இனி ஊதிப் பெரிதாகும். கால்கள் மெலிந்து போகும். அந்த வகையில் குழந்தையின் கன்னங்கள் வீங்கி, கண்கள் வெளியே தள்ளி, மார்புக்கூடு கட்டி, வயிறு வீங்கி, கால்கள் மெலிந்து என்று ஆகிவிடும். எனினும், ஒரு பிச்சைக்காரி ஒரு வயது வரையிலாவது, அப்படி எதுவும் நடக்காமல் இந்தக் குழந்தையை வளர்த்திருக்கிறாளே!

ஒரு வாரத்திற்குத் தேய்த்துக் குளித்து, நல்ல உணவும் இருந்தால் அவளும் இப்பொழுது காணும் பெண்ணாக இருக்க மாட்டாள். அழகிதான்- ஆமாம்... நகைகளும் நல்ல ஆடைகளும் இருந்திருந்தால் அழகியாகவே ஆகியிருப்பாள். சற்று கூர்ந்து கவினித்தால் புரியும்- அவள் பிச்சைக்காரியாகப் பிறந்தவள் அல்ல என்ற விஷயம். அவளுக்கு ஏதோ ஒரு விபத்து நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

நீரை உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருக்கும் அவளைப் பார்த்துக் கொண்டு நிற்கும்போது, அந்த இல்லத்தரசியின் ஆர்வம் அதிகமானது. அவள் நீர் முழுவதையும் முழுமையாகக் குடித்துவிட்டு ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவாறு அந்தத் தட்டைக் கீழே வைத்தாள். அதில் சோற்றுப் பருக்கைகள் முழுவதும் இருந்தன. குழந்தை வளைந்து நெளிந்து சத்தம் உண்டாக்க ஆரம்பித்தது.

அவள் அந்த சோற்றுப் பருக்கைகளை குழந்தைக்கு கொடுத்துக் கொண்டிருந்தபோது இல்லத்தரசி கேட்டாள்:

“நீ எங்கேயிருந்துடி வர்றே!''

அவள் முகத்தை உயர்த்திச் சொன்னாள்:

“கண்டமாரில் இருந்து அம்மா!''

“கண்டமாரா? அது எங்கே இருக்கு?''

“இரண்டு வருடங்களுக்கு முன்னால் துப்பாக்கிச் சூடு நடந்தது அல்லவா, அம்மா? அந்த ஊர்தான்!''

அந்த வீட்டின் தலைவி, ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு ஒரு முழு ஊரும் அழிந்துபோன செய்தியைக் கேள்விப்பட்டிருக் கிறாள்.

சாதத்தை ஆர்வத்துடன் சாப்பிட்டுக் கொண்டிருப்பதற்கு மத்தியில், குழந்தை இல்லத்தரசியைப் பார்த்துச் சிரித்தது. அந்தக் குழந்தையின் சிரிப்பில் இருந்த அழகு அழிந்துபோய் விடவில்லை. அதற்கு இப்போது சிரிப்பதற்குத் தெரியும். ஆனால், அந்தச் சிரிப்பு பல் இளிப்பாக மாறுவதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும்? பிச்சைக்காரியின் குழந்தைதானே? நாளையோ நாளை மறுநாளோ அந்த மாறுதல் தொடங்கி விட்டது என்ற நிலை உண்டாகலாம். நல்ல குழந்தை நாசமாகிறது.

இல்லத்தரசிக்கு அவள்மீது சிறிது கோபமும் உண்டாகாமல் இல்லை. பிச்சைக்காரி எதற்காகக் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும்? அதுவும் ஒரு அழகான குழந்தையை! உரிமையற்ற செயல்கள்...

அவள் தன் குரலைச் சற்று கடுமையாக ஆக்கிக் கொண்டு கேட்டாள்:

“இந்தக் குழந்தைக்கு தகப்பன் இல்லையாடீ?''

அவள் அதற்கு பதில் கூறவில்லை. ஒரு இயந்திரத்தைப் போல அவள் குழந்தைக்கு சோற்றுப் பருக்கைகளை ஊட்டிக் கொண்டிருந்தாள். அவள் அந்தக் கேள்வியைக் காதில் வாங்கவில்லையோ? இல்லத்தரசி தன் கேள்வியை மீண்டும் திரும்பக் கேட்டாள். அவளுடைய குரல் மேலும் கடுமையாக இருந்தது. தன்னுடைய புனிதத்தைக் காப்பாறி வைக்கத் தெரியாதவள் என்று அவளுக்குத் தோன்றியது. திருமணமாகாத கன்னிப் பெண் பெற்றெடுத்த குழந்தை. எனினும், அவளைத் தன் பக்கம் இழுத்த ஆண் யாராக இருக்கும்? அவன் சிறந்தவனாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தக் குழந்தை இவ்வளவு நன்றாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. அவள் கேள்வியைக் காதில் வாங்காததைப் போல பேசாமல் இருப்பதற்குக் காரணம்- அதைப் பற்றிய உண்மையை வெளியே கூறினால் பிச்சை கிடைக்காமல் போய்விடும் என்பதாக இருக்க வேண்டும்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel